வண்டிக்காரன் மகன்/வண்டிக்காரன் மகன்
வண்டிக்காரன் மகன்
ஆப்பக்கடை அன்னம்மாளிடம் அச்சம் கொள்ளாதவர்கள் அவளூரில் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு துணிச்சல்! யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத சுபாவம்.
அப்படிப்பட்ட அன்னம்மாள் சோகமுற்று இருப்பது என்றால், ஏதோ பெரிய விபரீதம் நேரிட்டுவிட்டது என்றுதானே பொருள்?
விபரீதம்தான் நேரிட்டுவிட்டது. தன் மகள் காவேரியின் ஜாதகத்தைக் கேட்க, அருணகிரி வருவான் வருவான் என்று எத்தனை நாட்களாகக் காத்துக் கிடப்பது. வரவே இல்லை.
"அத்தே!" என்று குளிர்ச்சியாகக் கூப்பிடுவான் சொக்கலிங்கம் என்று காத்திருந்தாள்; நடக்கவில்லை. கோபம் தலைக்கேறி விட்டிருந்தது.
அந்த இருவரையும் ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள். ஆனால் காவேரி? கண்ணீர் வடிக்கிறாள்! கிணறு குட்டை அகப்படாமலா போகும் என்கிறாள். 'நீ வீண் சண்டை போட்டுப் போட்டு நல்லவர்களையும் விரோதிகளாக்கி விடுகிறாய்' என்று குற்றம் சாட்டியே பேசுகிறாள்.
'பக்குவமாகப் பேசிக் காரியத்தை முடிப்பதற்குத் துப்பு இல்லாமல், கடும் கோபத்தைக் கக்கிக் கிடப்பது எதற்கு?' என்று கேட்கிறாள். 'நான் கன்னியாகவே காலந்தள்ளுவேன்' என்கிறாள்."நான் பெத்த பெண்ணே என்னைத் துப்புக்கெட்டவள்; பக்குவம் தெரியாதவள் என்று பேசுவதையும் கேட்டுக்கொள்ளும் காலம் வந்துவிட்டதே" என்று நினைத்து அன்னம்மாள் சோகமாக இருந்தாள்.
பக்குவமாகத்தான் பேசிப் பார்ப்போமே என்ற முடிவுக்கு வந்த அன்னம், சொக்கலிங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு புளியங்குட்டை அருகே நின்று கொண்டிருந்தாள்.
சொக்கலிங்கம் வழக்கமாக அந்த வழியாக, டேவிட் வீட்டுக்குச் சைக்கிளில் போவது அன்னம்மாளுக்குத் தெரியும்.
சைக்கிள் மணிச்சத்தம் கேட்டது. சோகத்தை மறைத்துக் கொண்டு, புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். அன்னம்மாளைக் கண்டதும் சொக்கலிங்கம் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான். பக்குவமாகப் பேசத் தொடங்கினாள்.
"தொரெ! உம்பேர்லே இம்மா ஆசையா இருக்கறாரே, அவரோட சொல்லி ஏதாச்சும் ஒரு நல்ல வேலையைத் தேடிக்கக் கூடாதாடா தம்பி! இன்னும் எவ்வளவுன்னுதான் படிப்பே?"
"என்னோட மாமாகூட அதுபோலத்தான் சொல்றாரு—ஆனா எனக்குப் படிக்கறதுக்குக் குந்தகமில்லாத வேலையா கிடைக்கணும்னு ஆசை..."
"ஏனாம்! நீயும் இந்தத் தொரை மாதிரி எழுதிக்கிட்டே காலத்தை ஓட்டிடப் போறயா...இவருக்குப் பெண்ஜாதி இல்லே...புள்ளைகுட்டி இல்லே...ஒண்டிக் கட்டை...நீ அப்படி இருக்க முடியுமா! இன்னும் எவ்வளவு காலம் காத்துக்கிட்டு இருப்பா உனக்காக..."
"எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கறாளா...அது எந்தப் பைத்தியக்காரப் புள்ளே..."
"ஏண்டா, தம்பி!—என் கிட்டவே ஒண்ணும் தெரியாததுபோல நடிக்கிறியா...என்னா சொக்குப் பொடி போட்டயோ தெரியல்லே...என் மவளோட கண்ணு உன்னைத்தானே சுத்திச் சுத்தி வளையம் போடுது...காலா காலத்திலே முடியணுமே..."
"இது என்ன விபரீதம். நான் ஒருவிதமான கெட்ட எண்ணமும் இல்லாமத்தான் பழகறேன்...காவேரியும் அது போலத்தான்..."
"அடப்பாவி! என்னா இப்படி ஓர் இடியைத் தூக்கிப் போடறே. அந்தப் பொண்ணு உன்னைப் பார்க்கற பார்வையும், பேசற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும் ஊரே தெரிஞ்சிக்கிட்டிருக்குது. தொரெக்கேகூடத் தெரியும்...அப்படித்தான் நான் எண்ணிக் கொண்டு இருக்கறேன்."
"ரொம்ப தப்பு...நான் அந்த விதமான பேச்சே பேசினது கிடையாது—சத்தியமா..."
"பேசணுமா...ஏண்டா! ஒரு வயசுப் பொண்ணை எதிரே உட்கார வைச்சிகிட்டு, இளிச்சிக்கிட்டு இருக்கிறயே..என்னமோ சித்திரம் தீட்டறேன்னு...அது எதுக்காம்."
"காவேரியோட அழகு அக்கா! என்னைப் படம் போடச் சொல்லுது..."
"சொல்லுண்டா சொல்லும்...உன் கண் அழகு யாருக்கு உண்டு...உன் கன்னம் மாம்பழம், உடம்பு தங்கம்னு இன்னும் என்னென்ன இழவோ பேசி அந்தப் பெண்ணோட மனசை மயக்கிவிட்டு, இப்ப இப்படிச் சொல்றயே...நியாயமா...சொக்கலிங்கம்?"
"நான் இப்பத்தான் கேட்கறேன். வெட்கத்தை விட்டே கேட்கறேன். என் மகளைக் கட்டிக்கொள்ள கசக்குதா—ஆப்பக்காரி பொண்ணுன்னு சொல்லுவாங்களேன்னு தோணுதா? நாலு எழுத்துப் படிச்சதாலேயே என்னைப் பாத்தா கேவலமாத் தோணுதா..."
"அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. நான் மட்டும் என்ன, பெரிய மிராசுதாரன் பிள்ளையா? ...வண்டிக்காரன் மகன்தான்...நான் காவேரியைக் கட்டிக்கொள்ள முடியாதுன்னு சொல்றதுக்குக் காரணம், நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லே...எனக்குக் கல்யாணம் கார்த்தியெல்லாம் இப்போது கிடையாது, எங்க அப்பா படுகிற கஷ்டத்தைப் போக்கியாகணும் முதலிலே. காலம் முழுவதுமா வண்டிக்காரராக இருப்பது...நான் ஒரு பிள்ளை பொறந்துதான் என்ன பயன்?"
"எனக்கு இந்தச் சமாதானமெல்லாம் தேவையில்லே! நானும் காவேரியும் கோலார் பட்டணம் போறோம், அவளோட பெரியம்மா வீட்டுக்கு. மூணு மாதத்திலே வந்து சேருவோம். அதுக்குள்ளே ஒரு முடிவுக்கு வந்தாகணும்; இல்லையானா நான் தொரேகிட்டவே சொல்லி விடுவேன்."
அப்போது ஓர் ஆள் ஓடிவந்து "சொக்கலிங்கம்! ஓடியா, ஓடியா! உன் மாமனுக்கு மாரடிச்சுட்டுது...கீழே விழுந்துட்டாரு" என்று கூவினான்.
ஓடோடிச் சென்ற சொக்கலிங்கம், தன் மாமன் மார்வலியால் துடிப்பதையும், பக்கத்திலிருந்து கொண்டு டேவிட் துரை ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துப் பதறிப் போனான்.
டேவிட் துரை, கீழ்நாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பேரறிவாளர்; தங்கமான மனமுடையவர்; அவரும் அருணகிரியைப் போலவே மணமாகாதவர்.
அருணகிரி அவரிடம் வேலைக்கு அமர்ந்து முப்பது ஆண்டுகளாகிவிட்டன. ஒரு நாளாகிலும் முகம் சுளித்துக் கொண்டதில்லை. ஒரு பேதமும் காட்டாமல், தமது பங்களாவின் பின்புற விடுதியிலேயே அருணகிரியை இருந்துவரச் செய்தார்.
டேவிட் துரையுடைய வீட்டு விவகாரம் முழுவதையும் கவனித்துக் கொண்டு வந்தான் அருணகிரி. ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வோர் ஆள் இருந்தனர்—தோட்ட வேலைக்கு—சமையலுக்கு—கணக்கு எழுத—ஆனால் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக்கொள்ள அருணகிரிதான். எதையும் அருணகிரியிடம் சொல்லித்தான் செய்து கொள்ளவேண்டும்; அவ்வளவு நாணயமாக நடந்து வந்தான்.
அருணகிரி துடிப்பது கண்டு, கதறிய சொக்கலிங்கத்தை டேவிட் சமாதானப் படுத்திக் கொண்டே, தன் கண்களையும் துடைத்துக்கொண்டார்.
"இனி இவனை அவனுடைய அப்பனிடம் சேர்த்து விட வேண்டியதுதான். என் காலம் முடிந்துவிட்டது சார்! இவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உங்களோட உதவிதான்...வேறே யார்...எனக்குத் தெய்வம்போல நீங்கதான்"...என்று மிகுந்த கஷ்டத்துடன் பேசிய அருணகிரியை டேவிட் சமாதானப்படுத்தியபடி இருந்தார்.
சொக்கலிங்கத்தின் தகப்பனாருக்குக் கடிதம் போடப்பட்டது; அவரும் வந்து சேர்ந்தார்.
"சடையப்பா! நாம் எவ்வளவு முயன்றாலும் இனி அருணகிரியைக் காப்பாற்ற முடியாது. டாக்டர் சொல்லி விட்டார். மனதைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்."
"என் மகனாகச் சொக்கன் பிறந்தானே தவிர, ஐயா! அருணகிரியோட மகனாகத்தான் வளர்ந்து வந்தான். வருஷத்துக்கு ஒரு தடவையோ, இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவையோ, வந்து பார்த்துவிட்டுப் போகிறோமே, அது தவிர மற்றபடி எங்களோட தொடர்பே அவனுக்குக் கிடையாது. சொக்கலிங்கத்தை இவ்வளவு நல்லபடியாக வளர்த்த புண்ணியமூர்த்தி அருணகிரி...அவனோட உதவி கிடைத்திராவிட்டால், என் மகன் கூலிக்காரனாத்தான் ஆகியிருப்பான்."
"சடையப்பா! உன் மகன் நல்ல படிப்பாளி...அவனாலே உன் குடும்பம் கட்டாயம் நல்லநிலை அடையும்...என்னோட இருந்துவிடச் சம்மதமானாலும் சரி...இல்லே, வேறே எங்கேயாவது வேலைக்குப் போக விருப்பம் இருந்தாலும் சரி, அதற்கு ஏற்பாடு செய்கிறேன். அது என் பொறுப்பு."
அருணகிரி சில தினங்களில் கண்களை மூடிவிட்டான்.
டேவிட் சொக்கலிங்கத்தைக் கேட்டார், 'என்னுடன் இருந்து விடுகிறாயா' என்று. அவனுக்கு அதிலே விருப்பம் என்றாலும், அந்த ஊரிலே இருந்தால் ஆப்பக்கடை அன்னத்தினால் பெருத்த தொல்லை விளையும் என்ற பயம் அவனை அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்று தூண்டிவிட்டது.
பல ஆண்டுகளாகப் பிரிந்து இருந்தாலும், தகப்பனாரிடம் பாசம் இல்லாமல் போகுமா? அதிலும் அவர் வாழ்ந்து கெட்டவரென்பதையும், இப்போது வண்டிக்காரராக இருந்து வருகிறார் என்பதையும் எண்ணும்போது, இனி அவருடன் வாழ்ந்து வரவேண்டும்-தான் ஏதாவது வேலை தேடி அவரை நிம்மதியாக வாழவைக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது.
"இனியாகிலும் மகன் வீட்டோடு வந்து சேரட்டுமே..உள்ளதைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாதா—அவன் ஒருவன் வந்து சேருவதாலா, நமக்குப் பளுவு ஏறப்போகுது" என்று சொல்லும்போதே தன் தாயாரின் கண்கள் குளமானதையும் கண்டான். தகப்பனாருடன் ஊர் சென்று விடுவது என்று உறுதி பலப்பட்டுவிட்டது.
டேவிட் தடுக்கவில்லை. "நீ முன்னுக்கு வரவேண்டியவன். இங்கே அடைபட்டுக் கிடக்கத்தான் கூடாது. நான் கொடுக்கும் சிபாரிசுக் கடிதம் போதும். உனக்கு எங்கேயும் நல்ல வேலை கிடைக்கும். கணக்குத் துறையில் மேலும் படித்துப் பயிற்சி பெற்றால் ஏதாவது பெரிய கம்பெனிகளில் வேலை கிடைக்கும்" என்று டேவிட் உற்சாக மூட்டினார்.
அவருடைய சிபாரிசுக் கடிதத்தையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு, ஊர் திரும்ப ஏற்பாடு செய்துகொண்டனர்.இரவு சடையப்பன், தயங்கித் தயங்கி மகனிடம் பேசலானான்:
"சொக்கலிங்கம்! நீ இவ்வளவு காலமாக எவ்வளவோ நல்லபடியாக வாழ்ந்து வந்தாய், உன் மாமன் தயவால்! அறிவாளிகளோடு பழகி வந்தாய். நாம் இனிப் போக வேண்டிய இடமோ, ஜெமீன். அட்டகாசமும் ஆணவமும் நிரம்பிய இடம்! ஜெமீன்தார் ஜெம்புலிங்கபூபதி கொடியவர் அல்ல; ஆனால் ஜெமீன்தாருக்கு இருக்க வேண்டிய முடுக்கு, கண்டிப்பு எல்லாம் நிரம்பியவர். எனக்கோ அங்கு என்ன வேலை தெரியுமல்லவா..."
"மாமா இரண்டொரு முறை சொல்லியிருக்கிறாரப்பா."
"வண்டிக்காரன்! குதிரை கொட்டிலுக்குப் பக்கத்திலே குடிசை! அங்குதான் நீயும் வந்திருக்க வேண்டும். அந்தக் கேவலமான இடத்திலே நீ இருக்கக் கூடாது என்பதற்காகத்தானடா மகனே! பெற்ற பாசத்தை எல்லாம் அவளும் நானும் அடக்கிக் கொண்டு இவ்வளவு காலம் உன்னைப் பிரிந்து இருந்தோம். இப்போது உன்னை அந்த நரகத்துக்கு அல்லவா அழைத்துப் போக வேண்டி இருக்கிறது."
"நீங்கள் அங்கே இருக்கும்போது நான் மட்டும் இருக்கக் கூடாதா அப்பா! மேலும் எனக்கு ஒரு வேலை கிடைக்கிற வரையில்தானே இந்தக் கஷ்டமெல்லாம்? பிறகு நீங்கள் எதற்காக வண்டிக்காரராக இருக்க வேண்டும்? குடும்பத்தைக் காப்பாற்ற நான் எந்தப் பாடுபடவும் தயாராக இருக்கிறேனப்பா! வேலையும் கிடைத்துவிடும், டேவிட் கொடுத்துள்ள சிபாரிசு போதும் நமக்கு..."
"வேலை தயாராக இருக்கிறது மகனே! கௌரவமான வேலை. ஜெமீனிலேயே!"
"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று."
"அப்படிச் சொல்வதற்கில்லை அப்பா! ஜெமீன்தார் தமது பேரப்பிள்ளைகளுக்கு, படிப்பு சொல்லிக் கொடுக்க ஒரு வாத்தியார் தேடுகிறார். படித்திருந்தால் மட்டும் போதாது; வெள்ளைக்காரரிடம் இருந்த அனுபவம் வேண்டும் என்கிறார். சம்பளம் கேட்ட அளவு. ஜெமீன் மாளிகையிலே தங்கி இருந்து, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்."
"எனக்கு மிகவும் பிடித்தமான வேலை அப்பா அது. ஏனென்றால் நான் மேலும் படித்துக் கொள்ள வசதியாக இருக்கும்..."
"அது மட்டுமா...ஜெமீன் மாளிகையில் இருந்து வந்தால், வேறு பெரிய பெரிய வேலைகள் கிடைக்கவும் வழி சுலபத்திலே கிடைக்கும்."
"மகிழ்ச்சியாகச் சொல்ல வேண்டிய இந்த விஷயத்தை ஏனப்பா சோகத்துடன் சொல்லுகிறீர்."
"சோகமா...வேதனையே அல்லவா படுகிறேன்...இத்தனைக் காலமாகத்தான் பிரிந்திருந்தோமே—இனி ஒன்றாக இருந்து வரலாம் என்று எவ்வளவோ ஆசை—எனக்கும் உன் தாயாருக்கும்."
"ஜெமீனின் வேலை கிடைத்துவிடும் என்கிறபோது அந்த ஆசை நிறைவேறுகிறது என்றுதானே அப்பா பொருள்?"
"இல்லையடா மகனே! இல்லை. ஜெமீன் குழந்தைகளுக்கு வாத்தியாராக நீ அமர்ந்திட வேண்டுமானால் எங்களோடு இருக்க முடியாது...என் மகன் என்றுகூடச் சொல்லிக் கொள்ளக் கூடாது..."
"இது என்ன விபரீதப் பேச்சப்பா...ஜெமீன்தாரர் இதுபோல ஒரு நிபந்தனையா போட்டிருக்கிறார்?"
"இல்லை. நான்தான் நிபந்தனை போடுகிறேன். நிலைமை அப்படி. எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதுகூட ஜெமீன்தாருக்குத் தெரியாது, சொல்லவில்லை. தெரிந்தால், உன்னை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்—'நம்ம வண்டிக்காரனோட மகன் ஜெமீன் குழந்தைகளுக்கு வாத்தியாரா? கேவலம் கேவலம்' என்று கூறுவார். அவருடைய சுபாவம் அப்படிப்பட்டது. அதனால் நீ என் மகன் என்பது தெரியவே கூடாது. அப்போதுதான் ஜெமீன் மாளிகையிலே உனக்கு அந்த வேலை கிடைக்கும்."
சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்து விட்டான், இந்த நிபந்தனையைக் கேட்டு. 'இதற்கு நான் சம்மதிக்கவே முடியாது. வேண்டுமென்றால் வேறு வேலை தேடிக் கொள்ளலாம்; நீங்கள் என்னோடு வந்து விடலாம்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.
சடையப்பன் துளியும் கோபித்துக் கொள்ளவில்லை; முகத்திலே துக்கம்தான் தோய்ந்து இருந்தது.
மறுபடியும் மறுபடியும் அதனையே வலியுறுத்தலானான். அவனுடைய தழதழத்த குரலைக் கேட்டு சொக்கலிங்கம் உருகிவிட்டான்.
"இத்தனை வருஷங்கள் எங்களைப் பிரிந்து இருந்து வந்தாய். இன்னும் ஒரு இரண்டு மூன்று வருஷம் இருக்கக் கூடாதா, அப்பா!" என்று கேட்டு விட்டுச் சடையப்பன், கண்களைக் கசக்கிக்கொண்டது கண்டு சொக்கலிங்கம் திடுக்கிட்டுப் போனான்.
"பிரிந்து இருப்பதைக் காட்டிலும் கொடுமையை அல்லவா அப்பா அனுபவிக்கச் சொல்லுகிறீர்கள். நீங்கள் என் அருகிலேயே இருப்பீர்கள்; ஆனால் இவர் என் அப்பா என்று நான் சொல்லக்கூடாது என்கிறீரே...தட்டு நிறைய தித்திப்புப் பண்டம் அடுக்கி எதிரே வைத்துவிட்டு, 'சாப்பிடக்கூடாது. பார்த்துக் கொண்டு மட்டும்தான் இருக்கலாம்' என்கிறீர்களே!"
