அகல் விளக்கு/அத்தியாயம் 18

மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும் எனக்கும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்ததாகக் கூறமுடியாது. தொடர்பும் பழக்கமும் இடைவிடாமல் இருந்ததனால்தான் நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்று கூறவேண்டும்.

சந்திரனுக்கும் எனக்கும், ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தது. வாலாசாவில் படித்தபோது, அந்த உள்ளத்துணர்வோடு, தொடர்பும் பழக்கமும் இடையறாமல் இருந்தபடியால்தான், இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவன் சென்னைக்கு வந்து படிக்கத் தொடங்கியபோது நான் ஓராண்டு வாலாசாவிலேயே படிக்க நேர்ந்தது. தொடர்பும் பழக்கமும் இல்லாமற் போகவே எங்கள் நட்புக் குன்றிவிட்டது.

மாலனும் நானும் கல்லூரியை விட்ட பிறகு, எங்கள் நட்பும் அப்படித்தான் ஆகுமோ என்று எண்ணினேன்.

ஆனால், சந்திரன் வாலாசாவில் இருந்தபோது என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். கல்லூரிக்கு வந்ததும் அவனுடைய மனம் மாறிவிட்டது. அவனுக்கு ஒருவகையான உயர்வு மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. நட்புக்கு ஒத்த மனப்பான்மைதான் வேண்டும். உயர்வு மனப்பான்மையோ தாழ்வு மனப்பான்மையோ உள்ள இடத்தில் உண்மையான நட்பு ஏது? நான் அவனிடம் கணக்குக் கற்றேன்; உதவி பெற்றேன்; ஒரு முறை அவன் தேறிவிட நான் தவறிவிட்டேன்; அதனால் வகுப்பில் உயர்வு தாழ்வு ஏற்பட்டது. அதன் காரணமாக மனநிலையிலும் வேறுபாடு ஏற்பட வேண்டுமா? அந்த வேறுபாடு ஏற்படாதிருந்தால் எங்கள் நட்புச் சிறிதும் மாறியிருக்காதே.

கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்த பிறகு இவ்வாறு அவனைப்பற்றி அடிக்கடி எண்ணங்கள் வந்தன. ஆனால் முன்போல் கவலையோ ஏக்கமோ இல்லை. சில நாட்களில் மறந்தாற்போலவும் இருந்தேன்.

இரண்டு வாரங்கள் கழித்து ஒருநாள் என்னுடைய அறையின் சன்னல் பக்கமாகப் பழைய மாணவர் ஒருவர் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் முந்திய ஆண்டுக்கு முந்திய ஆண்டில் விடுதியில் சின்ன அமர்க்களம் நடத்திய கதர் மாணவர் என்று தெரிந்துகொண்டேன்.

"நினைவு இருக்கிறதா? சாந்தலிங்கம்" என்றார்.

"ஆமாம்" என்று உள்ளே வருமாறு அழைத்தேன். உள்ளே வந்து உட்கார்ந்தார்.

"சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் கொட்டவேண்டும் என்று உங்கள் சந்திரனுக்கும் எனக்கும் போராட்டம் நடந்ததே நினைவு இருக்கிறதா?"

"நன்றாக நினைவு இருக்கிறது. எங்கே இருக்கிறீர்கள்?"

"ஊரில்தான் இருக்கிறேன் நிலபுலங்களைப் பார்த்துக் கொண்டு."

"தொழில்?"

"நிலபுலம் பார்ப்பது தொழில் அல்லவா? உங்களுக்கு அது ஒரு தொழிலாகத் தெரியவில்லையா?"

"மெய்தான். வேறு வேலை-?"

"வேண்டா என்று இருக்கிறேன். இதுவே போதும்."

"காந்தீயம்."

"ஆமாம். விருப்பமில்லையானால் மனிதம் என்று சொல்லுங்கள்."

அவர் பழையபடியே இருந்தார். முகம் மட்டும் சிறிது கறுத்திருந்தது. சென்னையில் இருந்தபோது வெயில் படாமல் இருந்தவர், இப்போது காட்டிலும் மேட்டிலும் வெயிலில் திரிவதால் இப்படி நிறம் மாறியிருக்க வேண்டும் என்று எண்ணினேன். "எங்கே வந்தீர்கள்? யாரையாவது கல்லூரியில் சேர்த்திருக்கிறீர்களா?" என்றேன்.

"உங்களிடம்தான் வந்தேன்."

"என்ன? சொல்லுங்கள்."

"சந்திரனைப்பற்றி-"

"ஒன்றும் தெரியவில்லையே."

"முயற்சி எல்லாம் கைவிட்டு விட்டார்களா?"

"அவ்வளவுதான். நானும் அவனுடைய ஊர்க்குப் போய் பல நாள் ஆயின."

"பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்?"

"கவலைபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் நான் பார்க்கவில்லை."

"மறந்துவிட்டீர்கள்; கல்லூரி உறவு அவ்வளவுதான்."

"மறக்கவில்லை."

"அந்தக் குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள்"

"அவன் ஒருவன். பெண் ஒருத்தி"

"சரி" என்று மேல்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார்.

அவருக்கு ஏதோ தெரியும் போல் இருக்கிறது என்று உணர்ந்தேன். "நீங்கள் எங்காவது சந்திரனைப் பார்த்தீர்களா?" என்றேன்.

"ஆமாம். அதைப்பற்றிச் சொல்லத்தான் வந்தேன். சந்திரனுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு போய் நான் சொல்லும் இடத்தில் தேடிப்பாருங்கள்."

"சரி"

என் உள்ளத்தில் சந்திரனைப் பற்றி இருந்த வெறுப்பு மறைந்துவிட்டது. அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வரவேண்டும் என்ற ஆவலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. அக்கறையுடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

"நீலகிரி மலைக்கு ஒரு வேலையாகப் போகவேண்டியிருந்தது. உருளைக்கிழங்கு எப்படிப் பயிரிடுகிறார்கள் என்று பார்த்து வரப் போனேன். நண்பர் ஒருவரும் உடன் வந்திருந்தார். உபதளையில் அவர் ஒருவரைப் பார்ப்பதற்காக அழைத்துப் போனார். அங்கே ஒரு சின்ன தேநீர்க் கடை இருந்தது. பசியால் தேநீர் குடிப்பதற்காக அதனுள் நுழைந்தபோது சந்திரனைப் பார்த்தேன். தேநீர் குடித்துக் கொண்டிருந்த அவன் என்னைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டான். எனக்கு ஐயம் ஏற்பட்டது. சந்திரனோ வேறு யாரோ, எப்படிக் கேட்பது என்று தயங்கினேன், அவனுடைய உடையும் மாறியிருந்தது. காக்கிச் சட்டையும் காக்கிக் காலுறையும் உடுத்திருந்தான். தலைமயிர் கலைந்திருந்தது.

