பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

பொருளமைப்பைக் கொண்டிருப்பினும் இலக்கியங்கள் யாங்கனும் அவ்வப் பொருள்களில் மட்டுமே வழங்கப்பட்டன என்று குறிக்க முடியாது. பொதுவில் ‘பூ’ என என்னைக் குறிக்கும் நோக்கில் கையாளப்படும் சொற்களுமாகும்.

இவையன்றி தனிப்பூ, விடு பூ, சின்னப்பூ, எதிர்ப்பூ. தொடைப்பூ, கட்டுப்பூ- எனக் குறியீட்டுச் சொற்களாகப் பலவற்றையும் நான் பெற்றுள்ளேன்.

எனது வாழ்வியற் பருவங்கள் ஏழையும் உங்களதுவாழ்வியல் பருவங்களாக நீங்கள் கொண்டதை நான் கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். புலவர்கள் தாம் படைத்த இலக்கிய இலக்கணங்களில் எனது ஏழு பருவங்களுக்கேற்ப உங்களில் ஆண், பெண் ஆகிய இருபாலார்க்கும் தனித்தனியே பொருள் படுமாறு ஏழு, ஏழு பருவங்களைக் கொண்டனர். அவை எனது பருவப் பெயர்களோடு ஒப்புநோக்கத் தக்கவை.

பருவங்கள் ஏழு
நான் : ஆண் : பெண்
நனை பாலன் பேதை
அரும்பு மீளி பெதும்பை
முகை மறலோன் மங்கை
போது திறலோன் மடந்தை
மலர் காலை அரிவை
அலர் விடலை தெரிவை
வீ முதுமகன் பேரிளம்பெண்

மாந்தரில் ஆண், பெண் பருவங்களைக் குறிக்கும் இச் சொற்கள் யாவும் இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆயினும், இவை படிப்படியான பருவ வளர்ச்சி அமைப்பில் முறைப்படுத்திக் காட்டப்படவில்லை. முற்காலத்து அவிநயம் என்னும் இலக்கண நூலும் இடைக்காலத்தில் எழுந்த பாட்டியல் நூல்களுமே முறைப் படுத்தி இலக்கணமாக்கின. அவற்றையொட்டி எழுந்த ‘உலா’ என்னும் இலக்கியம் இவற்றைப் படிப்படியாக வர்ண்ணித்து விளக்கியது.

சங்க நூலாகிய பரிபாடல்,

“முதியர், இளையோர், முகைப்பருவத்தர்” -என மூன்று பருவங்களைக் குறிக்கின்றது. இம்மூன்றனுள் இளையோர்