"பத்தியம் இருக்கச் சொல்கிறேன் மகனே! நாம் நோயாளிகள்; தரித்திரம் என்ற நோய்! கேவலமான வேலையைச் செய்து வருகிறேன். வண்டி ஓட்டிவிட்டு வீட்டுக்குப் போய் இருக்கும் வேலைகூட அல்லடா மகனே! குதிரைகளோடு குதிரையாக இருக்கிறேன். அவள்தானடா மகனே! குதிரை கட்டியுள்ள இடத்தைச் சுத்தம் செய்பவள்; உன் தாயார்! நீயே சொல்லு, இந்த நிலைமையில் உள்ள எனக்கு நீ மகன் என்று தெரிந்தால், ஜெமீன்தாரர் உன்னை மனம் ஒப்பித் தமது ஜெமீன்தார் பேரக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லுவாரா? சீமான்கள் வருகிற இடம்! பெரிய பெரிய அதிகாரிகளுடைய பழக்கம். துரைமார்களின் கம்பெனியில் தொடர்பு. உள்ளபடி பெரிய இடம். நாகரிகம் மிகுந்த மாளிகை. அங்கு ஒரு வண்டிக்காரன் மகன், உள்கூடம்கூடப் போக முடியாது. அவர் விரும்புவதோ, மாளிகையில் இருந்து கொண்டு, ஜெமீன் குடும்பத்தாருடன் ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்! டேவிட் துரையிடம் பயிற்சி பெற்றவன் என்ற பட்டத்தை மதிப்பார், நிரம்ப! இவன் படித்திருக்கிறான், ஆனால் இவன் என் மகன்! என்று நான் சொன்னால் என்ன எண்ணிக் கொள்வார். ஆயிரம் படிப்பு இருக்கட்டும்; ஊர் என்ன சொல்லும்? ஜெமீன்தாரர் வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வண்டிக்காரன் மகன்தானா கிடைத்தான் என்று அல்லவா. நம்மாலே அந்தக் கேவலத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விடுவார்!
"அப்பா! நான் நாலு எழுத்து கற்றுக் கொண்டதே உன்னை மகிழ்விக்க. உனக்கு மதிப்புத் தேடிக் கொடுக்க. 'என் மகனைச் சாதாரணமாக எண்ணிக் கொள்ளாதீர்கள். அவன் படித்தவன்; மற்றவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பவன்; நம்முடைய தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலபாஷை அறிந்தவன்; ஆங்கிலேயர்களே அவன் திறமையைப் பாராட்டுகிறார்கள்' என்றெல்லாம் நீ பேசிப் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தானே! அடிக்கடி மாமா என்னிடம் சொல்லுவார், "சொக்கலிங்கம்! நமது குடும்பம் ஓரளவு நிலபுலத்தோடு கிராமத்திலே மதிப்போடு வாழ்ந்த குடும்பந்தான். வகையில்லாத வாழ்க்கை நடத்தியதாலே சொத்து போய்விட்டது. கிராமத்திலே பெரியதனக்காரக் குடும்பமாக இருந்த நாம் நொடித்துப் போய்விட்டோம். ஏதோ நான் ஓடி ஆடிப் பாடுபட்டு, நம்ம துரையிடம் வேலைக்கு அமர்ந்தேன். உன் அப்பா, படாத பாடுபட்டுக் கடைசியில்...சொல்லக்கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது. நம்ம நல்லூரில் திருவிழாவின்போது அவருக்குத்தான் முதல் மாலை போடுவார்கள். அப்படிப்பட்டவர் இன்று...சொக்கலிங்கம்! நீதான் நமது குடும்பத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும்; நாலு பேர் மதிக்கத்தக்க நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும்" என்றெல்லாம் சொல்லுவார். கேட்டுக் கொண்டிருக்கும் என் கண்களில் நீர் துளிர்க்கும். ஓரளவு படித்தாயிற்று; கணக்கு வழக்குப் பார்க்கத் தெரிந்து கொண்டேன். நல்ல வேலை மட்டும் கிடைத்து விட்டால், நிம்மதியாக வாழலாம். தலைநிமிர்ந்து நீ நடக்கலாம். என் மகன் உத்தியோகம் பார்க்கிறான் என்று சொல்லிச் சொல்லி மகிழலாம்..."
"உத்தியோகம் நீ பார்க்கவேண்டும் என்பதுதானடா சொக்கு, என் ஆசையும். நான் சொல்லுகிற யோசனையும் அதற்காகத்தான். ஜெமீன்தார் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வேலையிலே, நீ சேர்ந்து கொண்டால் போதும்—எந்தப் பெரிய உத்தியோகமும் உனக்குக் கிடைத்துவிடும். அது சாமான்யமான இடமல்ல; வெறும் ஜெமீன்தார் வீடு அல்ல. ஜம்புலிங்க பூபதி, துரைமார்களுக்கு ரொம்பவும் வேண்டியவர். எந்தப் பெரியதுரை அந்தப் பக்கத்துக்கு வந்தாலும் 'பூபதி! பூபதி!' என்று இவரைத்தான் சுற்றிச் சுற்றி வட்டமிடுவார்கள். அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும். வெள்ளைக்கார சர்க்கார் எந்தப் பெரிய உத்தியோகத்தையும் உனக்குக் கொடுப்பார்கள்!"
"ஜெமீன்தாருடைய தயவு இருந்தால் போதும் என்றுதானே அப்பா சொல்லுகிறாய்! அவரிடம் மனுச் செய்து கொள்ளலாம். அதற்கு நான் முழுச் சம்மதம் தெரிவிக்கிறேன். பெரிய வேலை கிடைக்கிற வரையில், அவர் வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடம், படிப்புச் சொல்லிக் கொடுக்கவும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் போடுகிற மற்றொரு நிபந்தனைதானப்பா என் நெஞ்சிலே நெருப்பை அள்ளிப் போடுவது போல இருக்கிறது. எப்படியப்பா மனம் இடம் கொடுக்கும்? ஏனப்பா அப்படி மறைந்து வாழ வேண்டும்? இவர் என் அப்பா என்று சொல்லிக் கொள்வதற்கு நான் ஏனப்பா கூச்சப்படவேண்டும்?"
"தம்பி! நீயும் கூச்சப்பட மாட்டாய்; எனக்கும் நீ 'அப்பா! அம்மா!' என்று கூப்பிடக் கேட்பதைவிட இன்பம் வேறு இருக்க முடியுமா? என் மகனைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறான்; அவன் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா! ஊர் ஜனங்கள் எல்லாம் வெள்ளைக்காரத் துரைகளைக் கண்டால் பயந்து கொள்கிறார்களே, என் மகன் அந்தத் துரைகளிடம் எவ்வளவு தாராளமாகப் பழகுகிறான், தெரியுமா என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படத்தான் நினைக்கிறாள் உன் அம்மா...ஆனால்—"
"ஆனால் என்னப்பா ஆனால்! அம்மா பெருமைப்படுவதிலே, என்ன தவறு? எல்லாப் பிள்ளைகளுமா, இன்று என் அளவுக்கு சர்க்கார் பாஷையைப் படித்திருக்கிறார்கள். உத்தியோகம் பார்க்கும் யோக்கியதையைப் பெற்றிருக்கிறார்கள்! அம்மாவுக்கு ஆனந்தமாகத்தான் இருக்கும்..."
"அம்மாவும் நானும் ஆனந்தம் அடைய ஒரே வழி நான் சொன்ன வழிதான்..."
"என்னவழி அது! எந்த மகனும், எவ்வளவு மோசமான குணம் கொண்ட மகனும் செய்யத் துணியாததை நான் செய்யவேண்டும்."
"மகனே! உன் உள்ளம் எனக்குத் தெரியாதா? உன் உத்தமமான குணம் எனக்குத் தெரியாதா! உன்னை என்ன செய்யச் சொல்லுகிறேன்—எதற்காக அதைச் செய்யச் செல்லுகிறேன். நமது குடும்பம் மீண்டும் நல்ல நிலைமையை அடையத்தான்.""நான் யார் மகன் என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உலவச் சொல்கிறீர்களே—உங்கள் கண் முன்னாலேயே! அதைவிடக் கொடுமை வேறு என்னப்பா இருக்க முடியும்?...என்னை வாட்டாதீர்களப்பா..."
"சொக்கலிங்கம்! நான் முறைப்படி தமிழ் படித்தவன் என்பது தெரியுமா உனக்கு? பாடம்கூட சொல்லிக் கொடுத்து இருக்கிறேன் — பணத்துக்காகக்கூட அல்லடா மகனே, பொழுது போக்குக்காக! ஜெமீன்தாரிடம் நான் அதைக் காட்டிக் கொள்கிறேனா! சடையா! ஆத்திசூடி தெரியுமா உனக்கு என்றுகூடக் கேலியாகக் கேட்பார் ஜெமீன்தாரர்; 'எனக்குங்களா! நான் என்னத்தைக் கண்டேன்!' என்று சொல்லுவேன்."
"ஏனப்பா! ஏன் மறைக்க வேண்டும்? சொன்னால் என்ன, எனக்குத் தமிழிலே நல்ல பயிற்சி உண்டு என்று"...
"சொல்லலாமடா மகனே! சொல்லலாம். நமது குடும்பம் நொடித்துப் போகாமலிருந்தால் சொல்லலாம். ஆனால் நான் சொல்லலாமா! நான் யார்? வாழ்ந்து கெட்டவன். நல்லது கெட்டது தெரியாமல் நடந்து கொண்டதால் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டவன். நான் போய் ஜெமீன்தாரரிடம் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரியும்; அகவல் அருணாசலப் புலவரிடம் ஆறு வருடம் பாடம் கேட்டிருக்கிறேன் என்று சொல்லுவதா?"...
"சொன்னால் என்னப்பா என்றுதான் கேட்கிறேன்."
"சொல்லிவிட்டு, பைத்தியக்காரா! போதும் நீ தமிழ் படித்த பெருமையைப் பற்றிக் கதை அளப்பது. போ! போ! குதிரைகளுக்குத் தண்ணீர் காட்ட வேண்டிய நேரம் இது. அந்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல், நீ படித்த அகவலின் பெருமைபற்றி அளந்து கொண்டிருக்காதே! இப்போது உனக்குச் சோறு போடுவது உன்னுடைய அகவல் அல்ல; நம்ம குதிரைகள்! என்று சொல்லிவிட்டு இடிஇடியெனச் சிரிப்பார். மகனே! நான் இப்போது வண்டி ஓட்டி!! வண்டிக்காரனடா, வண்டிக்காரன்!""என் அப்பா! என்னைப் பெற்ற பெருமான்! எனக்கு உயிரும் உடலும் உதிரமும், கொடுத்த உத்தமர்."
"அப்படி நீ சொல்லி, நான் கேட்டு மகிழ காலம் வரவில்லை அப்பா! இது அல்ல அந்தக் காலம். நான் வண்டிக்காரன்! நீ புதுவாழ்வு பெறவேண்டியவன்; என் மகன் என்று தெரிந்தால்—வண்டிக்காரன் மகன் என்று தெரிந்தால், உனக்குப் புதுவாழ்வு கிடைக்காது..."
"பயங்கரம் மூட்டும் பேச்செல்லாம் பேசுகிறீர்களே அப்பா!"
"விவரத்தை வளர்த்துக் கொண்டிருக்க நேரமில்லை. உன் மனதிலே என்னென்ன தோன்றும் என்பதைப் பற்றியெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்து, என் மனதிலே ஏற்பட்ட கொந்தளிப்பையும் அடக்கிக்கொண்டு, அதற்குப் பிறகே நான் இந்த முடிவுக்கு வந்தேன். நீ ஜெமீன் ஜம்புலிங்க பூபதியின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலையிலே சேர்ந்துவிட வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் யோக்யதாம்சம் அவ்வளவும் உன்னிடமிருக்கிறது. உன்னிடம் உள்ள ஒன்றே ஒன்றுதான், உனக்கும் வேலைக்கும் நடுவே நிற்கிறது, தடைக்கல்லாக. நீ என் மகன்—வண்டிக்காரன் மகன் என்பதுதான் குறுக்கே நிற்கிறது. வண்டிக்காரனுடைய மகனை, ஜெமீன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார் பூபதி! பிள்ளைகளோடு மாளிகையில் தங்கியிருக்க வேண்டும்; அங்கேயே சாப்பாடு, ஜாகை எல்லாம். எப்போதும் பிள்ளைகளுடன் இருந்து வரவேண்டும். ஜெமீன் குடும்பத்துடன் பழகும் நிலை! அந்த நிலையை மகனே! ஒரு வண்டிக்காரன் மகன் பெறமுடியாது—தரமாட்டார்கள்; ஆனால் நீ அந்த நிலையைப் பெற்றே ஆகவேண்டும். அங்கு இடம் பெற்றுக் கொண்டால், நீ முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் வேகமாக அமையும். நல்ல நிலை—மதிப்பான உத்தியோகம் கிடைக்கும்—கண்குளிரக் காணுவேன், தம்பி! நோயைப் போக்கிக்கொள்ள கசப்பான மருந்துகூடச் சாப்பிடவேண்டி வந்துவிடுகிறது அல்லவா! அது இது. கண்ணிலே வலி ஏற்பட்டால் அதைப் போக்க ஒரு மருந்து தெளிப்பார்கள் கண்ணில்! எரிச்சல் சொல்லி முடியாது. கண்ணீர் தாரை தாரையாகப் பெருகும். நெருப்புப் பொறி பட்டுவிட்டால் எப்படியோ அப்படி இருக்கும். கண்களே இரத்தச் சிவப்பாகிவிடும். ஆனால் தம்பி! மெள்ள மெள்ள எரிச்சல் அடங்கும். சிகப்பு மாறும். மருந்து வேலை செய்யும்; கண்வலி போய்விடும்—பார்வை முன்பு இருந்ததைவிட நன்றாக ஆகிவிடும். அப்படிப்பட்ட மருந்துத் துளிகளைத் தெளித்துக் கொண்டாக வேண்டும்—நீயும் நானும், உன் அம்மாவும்..."
"மருந்துத் துளிகள் அல்ல அப்பா! நெருப்புப் பொறிகள்!"
கடைசியில் சொக்கலிங்கம் சம்மதம் தெரிவித்தான், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
"கொஞ்ச காலம்! கொஞ்ச காலம்! வேறு ஒரு பெரிய வேலை கிடைக்கிறவரையில்!" என்று சமாதானம் கூறிவிட்டு, சடையப்பனும் சொர்ணமும் ஊர் புறப்பட்டார்கள், சொக்கலிங்கத்தை இரண்டு நாள் கழித்து ஜெமீன் கிராமம் வரும்படிச் சொல்லிவிட்டு.
டேவிட், சொக்கலிங்கம் வேறு ஊர் போவதை முதலில் விரும்பவில்லை. என்றாலும், சீக்கிரமாகவே சீமைக்கு வரும்படி அவருக்கு ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்த கடிதம் கிடைத்ததும், சொக்கலிங்கம் தன் தகப்பனாருடன் போய் வாழ்ந்து வருவதுதான் முறை என்ற முடிவுக்கு வந்தார்.
பொதுவான சிபாரிசுக் கடிதத்துடன், குறிப்பாக, ஜெமீன்தாரர் ஜம்புலிங்க பூபதிக்கே ஒரு தனியான சிபாரிசுக் கடிதமும் வாங்கிக் கொண்டு, சொக்கலிங்கம், ஜெமீன் மாளிகை நோக்கிச் சென்றான்.
அவன் படாடோபமற்ற, ஆனால் நாகரிமான உடை உடுத்திக் கொண்டு ஜெமீன் மாளிகைக்குள்ளே நுழையும்போது சடையப்பன் விலை மிகுந்த ஒரு குதிரையை வெளியே உலாவ அழைத்துச் செல்வதைக் கண்டான். நெஞ்சு பகீரென்று ஆகிவிட்டது. ஓடிச் சென்று அவர் காலில் விழ வேண்டும் போலத் தோன்றிற்று. 'அப்பா! அப்பா!' என்ற சொல் வேகவேகமாகக் கிளம்பிற்று; சடையப்பன் பார்த்த பார்வையால் வார்த்தைகள் வெளியே வரவில்லை. சொக்கலிங்கத்தைப் பார்க்காதவனைப் போலச் சடையப்பன் வெளியே சென்றான்.
ஜெமீன்தாரர் ஜம்புலிங்க பூபதி, மிகுந்த செல்வாக்குப் படைத்தவர். ஆங்கில அரசுடன் உறவு கொண்டாலன்றி நமது ஜெமீன் வாழ்வு நிலைக்காது என்பதை உணர்ந்து நடந்து கொண்டவர். ஆனால் அதே நேரத்தில், ஜெமீன்தார் என்பதற்கு உரிய மதிப்பு கெடக்கூடாது என்பதிலேயும் கண்ணுங் கருத்துமாக இருந்தவர்.
மற்ற ஜெமீன்தாரர்களைப்போல, குடிமக்களைக் கசக்கிப் பிழிந்தும் கொள்ளை அடித்தும் பொருள் சேர்த்தால் மட்டுமே போக போக்கியத்தில் மூழ்கி இருக்கலாம் என்ற நிலையில் அவர் இல்லை. ஜெமீன் வருமானத்தைவிட அதிக அளவு அவர் வியாபார மூலம் பெற்றுக் கொண்டு வந்தார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய பண்டங்கள், குறிப்பாகப் புகையிலை, நிலக்கடலை ஆகியவை அவருடைய ஜெமீனில் போதுமான அளவு இருந்தது. சீமைக்குச் சென்று வியாபாரக் கம்பெனிகளுடன் தொடர்பும் ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருந்தார்.
விசேஷ தினங்களில் தவிர மற்ற நேரத்தில் ஆங்கில முறை உடுப்புடன்தான் உலவுவார். நவராத்திரி போன்ற சில விசேஷ நாட்களில் மட்டும் ஜெமீன் உடையுடன் உலா வருவார்.
ஜெமீன் மாளிகை, பழைய கம்பீரமான தோற்றத்துடன் இருந்தது. கொடிமரம்! காவலாட்கள் தங்கும் இடம்! வண்டிப் பட்டை தனியாக! சிறிய கோபுர அமைப்பில், நழைவு வாயில். அதிலே கலசம், சித்திரங்கள், சித்திர வேலைப்பாடுகள்!உள்ளே முழுக்க முழுக்க ஆங்கிலப் பாணியில் விரிப்புகள், விளக்குகள், இருக்கைகள்!
வேலையாட்கள், ஜெமீன் மரபினைக் காட்டும் தனி உடையுடன் இருந்தனர்.
சடையப்பன்கூட, சாதாரணக் காலத்தில் எப்படி உடை அணிந்திருந்தாலும் ஜெமீன்தார் கிளம்பும்போது, தனி உடை அணிந்து கொண்டுதான் வண்டியை ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது ஏற்பாடு.
வண்டி, இவருக்காகவே தனியாகத் தயாரிக்கப்பட்டது—இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டு.
தரமான குதிரைகளை வாங்கி வளர்ப்பதில், அலாதியான விருப்பம் ஜெமீன்தாருக்கு.
கொடுமைக்காரர் என்ற பெயரில்லை; ஆனால் எல்லோரையும் சமமாகப் பாவித்து நடத்துபவர் என்றும் சொல்லி விடமுடியாது.
கட்டி வைத்து அடிப்பது, கொளுத்தி அழிப்பது போன்ற கொடுமைகள் கிடையாது. ஆனால் அவர் எதிரே வருபவர்கள் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ளவேண்டும், மரியாதைக்காக! ஜெமீன் சாரட்டு வருகிறது என்றால் எழுந்து நிற்கவேண்டும். இப்படிப்பட்ட கட்டு திட்டங்களைக் கண்டிப்புடன் வைத்துக் கொண்டு இருந்தார்.
மகன் இல்லாததால், தன் இரண்டு குமாரிகளையும் ஜெமீனை நடத்திச் செல்லக்கூடிய அறிவாற்றல் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.
பெரிய இராஜகுமாரி—இளைய ராஜகுமாரி என்றுதான் ஊரார் அழைப்பார்கள், பெண்களை.
எல்லா விதத்திலும் மிக்க மகிழ்ச்சியாக இருந்து வந்த ஜெமீன்தாரருக்கு ஒரு மனக்குறை ஏற்படுத்தவே பிறந்ததுபோல, அவருடைய மருமகன் காலிங்கராயர் விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே ஊராருக்கு நடுக்கம். ஆனால் அவர் ஊரில் இருக்கும் நாட்கள் மிகக் குறைவு. ஊட்டி, கொடைக்கானல், பம்பாய், புனா, பெங்களூர் என்று ஒவ்வொரு சிங்காரபுரியாகச் சுற்றிக்கொண்டு இருப்பார்!