மீசை தடிப்பாக இருந்தது. இங்கே இருந்த போது அவன் ஒருநாளும் அப்படி இல்லை. அவன் எதிரிலேயே போய் உற்றுப் பார்த்தேன். அவன் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு, விரைவாகத் தேநீர் குடித்து எழுந்தான். துணிந்து, "சந்திரா!" என்றேன். தன்னை மறந்து அவன் 'ஆ' என்றான். பிறகு ஏதோ தவறு செய்துவிட்டவன் போல், 'ஓ! நீங்களா? எங்கே வந்தீர்கள்? இதோ இருங்கள். வெளியே ஒருவர் காத்திருக்கிறார். அவருக்குச் சொல்லி விட்டு வருவேன்' என்று நடந்தான். போனவன் வருவான் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. உடனே அங்கே தேநீர் தருவோனைப் பார்த்து, 'அந்த ஆள் சந்திரன் உனக்குத் தெரியுமா?' என்றேன். 'எனக்குத் தெரியாது. அதோ அவனுக்குத் தெரியும்' என்று சொல்லி அவன் இன்னொருவனைச் சுட்டிக் காட்டினான். அவனை மெல்ல அழைத்துக் கேட்டேன். சந்திரன் என்ன தொழில் செய்கிறான், எங்கே தங்கியிருக்கிறான் என்று கேட்டேன். அவன் எல்லாவற்றையும் சொன்னான். அதற்குப் பிறகு அவனுடைய பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணினேன். அவர்களுடைய முகவரி தெரியாது. உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணினேன். உங்களுடைய பெயர் தெரியாது. கல்லூரியில் இருக்கிறார்களோ இல்லையோ என்று ஐயம் எழுந்தது. பணம் செலவானாலும் சரி, நேரில் போய்விட்டு வருவோம் என்று வந்தேன்" என்றார்.

 அவருடைய இரு கைகளையும் பற்றிக் கொண்டு, "மிக்க நன்றி, இது அந்தக் குடும்பத்துக்கு மிகப் பெரிய உதவி. அவனுடைய அப்பா அம்மா கேள்விப்பட்டால் உடனே புறப்பட்டு வந்துவிடுவார்கள். இப்போதே தந்தி கொடுப்பேன்" என்றேன்.

"அவசரமே கூடாது. அவனோ ஒளிந்து வாழ்கிறான் என்று தெரிகிறது. இதனால் ஆர அமர முயற்சி செய்து தேடிப் பிடிக்க வேண்டும். இனிமேல் எங்கும் போக மாட்டான். அந்தக் கவலையே வேண்டா. ஒரு குடும்பமாகவே இருக்கிறான். ஒரு பிணைப்பு இருக்கிறது. உடனே விட்டுப் போக அவனால் முடியாது. கடிதம் எழுதுங்கள் போதும்" என்றார்.

குடும்பம், பிணைப்பு என்பவற்றைக் கேள்விப்பட்டவுடனே எனக்கு ஒருவகை அருவருப்புத் தோன்றியது. பழுத்த மாம்பழம் கிடக்கிறதே என்று மகிழ்ந்து கை நீட்டியபோது கொஞ்சம் அழுகல் என்று சொல்லக் கேட்டது போல் இருந்தது என் மனம். இருந்தாலும், பெற்றோருக்குப் பிள்ளை கிடைப்பான் அல்லவா, அதுவே பெரிய மகிழ்ச்சியாகும் என்று எண்ணினேன். "அங்கே யாரோடு வாழ்கிறான்? விட்டு வருவானா?" என்றேன்.

"எனக்கு நேரே தெரியாது. சொல்லக் கேட்டதுதான். அந்தத் தேநீர்க் கடையில் இருந்தவன் சொன்னான். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவள் ஒருத்தியாம், முப்பது வயது இருக்குமாம். குழந்தை ஒன்றும் இல்லையாம். அவளோடு அன்பாக வாழ்க்கை நடத்துகிறானாம்" இவ்வாறு அவர் சொல்லிச் சிறிது நிறுத்தினார். பிறகு, "அன்பான வாழ்க்கையாக இருந்தால், அவளிடமிருந்து பிரிப்பது பாவம் அல்லவா என்று எண்ணினேன். அதனால் உங்களுக்குச் சொல்லாமலே இருக்கலாம் என்றும் கருதினேன். மறுபடியும் வேறு ஒருவகையில் இரக்கம் ஏற்பட்டது. அவளுடைய கணவன் ஒரு கொலைக்குற்றத்தில் அகப்பட்டுப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறானாம். அவன் சிறையிலிருந்து எப்படியோ வெளியே வந்து பார்ப்பானானால் முன்பின் எண்ணிப் பார்க்காமல் சந்திரனைக் கொன்றுவிட்டு மறுவேலை பார்ப்பான். அதை எண்ணியவுடனே எனக்கு எப்படியாவது சந்திரனைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி ஏற்பட்டது" என்றார்.

"அய்யோ! அப்படிப்பட்ட குடும்பத்திலா போய் அகப்பட்டுக் கொள்ள வேண்டும்?" என்று வருந்தினேன். என்னுள் சிறு நடுக்கம் உணர்ந்தேன்.

"என்ன செய்வது? போனான், போன இடத்தில் ஒரு பெண்ணின் அன்பு கிடைத்தது. பிறகு என்ன விளையும் என்று எண்ணிப் பார்க்காமல் அந்த அன்பை ஏற்றுக் கொண்டான். நேர் வழியில் போகாமல் கொஞ்சம் திரும்பினால் இப்படித்தான். கல்லும் முள்ளும் காலைப் பொத்தும்" என்றார்.

"என்ன தொழில் செய்கிறான்?"

"அதையும் கேட்டேன். தேயிலைத் தோட்டத்தில் முதலில் கூலி வேலைக்குத்தான் போனானாம். பிறகு அவனுக்கு ஆங்கிலப் படிப்பு இருப்பதாகத் தெரிந்து கொண்டு கணக்குப் பிள்ளை வேலை கொடுத்திருக்கிறார்களாம். அங்கேயே இருந்தாலும் முன்னுக்கு வரலாம். ஆனால்-"

"அய்யோ! அந்த ஆபத்தான வாழ்வில் இருக்கக்கூடாது. சிறையிலிருந்து கணவன் வெளியே வந்தால், தன் மனைவி மாறிவிட்டாள் என்பது தெரியாமல், சந்திரன் மேல் ஆத்திரம் கொண்டு ஏதாவது செய்துவிடுவான்."

