பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்வாழ்வியல்.

௫௩-ம் அதி.–விருந்தினரைப் பேணல்.

விருந்தினர் முன்னர் தெரிந்திலாப் புதியர். ௫௨௧
விருந்தினர்ப் பேணுவார் பெரிந்தகை யோரே. ௫௨௨
விருந்தின ருண்ணலம் பொருந்தினர்க் கொள்க. ௫௨௩
விருந்தினர்க் குணவுநன் மருந்தென வழங்குக. ௫௨௪
உடையிடம் படுக்கை குடைகாப் புதவுக. ௫௨௫
உளமறிந் தேனைய வளவறிந் தீக. ௫௨௬
இன்ப மவருற வின்சொல் வழங்குக. ௫௨௭
அவரறிந் தவையெலா மறிந்துளங் கொள்க. ௫௨௮
அவருய ரொழுக்கெலா மறிந்துகைக் கொள்க. ௫௨௯
செல்வுழி யுடன்சென் றுள்ளிடப் பிரிக. ௫௩0

௫௪-ம் அதி.–முன்னோரைப் பேணல்.

முன்னோர் துஞ்சிய தன்னுற வினரே. ௫௩௧
அவரைப் பேணலா லாம்பல நலமே. ௫௩௨
அவரைப் பேணுமா றடிக்கடி யுள்ளல்; ௫௩௩
அவர்தொடங் கியவறந் தவறுறா தாற்றல்; ௫௩௪
அவர்செய வெண்ணிய வறங்களு மியற்றல்; ௫௩௫
அவர்நற் குணனெலா மறிந்துகைக் கொளல்; ௫௩௬
அவர்நற் செயலெலா மழியாது நிறுத்தல்; ௫௩௭
அவர்நற் பெயர்தம தருமகார்க் களித்தல்; ௫௩௮
அவர்பெயர் விளங்கிட வறம்பல புரிதல்; ௫௩௯
அவர்க்குறும் பிறவு மன்பொடு செய்தல். ௫௪0


29