ஜெமீன் மாளிகைக்குள்ளே அனுமதி பெற்று நுழைந்தபோது சொக்கலிங்கத்துக்கு எந்தவிதமான அச்சமும் எழவில்லை. காரணம், ஜெமீன்கள் உண்டான வரலாறு பற்றிப் படித்தறிந்தவன். ஜெமீன் முறைக்கு எதிர்காலம் கிடையாது என்பது பற்றி டேவிட் தந்த விளக்கத்தைப் பலமுறை கேட்டவன்.
டேவிட் துரை கொடுத்த கடிதத்தை ஜெமீன்தாரிடம் கொடுத்துவிட்டு, சொக்கலிங்கம் அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தான்.
அவனுடைய தோற்றமும், கண்களிலே தோன்றிய ஒளியும், முகத்தில் தவழ்ந்த புன்னகையும், ஜெமீன்தாரரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. முகமலர்ச்சியுடன் இருந்தார்.
டேவிட் துரையின் கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்துவிட்டு, ஜெமீன்தாரர், "வரப்போவதைத் தெரிவித்திருந்தால், ரயிலடிக்கு வண்டி அனுப்பி இருப்பேனே...உன் பெயர் சொக்கலிங்கமா...உட்கார், பரவாயில்லை. உட்கார்...கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்களே...நம்ம ஜெமீனில் எப்போதும் அறிவாளர்களுக்கு மதிப்பு உண்டு" என்றார்.
கொடுமை புரியும் ஜெமீன்தாரர்களைப் பற்றிய கதைகளைப் படித்திருந்த சொக்கலிங்கம், ஜம்புலிங்க பூபதியின் போக்கைக்கண்டு வியப்படைந்தான். டேவிட் துரையின் சிபாரிசுக் கடிதத்துக்குக் கிடைத்துள்ள மரியாதை இது என்பதையும் உணர்ந்தான்.
"டேவிட்துரை சொல்லுகிற வார்த்தையை நான் தட்டி நடப்பதே இல்லை. அவர்தான் என்னை நம் கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சிபாரிசு கடிதம் இருக்கும் போது வேறு எதுவும் தேவையில்லை. நாளைக்கே வேலைக்கு வந்து சேர்ந்து விடலாம்."
"மிக்க நன்றி...இன்று முதலேகூட நான் தயார்தான். பெட்டி படுக்கையுடன் வந்துவிட்டேன்."
"அதுவும் நல்லதாயிற்று. இன்று நல்ல நாள்கூட. குழந்தைகள் பக்கத்து ஊர் போயிருக்கிறார்கள். உமது ஜாகை இங்கேயேதான். வேலைக்காரன் இடத்தைக் காட்டுவான். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல; உமது வேலை; பிள்ளைகளுக்கு ஒரு பெரிய அண்ணன்போல இருக்க வேண்டும்...எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும்."
"ஜெமீன் குடும்பத்து மதிப்புக்கு ஏற்ற விதமாக, குழந்தைகள் வளர என்னாலானதைச் செய்கிறேன்..."
"ஜெமீன் குடும்பத்துச் சுபாவம் குழந்தைகளுக்குத் தன்னாலே வந்துவிடும்...நீங்கள் கற்றுத் தரவேண்டியது, மேனாட்டு முறைகளை; நடை உடை பாவனைகளை. இன்னும் சில வருஷங்களிலேயே நான் அவர்களைச் சீமைக்கு அனுப்பப் போகிறேன், அங்கேயே படிக்க...ஜெமீன் குடும்பத்திலே பிறந்தவர்கள் குறைந்தது ஜில்லா கலெக்டர் வேலைக்காவது போனால்தானே மதிப்பு. சீமைப் படிப்பு தேவையாம்...துரைகள் சொல்கிறார்கள்...நீங்கள்கூட ஆங்கிலமுறை உடையிலேயே இருப்பது நல்லது...குழந்தைகள் பழகும்போதே ஒரு பாடம் கிடைக்கும்...ஆங்கிலப் பாட்டு தெரியுமல்லவா, கற்றுக் கொடுக்க வேண்டும்...என் சின்னமகள் போன வருஷம் தன் பெரியப்பா வீடு போயிருந்தாள்; ஒரு மூன்று மாதம்— பெங்களூர். அங்கு ஆங்கிலேயர் அதிகம் அல்லவா. அங்கு உமா, பியானோ வாத்தியம் வாசிக்கக்கூட கற்றுக் கொண்டாள்..."
"குழந்தைகள் பெரிய மகளுடைய..."
"ஆமாம், ஆமாம்....உமா மகேஸ்வரி, லலிதாம்பிகேஸ்வரி என்று எனக்கு இரண்டு பெண்கள்...தாயை இழந்து விட்டார்கள். லலிதாதான் மூத்தவள்; மூன்று குழந்தைகள்; அவளைப் போலவே தங்கச் சிலைகள், அந்தக் குழந்தைகள்-உமா - இரண்டாவது பெண்; கன்னி."
"இருவரும் ஆங்கிலப் படிப்பு படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்."
"ஓர் ஆங்கிலோ—இந்திய மாது—பள்ளிக்கூட ஆசிரியை இங்கே தங்கி இருந்து, கற்றுக் கொடுத்தார்கள். எப்போது நாம் ஆங்கிலேயருடைய ஆளுகையின் கீழே வந்து விட்டோமோ, அப்போதே நாம் அவர்களுடைய முறைகளை மேற்கொள்ள வேண்டியதுதானே. அப்போதுதானே ஒரு மதிப்பு ஏற்படும். மேலும், நான் வேட்டையாடிக் கொண்டும், விருந்து சாப்பிட்டுக் கொண்டும், பொழுதை ஓட்டுகிற ஜெமீன்தாரன் அல்ல. வியாபாரத் தொடர்புகள் உண்டு. சீமையில் ஒரு பெரிய கம்பெனிக்கு நிலக்கடலை ஏற்றுமதி செய்கிறேன். முத்துச் சிப்பிகளையும் அனுப்பி வைக்கிறேன். அதனால் ஆங்கிலேயர்கள் தொடர்பு நிறைய உண்டு—நிறையப் பழக்கம். சரி, சரி! நான் பேசிப் பேசி உமக்குச் சலிப்பை உண்டாக்கி விடக்கூடாது. ஓய்வு எடுத்துக்கொள்ள நினைப்பீர். பிரயாண அலுப்பு இருக்கும்...உம்முடைய பெயர் என்ன சொன்னீர்?"
"சொக்கலிங்கம்! நண்பர்கள் 'சொக்கு' என்று செல்லமாக அழைப்பார்கள்..."
"இங்கு உமக்குப் பெயர் லிங்கம்...நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள். சொக்கலிங்கம் என்ற பெயரில் எனக்கொன்றும் வெறுப்பு கிடையாது. ஆனால் இங்கு சமையல் வேலை பார்ப்பவன் பெயர் சொக்கலிங்கம். குழந்தைகள் அவனைச் 'சொக்கா! சொக்கா!' என்று அழைப்பார்கள். உம்முடைய பெயரும் அதுபோலவே இருந்தால் என்னமோபோல இருக்கும் அல்லவா, அதனாலே....குழந்தைகளின் சௌகரியத்துக்காக உமது பெயரைக் கொஞ்சம் வெட்டி விட்டேன். சரி! மிஸ்டர் லிங்கம்! இனி உமது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பணத்தை அவ்வப்போது மேனேஜரிடம் பெற்றுக் கொள்ளலாம். எனக்கு உங்களை ரொம்பவும் பிடித்துவிட்டது. சில வேளைகளில் என்னோடுகூட உலாவ வரலாம்; வேட்டையாடக்கூடச் செல்லலாம்.
மறுநாள் குழந்தைகளுடன், ஜெமீன்தாரருடைய இரண்டு குமாரிகளும் வந்து சேர்ந்தனர். சொக்கலிங்கத்தை ஜெமீன்தார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
லலிதாம்பிகேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகிய இருவருமே தங்களை ஊரார் அழைப்பதுபோல ராஜகுமாரி என்று ஆசிரியரும் அழைப்பதை விரும்பவில்லை என்று கூறக் கேட்டு, சொக்கலிங்கம் வியப்படைந்தான்.
குருபக்தி உணர்ச்சியாக இருக்குமோ என்று முதலில் யோசித்தான். ஆனால் ஜெமீன் மாளிகையில் பூஜை செய்ய வருபவரிடம் அவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்த்த பிறகு, தன்னிடம் மரியாதையும் அன்பும் காட்டுவதற்குக் காரணம், டேவிட் துரையிடம் பல வருஷங்கள் பழகியவன் என்பதுதான் என்று தெரியவந்தது.
ஆங்கிலேயர்கள் ஐயாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து இங்கு வந்து ஆட்சி நடத்துகிறார்கள் என்பதாலேயே, இப்படிப்பட்ட ஜெமீன்கள் ஆங்கிலேயரிடம் மிகுந்த பயபக்தி, விசுவாசம் காட்டுகிறார்கள் என்பதும், ஆங்கில அரசினரிடம் மட்டுமல்லாமல், ஆங்கிலேயப் பிரமுகர்களிடம் நெருங்கிப் பழகியவர்களிடமும் அதிக அளவு மரியாதை காட்டுகிறார்கள் என்பதையும் உணர்ந்தான்.
அன்னியருக்கு அடிமைப்பட்டு இருக்கிறோம் என்ற வருத்தமும், வெட்கமும் துளியும் அவர்களுக்கு இல்லாததையும் ஆங்கிலேயர்களைப் போலத் தாமும் கோலத்தை ஆக்கிக் கொள்வதிலேயே நாட்டம் கொண்டிருப்பதையும் அறிந்து வருந்தினான்.
'ஆங்கில நாட்டு வரலாறு படித்திருந்தால், இவர்கள் இப்படியா இருப்பார்கள்; அடிமைத்தனத்தை ஆங்கில மக்கள் எவ்வளவு வெறுத்திருக்கிறார்கள்; அடிமைத்தனத்தைப் போக்க எவ்வளவு இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் இப்படியா இருப்பார்கள்' என்றெல்லாம் எண்ணிக் கவலைப்பட்டான்.
சொக்கலிங்கத்திடம் குழந்தைகள் மிகுந்த அன்பு காட்டத் தொடங்கி விட்டன.
அவன் படிப்பு சொல்லிக் கொடுத்த விதம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து இருந்தன.
காலையில் எழுந்திருப்பது—உடலைச் சுத்தம் செய்து கொள்வது—புதிய உடை உடுத்திக் கொள்வது—உலாவச் செல்வது என்பதிலிருந்து படிப்பு தொடங்கும்.
பல நட்டுப் படங்கள்—வரலாற்றுச் சித்திரங்கள் ஆகியவைகளைக் காட்டி, குழந்தைகளுக்கு இயற்கையாகவே படிப்பதிலே விருப்பம் ஏற்படும்படி ஆகச்செய்த நேர்த்தியான முறையைக் கண்டு ஜெமீன்தாரர் வெகுவாகப் பாராட்டினார்.
எவ்வளவோ தடுத்தும், ஜெமீன்தாரர், சொக்கலிங்கத்துக்கு விதவிதமான உடுப்புகளைத் தயாரித்துக் கொடுத்தார்.
"உமக்குப் பிடித்தமில்லாமல் இருக்கலாம் மிஸ்டர், லிங்கம்! ஆனால் எங்கள் ஜெமீன் கௌரவம் என்று ஒன்று இருக்கிறது, பாருங்கள். அதைக் கெடவிடக் கூடாதே" என்று வேடிக்கையாக ஜெமீன்தாரர் பேசுவார்.
சொக்கலிங்கம், பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க வேலைக்கு அமர்ந்தவராக அங்கு நடத்தப்படவில்லை; ஜெமீன் குடும்பத்தில் ஒருவராகவே மதித்து நடத்தப்பட்டு வந்தார்.
எதிர்பாராத அளவுக்கு வசதியான சூழ்நிலையும், மதிப்பும் கிடைத்தது. அவனைக் கண்டவர்கள் அனைவரும், 'இப்படி அல்லவா அமைய வேண்டும் வாழ்க்கை' என்று பேசிக் கொண்டனர். பூந்தோட்டத்தில் உலவுகிறான், புது மணம் நுகர்கிறான் என்றுதானே எல்லோரும் கருதினர்; ஆனால் அவன் பட்ட வேதனை அவனுக்கல்லவா தெரியும்.
கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்கள் தாயும் தந்தையும்! ஆனால் வெளியே சொல்லிக் கொள்ள உரிமை இல்லை. தனக்குக் கிடைத்த வசதியான வாழ்க்கையிலே அவர்களுக்குப் பங்களிக்க உரிமை இல்லை. பேசவே உரிமை இல்லை.
என்ன விலையுயர்ந்த முத்துமாலை மார்பிலே புரளுகிறது என்று ஊரே புகழ்கிறது. ஆனால் அந்த முத்துகள் ஒவ்வொன்றும் மார்பைத் துளைத்துக் கொண்டே இருக்குமானால், அந்த மாதரசியின் வேதனை எப்படி இருக்கும்? பூமணம் நுகருகிறான் என்று ஊரார் பாராட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் பூநாகம் கடித்தபடி இருந்தால் எப்படியிருக்கும். ஜெமீன் மாளிகைக்கு வருகிறவர்களிடமெல்லாம் ஜெமீன்தாரர் அறிமுகப்படுத்துகிறார். மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார்; ஆனால் பெற்ற தாயும் தந்தையும்? அவர்கள் குடிசையில் அல்லவா குமுறுகிறார்கள்! மகன் மாளிகையில்! அவர்கள் குதிரைக் கொட்டிலுக்கு அருகே! இதற்கா என்னை மகனாகப் பெற்றார்கள்?
எத்தனை இன்பம் கிடைத்தாலும், குதிரையை அவர் தேய்த்துக் கொண்டிருப்பதை ஒரு கணம் பார்த்த உடன், இதயத்தில் ஆயிரம் தேள் அல்லவா கொட்டுகிறது.
'அப்பா!' 'வேண்டுமளவு பணம் எடுத்துக்கொள், செலவுக்கு' என்கிறார், ஜெமீன்தாரர்! விதவிதமான உடைகள்! வெல்வெட்டு மெத்தை! வகைவகையான உணவு! எல்லாம் எனக்கு! ஆனால் உங்களை நான் எந்தக் கோலத்தில் காண்கிறேன்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். தணலில் நிற்கிறேன்!
எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்னை. என் காதில் விழும்படி உன்னை ஏசுகிறார்களே! இதனைக் கேட்கவா எனக்குச் செவிகள்!! ஏனப்பா என்னை இப்படிச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறீர்கள்.நீங்கள் வண்டி ஓட்டிக்கொண்டு செல்கிறீர்கள்; நான் அவர்களுடன் உள்ளே உட்கார்ந்து கொண்டு வருகிறேன்! என்ன கொடுமை! என்ன கொடுமை!
அப்பா! நான் இருக்கும் பக்கம்கூட வருவதற்கு உமக்கு அனுமதி இல்லையே! என் எதிரிலேயே கூனிக் குறுகி நிற்கிறீரே, மாளிகைக்கு வருபவர் முன்.
எத்தனை முறை துடித்திருக்கிறேன்; இனியும் சகித்துக் கொள்ள முடியாது. அப்பா, அப்பா! என்று கூவிக்கொண்டே உன் காலடி விழவேண்டும். அம்மா! அம்மா! என்று அழுதுகொண்டே உத்தமியின் பாதத்தை வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது. முடியவில்லையே! கூடாது என்று கட்டுப்படுத்தி விட்டீர்களே! கிராதகனாக இரு என்று கட்டளையிடுகிறீர்களே! இதயத்தை வெளியே எடுத்து வீசி விடு. மிருகமாகி விடு—என்று உத்திரவிட்டு விட்டீர்களே!...
அப்பா! நான் இங்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் குழந்தைளுக்கு; 'நீங்கள் வணங்க வேண்டிய முதல் தெய்வம் தாய்!'—என்று. என் தாய் அங்குத் தலைவிரி கோலமாக நிற்கக் காண்கிறேன். என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? தலைவலியா! என்று கேட்டு உபசாரம் செய்கிறார்கள் எனக்கு!
என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்கிறீர்களே! நாலுபேர் எதிரிலே என்னைக் கண்டால் வணங்குகிறீர்களே, ஐயோ! அதைவிட வேதனை இருக்க முடியுமா அப்பா!
ஏன் இந்த வேதனை? எத்தனை நாளைக்கு? இவ்வளவு நேசம் காட்டுகிறாரே ஜெமீன்தாரர், இப்போது உண்மையைச் சொன்னால் என்னப்பா?
வெளியே உலவப் போகிறேன் என்றால், ஜெமீன்தாரர் 'ஏன் அந்தச் சோம்பேறியை வண்டி கொண்டுவரச் சொல்வதுதானே! ஏன் நடந்து போகவேண்டும்?' என்று கேட்கிறார்.அடப் பாவிகளே! அவர் என் அப்பா! என்னை இவ்வளவு மதிப்பாக நடத்திக் கொண்டு என் அப்பாவை இவ்வளவு கேவலமாக நடத்துகிறீர்களே இது அடுக்குமா என்று கூவிடத் தோன்றுகிறது. மாளிகை முழுவதும் அந்த ஒலி பரவ வேண்டும்; இந்த ஊர் முழுவதும் கேட்கவேண்டும். குன்றுகளிலெல்லாம் பரவ வேண்டும்... ஒரு வார்த்தை, ஒரு கை அசைவு, ஒரு கண் சிமிட்டுதல் போதும் அப்பா! ஓடோடி வந்து உம் பாதத்தில் விழுவேன்; இந்த ஊர் அறியச் சொல்வேன், 'இவர் என் அப்பா! இதோ என் தாய்!' என்று.
சொக்கலிங்கம் இதுபோலெல்லாம் எண்ணி எண்ணி மிகுந்த வேதனையுற்றான்.
சடையப்பனும் அவன் மனைவியும் தங்கள் மனவேதனை துளியும் வெளியே தெரியாதபடி நடந்து கொண்டார்கள்.
யாரும் காணாதபோது சொக்கலிங்கத்தைத் தொலைவிலிருந்து பார்த்துப் பூரிப்படைவார்கள்.
வேலையாட்கள், அவன் புகழ் பாடக்கேட்டு இன்புறுவார்கள். திரும்பத் திரும்ப சொல்லச் சொல்லிக் கேட்பார்கள்.
எப்படியாவது யாருமறியாமல் தோட்டத்தில் உலவுவதுபோலச் சென்று, பெற்றோரைக் கண்டு பேசி இதயத்துக்கு விருந்து பெற்றிடலாம் என்று புறப்பட்டாலோ, யாராவது ஒருவர் வந்துவிடுகிறார்கள் துணைக்கு என்று!
ஜெமீன் மாளிகையில் அவன் வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆயிற்று. ஐந்தாறு தடவைகள் மட்டுமே பெற்றோரை சில விநாடிகள் தனியே கண்டு பேச முடிந்தது.
ஒவ்வொரு நாளும் தன் அறை ஜன்னல் வழியாக ஏக்கத்துடன் பார்க்கிறான். அந்தக் குடிசையை, அங்குக் கோவில் கொண்டிருக்கும் தெய்வத்தைக் கண்ணீரால் அபிஷேகிக்கிறான், இருக்கும் இடத்தில் இருந்தபடியே!
அப்பா, மெள்ள தள்ளாடித் தள்ளாடி நடந்து வருகிறார்.
அம்மா, ஏதோ எடுத்துச் செல்கிறார்கள்!யாரோ அதட்டிக் கூப்பிடுவது கேட்டு, அவசரமாக நடக்கிறார் அப்பா!
மலர்களைப் பொறுக்குகிறார்கள் அம்மா...
பூஜைக்கா! இந்தப் பாவி வாழட்டும் என்றா பூஜை செய்கிறார்கள்.
இரவு முழுவதும் கண்ணீர்! பகலில் ஒரு போலி நாடகம்!