"ஆமாம்." சிறிது அமைதியாக இருந்து பெருமூச்சு விட்டார். உடனே, "உயர்ந்த பண்பாடு உள்ள படித்த குடும்பமாக இருந்தால், மனைவி மனம் மாறிவிட்டாள் என்று அறிந்ததும் பேசாமல் அமைதியோடு திரும்பிவிடுவான். தாழ்ந்த குடும்பங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றால் உயிரைப் போக்குவது தவிர வேறு எதையும் எண்ண மாட்டார்கள். காரணம் அறியாமை, போலிமானம்" என்றார்.

"போய்த்தேடி அழைத்து, வருவதே பெரிய தொல்லைதான்" என்றேன்.

"அப்படி அல்ல. நீங்கள் வந்திருப்பது தெரியாதபடி போய்ப் பிடிக்கவேண்டும். நேரில் போன பிறகு அதற்கு வேண்டிய வழிகள் தோன்றலாம்" என்றார்.

அவர்க்கு மனமார நன்றிகூறி, உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்று உண்ணுமாறு வேண்டினேன். உணவு முடிந்ததும், அவர் தம்முடைய முகவரியைத் தந்து, "நடந்தவற்றைத் தெரியப்படுத்துங்கள்" என்று கேட்டுக்கொண்டு விடை பெற்றார்.

உடனே என் அறைக்கு வந்து கடிதம் எழுதினேன். மூன்றாம் நாள் காலையே பெருங்காஞ்சியிலிருந்து சாமண்ணாவும் அந்த ஆசிரியரும் புறப்பட்டு விடுதிக்கு வந்தார்கள். சந்திரனுடைய புதிய குடும்ப வாழ்வு தவிர, மற்ற எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னேன். இருவரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அன்று இரவே புறப்படவேண்டும் என்றார்கள். நானும் உடன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இசைந்தேன். பிறகுதான் ஊரில் அத்தையைப் பற்றியும் சந்திரனுடைய தாயைப் பற்றியும் கேட்டேன். தாய் மகனைப் பற்றிய கவலையோடு உணவும் உறக்கமும் இல்லாமல் வருந்தி இறந்துவிட்டதாக ஆசிரியர் சொன்னார். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. சந்திரன் கேள்விப்பட்டால் உண்மையாகவே வருந்துவானே என்றும், ஒருவன் தவறு காரணமாகப் பெரிய குடும்பமே துன்புற நேர்ந்ததே என்றும் கலங்கினேன்.

அவன் ஒரு குடும்பத்தில் பிணைப்புண்டிருப்பதை ஆசிரியர்க்கு மட்டும் தனியே சொல்லவேண்டும் என்று எண்ணினேன். தக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். ரயிலில் சென்றபோது சாமண்ணா அயர்ந்து உறங்கினார். அவர் குறட்டைவிட்டு உறங்கிய நேரம் பார்த்து, ஆசிரியரிடம் சொன்னேன். அவர் திடுக்கிட்டவர்போல் என்னைப் பார்த்து, "அய்யோ! கொலைக்காரக் குடும்பத்திலா போய் அகப்பட்டுக் கொண்டான்?

தக்க சமயத்தில் வந்து சொல்லிய அந்த நல்லவர் உயிர்ப்பிச்சை அளித்த உதவி அல்லவா செய்திருக்கிறார்" என்றார். சிறிது நேரம் கழித்து, "சந்திரன் இவ்வளவு பொல்லாதவனாக - துணிச்சல் உடையவனாக - மாறுவான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வாலாசாவுக்கு அழைத்துப் போய்ப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது எப்படி இருந்தான்! உனக்குத் தெரியுமே! மருண்டு மருண்டு பார்த்தான். இவனுக்குத் தைரியம் வரவேண்டுமே என்று கவலைப்பட்ட காலம் அது. அடுத்த ஆண்டில், ஒரு முறை ஊருக்கு வந்தபோது, என்னிடம் தனியே வந்து என் உடம்பில் வலு இல்லாமற் போகிறது. ஒரு மருத்துவரிடம் சொல்லி நல்ல மருந்து வாங்கிக் கொடுங்கள்" என்று கேட்டான்.

'பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிறாயே'ப்பா உனக்கு என்ன குறை, சொல். ஆங்கில மருத்துவரிடம் போனாலும், அவர்கள் உடனே தெரிந்துகொள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குறை இன்னது என்று நாமே தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஆராய்ந்து மருந்து கொடுப்பார்கள். இல்லையானால் ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள், 'முதலில் உன் உடம்புக்கு என்ன என்று சொல்' என்று கேட்டேன். உடம்பில் சத்து எல்லாம் வீணாகிறது என்றான். ஏன் அப்படி என்றேன். தூங்கும்போது என்றான். உடனே அவனுடைய குறையைத் தெரிந்துகொண்டேன். 'தூங்கும்போது இந்திரியம் வெளிப்பட்டு விடுவதைச் சொல்கிறாயா? மாதத்துக்கு எத்தனை முறை?' என்று விளக்கமாகக் கேட்டேன். 'ஐந்தாறு முறை' என்றான். 'அது இயற்கை. அதைப்பற்றிக் கவலைப்படாதே!' என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கித் தைரியம் ஊட்டி அனுப்பினேன். அதுவும் போதாது என்று ஒரு மருத்துவரிடமும் அழைத்துச்சென்று, அவரையே சொல்லுமாறு செய்தேன். வாரம் ஒருமுறை ஆனால் கெடுதியே இல்லை என்றும் அவரே அவனுக்குச் சொல்லியனுப்பினார். அப்படி மனம் சோர்ந்து கலங்கிய அந்தச் சந்திரனா இப்போது இப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறான்? எண்ணிப் பார்த்தால் நம்ப முடியவில்லையே" என்றார்.

குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்த சாமண்ணா அப்போது விழித்துப்பார்த்து, "எது? என்ன நம்பமுடியவில்லை?" என்றார்.

"ஒன்றும் இல்லை. நீங்கள் தூங்குங்கள்" என்றார் ஆசிரியர்.

"தூக்கமாவது, பாழாவது! அவள் போன நாள் முதல் நல்ல தூக்கமே இல்லை. குடும்பப் பாரத்தை என்மேல் போட்டுவிட்டுச் சுகமாகப் போய்ச் சேர்ந்துவிட்டாள். கடவுளே கடவுளே" என்றார்.

