பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

11



கனன்று கொண்டிருந்த குடிமக்களின் தொகை பல மடங்கு அதிகமென்றே சொல்ல வேண்டும்.

நீறு பூத்த நெருப்பு : இந்நிலையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நீறு பூத்த நெருப்புப் போலிருந்த மக்கள் நெஞ்சில் சுதந்தரச்சுடர் எழுநாவிட்டு எரியப் பெருந்துணை புரிந்தன வெள்ளை வர்க்கத்தினர் நேராகவும் மறைமுகமாகவும் செய்த சில அடாத செயல்கள். ஆளும் அரசாங்கத்தின் ஆதரவு பெற்று அந்நாளில் நடைபெற்ற கிறித்தவ மதமாற்றப் பிரசார முறை, மக்களின் மனத்தை நாளும் புண்படுத்தி வந்தது; அந்த முறை மக்களின் மனத்தில் பயத்தையும் பகையையும் கிளப்பிவிட்டது. அந்நிலையில் கும்பினி ஆட்சி சற்றும் ஆராய்ச்சியின்றி விதித்த சில உத்தரவுகள், படை வீரர்கள்-நாட்டு மக்கள்-மனத்திலிருந்த சுதந்தரக்கனல் காட்டுத்தீயாகக் காரணமாயின. ஆணவம் படைத்த ஆங்கிலத் தளபதிகள், இந்துக்கள் இராணுவப் பயிற்சிக்கு வரும்போது தங்கள் காதுகளில் கடுக்கன்களே அணியக்கூடாது என்றும், நெற்றியிலே திருநீறோ திருமண்ணோ இடக்கூடாதென்றும் கட்டளையிட்டார்கள். முகம்மதியர்களோ, தங்கள் தாடியை முற்றிலும் களைந்துவிட வேண்டும் என்றும் மீசையையுங்கூட ஒரு குறிப்பிட்ட வகையில் குறிப்பிட்ட அளவிற்கே கத்தரித்துக்கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/13&oldid=1137662" இலிருந்து மீள்விக்கப்பட்டது