ஜெமீன் மாளிகையில் இடம் பெற்ற சின்னாட்களிலேயே சொக்கலிங்கம் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றுவிட்டான். டேவிட் தந்த பயிற்சி காரணமாக எவரிடமும் இனிய முகத்துடன் பழகவும் பேசவும், மற்றவர்களுக்கு உதவி செய்வதிலே ஆர்வம் காட்டவும் அடக்கமாக இருக்கவும் அதேபோது அடிமை மனப்போக்கைக் கொள்ளாமலும் நடந்து கொள்ள முடிந்தது.
செல்வச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஜெமீன்தாரரின் பெண்களுக்கு முதலில், ஒரு வாத்தியாருக்கு இவ்வளவு மதிப்பு அளித்திட ஜெமீன்தாரர் முனைந்தது வியப்பாக இருந்தது.
பெரிய பெரிய சங்கீத வித்வான்கள் சன்மானம் பெறுவார்கள், புலவர்கள் பொன்னாடை பெறுவார்கள், கூத்தியலார் புகழுரையும் பொற்பதக்கமும் பெறுவார்கள். ஆனால் இவர்களிலே யாருக்கும் கிடைக்காத ஒரு தனித்தன்மையான மதிப்பு பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வந்த, ஊர் பேர் தெரியாத ஒரு இளைஞருக்குத் தரப்படுவதன் காரணம் தெரியாமல் வியப்புற்றனர். ஜெமீன்தாரரே அவ்விதம் நடந்து கொள்ளும்போது நாம் வேறுவிதமாக நடந்து கொள்ளக் கூடாது என்று ஜெமீன்தாரரின் குமாரிகள் கருதினர்.
மற்றோர் வியப்பும் அவர்களுக்கு ஏற்பட்டது. வேறு யாருக்கும் தரப்படாத மதிப்பு தரப்பட்ட போதிலும், எல்லாவிதமான வசதிகள் அளிக்கப்பட்ட போதிலும், சொக்கலிங்கம் முழு மகிழ்ச்சியுடன் இருப்பதுபோலத் தோன்றவில்லை.எதையோ பறிகொடுத்துவிட்டவரைப் போன்ற ஒரு பார்வை! ஏதோ ஒரு வேதனையை அடக்கிக் கொள்ள முயற்சிப்பது போன்ற ஒரு போக்கு. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுவது போன்ற ஒரு நிலை.
சிறிது நேரமாகிலும் தனியே உலவச் செல்வது, அதிகநேரம் தமது அறையில் தங்கி இருப்பது, பணியாட்களைப் பார்க்கும்போது கண்களில் கவலை கப்பிக்கொள்வது. இந்த நிலை தெரிந்தது, சொக்கலிங்கத்தின் நடவடிக்கையில்.
மூத்த மகள், தன் கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதிலும், ஜெமீனுக்கென்று ஏற்பட்டு விட்ட சம்பிரதாயங்களை நிறைவேற்றி வைப்பதிலேயும் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்ததால், சொக்கலிங்கத்தால் ஏற்பட்ட இந்த நிலைமைகளைப்பற்றி அதிக அளவு சிந்தித்துக் கொண்டிருக்க முடியவில்லை.
சரியான ஒரு காரணம் இல்லாமல் அப்பா இவ்விதம் நடந்துகொள்ள மாட்டார் என்று திடமாக நம்பினாள். ஆகவே அந்தப் பிரச்சினை பற்றி மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை.
உமாவின் நிலை அப்படி இல்லை. ஜெமீன் காரியத்தை மூத்தவள் கவனித்துக் கொண்டதால், உமாவுக்கு, சொக்கலிங்கத்தை ஒட்டிக் கிளம்பிய பிரச்சினையில் மனதை செலுத்தவும், இது காரணமாக இருக்குமா, அது காரணமாக இருக்குமா என்று பல்வேறு வகையிலே சிந்தனையில் மூழ்கிடவும் நிரம்ப நேரம் இருந்தது.
ஆனால் எவ்வளவு சிந்தித்தாலும், புதிர் மேலும் மேலும் சிக்கலுள்ளதாயிற்றே தவிர, தெளிவு கிடைக்கவில்லை.
"இப்படி இருக்குமாடி கோகிலம்! இவர் உண்மையில் ஒரு பெரிய ஜெமீன்தாரருடைய மகனாக இருக்கக்கூடும். தகப்பனாரிடம் ஏதோ ஒரு காரணத்தால் விரோதித்துக் கொண்டு, வீட்டைவிட்டு வந்து விட்டிருக்கிறார். இந்த இரகசியம் அப்பாவுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. வந்தவரும் தன்னை 'வாத்தியார்' என்று மறைத்துச் சொல்லி இருக்கிறார். அப்பாவும் அதைக் கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்கிறார். அப்பாவா ஏமாறுவார்! வாத்தியார் என்று சொல்லிவிட்டால் நம்பி விடுவாரா? கோகிலம்! என்ன காரணம் இருக்கும், இவர் தன்னுடைய சொத்து சுகத்தை விட்டுவிட்டு இப்படி வாத்தியார் வேடம் போட்டுக் கொண்டு கிளம்ப? என்ன மனவேதனையோ! பாவம்..." என்று உமா பேசுவாள். அதைக் கேட்கும் போதே கோகிலாவுக்கு மனதிலே திகில் மூளும். உமா சொல்கிறபடி இருந்துவிடக் கூடாது. சொக்கலிங்கம் வாத்தியார் வேலை பார்க்க வேண்டிய சாதாரண நிலையினராக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டும், அந்த நம்பிக்கையை அணைத்துக் கொண்டும், காலம் கனியும் என்று காத்துக் கொண்டும் இருந்தாள் கோகிலா—ஜெமீன் மானேஜரின் மகள்.
சொக்கலிங்கத்தின் இனிய இயல்புகளும், வசீகரமான தோற்றமும், ஜெமீன் மாளிகையிலே கிடைத்திருந்த ஏற்றமும், கோகிலாவின் மனதை வேகமாக அவன் பக்கம் இழுத்துச் சென்றுவிட்டது.
சொக்கலிங்கத்தின் தோற்றமும், இளமங்கையர் விரும்பிடும் விதமாக இருந்தது.
அவன் ஜெமீன்தாரன்! ஏதோ காரணத்தாலே தன் நிலையை மறைத்துக் கொண்டு இருக்கிறான் என்பது உண்மையாகிப்போனால், தனக்கு அவன் எட்டாக் கனி ஆகிப் போவானே என்ற ஏக்கம் கோகிலாவுக்கு.
சொக்கலிங்கத்திடம் அவள் தன் மனதை பறிகொடுத்து விட்டிருந்தாள்.
எவ்வளவோ வேலைகளுக்கிடையிலும், அவன் சிற்சில வேளைகளில் தன் மீது செலுத்தும் பார்வையிலே ஒரு கனிவு இருப்பதை அவள் உணர்ந்து உளம் பூரித்தாள்.உமாவும் சொக்கலிங்கத்தின் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டாள் என்ற போதிலும் தங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவிதமான நிலை இருந்தாலொழிய சொக்கலிங்கத்தை தான் அடைய நினைப்பது நடைபெறக் கூடியது அல்ல என்பதை உணர்ந்திருந்ததால், தன் மனதிலே காதலைத் தீயென மூண்டெழ விடவில்லை.
அவளுடைய உள்ளத்தில் முளைவிட்டுக் கொண்டிருந்த காதற் பயிருக்கு, ஜெமீன்முறை ஒரு வேலி போட்டுவிடும் என்பது உமாவுக்கு நன்றாகத் தெரியும்.
வாழ்க்கையை நடத்துவதற்காக 'வாத்தியார்' வேலையோ அல்லது அது போன்ற வேறு ஏதேனும் அலுவலோ பார்த்தாக வேண்டிய நிலைதான் சொக்கலிங்கத்துக்கு என்றால், காதலிப்பது பலன்தராது—அது கருகிய மொட்டு ஆகிவிடவேண்டியதுதான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தாள்.
ஜெமீன்தாரர் சொக்கலிங்கத்துக்குக் காட்டும் மதிப்பைக் கவனிக்கும்போது, உமாவின் மனதிலே ஒரு ஆவல் எழும். உண்மையில் வரத்தியார் வேலை பார்க்க வந்தவராக இவர் இருக்க முடியாது. இவர் ஏதோ ஒரு ஜெமீன் வீட்டுப் பிள்ளைதான். என்ன காரணத்தாலோ மாறுவேடம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்ற ஒரு எண்ணம் தோன்றியது.
அந்த எண்ணம் தந்த தித்திப்பிலேயே உமா மெத்தச் சுவைகண்டு வந்தாள்.
சொக்கலிங்கத்தின் உண்மை நிலை ஒருநாள் வெளியே தெரிந்துவிடும்; அப்போது அவரை அடையத் தனக்கு ஒரு தடையும் இராது என்ற நம்பிக்கையை நாளும் வளர்த்துக் கொண்டு வரலானாள்.
இரு எழில் மங்கையர் உள்ளத்திலும் இது போன்ற எண்ணங்களைக் கிளறிவிட்ட சொக்கலிங்கம் காதலைப்பற்றி எண்ணிப் பார்க்கக்கூடத் தனக்கு நேரம் இல்லை; நிலை இடம் தராது என்று இருந்து வந்தான்."கோகிலா! இப்படித்தான் இருக்கவேண்டும். இவருடைய தகப்பனார், பெரிய ஜெமீன்தாரர். இவர் ஒரே மகன்! தாயார் இறந்துவிட்டார்கள். அந்தப் பெரிய ஜெமீன்தாரர், இரண்டாந்தாரமாக எவளையோ திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதைக் கண்டு கோபித்துக் கொண்டு, 'எனக்கு இந்த ஜெமீனே வேண்டாம். இந்தப் பெரிய உலகத்தில் ஜெமீன்தாரர்கள் மட்டுமா இருக்கிறார்கள். உழைக்கத் தெரிந்தவர்கள் யாரும் வாழ முடியும். நான் செல்கிறேன். என்னை மறந்துவிடுங்கள், என்றெல்லாம் ஆத்திரமாகப் பேசிவிட்டு இவர் கிளம்பிவிட்டிருக்கிறார். இவருடைய இந்த இரகசியத்தை அப்பா எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் இவரை, ஜெமீனிலே வாத்தியார் வேலை பார்க்க வரும்படிக் கூறி அழைத்து வந்து வைத்திருக்கிறார். தக்கசமயமாகப் பார்த்துக் கூற வேண்டியதை அப்பா கூறப்போகிறார், பாரேன்!" என்று ஆவல் ததும்பத் ததும்ப உமா கூறினாள்.
'ஐயோ! அப்படி இருந்து விட்டால் என்கதி என்ன ஆவது? நான் எண்ணிடும் எண்ணங்கள் எப்படி ஈடேற முடியும்' என்ற ஏக்கத்துடன் கோகிலா உமா கூறுவதைக் கேட்டுக் கொண்டாள்.
மாறுவேடத்திலே உலவும் ஜெமீன்தாரர் இந்தச் சொக்கலிங்கம் என்ற எண்ணத்தை உமா தருவித்துக் கொண்டதும், அவள் கண்முன் இன்பமயமான எதிர்காலமே தெரியலாயிற்று.
ஜெமீன்தாரரின் அன்புக்கட்டளை காரணமாக சொக்கலிங்கம் விதவிதமான உடை உடுத்துக் கொள்வதையும், ஜெமீன்தாரரிடம் பழக வருபவர்களிடம் மிகத் திறமையுடன் பல பொருள்பற்றி அழகாகப் பேசுவதையும் உமா பார்த்தும் கேட்டும், மிகுந்த பூரிப்படைந்து வந்தாள்.
இதே காரணமாகக் கோகிலா கிலி கொண்டிருந்தாள்.
ஆனால், உமாவின் கண்களுக்குத் தெரியாத ஒரு காட்சி கோகிலாவுக்குக் கிடைத்தது—அவள் துளியும் எதிர்பாராத நிலையில்.தனியாக உலவச் செல்வதாகத் தோட்டத்துக்குச் சென்றிடும் சொக்கலிங்கத்தை ஒருமுறை தற்செயலாகப் பின் தொடர்ந்த கோகிலா, யாரும் காணாத முறையில் சொக்கலிங்கம் வண்டிக்காரன் குடிசைக்குள்ளே நுழையக் கண்டாள்.
பணியாளர்களிடம் பரிவு காட்டும் பண்பு காரணமாகவே சொக்கலிங்கம் அங்கே சென்றிருப்பதாகக் கோகிலா முதலில் எண்ணிக் கொண்டாள்.
ஆனால் உள்ளே சென்ற சொக்கலிங்கம் வெளியே வருவதற்கு நீண்ட நேரம் பிடித்தது.
அவன் வெளியே வந்தபோது, அவன் தன் கண்களிலே துளிர்த்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கக் கண்டாள். திகைப்பு மேலிட்டது.
கண் கலக்கத்தைத் தரத்தக்க அளவுக்கு என்ன கண்டான் அந்த குடிசைக்குள்ளே என்று எண்ணித் திகைத்தாள்.
சில விநாடிகளில் சொக்கலிங்கம் தோட்டத்தைக் கடந்து மாளிகையின் உட்புறம் சென்று விட்டான்.
அவன் உள்ளே வருவதைக் கண்டதும், உமா 'பியானோ' வாசித்துக் கொண்டு, பாட ஆரம்பித்தாள், வசந்தத்தின் இனிமையைப் பற்றிய ஒரு பாடலை.
"நோக்கம் எதுவாக இருந்தால் எனக்கென்னடா போக்கிரிப் பயலே! என்னை நம்பவைத்து மோசடி செய்தாயே, அதற்கு உன்னைச் சும்மா விட்டுவைக்கலாமா! என்னை எவ்வளவு ஏமாளி என்று எண்ணியிருந்தால், துணிந்து நீ இந்தக் காரியத்தைச் செய்திருப்பாய். அடே, அறிவற்றவனே! இந்த ஜெமீனுக்கு விரோதமாக நடந்தவன் கதி எல்லாம் தெரியுமா உனக்கு. அவர்களின் மண்டை ஓடுகள் எருவாக்கப்பட்டு வளர்ந்திருப்பதுதான் மாளிகையை ஒட்டி இருக்கிற தென்னந்தோப்பு! நீ படப்போகிறது இனி அல்லவா தெரியப் போகிறது உனக்கு. வண்டிக்காரன் பிள்ளை நீ! இங்கு வேடம் போட்டுக் கொண்டு ஜெமீன் குடும்பத்துடன் சரிசமமாகப் பழகினாயே துணிந்து, எத்தனை துணிச்சல் உனக்கு. அடே! உன் போக்கிரித்தனம்கூட இருக்கட்டும்; எவ்வளவு கல்மனம் உனக்கு. பெற்ற தாயையும் தகப்பனையும் இங்கே கேவலமான பிழைப்பு நடத்த விட்டுவிட்டு, துளிகூட ஈவு இரக்கம், பற்று பாசம் இல்லாமல் நீ சீவிச் சிங்காரித்துக் கொண்டு கோலாகல வாழ்வு நடத்திக் கொண்டிருந்தாய். உன் போக்கைக் கண்ட அந்தக் கிழவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? உன் தாய், அங்கே குதிரைச் சாணியை எடுத்துப் போட்டு கொட்டிலைச் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பது—நீ ஜெமீன் கட்டிலில் சாய்ந்துகொண்டு சுகம் அனுபவிப்பது. ஒரு கணமாவது எண்ணினதுண்டா, இந்த ஈனத்தனத்தைப் பற்றி? தாயையும் தகப்பனையும் கேவலப்படுத்தத் துணிந்த உன்னை மனித இனத்திலேகூடச் சேர்க்கக்கூடாதே. சமுதாயமே பாழாகிவிடும் உன்போன்றவர்களால். உன்னை உயிரோடு விட்டு வைப்பதாக இல்லை. ஆமாம், என்னை வஞ்சித்தவனை நான் வாழ விடுவதில்லை..." என்று ஜெமீன்தாரர் ஆத்திரம் மேலிட்டுக் கூச்சலிடுவதும், அவர் எந்த விநாடியில் உத்திரவிடப் போகிறார் என்று காத்துக் கொண்டு அடியாட்கள், கம்பு கட்டாரியுடன் சூழ நிற்பதையும் கண்டு, சொக்கலிங்கம் அலறித் துடித்தெழுந்து 'செ! என்ன பயங்கரமான கனவு' என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
தான் நடத்திக் கொண்டிருக்கும் போலி நாடகத்தின் குட்டு உடைபட்டுப்போய் விட்டால் என்னென்ன ஆபத்துக்கள் வெடித்துக் கிளம்பக்கூடும் என்பதை சொக்கலிங்கம் எண்ணிப் பார்ப்பதுண்டு, சில சமயங்களில். ஆனால் இது போன்ற பயங்கரமான கனவுகள் கண்டதில்லை.
அன்றிரவு அந்தப் பயங்கரமான கனவு கண்டதற்குக் காரணம் அன்று மாலை, துளியும் எதிர்பாராத வகையிலே ஆப்பக்காரி அன்னத்தைக்கண்டு திடுக்கிட்டுப் போனதுதான்!
ஜெமீன் மாளிகைக் கொத்தனாருடன் குலவிக் கொண்டு அன்னம், ஜெமீன் குலதெய்வத்துக்கு நடத்தப்படும் திருவிழாவில் கலந்து கொண்டிருக்கக் கண்டு திடுக்கிட்டுப் போனான்.அன்னம், விதவை. தவறான நடத்தை அற்றவள்; ஆப்பக்கடை நடத்திக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வருபவள் என்ற நல்ல பெயர் பெற்றவள். அவள் இப்படி! அவளுக்கு இப்படி கள்ளக்காதல்! இதிலே கிடைக்கும் பணம்தானா, காவேரியின் கழுத்திலே தங்கச் சங்கிலியாயிற்று? இப்படி எண்ணிப் பதறி, தன் குட்டை உடைத்து விடுவானோ என்று அன்னம் பதறினாள்.
தன் குட்டை அவள் எங்கே உடைத்துவிடுகிறாளோ என்று அவன் அஞ்சினான்.
கொத்தனார் மெள்ள அந்த இடத்தைவிட்டு நழுவி விட்டார்.
தயங்கித் தயங்கி அன்னம் சொக்கலிங்கத்தைக் கண்டு, கண்களைக் கசக்கியபடி, "தம்பி! என்னமோ என் தலைவிதி இப்படி ஆகிவிட்டது. என்னைக் கண்டுவிட்டதை நம்ம ஊரிலே யாரிடமாவது நீ சொல்லிவிட்டால், என் மானம் மரியாதை யாவும் போய்விடும். நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். உன் காலில்கூட விழுந்து கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.
தனக்குப் பேராபத்து வந்துவிடப் போகிறது என்று அஞ்சிக் கிடந்த சொக்கலிங்கம், அன்னம் தன்னைக் கண்டு பயப்படுவது கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் திகைத்தான்.
"யாரம்மா நீ?" என்று வியப்புடன் கேட்பதுபோல் வினவினான்.
"தம்பி! என் நடத்தையைக் கண்டதால்தானே யார் நீ என்றே என்னைக் கேட்டுவிட்டாய். எனக்கு இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும்" என்றாள் அன்னம்.
"நீ யாரோ எனக்குத் தெரியாது. நான் கண்ணால் கண்டதை யாரிடமும் கூறப்போவதில்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நான் இருக்கும் இடத்தில் அந்த ஊரிலேயே அந்த வட்டாரத்திலேயே நீ இருக்கக் கூடாது" என்றான் சொக்கலிங்கம்."இந்தப் பாவியைக் கண்ணாலே பார்ப்பதுகூடப் பாவம் என்று நினைத்துத்தானே அப்படிப் பேசுகிறாய். என் நடத்தை உனக்கு எப்படியோ தெரிந்துவிட்டதாலேதான், காவேரியையும் கல்யாணம் கட்டிக்கொள்ள மறுத்தாய் என்பது இப்போது புரிகிறது. நாம் செய்கிற காரியம் யார் கண்ணிலும் படாது என்று எண்ணிக் கொண்ட நான் ஒரு முட்டாள். பாரேன்! ஆண்டவன் உன்னை இன்றையத் தினமாகப் பார்த்து இங்கே அனுப்பி வைத்தார்...நீ சொல்கிறபடி நான் செய்கிறேன்...இப்போதே இந்த ஊரைவிட்டுப் போய் விடுகிறேன். அவலூரிலும் இருக்கப் போவதில்லை...கோலாருக்கே போய் விடுகிறேன்...இந்த விஷயத்தை மட்டும் யாரிடமும் சொல்லிவிடாதே...காவேரியை ஒருவரும் கட்டிக் கொள்ள முன்வரமாட்டார்கள்...இந்தப் பாவிக்காக மனம் இரங்காவிட்டாலும், அந்தப் பெண்ணுக்காகவாவது இரக்கம் காட்டு தம்பி!" என்று கெஞ்சினாள்.