மறுபடியும் என் மனம் சந்திரனுடைய தாயைப்பற்றி நினைத்து வருந்தியது. அன்பான மனம் தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக, தன் மகனுக்காக நொந்து நொந்து அழிந்ததே என்று வருந்தினேன்.

ரயில் மேட்டுப் பாளையத்தில் நின்றதும் இறங்கிப் பல்சக்கர வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். சிற்றுண்டி உண்டோம். ஆசிரியர் குடிக்கத் தண்ணீர் கேட்டார். தண்ணீர்க் குவளையைக் கையில் ஏந்தியதும் அதன் நிறத்தைப் பார்த்துத் தயங்கினார். "என்ன இது! இப்படிக் கலங்கலாக மண்ணாக இருக்கிறதே! இதை எப்படிக் குடிப்பது?" என்றார். பக்கத்திலே இருந்த ஒருவர், "குடியுங்கள், குடிக்கலாம். ஒன்றும் செய்யாது; இங்கே இப்படித்தான்" என்றார். குடிக்க மனம் இல்லாமல் ஒரு விழுங்குநீர் குடித்துவிட்டு நிறுத்தினார் "காப்பியிலும் இந்தத் தண்ணீர்தான் கலந்திருக்குமா? நீங்கள் எப்படிக் குடித்தீர்கள்?" என்று சாமண்ணாவைப் பார்த்துக் கேட்டார். "என் வாழ்க்கையே ஒரே கலங்கலாக இருக்கிறது. தண்ணீர் கலங்கலாக இருந்தால் என்ன?" என்று சிறிது சிரித்தார், அந்தச் சிரிப்பில் பெருந்துன்பம் கலந்திருந்தது.

பல்சக்கர வண்டி புறப்பட்டு மலையை நோக்கி ஏறியவுடன் புதிய புதிய காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகத் தோன்றின. நாங்கள் அந்த வழியில் அதற்கு முன் சென்றதில்லை. மலைமேல் ரயில் செல்வதே எங்களுக்கு ஒரு புதுமையாக இருந்தது. நீலகிரி மலையில் வளமான காட்சிகளும் புதுமையாக இருந்தன. அவற்றை நானும் ஆசிரியரும் ஆர்வத்தோடு கண்டு மகிழ்ந்தோம். ஆனால் சாமண்ணா எங்கள் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, அவர் முகத்தைப் பார்த்தபோதெல்லாம் எங்கள் மகிழ்ச்சி குன்றியது. அந்த மலையின் வளத்தைக் கண்டு வியப்படைந்தபோதெல்லாம், என்னை மீறி ஏதேனும் சொல்ல வாய் திறந்தேன்.

சாமண்ணாவின் துயரம், என் ஆர்வத்திற்கு தடையாக நிற்க, சொல்வதைச் சுருங்கச் சொல்லி முடித்தேன். எத்தனையோ மலைகளை எங்கள் ஊர்ப்பக்கம் கண்டிருக்கிறோம். ஆனால் மரம் செடி கொடிகள் தழைத்து வளர்ந்த மலைகள் காடுகள் செழித்தோங்கிய மலைகள்-விண்ணை முட்டி நின்ற மலைகள் - ஒன்றோடொன்று இணைந்து உயர்ந்து செல்லும் அழகை அதுவரையில் கண்டதில்லை. கண்ட இடமெல்லாம் வளப்பம் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. பயிரிடாமல் அங்கங்கே சரிவுகளில் இயற்கையாகவே வளர்ந்துள்ள வாழை மரங்களை ஆசிரியர் காட்டினார். அப்போது மட்டுமே சாமண்ணா தலை நீட்டி எட்டிப் பார்த்தார்.

மலையின் இயற்கை வளம் ஒருபுறம் இருக்க, பல்சக்கர ரயில் வண்டி ஆடி அசைந்து மலை ஏறிச் செல்வது தனி இன்பமாக இருந்தது. அங்கங்கே மலைக் குடைவுகளின் வழியாக வண்டி சென்றபோது, சுற்றிலும் இருள் சூழ்ந்து கிடக்க, சிறுவர்கள் ஓ என்று கூச்சலிட்டது வேடிக்கையாக இருந்தது. ஒரு முறை நீண்ட மலைக்குடைவின் வழியாக வண்டி சென்றபோது நானும் என்னை அறியாமல் சிறுவர்களோடு சேர்ந்து கூச்சலிட்டேன். குடைவைக் கடந்ததும் ஒளியில் ஆசிரியர் முகத்தைக் கண்டேன்.

அவருடைய முகமும் சிறுவர்களின் முகம் போலவே புதுமை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் சாமண்ணாவின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை. பேரொலி கேட்டு வெளியே தலைநீட்டிக் கீழே பார்த்தேன். கானாறு ஒன்று நீர் நிரம்பி அலை புரண்டு கற்பாறைகளில் மோதி ஓடியது கண்டேன். மறு பக்கமாகப் பார்த்தேன். மலைமேல் உயரத்திலிருந்து பெரிய அருவி தூய வெண்ணிறமாக விழுந்து ஓடி வருவதைக் கண்டேன். அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வண்டி அங்கேயே நின்றால் நெடுநேரம் கண்டு மகிழலாம் என்ற வேட்கை உண்டானது. ஆனால் இயற்கையின் மாறாத நிகழ்ச்சிகள் போல் வண்டி சிறிதும் நிற்காமல் ஒவ்வொரு பல்லாக ஏறி ஆடி அசைந்து சென்றுகொண்டே இருந்தது. அந்தப் பெரிய அருவியே மற்றொரு பக்கத்தில் ஆறாக ஓடிச் செல்கிறது என்பதை மறுபடியும் இப்பக்கமாகக் கண்டபோது உணர்ந்தேன்.

எங்கள் மகிழ்ச்சியில் நாங்கள் இங்கும் அங்கும் பார்த்தபடி இருந்த போது சாமண்ணா மேலாடையை விரித்து முக்காடு இட்டுப் போர்த்துக்கொண்டார். அப்போதுதான் காற்று மிகக் குளிர்ந்து வீசுவதை நான் உணர்ந்தேன். இரண்டு மணிநேரத்திற்குள் வெப்பமான சூழ்நிலையை விட்டு, மிகக் குளிர்ச்சியான பகுதிக்கு வந்து விட்டதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் வெப்பமும் தட்பமும் வறட்சியும் வளமும் அடுத்தடுத்து விளங்குவதையும், மனிதன் விரும்பக்கூடிய இயற்கையழகுகள் எல்லாம் அமைந்து விளங்குவதையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். வெயிலே காணாத தட்ப நாடும் வெறுக்கத்தக்கது. தட்பமே இல்லாத கொதிப்பான பகுதியும் வெறுக்கத்தக்கது. எங்கும் மலையாகவும் காடாகவும் இருந்தாலும் பயன் இல்லை. கடல்வளம் முதல் மலைவளம் வரையில், சித்திரையின் வேனில் முதல் மார்கழியின் பனிவரையில், தொண்டை நாட்டின் சிறுவறட்சி முதல் நீலகிரியின் பெருவளம் வரையில் எல்லாம் கலந்து மனித வாழ்வை இனிக்கச்செய்யும் பெருமை தமிழ் நாட்டுக்கு இருப்பதை எண்ணிப் பெருமிதம் உற்றேன்.

