பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




3. வைணவ புராண இலக்கியம்


ஆறாம் நூற்றாண்டு தொடங்கித் தமிழ் மொழியில் திருமாலையே பரம்பொருளாகக் கொண்டு போற்றும் நூல்கள் எழத் தலைப்பட்டன. இக்காலப் பகுதியில் முதல் ஆழ்வார் மூவர் பாடிய மூன்று அந்தாதிகளும் தோன்ற, தொடர்ந்து 9-ஆம் நூற்றாண்டு வரையில் பல ஆழ்வார் பாசுரங்கள் தோன்றின; 9-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நம்மாழ்வாரின் பாசுரங்கள் தோன்றி தமிழில் வைணவ நெறியைத் தனிப்பெரு நெறியாக அமைத்தன. அந்த நூற்றாண்டில் பிறந்த நாதமுனிகள் தொடங்கி 1137-ல் பரமபதித்த இராமாநுசர் வரையில் வைணவ ஆசாரிய பரம்பரை பிறந்து வளர்ந்தது. இந்த வைணவ நெறி ஆழ்வார் பாசுரங்களைப்போல் தமிழில் கால் கொள்ளாமல் வடமொழியையே அடிப்படையாக வைத்து நூல் செய்தது; தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாளம் [1] என்ற புதிய உரைநடையை சமய வியாக்கியான நூல்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டது. இந்த நிலை ஓரளவுக்கு 16-ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்து வந்தது.

9, 16-ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நூல் எழுதிய வைணவப் பெரியோர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றிருந்தபோதிலும், சாத்திர வியாக்கியானம், மணிப்பிரவாள உரைநடை நூல்கள் மட்டுமே எழுதினர். இலக்கியத் துறையைக் கண்ணெடுத்தும் நோக்கவில்லை. இக்கருத்துக்கு விலக்காக வேதாந்த தேசிகர் தமிழிலும், வடமொழியிலும் சிறு தோத்திர சாத்திர நூல்கள் பல செய்தார். மணவாள மாமுனிகள் தமிழில் சில தோத்திர நூல்களைச் செய்தார்.

16-ஆம் நூற்றாண்டுக்கு முந்திய நூற்றாண்டுகளில் சைவ சமயத்தில் எழுந்த சமய இலக்கிய வெள்ளம் எல்லோரையும் சமய நெறியில் ஈடுபடுத்தியது. இக்காலத்தில் எழுந்த சமயப்


  1. 1 இதனைச் சைனர் கண்டு தம் சமய நூல்களை இந்நடையில் அமைத்தனர்.

17