"ஆகட்டும்! நீ முதலில் உடனே இந்த ஊரைவிட்டுக் கிளம்பு" என்று கண்டிப்பான குரலைத் தருவித்துக் கூறிவிட்டு, "உன்னை இங்கு பார்த்ததை நான் மறந்துவிடுகிறேன். அதுபோலவே என்னை இங்குப் பார்த்ததை நீ மறந்துவிடு! யாராவது, என்னைப் பார்த்து இந்த அம்மாளைத் தெரியுமா என்று கேட்டால், 'தெரியாது' என்று நான் கூறிவிடுகிறேன். அதுபோலவே நீயும் என்னைப் பற்றிக் கேட்டால் சொல்லிவிட வேண்டும்" என்று உத்திரவு பிறப்பிப்பது போலப் பேசி அன்னத்தை ஊரைவிட்டே அனுப்பி விட்டு, "அப்பாடா! வர இருந்த ஆபத்திலே இருந்து தப்பினோம்" என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அதே எண்ணம், அதன் விளைவாக அந்தப் பயங்கரமான கனவு!!
கனவிலே காணும்போதே இவ்வளவு பயங்கரமாக இருக்கிறதே, உண்மையிலேயே கபட நாடகம் வெளியாகி விட்டால் ஜெமீன்தார் எப்படியெல்லாம் சீறுவார்—என்னென்ன தண்டனைகளைத் தருவார் என்பதை எண்ணும்போது சொக்கலிங்கத்துக்கு உடலே வெடவெடவென ஆயிற்று, கனவே பரவாயில்லை என்று தோன்றிற்று.சொக்கலிங்கம் மேன்மையான நிலையில் இருந்து வருகிறான் என்பதைக் காண்பதுடன், அதுபற்றி மற்றவர்கள் கூறுவதைக் காதுகுளிரக் கேட்கிறார்கள் அந்த முதியவர்கள்.
ஒருநாள் மாலை உமா மகேஸ்வரியே குடிசைப் பக்கம் சென்றாள்— புது ரகக் கோழிகள் கொண்டுவரப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு, அவைகளைப் பார்க்க.
சொர்ணம், மரியாதையாக வரவேற்று, அழைத்துப் போய் கோழிகளைக் காட்டுகிறார்கள். சொக்கலிங்கத்தைப் பற்றிய உரையாடல் நடக்கிறது.
"ஜெமீன் மாளிகைக்குப் புது 'வாத்தியார்' வந்திருக்கிறார் தெரியுமா? ஆள் வெள்ளைக்காரன் போலவே உடுத்திக் கொண்டிருக்கிறார். வயது இருபத்தி இரண்டு இருக்கும். நல்ல சிகப்பு. அரும்பு மீசை. அழகான கண்கள்! எப்போதும் சிரிப்பு—"
"சிரிக்கும்போது கன்னத்திலே குழிவிழுமே, அது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா..."
"ஓ! நீ இதற்குமுன்பே புது வாத்தியாரைப் பார்த்து விட்டாயா..."
"இல்லையே...நான் இன்னும் பார்க்கவில்லை. மாளிகைக்குள்ளே போகவே வாய்ப்பு இல்லை..."
"பின்னே, எப்படிக் கன்னத்தில் குழி அழகாக விழும் என்று சொன்னாய்..."
"என்னமோ நினைப்பிலே சொன்னேன்...நீங்கள் வர்ணித்துக் கொண்டு வந்ததைக் கேட்டதிலிருந்து அப்படிச் சொல்ல வேண்டும் போலத் தோன்றிற்று, சொன்னேன்."
"படிப்பு சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல, பாட்டு, நடனம், சித்திரம் தீட்டுவது எல்லாம் தெரிந்திருக்கிறது. எனக்கென்னமோ 'டீச்சர்' அதிக நாளைக்கு இங்கே இருப்பாரென்று தோன்றவில்லை..."
"ஏனம்மா அப்படிச் சொல்லுகிறீர்கள்?""படிப்பு நிறைய இருக்கும்; அது தெரிகிறது. திறமைசாலி. அப்படிப்பட்டவர் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதிலேயா காலம் முழுவதும் இருப்பார். விரைவிலே பெரிய உத்தியோகத்துக்குப் போய்விடுவார்."
"அதென்னம்மா அப்படி. நம்ம ஜெமீனிலே அவர் கேட்கிற பணம் கொடுக்க முடியாதா என்ன..."
"பணம் ஒன்றுதானா முக்கியம்...அதிகாரம் அந்தஸ்து இதெல்லாம் வேண்டாமா...அவர் பெரிய உத்யோகம் பார்க்கக் கூடியவர்...எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது..."
"ஜெமீன்தாரய்யா மனசு வைத்தால் நடக்காத காரியமா. அவருக்கு தெரிந்த துரை யாரிடமாவது ஒருவார்த்தை சொன்னால் போதாதா! வேலை தன்னாலே வருமே! ஆனால் அந்தப் பிள்ளை கூச்சமில்லாமல் கேட்கவேண்டும்."
"டீச்சருக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்து விட்டிருக்கும் போலத் தெரிகிறது. ஓவியம் தீட்டுவார் என்று சொன்னேன்...அவருடைய அறை ஜன்னல் வழியாக, தோட்டத்தின் அழகைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருப்பார் நெடுநேரம்."
"அவருடைய ஜன்னல் வழியாகப் பார்த்தால் தோட்டம் முழுவதும் தெரியுமாம்மா! அப்படியானால் எங்க குடிசைகூடத் தெரியும்...அப்படித்தானே..."
"ஆமாம்! அடிக்கடி தோட்டத்துப் பக்கம் உலாவ வருகிறாரே, பார்த்ததில்லையா—"
"பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்..."
"புது வாத்தியாரை நான் பார்த்ததே இல்லையென்று முன்னே சொன்னாயே..."
"கிட்டே நெருங்கிப் பார்த்ததில்லை என்று தான் சொன்னேன்...தொலைவிலே இருந்து பார்த்திருக்கிறேன்...சின்ன ஜெமீன்தார்களோட வருவாரே அப்போது."அதென்ன சின்ன ஜெமீன்தார்கள்—ராமு சோமுன்னு சொல்லேன். வயசிலே நீ பாட்டிபோல, அந்தக் குழந்தைகளுக்கு."
"இருக்கலாம். பார்க்கப்போனா புது வாத்தியாருக்கு வயசிலே நான் அம்மாபோல! ஆனால் கூப்பிட முடியுமா, மகனே வாடான்னு!"
"உனக்கு மகன் இல்லையே என்கிற வருத்தம்...இல்லையா...ஒரு மகன் இருந்திருந்தா, ஏதாவது வேலைக்குப் போவான்; பணம் கிடைக்கும்; இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கலாம்...இல்லையா—"
"இங்கே ஒரு குறையும் இல்லையே எங்களுக்கு. நாங்கள் இருவர்தானே! உள்ளது போதும்..ஒரு குறையும் இல்லை.."
"ஆமாம், கிழவன், உன்னோட புருஷன், வேண ஆட்டம் ஆடினவனாமே..சொத்துகூடக் கொஞ்சம் இருந்ததாம்! தொலைத்துவிட்டானாமே...மானேஜர் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தார்..."
"ஆண் பிள்ளைகளோட சுபாவம்...சிலவேளைகளிலே அப்படி ஆகிவிடுது..."
"சரி, சரி! அதோ டீச்சர் குழந்தைகளோடு! கூப்பிடட்டுமா? பேசேன் அவரோட...நல்லவரு...எல்லோரிடமும் அன்பாகத்தான் பழகுவாரு..."
"இரும்மா...அவர் ஏன் இங்கே வரணும்...ஏம்மா, பச்சரிசி மாங்கா தர்ரேன், கொடுக்கறயா...வண்டிக்காரன் சம்சாரம் கொடுத்ததுன்னு சொல்லேன்...பச்சரிசி மாங்கா ரொம்பப் பிடிக்கும்..."
"டீச்சருக்கா...அது எப்படி உனக்குத் தெரியும்?"
"டீச்சருக்குன்னு சொல்லல்லேம்மா...யாருக்கும்தான்...பச்சரிசி மாங்கான்னா ரொம்பப் பிடிக்கும்...பொதுவாகச் சொன்னேன்...""நான் எடுத்துக் கொண்டுபோய் கொடுக்கமாட்டேன். ஏதாவது தப்பான எண்ணம் வந்துவிடும்..கதைகளிலே படித்திருக்கிறேன்...ஒரு வாலிபனுக்கு ஒரு இளமங்கை இப்படி ஏதாவது கொடுத்தா, தப்பான எண்ணம் ஏற்பட்டுவிடும்...மேலும் அவர் எங்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்க்கிற டீச்சர். இல்லையா...அவரை ஒரு வரம்போடுதானே வைத்திருக்க வேண்டும். இந்தப் பக்கம் வருகிறமாதிரி தெரிகிறது. நான் போய்விடுகிறேன்...நீ கூப்பிட்டு தாராளமா...நம்ம ஜெமீனில் வேலை பார்க்கிறவர்தானே...கூப்பிட்டுப் பேசு; கொடு..."
"கோகிலா! எனக்கு ஒரு உதவி செய்வாயா? கேட்க கூச்சமாகக்கூட இருக்கிறது. ஆனால் என்ன செய்வது, வேறுயாரும் இல்லை..." என்று ஒருநாள் பேச்சைத் துவக்கினாள் உமா, படித்துக் கொண்டிருந்த "சிப்பிக்குள் முத்து" என்ற கதைப் புத்தகத்தைத் தூர எறிந்துவிட்டு.
உமா, தன் மனதிலே சொக்கலிங்கத்தைப் பற்றிய எண்ணத்தை வளர்த்துக் கொண்ட பிறகு, எப்போதும் காட்டாத ஆர்வத்தைப் படிப்பதில்—(காதற் சுதைகளை—மர்மக் கதைகளை) காட்ட ஆரம்பித்தாள்.
"நான் என்னம்மா உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன குறை இருக்க முடியும்" என்று கோகிலா கேட்டாள், கவலை தோய்ந்தவளாய்.
"எனக்கு அவரிடம் பேசக் கூச்சமாக இருக்கிறதடி கோகிலா..." என்று சொல்லத் தொடங்கினாள் உமா. கோகிலா சிறிது உரத்த குரலிலேயே சிரித்தாள்.
"வேடிக்கைதானம்மா நீங்கள் சொல்வது. நீங்கள் இருவரும் பழகுவதையும் அடிக்கடி பேசிக் கொள்வதையும் பார்க்கிற யாரும் ஒரு பத்து வருடமாகவாவது பழகி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இருக்க, அவரிடம் பேச எனக்குக் கூச்சமாக இருக்கிறது என்கிறீர்களே?" என்று கேட்டாள் கோகிலா."பேசுகிறேன் கோகிலம்! இல்லையென்று சொல்லவில்லை. அவர் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றுகிறது. அவ்வளவு இனிமையாகப் பேசுகிறார். ஆனால் அவருடைய இரகசியத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமடி. அந்தப் பேச்சை மட்டும் என்னால் பேசமுடியவில்லை. கூச்சமாக இருக்கிறது" என்று உமா விளக்கம் அளித்தாள்.
கோபத்தை அடக்கிக் கொண்டு கோகிலா, "என்னம்மா கேட்க வேண்டும் அவரிடம். என்னைக் காதலிக்கிறீர்களா-திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறீர்களா என்றா!" என்று கேட்டாள்.
ஜெமீன் முடுக்குக் குறையாமல் பேசினாள் உமா.
"வலியச் சென்று என் காதலைக் கூறிட நான் என்ன சாமான்யக் குடும்பத்தவளா? கோகிலா! எங்கள் ஜெமீன் குடும்பத்துப் பெருமையை அறியமாட்டாயா! துடுக்குத்தனமாகப் பேசிவிட்டாயே! ஒரு பெண் தன் காதலைப் பற்றி ஆடவனிடம் பேசுவது பற்றி இந்தப்புத்தகங்களில் எழுதியிருக்கிறார்கள். படிக்கும் போது எனக்குச் சிரிப்பாய் வருகிறது. நாதா! உங்கள் மீது நான் அடக்க முடியாத காதல் கொண்டு விட்டேன் என்று நான் போய் பேசுவேன் அல்லது யார் மூலமாகவாவது சொல்லி அனுப்புவேன் என்றா எண்ணிக் கொண்டாய். அது இந்த இடம் அல்ல" என்றாள்.
உமாவுக்குக் கோபம் வருவது கண்டு கோகிலா மகிழ்ச்சி அடைந்தாள்.
இந்தக் கோபம் வளராதா என்றுகூட விரும்பினாள். மேலும் சற்றுக் கிளறிவிட எண்ணினாள்.
"இதென்ன வேடிக்கையாக இருக்கிறது, உங்கள் போக்கு! அவரை நீங்கள் பார்க்கும் பார்வை காதலைத்தவிர வேறு எதனைக் காட்டுகிறது. என்னிடமே மறைக்கப் பார்க்கிறீர்களே" என்று சிறிதளவு குறும்புத்தனத்தைக் கலந்து பேசினாள்."கோகிலா! எனக்கு அவர் ஏற்றவர்தானா—இது பொருத்தமான சம்பந்தமா என்பதுதான் முக்கியம். நான் பெண்ணாகப் பிறந்தது எதற்கு? ஜெமீனுடைய பெருமையை பாழாக்கிக் கொள்ளவா! காதல், அன்பு, பாசம், பரிவு, பற்று, ஆவல், ஆசை என்று என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக் கொள். எனக்குத்தேவை, கண் மூடித்தனமான காதல் அல்ல! என் தகப்பனார் கண் கலங்காமல், அவருக்குத் துளியும் தலை இறக்கம் ஏற்படாத விதமான சம்பந்தம். அதற்கு ஏற்ற பொருத்தம் இவருக்கு இருந்தால், நான் பாக்கியசாலி! ஆனால் அவர் சாமான்யர் என்பது உண்மையாகிவிட்டால், நான் அவரை மறந்துவிட வேண்டியது தான்."
"அவர் ஜெமீன் குடும்பம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்—அப்போது..."
"அவருக்கு ஏற்றவளை அவர் அடைவார்; எனக்குத் தகுதியான மாப்பிள்ளையை அப்பா தேடித்தருவார்."
"அவர் உங்களைப் பரிபூரணமாக நம்பிக் கொண்டிருக்கிறார்...என்று வைத்துக் கொள்ளுங்கள்."
"அது அவர் செய்திடும் தவறு...நானா அதற்குப் பொறுப்பு...ஜெமீன் மாளிகையிலே இருந்து வருகிறாரே, இங்கு உள்ள நிலைமை, ஏற்படும் எண்ணம், மனப்பான்மை இவைகளை அவர் தெரிந்து கொள்ளாமலா இருந்திருப்பார், படித்தவர்."
"அப்படியா அம்மா! மெத்த சந்தோஷம்..."
"இதில் உனக்கு என்னடி சந்தோஷம்..."
"ஐயோ, நீங்கள் தப்பாக அர்த்தம் செய்து கொண்டீர்களே. நான் சொல்ல வந்தது, வேறு சில பெண்களைப்போல காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, இளைத்து, களைத்து எலும்புருவாகிப் போய்விடச் செய்யும் காதல் உங்களைப் பிடித்துக் கொண்டதோ என்னமோ என்று பார்த்தேன். அப்படி இல்லை என்பது புரிந்துவிட்டது. அதனால் மகிழ்ச்சி என்றேன்.""அதுவா! சரி, கோகிலா! சொல்ல எண்ணியதைச் சொல்லி விடுகிறேன். அவருடைய பிறப்பு வளர்ப்பு, குடும்ப நிலைபற்றி அவரிடம் கேட்க எனக்குக் கூச்சமாக இருக்கிறது. நீ அவரிடம் இதுபற்றித் தாராளமாகப் பேசலாமே. எப்படியாவது அவரிடமிருந்து அந்த விவரத்தை மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்ளேன். நான் என் எதிர்காலத்தைத் தீர்மானித்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்."
'ஆகட்டும்' என்று கோகிலா வாக்களித்தாள்.
சொக்கலிங்கத்தின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவளுக்கும் நிரம்ப அக்கரை இருக்கத்தானே செய்யும்.
அவளுடைய எதிர்காலமும் அதைப் பொருத்துத் தானே இருக்கிறது.
'முயற்சிக்கிறேன்' என்று கூறிவிட்டாள். ஆனால் எப்படி என்று எண்ணும்போதே அவள் தலை சுற்றிற்று.
தனியாகச் சந்தித்து அவரிடம் பேச வேண்டும்.
தனியாகச் சந்திக்க முடியுமா? சந்தித்தால் அவரிடம் என்னென்ன பேசத் தோன்றிவிடுமோ?
என்ன நேரிட்டு விடுமோ என்பதை எண்ணிக் கொண்டபோது கோகிலா அச்சம் கொண்டாள்.
உமா, கணக்குப் பார்க்கிறாள். ஆகையால் பதறாமல் இருக்க முடிகிறது.
ஆனால் என் நிலை! நான் முழுக்க முழுக்க என் உள்ளத்தை அவரிடமல்லவா பறிகொடுத்துவிட்டிருக்கிறேன்.
அவரை நான் தனியாகச் சந்தித்தால்...என்பது பற்றி எண்ணிடும்போதே கோகிலாவின் உடலெல்லாம் பதறிற்று. ஆனால் இதழோரத்தில் ஒரு பொலிவு மலர்ந்தது.
வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து விடுகின்றன. யாரும் திட்டமிட்டுச் செய்வதல்ல. ஆனால் ஆயிரம் தேள் கொட்டுகிறது, அந்த நிகழ்ச்சிகளின்போது.சொக்கலிங்கத்துக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும் என்பதிலே அதிக அக்கரை காட்டும் ஜெமீன்தார் ஒரு நாள் குதிரைக் கொட்டிலுக்கே அழைத்துச் செல்கிறார், தன் குதிரைகளின் அருமையைக் காட்ட.
வண்டிக்காரன் வரவேற்கிறான் ஜெமீன்தாரரை! ஆனால் சொக்கலிங்கத்தையும் அல்லவா, வணங்குகிறான் சடையப்பன்.
"ஏலே சடையா! பம்பாயிலே இருந்து வாங்கினமே சவாரிக் குதிரை, அதைக் கொண்டுவா, மிஸ்டர் லிங்கம் பார்க்கட்டும்..."
"நானே போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேனே."
"வேண்டாம் மிஸ்டர் லிங்கம். குதிரை இலாயத்தைப் பயல்கள் சுத்தம் செய்தான்களோ இல்லையோ...அங்கே ஏன் நீங்க போகணும்...குமட்டும் சில வேளைகளில். அந்த இடத்திலேயே இருந்து இருந்து பழகிப் போனவங்களுக்கு ஒன்றும் இல்லை...நம்ப சடையனைப் போல சாரட் ஓட்டுவதிலே சடையனுக்குச் சமமா ஒருவரையும் சொல்ல முடியாது. தரமான ஆள். பொதுவா, வண்டிக் குதிரைகளைக் கூட சடையன்தான் கவனித்துக் கொள்வது...நல்ல உழைப்பாளி! அவனுக்கு ஏற்ற மனைவி..."
"காலமெல்லாம் உழைப்பு...ஓயாத வேலை...எல்லாம் எதற்காக..."
"யாரைப்பற்றிச் சொல்கிறாய் மிஸ்டர் லிங்கம்..."
"ஒரு ஆங்கிலக் கவி சொல்கிறார்—
ஓயாமல் உழைக்கின்றாய்
உன் மகனை ஆளாக்க
ஊர்மெச்சும் வாழ்வுதர
உருக்குலைய உழைக்கின்றாய்
பேர்சொல்லி மகன் வாழ்வான்.
பெருமைமிகும் என்றெண்ணி
பேய்மகனும் உனை மறந்தால்
நாய்மகனே ஆவான்காண்!