இயற்கை அன்னை இங்கே வெறுக்கத்தக்கவளாகவும் இல்லை; சலிப்புறத் தக்கவளாகவும் இல்லை; மாதந்தோறும் மாறிவரும் சிறுவர்களின் பலவகை விளையாட்டுக்கள் போல், இடந்தோறும் பருவந்தோறும் மாறி மாறிப் பலவகையாய் நின்று மக்களை மகிழ்விக்கின்றாள். இங்கே தாங்க முடியாத கடுமையான குளிரும் இல்லை; தடுக்கமுடியாத கொடுமையான வெயிலும் இல்லை; பெருமழை பொழிந்து வெள்ளத்தால் நாட்டை அழிப்பதும் இல்லை; மழைத்துளியே இல்லாமல் வறட்சியால் பாலையாக்குவதும் இல்லை. வன்மையும் மென்மையும் குறிலும் நெடிலும் ஒத்து அமைந்து ஒலியுறுப்புகளுக்கு அளவான உழைப்புத்தந்து விளங்கும் அருமைத் தமிழ் மொழி போலவே, எங்கள் தமிழ் நாடும் தட்பமும் வெப்பமும் வறட்சியும் வளமும் எல்லாம் அளவு கடவாமல் அமைந்து மக்களின் வாழ்வுக்கு உரிய நானிலமாகத் திகழ்கிறதே என எண்ணி பெருமகிழ்வு எய்தினேன். இயற்கை இங்குதான் தாயாக இருக்கிறாள்; மக்கள் இங்குதான் இயற்கையின் குழந்தைகளாக இருக்கின்றனர்.

குறைந்த அளவு ஆடை உடுத்துத் திரியும் உரிமையும் இங்கே உள்ள மக்களுக்கு உண்டு; திறந்த வெளியில் வானத்தைப் பார்த்தவாறு படுத்து உறங்கும் இன்பமும் இங்குள்ள மக்களுக்குத்தான் உண்டு. கைக்கும் உறை வேண்டா; காலுக்கும் உறை வேண்டா. வீசும் காற்றுக்கு அஞ்சி ஒளியவேண்டா. வேண்டியபோதெல்லாம் காற்றில் திளைக்கலாம். விரும்பியபோதெல்லாம் நீரில் மூழ்கலாம். இவ்வாறு இயற்கையன்னை தன் மக்களுக்கு வேண்டியவை எல்லாம் அளித்துக் காத்துவரும் இந்த நாட்டில் மிக்க குளிர்ச்சி வேண்டும் என்று அழுகின்ற குழந்தைகளுக்காகத் தாய் தனி அன்போடு அழைத்து அளிக்கும் தட்ப இன்பம்போல் விளங்கியது அந்த நீலமலையின் குளிர்ச்சி மிக்க காற்று.

அருவங்காட்டில் இறங்கியபோது மணி இரண்டு ஆகியிருந்தது. அங்கே உபதளைக்கு வழிகேட்டுக்கொண்டு சென்றோம். என் மனம் இயற்கையழகை மறந்து கடமையில் மூழ்கியது. எப்படிச் சந்திரனைக் கண்டுபிடிப்பது, என்ன சொல்வது, எப்படி அவன் மனத்தை மாற்றுவது, சாமண்ணாவையும் ஆசிரியரையும் விட்டுச் செல்வதா, அழைத்துச் செல்வதா என்று பலவாறு எண்ணிச் சென்றேன். ஒரு மைல் தூரம் சென்ற பிறகு, வழியில் ஒருவரைப் பார்த்து உபதளை எது என்று கேட்டேன். அவர் ஒரு மலைச்சரிவையும் தோப்பையும் காட்டி அங்கே தெரிந்த ஓட்டுக் கூரைகளையும் காட்டி அந்த ஊர்தான் என்றார். இன்னும் ஒரு மைல் நடக்கவேண்டியிருக்கும் என்று எண்ணிக்கொண்டே மேலும் நடந்தோம்.

ஊர்க்கு வெளியே ஒரு தேநீர்க் கடை இருந்தது. சாந்தலிங்கம் சொன்னது இந்தக் கடையாகவே இருக்கும் என்று எண்ணி, ஆசிரியரையும் சாமண்ணாவையும் வெளியே இருக்கச் செய்து நான் மட்டும் உள்ளே நுழைந்தேன். அங்கே இருந்த இளைஞன் ஒருவனைப் பார்த்து, "இங்கே தேயிலைத் தோட்டத்தில் கணக்குப் பிள்ளையாகச் சந்திரன் என்று ஒருவன் - ஆங்கிலம் படித்தவன் - இருக்கிறானே, தெரியுமா?" என்று கேட்டேன். தெரியாது என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமலே அவன் போனான். இன்னொருவனிடம் நெருங்கி மெல்லக் கேட்டேன். "இப்படிச் சொன்னால் கண்டுபிடிக்க முடியுமா? இன்ன எஸ்டேட் என்று சொன்னால் வழி காட்டலாம். அங்கே போய்க் கேளுங்கள்" என்றான். மற்றொருவனையும் கேட்டுப் பார்த்தோம். பயன் இல்லை. "இன்னும் ஏதாவது ஒரு தேநீர்க் கடை இருக்கிறதா?" என்று வெளியே வந்து ஒருவரைக் கேட்டேன். "இருக்கிறது. தேநீர்க் கடைக்கு ஒரு குறைச்சலும் இல்லை. அதோ அரைக்கல் தொலைவில் தெரிகிறதே, அதுவும் ஒரு தேநீர்க் கடைதான்" என்று அதற்குச் செல்லும் பாதையும் காட்டினார். அவ்வழியாகச் சென்றோம்.

அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். "நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்" என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், "நீங்கள் யார்? எந்த ஊர்?", என்று என்னையே திரும்பக் கேட்டான். இவனிடம் செய்தி இருப்பதாகத் தெரிகிறது என்று எண்ணி, உண்மையைச் சொன்னேன். "சரி, உட்காருங்கள். கூட்டம் குறையட்டும். பிறகு சொல்வேன்" என்றான். மறுபடியும் அவனே என்னிடம் வந்து, "ஒருவேளை அவனே இப்போது இங்கே வந்தாலும் வரலாம். உங்களை இங்கே பார்த்தால், தப்பித்துக் கொண்டு போய்விடுவான். நீங்கள் இங்கே இருக்காமல், அதோ அங்கே அந்தப் பங்களாவின் சுற்றுச் சுவர்க்குப் பின்னே உட்கார்ந்திருங்கள். நானே அங்கே வந்து சொல்வேன்" என்றான். ஆசிரியரும் சாமண்ணாவும் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனுடைய பேச்சைக் கேட்டதும், சந்திரனைக் கண்டுபிடித்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. அவன் சொன்னவாறே அங்கேபோய் உட்கார்ந்திருந்தோம்.

ஒரு மணி நேரம் கழித்து அவன் எங்களிடத்திற்கு வந்தான். "சந்திரன் இன்றைக்கு வர நேரமாகுமாம். அந்தத் தோட்டத்திலிருந்து வந்த ஆளைக் கேட்டோம். அவன் இன்றைக்குக் குன்னூருக்குப் போயிருக்கிறானாம். போய்த் திரும்பி வரும் போது கடைக்கு வருவான். நான் அவனிடம் ஒன்றும் சொல்ல மாட்டேன். நீங்களும் நான் சொன்னதாக ஒன்றும் சொல்லக் கூடாது. இப்போது நேராக அந்தக் குடிசைக்குப் போய்ப் பின்பக்கத்தில் ஒரு ஆலமரம் இருக்கிறதே அங்கே இருங்கள். அவனைப்பற்றி அங்கே யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டா. அவன் வந்தபிறகு அந்த வீட்டில் குரல் கேட்கும். அப்போது யாராவது ஒருவர் முன்னே போய்ப் பேசுங்கள். அதற்குமேல் உங்கள் திறமைப்படி நடக்கும். வாருங்கள்; வழிகாட்டுகிறேன்" என்று வெளியே அழைத்துவந்தான்.

வெளியே வந்ததும் ஆசிரியர் அவனைப் பார்த்து, "ஊருக்கு வருவானா?" என்றார்.

"நான் எப்படிச் சொல்வது? இப்போது என்னோடு நெருங்கிப் பழகுவதில்லை. முன்போல் இருந்தால் நானே சொல்ல முடியும். இப்போது சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டான்" என்றான் அவன்.

என்னுடைய அனுபவம்போல் இருக்கிறதே என்றும், சந்திரனுடைய பழைய குணம் இன்னும் மாறவில்லை போல் இருக்கிறதே என்றும் எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

என்னை மட்டும் தனியே அழைத்துச் சென்று, அவனுடைய அப்பாவிடம் சொல்லாதீர்கள். அந்த வீட்டுக்காரி நல்லவள் அல்ல. சந்திரனை நெடுங்காலம் வைத்துக் கொண்டிருக்கமாட்டாள். வேண்டா என்ற எண்ணம் வந்தபோது, யாராவது ஒரு முரடனுக்குச் சொல்லிக் கலகம் உண்டாக்கி அடிக்கச் சொல்வாள். அப்படித்தான் தன் கணவனுக்குப் பகையாகச் சொல்லிக் கலகம் உண்டாக்கி, ஒரு கொலையும் நடக்கச் செய்து, அவனைச் சிறைக்கு அனுப்பிவிட்டாள். எனக்கு அவளிடம் அனுபவம் உண்டு. எருமைபோல் இருப்பாள். பொல்லாதவள். எப்படியாவது பொய் சொல்லியாவது சந்திரனை அழைத்துக் கொண்டு போய்விட்டால் நல்லது. இங்கே இருந்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் குடிக்கக் கற்றுக்கொண்டு அடியோடு கெட்டுப்போய் விடுவான்" என்றான்.

என் மனத்தில் ஒரு குமுறல் ஏற்பட்டது. "வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தால் என்ன செய்வது?" என்றேன்.

"அப்பாவைக் கண்ணீர்விடச் சொல்லுங்கள். அம்மா காய்ச்சலாக இருப்பதாகச் சொல்லுங்கள்."

"அம்மா இந்தக் கவலையால் இறந்துவிட்டார்."

"அய்யோ? அப்படியா? அதைச் சொன்னால் எப்படிப்பட்டவனுக்கும் மனம் மாறிவிடுமே. எதையாவது சொல்லுங்கள். ஊருக்குப்போய் மறுபடியும் திரும்பிவிடலாம் என்று சொல்லி அழைத்துச் செல்லுங்கள். பிறகு அங்கே போனால் மனம் மாறிவிடும். ஒரு கலியாணம் செய்து கட்டு ஏற்படுத்தி விடுங்கள்."

அவனுக்கு என் வயது, அல்லது இரண்டு வயது கூடுதலாக இருக்கும். இருந்தாலும் நல்ல அனுபவம் உடையவன் போல் பேசினான். துண்டு மீசையும், லுங்கி வேட்டியும் உடையவனாய்த் தேநீர்க் கடைக்குத் தகுந்த தோற்றத்தோடு இருந்தான். அப்படி இருந்தும் நல்ல மனத்தோடு பேசினானே என்று மகிழ்ந்தேன்.

சிறிது தொலைவு எங்களோடு வந்ததும், "அதோ தெரியுதே அந்த வரிசையில் கிழக்கே இருந்து மூன்றாவது வீடு. பயம் இல்லாமல் போகலாம். அவன் வந்து கொஞ்ச நேரம் ஆனபிறகு போய்ப் பாருங்கள். இதோடு நான் நிற்கிறேன்" என்று சொல்லி என்னைப் பார்த்துக் கைநீட்டினான். உடனே குறிப்புத் தெரிந்துகொண்டேன். என்ன செய்வது, வறுமையின் செய்கை என்று எண்ணிக்கொண்டே ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

"வேறு ஏதாவது உதவி வேண்டுமானால் வந்து சொல்லுங்கள். ஆனால் நான் சொன்னதாக மட்டும் தெரியக்கூடாது. தெரிந்தால் என்மேல் வருத்தப்படுவான்" என்றான்.