"அழகான கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளைக் குழந்தைகள் படிக்க வேண்டும்..."
"தந்தையிடம் மகன் காட்டவேண்டிய பாசம் பற்றி நிறையச் சொல்லித் தந்து கொண்டிருக்கிறேன்."
"வந்துவிட்டது குதிரை—ஏய், சடையா! என்ன காலிலே இரத்தம் கசிகிறது...
"குதிரையை நான் பிடித்துக்கொள்கிறேன்...போய்க் கழுவி ஏதாவது மருந்து போட்டு..."
"பைத்யம் டீச்சர்! இப்படி ஒரு நாளைக்கு ஒன்பது தடவை காயம்படும், இரத்தம் ஒழுகும்...அது இவனையெல்லாம் ஒன்றும் செய்யாது...களிமண்ணோ, என்னமோ வைத்துக் கட்டுவான்...சரியாகிப் போகும்."
"என்னிடம் மருந்து இருக்கிறது; கொண்டு வந்து கொடுக்கிறேன்..."
"வேண்டாம் தொரை! இது ஒண்ணுமில்லை...ஈ எறும்பு கடிக்கிறமாதிரி! ஒண்ணும் பண்ணாது. ஓட்டிப் பார்க்கறீங்களா குதிரையை..."
"இல்லை...எனக்கு நிம்மதியாக இல்லை...மருந்து வேண்டாமென்றா சொல்லுகிறீர்..."
"சடையா! பிடிடா! மிஸ்டர் லிங்கம், நம்ம குதிரை நல்ல 'ட்ராட்' போகும்...சும்மா இங்கேயே ஓட்டிக் காட்டுகிறேன் பார்க்கிறீரா..."
ஜெமீன்தார் குதிரை சவாரி செய்யும்போது சொக்கலிங்கம் தழுதழுத்த குரலில் பேசுகிறான் மெதுவாக.
"அப்பா! அப்பா! என்ன கொடுமை அப்பா இது!
தங்கள் உடலில் ஒழுகும் இரத்தத்தைக்கூடத் துடைக்கும் பாக்கியம் எனக்கு இல்லையே...பார்த்துக் கொண்டு, பதறாமல் இருக்கவேண்டி நேரிட்டுவிட்டதே அப்பா! நான் எப்படித் தாங்கிக் கொள்வேன்! மாளிகையின் கோலாகல வாழ்வு எனக்கு...குதிரைக் கொட்டிலில் நீங்கள்...நான் மகன்...மகனா அப்பா நான்! மாபாவி...!"மகனே! மோசம் செய்துவிடாதே...தெரிவித்து விடாதே...என் திட்டத்தைக் கெடுக்காதே...ஜெமீன்தாருக்குத் துளிச் சந்தேகம் வந்தாலும் போதும்; தொவைத்துவிடுவார் தொலைத்து. நீ லிங்கம்...லிங்கம்...நான் சடையன்—வண்டிக்காரன்...மறந்துவிடாதே...ஆபத்தை மூட்டிக்கொள்ளாதே..."
"என்னால் இனியும் இவ்வளவு நெருப்பை நெஞ்சிலே தாங்கிக் கொண்டு இருக்க முடியாதப்பா..."
"மிஸ்டர் லிங்கம்...எப்படி ட்ராட்...ஏ ஒன்...இல்லையா..."
"ஏ, ஒன்...ஏ, ஒன்...அப்பா! அப்பா! இங்கே இருப்பதானால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால், வேண்டாமப்பா இந்த இடம்; இந்த வேலை! வேறு இடம்...தொலைதூரம் போய்விடலாம்..."
"ஏ, சடையா! மடையா! ஓடிவாடா! குதிரை கட்டுக்கு அடங்க மறுக்கிறதே, தெரியவில்லையா...ஓடி..."
"மெள்ள...மெள்ள அப்பா! ஐயோ!..."
"விழுந்து தொலைத்தானா...மடையன்! துணைக்கு யாராவது வாலிபப்பயலை வைத்துக் கொள் என்றால் கேட்டால்தானே. மிஸ்டர் லிங்கம்! ரொம்ப நாளாகச் சொல்லுகிறேன். யாராவது உன்னுடைய சொந்தக்காரப் பையன் இருந்தால், கூடமாட உதவிக்கு வேலைக்கு வைத்துக் கொள் என்று, கேட்பதில்லை. சரி, சரி! குதிரையைக் கொண்டு போ!"
"பலமான அடிபட்டுவிட்டதுபோல இருக்கிறதே..."
"இல்லை, இல்லை! இலேசாக மரத்திலே உராய்ந்து கொண்டேன்."
"கல் அடிபட்டிருக்குமோ, இரத்தம் கசிகிறதே...""கல்லாவது மண்ணாவது...கீழே விழுந்தால்கூட நமக்கு ஒன்றும் ஆகாது...இது என்ன ஓட்டை உடம்பா...வா, மிஸ்டர் லிங்கம்...ஏதாவது பழரசம் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது."
அன்றிரவெல்லாம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறான் சொக்கலிங்கம்.
என் எதிரில் என் அப்பாவை இழிவாக நடத்துகிறார் ஜெமீன்தாரர்.
என் எதிரில் என் அப்பா இடறிக் கீழே விழுகிறார்; அவரைத் தூக்கி நிறுத்தும் பாக்கியம் எனக்கு இல்லையே!
என் காதைத் துளைப்பது போலல்லவா ஜெமீன்தாரர் பேசுகிறார். காயம் பட்டால் என்ன, களிமண் வைத்துக் கட்டினால் போதும் என்று.
அவர்மீது என்ன குற்றம்! அவர் வண்டிக்காரனைப் பற்றிப் பேசுவதாக எண்ணிக் கொண்டுதானே பேசுகிறார். அந்த வண்டிக்காரர் என் தகப்பனார் என்பதைத் தெரிந்தா? இல்லையே! நான் தான் அதை மூடி மறைத்துவிட்டேனே, நான் உல்லாச புருஷனாக உலவ! என்னை உலகம் மன்னிக்குமா? என் உள்ளமே என்னைச் சுடுகிறதே—என்றெல்லாம் ஏங்கினான். வேதனை நாளுக்கு நாள் வளர்ந்தது; வெளியே சொல்ல முடியாததால், வேதனை இதயத்தையே பிய்த்துத்தின்னத் தொடங்கிற்று.
எத்தனை நாள்? இன்னும் எவ்வளவு காலம் இந்த நெருப்பாற்றிலே வீழ்ந்து தவிப்பது?
ஜெமீன்தாரரோ, வேறு எந்த வேலைக்கும் சொக்கலிங்கம் செல்ல அனுமதிக்க மாட்டார் போலத் தெரிகிறது. இலேசாக ஒரு எண்ணம் அவருக்கு அரும்புவதுகூடத் தெரிகிறது சொக்கலிங்கத்துக்கு.
உமாமகேஸ்வரியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம்."எல்லாத் தகுதிகளும் இருக்கிறது, மிஸ்டர் லிங்கம்! பெற்றோர் பற்றி ஒரு தகவலும் சொல்ல மாட்டேன் என்கிறீரே ஏன்?" என்று அடிக்கடி கேட்கிறார்.
பெற்றோரா! அதோ தோட்டத்தில்! உங்கள் வண்டிக்காரர்! என்று சொன்னால் போதும்; உள்ளபடி ஜெமீன்தாரரின் மண்டையே வெடித்துவிடும்—என்ற நிலைமை. இதுவும் புரிந்தது சொக்கலிங்கத்துக்கு.
சொக்கலிங்கம் அறியாமல், அவன் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கிய கோகிலாவுக்கு மெள்ள மெள்ள ஒரு சந்தேகம் வளர்ந்தது. வண்டிக்காரன் குடிசைக்கு அவன் செல்வது ஏழை எளியோரிடம் உள்ள பரிவு காட்டும் காரணத்தால் அல்ல; வேறு ஏதோ ஒரு பந்தம்—பாசம்—அவனை அங்கே இழுத்துச் செல்கிறது என்ற சந்தேகம்.
அவன் செல்லாத நேரமாகப் பார்த்து அதே குடிசைக்கு அவள் சென்று பேசிக் கொண்டிருக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டாள்.
முதலிலே அவளிடம் தாராளமாகப் பேசத் தயங்கிய சொர்ணம், மெள்ள மெள்ள விவரம் பேச ஆரம்பித்தாள்.
விவரம் கூறுவதற்குப் பதிலாக, கோகிலத்திடம் சொக்கலிங்கத்தைப் பற்றிய பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
சொக்கலிங்கத்தைப் பற்றிய விவரம் எதைச் சொல்லும் போதும், சொர்ணம்மாளின் கண்களிலே கனிவு வழிந்தது; பேச்சிலே பாசம் ததும்பிற்று.
நேரடியாகவே கேட்டு விடலாமா என்று கூடக் கோகிலா நினைத்தாள். பிறகு அது தவறாக முடியும் என்று அஞ்சி விட்டுவிட்டாள். வேறு முறையைக் கையாண்டாள்.
குளிர் காற்று வீசும் நாட்கள். பலர் அந்தக் காற்றிலே அடிபட்டு, காய்ச்சலால்கூடத் தொல்லைப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.அந்தச் சமயமாகப் பார்த்து, கோகிலா, தலையில் சுற்றிக் கொள்வதற்கான ஒரு கம்பளித் துண்டினை சொர்ணத்தம்மாளிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்தக் கம்பளித் துண்டு சொக்கலிங்கத்திடம் இருக்கக் கண்டாள்; புன்னகை கொண்டாள். அவர் எனக்குத்தான்! எனக்கேதான்! என்று அவளுடைய இதயம் பாடலாயிற்று.
துப்பு ஓரளவு துலங்கத் தொடங்கி விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் கோகிலா மேலும் வேலை செய்தாள்; சொக்கலிங்கம் வண்டிக்காரன் மகன் என்பது அவளுக்குத் தெளிவாகி விட்டது.
தான் அறிந்த இந்த இரகசியத்தை உடனே உமாவிடம் கூறிவிட வேண்டும்; உமாவின் மனதிலிருந்து சொக்கலிங்கம் அடியோடு தூக்கி எறியப்பட்டுப் போய்விடுவான்; பிறகு அவன் முழுக்க முழுக்க தனக்கே உரியவனாகிவிடுவான் என்று தோன்றிற்று. களிப்புக் கடலில் மூழ்கினாள்.
மறுகணம் யோசித்தாள். அவர், ஏதோ ஒரு மிக முக்கியமான காரணம் இல்லாமல், இப்படித் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் இருக்க மாட்டார். நாம் நமது சுயநலம் காரணமாக, அவசரப்பட்டு, இரகசியத்தை வெளியிட்டு, அவருடைய திட்டத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்ற எண்ணம் பிறந்தது.
ஆகவே பொறுத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.
காலையிலே சென்று பறித்தெடுக்க வேண்டிய கனியின் சுவையைப் பற்றி இரவெல்லாம் சிந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்திடும் நிலையிலே, கோகிலா நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
எல்லோரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் காளிங்கராயர்கூட சொக்கலிங்கத்திடம் அன்புடன் பழகலானார்.லலிதா மூலமாக அவருக்குத் தகவல் சிறிதளவு கிடைத்திருக்க வேண்டும். உமாவை லிங்கத்துக்கு மணமுடித்து வைக்கும் எண்ணம் ஜெமீன்தாரருக்கு ஏற்பட்டு இருப்பதுபற்றி.
வேடிக்கையாகப் பேசவும் பொழுதுபோக்குகளிலே பங்கு பெற்றுக் கொள்ளச் செய்யவும்கூடக் காளிங்கராயர் முயற்சித்தார். தன்னோடு சேர்ந்து உயர்ந்த பானம் பருகும்படியே அழைத்திடலானார்.
"மிஸ்டர் லிங்கம்! உண்மையாகவே பழக்கமில்லையா? சின்ன வயது முதலே வெள்ளைக்காரர் வீட்டில் வளர்ந்ததாகச் சொல்லுகிறார்கள்..."
"ஆமாம், ஜெமீன்தார் சார்! நான் அவர்கள் எதற்குப் பானம் பருகுகிறார்கள். எப்படிப் பருகுகிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். நமது நாட்டிலே குடிக்கிறார்களே அப்படியா அவர்கள்! தாங்களே எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், நிலை குலைந்து போகும் அளவு!"
"மிஸ்டர் டீச்சர்! இது எனக்குப் பிடிக்காது. குடிக்காதே, அது கெடுதல்—பாவம்—என்று சொல். அது பொருளுள்ள பேச்சு! ஆனால் குடி. அளவோடு குடி, நிலை குலையாதபடி பார்த்துக் கொள் என்று சொல்லாதே. அது முடியாது; கூடாது. எதற்குக் குடிக்கிறோம்? எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய இன்ப உலகத்திலே உலவ. எப்போது அந்த இன்பலோகம் தெரியும்? இந்த லோகத்தைப் பற்றிய நினைப்பே அடியோடு போனால்! இந்த லோகத்து நினைப்பு எப்படிப் போகும்? நிறைய பருகினால்! எப்படி என் வாதம்!
"பிரமாதமான பேச்சு—ஆனால் அந்த இன்ப லோகம் உங்க, மனைவி லலிதாம்பிகாவின் கண்ணொளியில், புன்னகையில் இல்லையா?
"கெட்டிக்கார ஆசாமி! உன்னிடம் சொல்வதிலே என்ன தவறு! லலியின் கண்களில் நான் இன்ப லோகத்தைக் கண்டதுண்டு, முன்பு; கொஞ்ச நாளில் அது மறைந்து விட்டது."உமது குழந்தைகள் ராமு, சோமு, ரமா இவர்களின் சிரிப்பிலே காணலாமே..."
"அதை எல்லாம் காணும் நிலையில் என் கண்கள் இல்லை..."
"அதைத்தான் சொல்கிறேன். குடி உங்களுக்கு புதிய இன்ப லோகத்தைத் தரவில்லை; இருந்த இன்ப லோகத்தைக் காணும் சக்தியைப் பறித்துவிட்டது."
"தீர யோசித்துப் பார்க்க வேண்டும். மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்; அதற்கு மருந்து உள்ளே இருக்கிறது; நீ வெளியே போ! அனுபவிக்கத் தெரியாத உனக்கு இங்கு என்ன வேலை! போ! போ! இளநீர் குடி! பார்த்திருக்கிறேன்...அந்த வண்டிக்காரக் கிழவன் கொடுத்து நீ ஆனந்தமாகப் பருகுவதை!
ஜெமீன்தாரின் மனதிலே புது எண்ணம் வளர்ந்ததும் சொக்கலிங்கத்துக்கு மேலும் மேலும் மதிப்பளிக்கலானார்.
தம்முடன் வியாபாரத் தொடர்பு கொண்ட பெரிய வெள்ளைக்காரர்களுடன் பழகும் வாய்ப்பை வலிந்து ஏற்படுத்திக் கொடுத்திடலானார்.
அப்படிப் பழகுபவர்களும், சொக்கலிங்கத்தின் நுண்ணறிவு, நேர்மை ஆகியவற்றைக் கண்டு அவனிடம் பேசுவதைச் சுவையுள்ள பொழுதுபோக்காக்கிக் கொண்டனர்.
அவ்விதம் அடிக்கடி சொக்கலிங்கத்திடம் வந்து பேசுபவர்களில் நார்மன் என்பவர் முக்கியமானவர். அவர் சம்பந்தப்பட்ட கம்பெனியில்தான் ஜெமீன்தாரருக்கு அதிகத் தொடர்பு.
டேவிட் துரையிடம் பாடம் கேட்டவர் என்பதறிந்து, சொக்கலிங்கத்திடம் நார்மன் பல பிரச்சனைகளைப்பற்றி விவாதிப்பார். சொக்கலிங்கம் தெளிவாகவும் கனிவாகவும் தன் கருத்துக்களை எடுத்துச் சொல்லுவான். நார்மன் அந்தப் பண்பைப் பெரிதும் பாராட்டி வந்தார். பலமுறை விவாதம் நடைபெற்று வந்தது."மிஸ்டர் நார்மன்! உண்மை பேசுவதை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எங்கள் நாட்டிலே வந்திருப்பது நாகரிகத்தைப் பரப்ப என்ற பேச்செல்லாம் பசப்பு என்பது உங்களுக்கே தெரியும். வியாபாரக் கொடி முதலில்! அதைத் தொடர்ந்து அரசியல் கொடி! அவ்வளவுதான். நாகரிகம் பரப்ப வந்தோம் என்பதெல்லாம் உண்மை அல்ல..."
"நாங்கள் வந்ததால் எத்தனையோ புதுப்புது முறைகள் உங்களுக்குக் கிடைக்கவில்லையா?"
"கிடைத்துள்ளன. அதுபோல உங்களுக்குப் பல நாகரிகச் சாதனங்கள் வேறு நாடுகளிலே இருந்து கிடைக்கவில்லையா? மேற்பூச்சான நாகரிகமாக இருந்தாலும்சரி, புதுக் கருத்துப் புரட்சியைக் காட்டுவதாக இருந்தாலும், அவை காலம் தருவது; எந்த ஒரு நாடும் தருவது அல்ல."
"மிஸ்டர் லிங்கம்! அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் இதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்களாக நாடி, தேடி, நாகரிகத்துக்கான முறைகளை உண்டாக்கிக் கொள்ளவில்லை."
"நாகரிகம் என்பதற்கு நம்ம ஜெமீன்தாரரின் ஆடம்பர உடையும், அவருடைய மருகர் பருகும் பானங்களும், ஜெமீன் சீமாட்டிகள் வாசிக்கும் பியானோவும்தான் அடையாளம் என்று கூறத்துணிகிறீர்களா மிஸ்டர் நார்மன்? இவைகளெல்லாம் புறத்தோற்றங்கள். உங்களுடைய நாட்டிலேயே நடை உடை பாவனைகளில் எத்தனையோ விதமான, மாறுதல்கள் ஏற்பட்டன. உங்கள் எலிசபெத் மகாராணியார் காலத்து உடை! ஏ, அப்பா! இப்போதுள்ள இங்கிலீஷ் பெண்களுக்கு எவ்வளவு அருவருப்பாக இருக்கும், உங்கள் எட்டாவது ஹென்றி செய்துகொண்ட கோலாகலத்திருமணங்களும், ஒவ்வொரு மனைவியையும் தேம்ப விட்டதும் திண்டாட விட்டதும்! இப்போதுள்ள ஆங்கில நாட்டு இளைஞர்களை வெட்கித் தலைகுனியச் செய்யுமே."
"ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாங்கள் சேற்றிலே அமிழ்ந்துவிடுவதுபோல இருந்துவிடவில்லை—""அது ஒருவகையில் ஒப்புக் கொள்ளத்தக்கதே. எங்கள் நாட்டின் கருத்து வளர்ச்சியில் சில நூற்றாண்டுகளாக ஒரு தேக்கம் ஏற்பட்டு விட்டது. ஆனால் நார்மன்! உங்கள் நாட்டவர் ஊர் அமைக்கத் தெரியாமல் இருந்த நாட்களிலேயே இங்கு, பூம்புகாரும், மதுரையும் உறையூரும் பிறவும் எழிலோடு இருந்தன என்பதை மறந்து விடாதீர்."
"வெளி உலகத் தொடர்பு கொள்ளுவதில் ஆர்வம் காட்டவில்லை..."
"தவறான கருத்து; தூரக் கிழக்கு நாடுகளிலெல்லாம் காணலாம். நாங்கள் கொண்டிருந்த வெளியுலகத் தொடர்பின் சின்னங்களை."
"லிங்கம்! ஒரே அடியாக உங்கள் நாட்டைப் புகழ்ந்து விடுகிறீர்."
"தாங்கள் எங்கள் நாட்டிலே எதுவுமே இருந்ததில்லை! எல்லாம் நீங்கள் கொண்டு வந்து கொடுத்த பிச்சை என்று கூறும் விதமாகப் பேசியதால் நான் எங்கள் நாட்டுப் பழம் பெருமைகளைச் சொன்னேன்...அதேபோது இங்கே உள்ள குறைபாடுகளை நான் மறந்துவிடவில்லை."
"அதைக் கேட்க நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்தக் குறைபாடுகளைப் போக்க நீங்கள் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே..."
"அதற்கு எங்கே நீங்கள் பயன்படுகிறீர்கள்? ஆடம்பரமாக வாழவும், ஆடிப்பாடிக் களித்திடவும், அலங்காரங்கள் செய்து கொள்ளவும் கற்றுக் கொடுப்பதிலே உங்களுக்குள்ள அக்கரை, மேனாட்டின் உண்மையான அறிவுத் தெளிவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலே இல்லையே."
"ஆபத்தான வேலையில் அல்லவா ஈடுபடச் சொல்கிறீர். நாங்கள் எதையாவது செய்ய ஆரம்பித்து, உங்கள் மக்கள் மதத்துக்கு ஆபத்து என்று கூவத் தொடங்கி ஒரு கொந்தளிப்பு ஏற்பட வேண்டுமா—""உள்ளதைச் சொன்னால் எங்கே கொந்தளிப்பு ஏற்பட்டு விடுமோ! நம்முடைய ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணிச் சும்மா இருக்கிறீர்கள் மிஸ்டர் நார்மன்! சுரண்டிக் கொண்டு போகிறவரையில் இலாபம் என்ற நோக்கத்துடன்—உண்மைதானே?"
இரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டிருப்பதைச் சொக்கலிங்கத்துக்குப் படும்படியாக செய்துவிட வேண்டும் என்ற ஆவல் கோகிலாவை வாட்டியபடி இருந்தது. ஒரு நாள் அதையும் ஜாடையாகக் கூறுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. உமா அந்த வாய்ப்பை உண்டாக்கி வைத்தாள் — தனக்காக என்று எண்ணிக்கொண்டு.
சொக்கலிங்கம் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும்போது கூடத்தின் மற்றோர் பக்கமாக உலவிக் கொண்டே உமா கூறினாள்: "கோகிலா! நான் படித்து முடித்த கதை மிகச் சுவையானது. அதிலே வருகிற கதாநாயகன், ஒரு சிற்றரசன்! ஆனால் தனக்குப் பிடித்தமில்லாத பெண்ணைத் தன் தலையில் கட்டிவிடுவார்கள் என்ற பயம் காரணமாக, தனக்கு மூளைக் கோளாறு இருப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறான்..." என்றாள்.
"ஆமாமம்மா! ஆனால் அந்தவிதமான தந்திரம் கடைசிவரையில் பலன் தருவதில்லை" என்றாள் கோகிலா.
"தெரியாமலா சொன்னார்கள்—கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்" என்று கூறிக்கொண்டே உமா சிரித்தாள்.
"எவ்வளவுதான் தங்களை மறைத்துக்கொண்டு உலவினாலும், இரகசியம் ஒருநாள் இல்லாவிட்டால் மற்றோர் நாள் வெளிப்பட்டுப் போகமலா இருக்கும்" என்று சிறிதளவு மிரட்டும் குரலிலேயே பேசினாள் கோகிலா.
"ஏதேது! பெரிய இரகசியத்தை எல்லாம் கண்டு பிடித்விடக்கூடிய சாமர்த்தியக்காரிபோலப் பேசுகிறாயே!" என்று கேட்டாள் உமா!"வேடிக்கைக்குச் சொல்லவில்லை அம்மா! எவ்வளவு திறமையாக மூடி மறைக்கப்பட்ட இரகசியத்தையும் ஒரு சிறிய கம்பளித் துண்டினாலே கண்டுபிடித்து விடலாம்; மந்திரம் போட்ட கம்பளித் துண்டு" என்று கோகிலா கூறிவிட்டு, சொக்கலிங்கத்தை கவனித்தாள்.
அவன் ஒரு இலேசான புன்னகையுடன் அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்று விட்டான்.
இரு மங்கையரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; வெவ்வேறு விதமான எண்ணங்கள் அந்த இருவர் உள்ளங்களிலும் உலவின.
சில நாட்களுக்குப் பிறகு பேரிடி விழுந்தது, கோகிலா கட்டிய மனக்கோட்டையில்.
ஜெமீன்தாரர், பல ஆண்டுகளாக இருந்து வந்த மானேஜரை நீக்கிவிட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பணியாற்றியதற்காகச் சிறிதளவு பணம் கொடுத்தார்; வேலையிலிருந்து நீக்குவதனால் வந்த வேதனை மானேஜரை வாட்டிவிட்டது.
என் தெய்வம் இருக்கும் இடத்தைவிட்டு என்னைத் துரத்துகிறார்களே என்று தனக்குள் கூறிக்கொண்டு கோகிலா குமுறினாள்.
உமாவின் தயவைத் தேடி இந்த ஆபத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்று அங்கு சென்றாள்.
"எல்லாம் உன் நன்மைக்காகத்தான் இந்த ஏற்பாடு, உன் அப்பா கெட்டிக்காரர். எந்த ஜெமீனிலும் வேலை கிடைத்துவிடும். பயப்படாதே. நீ இங்கே இருப்பது ஜெமீன்தாரர் போட்டிருக்கும் திட்டத்தைக் கெடுத்துவிடும் என்று பயந்துதான் உங்களை வெளியேற்றுகிறார்" என்றாள் உமா.
விவரம் கேட்டதற்கு உமா கூறியே விட்டாள். சொக்கலிங்கமும் நீயும் பார்த்துக் கொள்கிற பார்வை அப்பாவுக்குச் சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது என்று.தான் அறிந்த உண்மையை அப்போது சொல்லிவிட வேண்டும் என்று கோகிலா துடியாய்த் துடித்தாள். யாரோ இருமும் சத்தம் கேட்டது. சொக்கலிங்கம் சற்றுத் தொலைவிலே இருந்து கொண்டு, 'அமைதியாக இரு' என்று ஜாடை காட்டுவதைக் கண்டாள்.
மானேஜர், தன் குடும்பத்துடன் ஜெமீன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டுப் போக ஏற்பாடாகி விட்டது. ஜெமீன்தாரருடைய பெட்டி வண்டியே மானேஜர் ரயிலடி செல்லத் தரப்பட்டது. சிபாரிசுக் கடிதம்கூடக் கொடுத்திருக்கிறார். சீரானூர் ஜெமீனுக்கு என்று வேலையாட்கள் பேசிக் கொண்டனர்.
விடிந்ததும் சென்றாக வேண்டுமே என்ற கவலை குடையும் மனதுடன், கடைசியாக ஜெமீன் தோட்டத்தைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் கோகிலம்.
எப்படியாவது சொக்கலிங்கத்தைப் பார்த்துவிடலாம் என்ற ஆவல்தான், உண்மையான காரணம்.
சொக்கலிங்கமும் அதே மனநிலையில் அவன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தான். அவன் நெஞ்சத்திலே அவளைப் பற்றிய நினைவுதான்!
அவள் வரக்கண்டான்! தாவிச் சென்று அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு, தோட்டத்தின் கடைசிப் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
காற்றடித்தது; பூக்கள் உதிர்ந்தன!
எங்கோ குயில் கூவிடும் இனிய நாதம் கேட்டது.
சொக்கலிங்கம், கோகிலாவின் கண்களைத் துடைத்த படி, "திருமண வேளையில் கண்ணீர் பொழியலாமா?" என்று கேட்டான்.
"நமக்குத் திருமணமா? உண்மையாகவா? ஏதாவது கனவா?" என்று தழதழத்த குரலில் கோகிலா கேட்டாள்.தன் சட்டைப் பையில் வைத்திருந்த கம்பளித் துண்டை எடுத்துக் காட்டி, "இந்தக் காதற் பரிசுமீது ஆணை. கோகிலம்! நமக்குத் திருமணம் ஆகிவிட்டது" என்றான்.
அவன் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டாள், கோகிலம்.
"திட்டம், பாதி அளவுதான் நிறைவேறியிருக்கிறது, கோகிலம்!" என்றான் சொக்கலிங்கம்.
"காலமெல்லாம் நான் உங்களுக்காகக்காத்திருப்பேன்" என்றாள் கோகிலா.
அவன் அவளை அணைத்துக் கொண்டான். ஒரு புதிய இன்ப லோகத்திற்கு இருவரும் சென்றனர்.
குதிரை வண்டி உருண்டோடி வந்திடும் சத்தம் கேட்டது. இருவரும் நிஜ உலகு திரும்பினர்.
வெள்ளைக்காரர்கள்கூட வியந்துப் பாராட்டும்படியான அறிவுத் தெளிவுடன் சொக்கலிங்கம் இருப்பது காணக் காண ஜெமீன்தாரர் இப்படிப்பட்டவரைத் தமது மாளிகையிலே இருந்திடச் செய்வது தமது ஜெமீனுக்கே தனிக் கௌரவம் என்று எண்ணி மகிழ்ந்தார்.
மகிழ்ச்சி அதிகமாக ஏற்படும் போதெல்லாம் ஜெமீன்தாரர் விசேஷ விருந்துக்கு ஏற்பாடு செய்வது வாடிக்கை. அந்த விருந்திலே விசேஷம் என்னவென்றால் குடும்பத்தார் தவிர வெளியார் யாரும் அதிலே கலந்து கொள்ள மாட்டார்கள்.
அத்தகைய விருந்தொன்று நடந்து கொண்டிருந்தது.
ஜெமீன்தாரர் மிக்க மகிழ்ச்சியாக இருந்தார்.
பல விஷயங்களைப்பற்றி சொக்கலிங்கத்திடம் பேசி மகிழ்ந்தார்.
மாடிக் கூடத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்தது விருந்து.லலிதா, பலகணி வழியாக வெளிப்புறத்துக் கட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், 'ஓ' வென்று அலறினார்கள். பதறினர் அனைவரும்.
சொக்கலிங்கம், லலிதா பார்த்த பக்கம் பார்த்தான்; பயங்கரமான காட்சி தென்பட்டது.
லலிதாவின் மூன்றாவது குழந்தை நாலு வயது நிரம்பாதவன் தத்தித் தத்தி நடந்து செல்கிறான்; துணை யாருமில்லை.
எதிர்ப்புறமிருந்து புதிதாக வாங்கி வரப்பட்டிருந்த முரட்டுக் குதிரை தூசி கிளப்பிக் கொண்டு பாய்ந்தோடி வருகிறது.
எல்லோரும் அலறினர்—என்ன செய்வது என்று தெரியாமல்.
சொக்கலிங்கம் பலகணி வழியாக வெளியே தாவி, தண்ணீர்க் குழாயைப் பிடித்துக் கொண்டு, 'பரபர' வெனக் கீழே சரக்கு மரத்தில் இறங்குவதுபோல இறங்கி, கண் மூடிக் கண் திறப்பதற்குள் பாய்ந்தோடிச்சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு மற்றோர் புறம் பாய்ந்து விட்டான். குதிரை நாலு கால் பாய்ச்சலில் சென்றது.
குழந்தையை, அவ்வளவு துணிவுடனும் சாமர்த்தியத்துடனும், சொக்கலிங்கம் தூக்கிக் கொண்டிராது போயிருப்பின்...!
நினைக்கவே நடுக்கம் எல்லோருக்கும்.
'ஆண்டவனே! அட, என் கண்ணே ரமா!' என்று தாய்ப் பாசம் வழிய வழியக் கூவிக்கொண்டே லலிதாம்பிகா சென்று குழந்தையை சொக்கலிங்கத்திடமிருந்து வாங்கிக் கொண்டு உச்சிமோந்து முத்தமிட்டார்கள்.
ஜெமீன்தாரர் கட்டித் தழுவிக் கொண்டார் சொக்கலிங்கத்தை.
காளிங்கராயர், முதுகைத் தட்டிக் கொடுத்துப் 'பலே!' என்றார்."ஏதாவது நேரிட்டு விட்டிருந்தாலும், என்ன செய்திருப்பேன் தெரியுமா? இந்த வேலைக்காரப் பயல்கள் அவ்வளவு பேரையும் சவுக்கால் அடித்திருப்பேன்" என்றார் ஜெமீன்தாரர்.
"சவுக்குக்குத் தான் கேடு! சுட்டுத் தள்ளிவிட வேண்டும்" என்றார் காளிங்கராயர்!
"குழந்தையைக் காப்பாற்றிய மிஸ்டர் லிங்கத்தைப் பாராட்டாமல், வீரம் பேசுகிறீர்களா, வீரம்" என்று கூறிவிட்டுத் தன் கணவரை சுட்டுவிடுவதுபோல பார்த்தாள் லலிதா.
உமா மகேஸ்வரி, கேலிப் புன்னகை செய்தாள்.
'சரி, சரி! நல்லதே நடக்கும் நல்லவர்களுக்கு; விருந்து நடக்கட்டும்! மறுபடியும் எல்லோருக்கும் அல்வா!' என்று உத்திரவிட்டார் ஜெமீன்தாரர்.
வீரம், தீரம் ஆகியவை மேட்டுக் குடியினரிடம் மட்டுமே இருக்கும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் ஜெமீன்தாரர்.
'நல்ல குடியில் பிறந்தவர்கள் மட்டுமே, ஆபத்தைத் துச்சமென்று எண்ணுவார்கள் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். ஏழைகள் பணமில்லாதவர்கள் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பண்புகளும் அவர்களிடம் கிடையாது' என்பது அவர் கருத்து.
உயிர் காத்த உத்தமனாக சொக்கலிங்கம் இருப்பதற்குக் காரணம், அவன் உயர்குடியில் பிறந்தவன் என்பதுதான் என்ற தம்முடைய தத்துவத்தை விளக்க ஆரம்பித்தார் ஜெமீன்தாரர்.
"ஆயிரம் சொல்லுங்கள்—எல்லோரும் சமம்—அனைவரும் மனிதரே—மனிதர் யாவரும் கடவுளின் பிள்ளைகளே என்றெல்லாம் பேதம் இருக்கத்தான் செய்கிறது..."
"பணக்காரன் ஏழை என்ற பேதம்தானே"—"அதை நான் பெரிதாகக் கருதவில்லை—பணம் தேடிக் கொள்ளலாம்; இழந்தும் விடலாம்...நான் சொல்வது பண்பு...நல்ல குடியிலே பிறந்தவரின் பண்பு...மற்றவர்களுக்கு அந்தப் பண்பு இருப்பதில்லை."
"ஆமாமாம்! நற்குடிப் பிறந்தவர்கள் என்பது பார்த்தாலே தெரிந்து விடுமே."
"பேச்சு—நடவடிக்கை—எல்லாவற்றிலும் அந்த முத்திரை விழுந்திருக்கும்."
"இதோ, மிஸ்டர் லிங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்..."
"இத்தனைப் பெரிய குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ள யாரால் முடியும்..."
"முடியும்...என் தாயாரால் முடியும்..."
"இதுதான் பண்பு! நற்குடி பிறந்தோர் மட்டுமே பெறக்கூடிய பண்பு. இதனை விலைகொடுத்து வாங்க முடியாது. கடலில் முத்து விளைவது போல இது தன்னாலே விளைவது; நற்குடி என்ற வயலில்."
"அப்பா இன்று கவிதா நடையில் அல்லவா பேசுகிறார்கள்...!"
"களிப்பு மிகுந்திடும் போது கவிதை தன்னாலே அரக்குமாமே..."
"என் பேரப்பிள்ளை குதிரையின் காலின்கீழ் சிக்கிக் கொள்ளாமல் மிஸ்டர் லிங்கம் காப்பாற்றினாரே அது அவருடைய ஆற்றலை, தைரியத்தைக் காட்டிற்று என்று தான் எல்லோரும் பாராட்டுவர். நான் சொல்கிறேன், குழந்தைக்கு ஆபத்து என்பது தெரிந்த உடன், காப்பாற்றியாக வேண்டும் என்ற உணர்வு வந்ததே, அது பண்பு—அதைத்தான் நான் போற்றுகிறேன். அந்தப் பண்புதான் நற்குடி பிறந்ததால் வருவது. முரட்டுக் குதிரைகளை அடக்க வலிவுள்ள எந்த வேலைக்காரனாலும் முடியும். சடையன் அடக்காத குதிரையா! ஆனால் அது வலிவைக் காட்டுகிறது, உணர்வை அல்ல. உடனே ஓடிச் சென்று காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் வருவதில்லை; இருப்பதில்லை. மிஸ்டர் லிங்கம் பண்பாளர்; நற்குடி பிறந்தவர். எப்போது கேட்டாலும் சொல்ல மறுக்கிறார், தமது பெற்றோர் யார் என்பதை. அவர் சொல்லத் தேவையே இல்லை. இன்றைய செயல் அவர் எப்படிப்பட்ட உயர்ந்த குடும்பத்தில் உதித்தவர் என்பதைக் காட்டிவிட்டது. இத்தகையவரை மகனாகப் பெற்ற தாய் வாழ்க! நீடூழி வாழ்க! அவளுக்கு என்னுடைய வணக்கம்!"
அப்போது வெளியே சென்று, வந்த காளிங்கராயர், "இடியட், சுத்த முட்டாள்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் இப்படித்தான்..." என்று கூறுகிறார்.
"என்ன இது, ரசமான கட்டத்தில் வந்து கெடுக்கிறீர். அப்பா எவ்வளவு உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார்.."
"பேசிக் கொண்டிருக்கட்டும் உருக்கமாக, சுவையாக..அவருடைய முட்டாள் வேலையாட்கள் குழந்தைகளை குதிரைக் காலின் கீழ் போடட்டும்."
"சின்ன ஜெமீன்தாரரை ஏன் குதிரை மிதிக்க வந்தது...விசாரித்தீர்களா..."
"யாரை விசாரிப்பது...குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவை கேட்டோம்...விளையாட்டு சாமான் கொண்டு வர உள்ளே போய் வருவதற்குள் இந்த விபரீதம் நடந்து விட்டதாம்."
"அவ்வளவுதான் சொன்னாளா அந்தக் கள்ளி...இதுகள் இந்த வேலைக்கார கழுதைகள் ஒரே கூட்டு. ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை. ஒப்பந்தம், நடந்தது அது அல்ல. இந்த ஆயா உள்ளே போனாள்..விளையாட்டுச் சாமான் கொண்டுவர அல்ல...புகையிலை எடுத்து வர..."
"புகையிலையா...யாருக்கு..."
"அப்படிக் கேளுங்கள்...அந்தக் கிழவி இருக்கிறாளே வண்டிகாரன் சம்சாரம் அவளுக்கு...""புகையிலை கேட்டால் என்ன, கொடுத்தால் என்ன, அதிலே என்ன குற்றம் காண்கிறீர்..."
"அதிலே குற்றம் காண நான் என்ன முட்டாளா? இவள் போனாளே புகையிலை கொண்டு வர, அப்போது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி வண்டிக்கார கிழவியிடம் சொல்லிவிட்டுப் போனாள்..."
"ஜாக்கிரதையாகத்தான் ஆயா நடந்து கொண்டிருக்கிறாள்".
"இவள்? குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா, செய்தாளா? செய்திருந்தால், குழந்தை தத்தித் தத்தி நடந்து செல்லுமா?—குதிரை வருவது தெரியாமல் இவள் என்ன செய்தாள்? குழந்தையை விட்டுவிட்டு இவளும் போய்விட்டாள். எங்கே? கேட்டேன். சுண்ணாம்பு எடுத்துவரச் சென்றாளாம்."
"குழந்தையைக் கவனித்து கொள்ள வேண்டுமே என்ற பொறுப்பு உணர்ச்சி இருந்ததா? எப்படி இருக்கும்? நற்குடியில் மட்டுந்தானே அத்தகைய பண்பு இருக்க முடியும்? "கிழவியைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியான நேரம். எங்கள் குலக் கொடியை இந்தக் குணவான் காப்பாற்றிய நேரம். அவருடைய நற்பண்புகளுக்காக நாம் எல்லோரும் அவருக்கு நம்முடைய பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்ளும் நேரம்."
"கம்பெனி பெரிய துரை வந்திருக்கிறார் தங்களைக் காண!"
"எல்லாச் சந்தோஷமும் ஒரே நேரத்தில் வருகிறது...நல்ல நாள் இன்று...அழைத்துவா! வருக! வருக! நல்வரவு ஆகுக!"
"விருந்தும் விழாவும் நடக்கும்போது வந்து சேர்ந்தேன்...அதிர்ஷ்டக்காரன்...யாருக்குப் பிறந்த நாள்...""பிறந்த நாள் விழா அல்ல...இதோ மிஸ்டர் லிங்கம்..இவருக்குத்தான் பாராட்டு...இவர் உங்களிடம் எப்போதும் வாதாடுவார்...மறுத்துப் பேசுவார். அதனாலேயே இவர் நல்லவர் அல்ல என்று எண்ணிக் கொள்ளக் கூடாது."