அவன் சொன்னபடியே அந்த வீடுகளின் பக்கமாகச் சென்று, பின்புறத்து வழியில் நடந்து, அந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். போகும்போதே அந்த வீட்டை உற்றுப் பார்த்தோம். வீடு பூட்டியிருந்தது. அங்கே யாரும் இல்லை. ஆலமரத்தின் அடியில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது, எங்களை உற்றுப் பார்த்தபடியே ஆண்களும் பெண்களுமாகச் சிலர் போனார்கள். "எந்த ஊர் அய்யா" என்று ஒருவர் கேட்டார். வெளியூர் என்றேன். குன்னூர்ச் சந்தைக்காக இன்றைக்கு வந்திருப்பார்கள்" என்று அவர்களுள் ஒருத்தி சொல்லிக் கொண்டு போனாள்.

கால்மணி நேரம் கழித்துப் பன்னிரண்டு பதின்மூன்று வயது உள்ள சிறுவன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் எங்களை நெருங்கி வந்து, "யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்றான்.

"சும்மா வந்திருக்கிறோம்" என்றார் ஆசிரியர்.

"கணக்குப்பிள்ளையப் பார்க்கவா?" என்றான் அவன்.

"கணக்குப்பிள்ளை யார்?" என்றேன்.

"அதோ அந்த மூன்றாவது வீட்டில் இருக்கிறார்" என்றான்.

அவனுக்கு வேறு ஏதாவது பேச்சுக் கொடுக்காமல் விட்டால், எங்களைப் புலன் விசாரிப்பான் என்று எண்ணி, "இன்றைக்குக் குன்னூரில் சந்தை அல்லவா? நீ போகவில்லையா?" என்றேன்.

"அம்மா அப்பா போகிறார்கள், எனக்கு என்ன வேலை?" என்றான்.

பிறகு என்ன படிக்கிறாய், வயது என்ன, எந்த ஊர், உடன் பிறந்தவர்கள் எத்தனைபேர் முதலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் எழுந்து போவதாகத் தெரியவில்லை. திடீரென்று, அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த ஒருத்தியைக் காட்டி, "அதோ அந்த அம்மா கணக்குப்பிள்ளை வீட்டில்தான் இருக்கிறாள். கேட்டால் சொல்வாள்" என்று எழுந்தான்.

இது என்ன வம்பாய்ப் போயிற்றே என்று, அவனைத் தடுத்து, "நாங்கள் அதற்காக வரவில்லை. பக்கத்து ஊருக்கு ஒருவர் போனார். அவர் வரும் வரைக்கும் இங்கே காத்திருப்போம்" என்றேன். அப்போதும் அவன் போகவில்லை.

"அப்படியா?" என்று மறுபடியும் எங்களோடு உட்கார்ந்தான்.

"அந்த அம்மா யார்?" என்றேன்.

"அவளுடைய வீட்டுக்காரன் இப்போது இங்கே இல்லை. ஒரு கொலை செய்துவிட்டுப் பத்து வருசம் சிறையில் கிடக்கின்றான்."

இதற்குமேல் அவனைப் பேசவிட்டால் தொல்லையாய்ப் போய்விடும் என்று அஞ்சினேன். ஆயினும், "யாரைக் கொலை செய்துவிட்டான்?" என்று கேட்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தபோது கவனித்தேன். கட்டான முரட்டு உடலோடு தேநீர்க் கடையில் இருந்தவன் சொன்ன பொருத்தங்களோடு இருந்ததைக் கவனித்தேன். இப்படிப் பட்டவளை நாடும் அளவிற்குச் சந்திரனுடைய மனம் கெட்டுவிட்டதே என்று வருந்தினேன்.

"அவனோடு கூடவே இருந்தான் ஒருத்தன். தோட்டத்தில் வேலை செய்து வந்தவன்தான். ஒருநாள் இரவில் குடித்துவிட்டு, இதே ஆலமரத்தடியில்தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். குடிவெறியில் அறிவு இல்லாமல் வெட்டிப் போட்டுவிட்டான்" என்றான் அந்தப் பையன்.

அவனைப் பற்றி ஏதாவது கேட்கலாம் என்று விரும்பினேன். சாமண்ணா இருப்பதால், அவருக்குக் கூடிய வரையில் உண்மை தெரியாமல் இருக்கட்டும் என்று எண்ணித் தடுத்துக் கொண்டேன்.

நல்ல காலமாக, அப்போது வேறொரு பையன் வரவே அவன் சொல்லாமலே எழுந்துபோய் அவனோடு சேர்ந்து அவனுடைய தோள்மேல் கை போட்டுக்கொண்டு நகர்ந்தான்.

எனக்குப் பசி எடுத்தது. ஆசிரியரிடம் சொன்னேன். தேநீர்க் கடைக்காவது போய் ஏதாவது சாப்பிட்டு வரலாமா என்று கேட்டேன். "இப்போது ஒன்றும் வேண்டா. வந்த வேலையை முடித்துக்கொண்டு போனால் போதும்" என்றார் சாமண்ணா. ஆசிரியர் தம் பையிலிருந்த பிஸ்கட் சுருள் ஒன்றைப் பிரித்தார். அதனால் சிறிது பசி ஆறினேன்.

விளக்கு வைக்கும் நேரம் ஆயிற்று. சந்தைக்குப் போன மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். எங்கள் பார்வை அவர்களிடையே ஊடுருவிச் சென்று தேடியது. அதற்குள் கொலைகாரனுடைய மனைவி எங்கள் பக்கமாக ஒற்றையடிப் பாதையில் நடந்து எங்களைக் கடந்து நேராகச் சென்றாள். அவளுடைய முகத்தை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவளுடைய பண்புகள் எப்படி இருந்த போதிலும், அடர்ந்த புருவங்களிலும் அகன்ற கூரிய விழிகளிலும் ஒரு தனி அழகு இருக்கக் கண்டேன். கொடியவர்கள், பொல்லாதவர்கள் என்று பழிக்கப்படுவோரும் இருபத்து நான்கு மணி நேரமும் கொடுமையோடு இருப்பதில்லை; இருக்க முடியாது என்பது மனித இயற்கை. அவர்களின் உள்ளத்திலும் ஈரம் உண்டு; குழைவு உண்டு. அப்படிக் குழைந்த நெஞ்சோடு அவள் பழகிய நேரத்தில் சந்திரன் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பான் என்று எண்ணினேன்.

அவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தபோது அவள் மறுபடியும் அந்தப் பக்கம் வந்தாள். அப்போது அவளுடன் ஒரு சிறு பெண்ணும் வந்தாள். "என் கண் அல்லவா? போய் வா அம்மா, மாமா சந்தையிலிருந்து வந்ததும் உனக்கு முறுக்கும் பொரிகடலையும் தருவேன், போய் நான் சொன்னேன் என்று வாங்கி வா, பொழுது போய்விட்டது சீக்கிரம் வா" என்று அந்தப் பெண்ணை வேண்டிக் கொண்டே சென்றாள். நான் எதிர்பார்த்த குழைவும் இனிமையும் நயமும் அவளுடைய அந்தப் பேச்சில் இருந்ததைக் கண்டேன். சந்திரன் பிடிவாதம் செய்தால் அவன் அவளைத் தன்னோடு அழைத்துக்கொண்டே ஊருக்கு வந்து விட்டாலும் நல்லது தான் என்று என் மனம் எண்ணியது.