"நான் அவரைப் பற்றி என்ன எண்ணிக் கொண்டு இருக்கிறேன் என்பது கிடக்கட்டும். இவர் பாராட்டப்பட வேண்டி ஏற்பட்ட காரணம்?"
"இன்று என் பேரக் குழந்தை குதிரையின் காலின்கீழ் சிக்கிக் கொள்ள இருந்தது. தக்க சமயத்தில் இவர் பாய்ந்து சென்று காப்பாற்றினார்."
"அப்படியா! என் பாராட்டுதல்! மிஸ்டர் லிங்கம் எப்போதுமே பிறருக்கு உதவி செய்வதைத் தமது இயல்பாக கொண்டவர். அவருக்காக நடத்தப்படும் விழாவிலே கலந்து கொள்வதிலே எனக்கும் மகிழ்ச்சி. ஒரு விதத்தில் எனக்கும் அவர் டீச்சர்! ஆமாம்! இந்த அளவு நான் தமிழ் பேசுவது அவரால்தான்...அவர் என்னிடம் வாதாடுவார்; நான் சொல்லுவதை மறுப்பார். கோபிப்பார். எல்லாம் சரி. அதனாலே எனக்கு மகிழ்ச்சி...கோபம் அல்ல. தலையாட்டிகள் வெறும் அடிமைகள். அவர்களை எந்த நாட்டிலும் மதிக்க மாட்டார்கள். இவர் உண்மைக்காக—தமக்குச் சரி என்று பட்ட உண்மைக்காக—தைரியமாக வாதாடுவார். அதனாலேயே எனக்கு இவரிடம் தனியான மதிப்பு..."
"அப்பா! இப்போதுதான் என் மனம் சாந்தி அடைந்தது. பலதடவை சச்சரவு செய்வது போல வாதாடுவாரே, உங்கள் நாட்டு நடவடிக்கை, பழக்கவழக்கம் ஆகியவைகளைக் கூடக் கண்டிப்பாரே, இங்கே அவரிடம் உங்களுக்குக் கோபம் இருக்கிறதோ என்று பயந்துகொண்டு இருந்தேன்."
"கோபமா! எனக்கா! இப்படிப்பட்டவர்களைத்தான் நான் மதிப்பது. நான் இவரிடம் வைத்துள்ள மதிப்பை தெரிவித்துவிட்டுப் போகவே வந்தேன். வந்த இடத்திலே விழாவும் நடக்கிறது. என் விழாப் பரிசாகவே ஒரு சந்தோஷச் செய்தியை தருகிறேன். நமது லண்டன் கம்பெனியில் மிஸ்டர் லிங்கத்தை உதவி மானேஜராக நியமித்து உத்திரவு வந்து இருக்கிறது."
"இலண்டன் கம்பெனியிலா! மிஸ்டர் லிங்கம்! என் வாழ்த்துக்கள்."
"எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"நன்றி மிஸ்ர் நார்மன், மிக்க நன்றி...அங்கு செல்வது என் ஆராய்ச்சித் துறைக்குப் பயன்படும்..."
"மற்றோர் மகிழ்ச்சியான செய்தி! மிஸ்டர் நார்மன்! என் இளைய மகள் உமாவை மிஸ்டர் லிங்கத்துக்குத் தர விரும்புகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
"இது உண்மையான விழாப் பரிசு! என்ன மிஸ்டர் லிங்கம்! மிஸ் உமா! சம்மதந்தானே! கேட்பானேன், கண்களே கீதம் பாடுகின்றனவே!"
அப்போது தோட்டத்துப் பக்கமிருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கதறிடும் ஒலியும் கேட்கிறது.
எல்லோரும் பதறிப்போய், கீழே ஓடினார்கள்; சத்தம் வந்த திக்கு நோக்கி.
குடிசைக்குப் பக்கத்தில் சடையப்பன் வீழ்ந்து கிடந்தான், இரத்த வெள்ளத்தில்.
எதிரே, துப்பாக்கியுடன் காளிங்கராயர் ஆவேசம் வந்தவர்போல் நின்று கொண்டிருந்தார்.
ஜெமீன்தாரர், நார்மன் துரையிடம் பேசிக் கொண்டிருந்தபோது, காளிங்கராயர் கீழே வந்திருக்கிறார். யாரும் அதனைக் கவனிக்கவில்லை.
கீழே சடையப்பன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டதும், சொக்கலிங்கம் அலறினான்; துடித்தான்; அவர்மேல் விழுந்து புரண்டு புரண்டு அழுதான்.
காரணம் தெரியாமல் மற்றவர்கள் திகைத்து நின்றனர்.
"அய்யய்யோ! அநியாயம் நடந்து விட்டதே...யார் செய்த அக்ரமம் இது?""யார் செய்தது என்று கேள்! அக்ரமம் என்று சொல்லாதே!"
"கொலை செய்து விட்டிருக்கிறாய்!"
"இன்னும் உயிர் போகவில்லை—சாகடிக்கத்தான் சுட்டேன்...ஏன் தெரியுமா...இந்தக் கிழவன் உன்னைப் பற்றி இழிவாகப் பேசினான்...நீ...சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது. குழந்தையைக் கவனிக்காமல் இருந்ததற்காக அந்தக் கிழவியை இரண்டு தட்டு தட்டினேன். பாய்ந்து வந்தான் கிழவன் என் மீது; அடித்து விரட்டினேன். இந்தத் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு வந்தான், என்னைக் கொல்ல; இங்கு காவல் காத்துக் கிடக்கும் நாய்; மாமா சொல்வது சரி. இதுகளுக்கு இப்படிப்பட்ட இழிவான போக்குத்தான் இருக்கும். துப்பாக்கியைப் பறித்துக் கொண்டேன்; சுட்டேன். சுருண்டு விழுந்தான்; செத்தான் என்று நினைத்தேன்; கிழட்டுப் பயல் கூவினான்; 'கூப்பிடு! கூப்பிடு' என்று. யாரை என்று கேட்கிறேன்; 'என்மகனை! என்மகனை!' என்கிறான். 'என்னடா உளறல்' என்கிறேன். 'நானா உளறுகிறேன்...உயிர் போகுமுன் உண்மையைக் கூறுகிறேன். மாளிகையிலே இருக்கிறான் என் மகன்! எல்லோரும் பாராட்டும் அறிவாளன்! சொக்கலிங்கம்!' என்கிறான். 'சமையற்காரனையா சொல்லுகிறாய்' என்று கேட்கிறேன், மிஸ்டர் லிங்கம்! உங்களைத்தான் சொல்லுகிறான்...நீங்கள் அவனுடைய மகனாம்! வண்டிக்காரன் மகனாம்!..."
"ஆமடா ஆம்! நான் அவர் மகன்தான்! வண்டிக்காரன் மகனேதான் நான்! அவர் குடிசையிலே குமுறிக் கிடந்தார்; நான் மாளிகையிலே வாழ்வதற்காக, இன்னலையும் இழிவையும் ஏற்றுக் கொண்டார், நான் செல்வமும் சீரும் பெறவேண்டுமென்று. மிஸ்டர் நார்மன்! இவர் என் தகப்பனார்..வண்டிக்காரன், இந்த ஜெமீனில்! வாழ்ந்து கெட்டவர். நான் சிறு வயதிலேயே மாமனால் வளர்க்கப்பட்டு வந்தேன். இங்கு வந்ததே இல்லை...மகனே! 'நாலு பேர் பார்த்து மதிக்கத்தக்க நிலை உனக்கு வரவேண்டும். அதற்கு இந்த ஜெமீனில் வாத்தியார் வேலையை ஏற்றுக் கொள். உனக்கு நிறைய சிபாரிசுகள் கிடைக்கும். பெரிய உத்தியோகம் கிடைக்கும். அதுவரையில் என் மகன் என்பது மட்டும் வெளியே தெரியக் கூடாது. வண்டிக்காரன் மகன் என்று தெரிந்தால், ஜெமீன் மாளிகையில் இடம் கிடைக்காது' என்றார்! எவ்வளவோ மன்றாடினேன்...கேட்கவில்லை. சத்தியம் செய்திடச் சொன்னார்...தத்தளித்தேன்...மாளிகையிலே எனக்கு விருந்து, மகிழ்ச்சி! என் தகப்பனார் இங்கு, குடிசையில், குதிரைக் கொட்டிலில், என் எதிரிலேயே ஏசுவார்கள், கேவலமாக; என் இரத்தம் கொதிக்கும்; கண்ணீர் கொப்பளிக்கும்; அப்போதும் என்னை அந்த உத்தமர் பார்த்துத் தலை அசைப்பார்; என்னை கட்டிப் போட்டு விட்டார்! சீமான்களுடன் சீமாட்டிகளுடன், நான் சாரட்டில் சவாரி செய்வேன்! அவர்தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வருவார்! வண்டியின் வெல்வெட்டு மெத்தை என்னை முள்ளாய்க் குத்தும்...சிறிதளவு குளிர் காற்று வீசினாலும், எங்கள் உடலுக்குக் கம்பளிச் சட்டை — போர்வை! பனி பெய்யும், அவர் எங்களை ஏற்றிக் கொண்டு வண்டியை ஓட்டிச் செல்வார். எல்லாம் எனக்கு இந்தச் சமூகத்தில் ஒரு புதிய அந்தஸ்து தேடித்தர...அம்மா!...அம்மா!...
"கிழவியைப் போலீஸ் கொட்டடிக்கு அனுப்பிவிட்டேன்...திருடினாள் பத்துப்படி கொள்...சாட்சி இருக்கிறது..."
"மிஸ்டர், நார்மன்? எனக்கு வேண்டும். இந்தத் தண்டனையும் வேண்டும்; இதற்கு மேலும் வேண்டும். மாளிகையிலே ஒரு போலி வாழ்க்கை எனக்கு. அப்பா சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார். அம்மா மீது திருட்டுக் குற்றம்..."
"உன் மீது மோசடிக் குற்றம்...ஆமாம்! இவ்வளவு நாள் உன் குடும்ப உண்மையை மறைத்து ஜெமீன் குடும்பத்துடன் உறவாடிய மோசடி..."
"மிஸ்டர் லிங்கம்! மிஸ்டர் ஜெமீன்தாரர்! முதலில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும்...மற்றவை பிறகு—கிளம்புங்கள்..."சடையப்பனைக் காப்பாற்ற முடியவில்லை—எத்தனை உயர்தரமான மருத்துவர்களாலும்.
மகனைப் பெரிய உத்யோகத்திலே பார்க்க வேண்டும் என்ற ஆசை ததும்பிக் கொண்டிருந்த இதயம், பேசுவதை நிறுத்திக் கொண்டது.
செய்ய வேண்டியது யாவும் செய்துவிட்டேன். சென்று வருகிறேன் என்று கூறுவது போலிருந்தது சடையப்பனின் முகத்தோற்றம்.
போலீசிலிருந்து விடுவிக்கப்பட்ட தன் தாயின் காலின் கீழ் விழுந்து கதறினான் சொக்கலிங்கம்.
வண்டிக்காரன் மகன்!
சடையன் மகன்!
பெரிய குடும்பம்! அந்தஸ்தான இடம் என்று எண்ணிக் கிடந்தோமே, நம்ம வண்டிக்காரன் மகன்.
அப்பனும் மகனுமாகச் சேர்ந்து நம்மை மடையர்களாக்கி விட்டார்களே!
ஜெமீன் குடும்பத்துக்கே இழிவு உண்டாக்கி விட்டானே!
உமாவையே கொடுக்க இருந்தேனே..முட்டாள்!—இவ்விதமான பேச்சுத்தான் முதலிலே ஜெமீன் மாளிகையிலே கிளம்பிற்று.
ஊர் கொதித்தது. மகனுக்கே அந்தஸ்து தேடிக் கொடுக்க வேதனைத் தீயிலே வீழ்ந்த உத்தமன் சடையப்பன் என்று ஏழையர் உலகம் போற்றிற்று.
போலீஸ், காளிங்கராயரைத் தேடிக் கொண்டிருந்தது.
சொக்கலிங்கம் அதிர்ச்சி தாங்காமல் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.
நீதியை நிலை நாட்டியாக வேண்டும் என்று நார்மன் வேலை செய்து வந்தார்.காளிங்கராயர் பிடிப்பட்டார்; வழக்குத் தொடரப்பட்டது.
அச்சம் பிடித்துத் தின்னத் தொடங்கிற்று, ஜெமீன்தாரரை.
நார்மனை நாடினார், காளிங்கராயரை மீட்பதற்காக.
"பிடிவாதம் வேண்டாம் மிஸ்டர். நார்மன்! பிடிவாதம் கூடாது. கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்."
"நான் எந்த உதவியும் செய்ய முடியாது. நடந்ததை அப்படியே கோர்ட்டிலே சொல்லத்தான் போகிறேன்...நம்முடைய வியாபாரத் தொடர்பு இருந்தாலும் சரி...அறுந்தாலும் சரி!"
"மிஸ்டர் நார்மன்! ஆத்திரத்தில் நடந்து விட்டது...எப்படியாவது..."
"நடந்திருப்பது கொலை, மிஸ்டர் ஜெமீன்தாரர்...நான் எப்படி உடந்தையாக இருக்க முடியும்...வண்டிக்காரனும் மனிதன், மிஸ்டர் ஜெமீன்தார், மனிதன்!"
"நீங்கள் மனது வைத்தால், என் மருமகன் தப்பலாம்...சாட்சிகளைத் தடுத்துவிட முடியும்."
"முடியும் ஜெமீன்தாரர்! முடியும். நான் அந்த நேரத்தில் அங்கு வராமலிருந்தால் பிணத்தையே மறைத்து விட்டிருக்கவும் முடியும். ஆனால் என்னால் உண்மையை மறைக்க முடியாது."
"பூர்வீகமானது எங்கள் ஜெமீன். இப்போதே கேவலமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். மருமகனுக்கும் ஏதாவது கோர்ட்டிலே கிடைத்து விட்டால் இழிவு எந்தக் காலத்திலும் போகாது மிஸ்டர் நார்மன். இருபது வருட சினேகிதம் நமக்குள்".
"இருபது வருட வியாபாரத் தொடர்பு! மிஸ்டர் ஜெமீன்தாரர். சமுதாயத்திலே உள்ள போலி அந்தஸ்து உணர்ச்சியை வளர்க்கக் கூடாது—அது எந்த நாட்டில் இருந்தாலும்...லிங்கம் சொல்வது முற்றிலும் சரி! எங்கள் நாட்டிலேயும் இருக்கிறது. இப்படிப்பட்ட உணர்ச்சி எங்கே இருந்தாலும், பாம்பு பாம்புதானே."
காளிங்கராயரை விடுவிக்க ஜெமீன்தாரர் இலட்ச ரூபாய் வரையில் செலவிட்டுப் பார்த்தார்; பிரபலமான வழக்கறிஞர்கள் வாதிட்டுப் பார்த்தார்கள். பலிக்கவில்லை. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சோகமே உருவான நிலைபெற்றார் ஜெமீன்தாரர்!
என்ன செல்வம் இருந்து என்ன பயன்? மருமகனைக் காப்பாற்ற முடியவில்லையே! ஜெமீன் குடும்பத்துக்கு இழிவு ஏற்பட்டது விட்டதே. இந்த இழிவு எப்படி நீங்கும் என்று எண்ணி, சீமைக்குச் சென்று பார்ப்பதென்று முடிவு செய்து, ஜெமீன் நிலத்தை விற்றுப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார்.
அதிர்ச்சியில் தாக்கப்பட்டு, படுத்த படுக்கையாகக் கிடந்த சொக்கலிங்கம், மெள்ள மெள்ள நலமடைந்தார்.
நார்மன் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த விடுதியில் தன் தாயாருடன் தங்கி இருந்தான்.
பல ஆண்டுகளாக 'அம்மா! அம்மா!' என்ற அந்த அன்பு மொழியைச் சொல்ல வாய்ப்புப் பெறாதிருந்த குறையைப் போக்கிக் கொள்பவன் போல, விநாடிக்கு விநாடி, 'அம்மா! அம்மா!' என்று அழைத்து, 'நான் பாவி அம்மா! நான் பாதகன் அம்மா! காளிங்கராயரல்ல அம்மா அப்பாவைச் சாகடித்தது; என் சுயநலம்—என் மடமை—என் கபட நாடகம் அம்மா! எனக்கு உய்வு உண்டா? நான் மனிதன் தானா!' என்று கூறிக் குமுறிக் கிடந்தான்.
நார்மன் அவனுக்கு ஆறுதல் கூறிட வந்தார்.
வெவ்வேறு இனம்—ஒரு இனம் ஆளும் இனமாகவும், மற்றோர் இனம் அடிமைப்படுத்தப்பட்ட இனமாகவும் இருந்திடினும், இருவரும் நல்ல இதயம் படைத்தவர்கள் என்பதாலே அவர்களின் நட்பு, நேர்த்திமிக்கதாக இருந்தது. நார்மன், எப்படியும் சொக்கலிங்கத்தின் மனம் உடையக் கூடாது என்பதற்காக அன்பு மொழி வழங்கலானார்.
"மிஸ்டர் லிங்கம்! ஏதேதோ நடைபெற்று விட்டிருந்தாலும், எங்கள் கம்பெனி முடிவு மாறவில்லை. அந்த வேலை உமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது."
"நன்றி மிஸ்டர் நார்மன்! ஆனால் நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். என்னதான் அப்பா வற்புறுத்தினாலும் நான் அந்தக் கபட நாடகம் ஆட ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது. என்னுடைய உள்ளத்திலும் அடிவாரத்தில் சுயநலம், சுகபோகம் ஆகியவற்றிலே ஆசை இருந்ததால் தான் நான் அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டேன். நானும் ஒரு விதத்தில் குற்றவாளிதான்! அப்பாவைச் சாகடித்தது, துப்பாக்கிக் குண்டு அல்ல; என் மடமை—சமூகத்திலே கப்பிக் கொண்டுள்ள குருட்டு அறிவு!—இந்த மடமையும் குருட்டுத் தனமும் ஒழிய வேண்டும்...ஒழிக்கப்பட வேண்டும்...அதற்கு நான் இருக்க வேண்டிய இடம் இலண்டன் அல்ல! இங்கு; என் நாட்டில்; தாய்நாட்டில்! என் நாட்டு மக்களிடம் ஜாதி குலம் சமயம் செல்வம் என்பவைகளின் பேரால் இரும்புப் பிடியாக இருந்துவரும் மடமையைத் தொலைத்திட நான் பணியாற்றத் தீர்மானித்து விட்டேன். மன்னிக்க வேண்டும்".
"மன்னிப்பதா! மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப்படுகிறேன்! பணம் பதவி இவற்றினைத் துறந்திடத் துணியும் உன் பண்பினை பாராட்டுகிறேன்!"...
"பணம் பதவி ஆகியவற்றிலே எனக்கு இருந்து வந்த ஆசைதானே, அப்பா சொன்ன திட்டத்துக்கு என்னை உடன்பட வைத்தது? உணருகிறேன்...திருந்துகிறேன்"...
"ஜெமின்தாரர் வழக்கு சீமைக்குப் போகிறது...""எங்கே போனால் என்ன? வழக்கின் முடிவு எதுவானால் என்ன? நான் செய்த குற்றத்துக்கான தண்டனையை நான் அனுபவித்து விட்டேன். வண்டிக்காரன் மகன் என்றாலும் வாழ முடியும்—பளபளப்பும் போலி மரியாதையும் கிடைக்காமலிருக்கலாம்—நாணயமாக வாழ முடியும் இந்தப் பரந்த உலகத்தில் என்ற சாதாரண உண்மையை உணர முடியாதிருந்தேன். பாடம் படித்துக் கொண்டேன்; யாரும் கொடுத்திராத கட்டணம் செலுத்தி...என் தகப்பனாரின் உயிரைக் கொடுத்து.
பக்கத்திலே கோகிலா வந்து நின்றாள்.
நார்மன் சொக்கலிங்கத்தைப் பார்த்தார்.
"என் துணைவியார்!" என்று பெருமிதத்துடன் சொக்கலிங்கம் கூறினான்.
★