அவள் சென்றவுடன், நான் மெல்ல எழுந்து தொலைவில் ஒரு பக்கமாக நின்று, நடப்பது என்ன என்று பார்த்தேன். அந்த மூன்றாம் வீட்டைத் திறந்து ஒரு பையும் காசும் கொடுத்து அந்தப் பெண்ணைக் கடைக்கு அனுப்பியதைக் கண்டேன். அப்போது பக்கத்து வீட்டுக்காரப் பெண்கள் சந்தையிலிருந்து வந்துவிடவே, அவர்களோடு பேசிக்கொண்டு கலகலப்பாக இருந்தாள்.

"அதோ கணக்குப்பிள்ளை வருவதுபோல் தெரியுதே", "இன்றைக்குப் பொழுதோடு வந்துவிட்டாற் போல் தெரியுதே", "தாயம்மாவுக்கு இன்றைக்குப் பலம்தான். பொட்டலம் நிறைய வரும்" என்று இப்படிச் சில குரல்கள் அந்தப் பெண்களிடையே கேட்டதும், நான் உணர்ந்து பின்வாங்கி ஆலமரத்தடிக்குப் போய் விட்டேன்.

"அதோ சந்திரன் போல் இருக்கிறதே" என்றார் ஆசிரியர்.

உடனே சாமண்ணா எழுந்து நின்றார். அவருடைய கைகளும் உதடுகளும் துடித்தன. "பேசாமல் இருங்கள். மூச்சு விடாதீர்கள். கூப்பிடக்கூடாது. காரியம் கெட்டுப் போகும்" என்று அமைதிப் படுத்தினேன். "கடவுளே கடவுளே" என்று வாயோடு சொல்லிக்கொண்டார். நாங்கள் சந்திரனுடைய கண்ணில் படாதபடி மரத்தின் அந்தப் பக்கமாக ஒதுங்கி நின்றோம்.

சந்திரனுடைய நடை நன்றாகத் தெரிந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்னென்ன மாறுதல்கள் நேர்ந்தாலும் ஒருவருடைய நடைமட்டும் அப்படியே இருக்கிறது. அவனுக்குப் பின் இரண்டு பேர் மூட்டைகளுடன் நடந்து வந்தார்கள். அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு பை நிறையப் பொருள்கள் இருந்தன. சாமண்ணா எப்படியோ அவற்றைக் கவனித்துவிட்டார். "தெய்வமே இவனுக்கு ஏன் இந்தத் தலைவிதி! இவன் இட்ட வேலையைச் செய்ய ஆட்கள் காத்திருக்கிறார்களே! வேலைக்காரன் போல் இரண்டு கைகளிலும் எடுத்துச் சுமந்து வருகிறானே!" என்று வருந்தினார்.

சந்திரனும் பின்வந்த ஆட்களும் வீடுகளை நெருங்கிய பிறகு நான் மெல்ல நகர்ந்து தெருப்பக்கமாகத் தொலைவில் நின்று பார்த்தேன். அந்தப் பைகளை அவள் கை நீட்டி வாங்கியது தெரிந்தது. அவன் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே விளக்கு எரிந்தது. அணுகிச் சென்றேன். அவனுடைய குரல் நன்றாகக் கேட்டது. குரலில் ஒன்றும் மாறுதல் இல்லை. பதினைந்து மாதங்களில் மாறுதல் ஏற்பட்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். அவனும் அவளும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் நுழைந்தாள். முன்பார்த்த அந்தப் பெண்தான் என்று உணர்ந்தேன். அந்தப் பெண்ணின் கையில் இருந்த பையைத் தாயம்மா பெற்றுக்கொண்டு அவளுடைய கன்னத்தைத் தடவிக் கூந்தலை நீவுவதைக் கண்டேன்.

பெண்ணின் கையில் ஏதோ கொடுத்ததும் தெரிந்தது. பிறகு அவள் எதையோ எடுத்துக் கடித்துத் தின்றதைக் கண்டேன். இருள் விரைவாகப் பரவியது. எனக்கு பின் யாரோ வரும் குரல் கேட்டது. நான் அங்கே வேவு பார்ப்பது தெரியாதபடி ஒரு பக்கமாகத் திரும்பி நடந்து அவர்கள் போன பிறகு மறுபடியும் அங்கு வந்தேன். "யார் அது" என்ற குரல் கேட்டு நின்றேன். சந்திரனுடைய குரல் போலவே இருக்கவே, திகைத்துப் பார்த்தேன். மறுபடியும் "யார் அது" என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வரக் கண்டேன். அவனே வருவதை அறிந்தேன். திடுக்கிட்டு "நான் தான்" என்றேன். "நான்தான் என்றால் யார்?" என்றான். "வேலு" என்றேன். வந்தவன் திடுக்கிட்டுத் தூண்போல் நின்றான். "வேலுவா? நீயா? இங்கே ஏன் வந்தாய்?" என்று அசையாமல் நின்றான். நான் தயங்காமல் நெருங்கிச் சென்று அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு, "சந்திரா! மறந்துவிட்டாயே" என்றேன். என் கைகளில் நீர்த்துளி இரண்டு விழுந்தன. அவன் அழுவது தெரிந்தது. "உன் அம்மா இறந்துவிட்டார்" என்றேன். ஓ என்று கதறத் தொடங்கி, உடனே அடக்கிக் கொண்டு, வீட்டை விட்டு விலகி வந்தான். விம்மினான். குமுறினான்.

"சந்திரா!" என்றேன்.

"அம்மா இல்லையா? போய்விட்டார்களா? அய்யோ! அம்மா நினைவு அடிக்கடி வந்ததே! நான் பார்க்கவே முடியாதா?" என்று விம்மி அழுதான்.

அப்பா வந்திருக்கிறார் என்று சொல்ல வாயெடுத்து, உடனே அடக்கிக் கொண்டேன்.

"எப்போது இறந்து போனார்கள்?" என்றான்.

"ஒரு மாதம் ஆச்சு."

"அய்யோ! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே" என்று கலங்கினான். சிறிது நேரத்தில் முற்றிலும் மாறியவனாய், "நீ ஏன் இங்கே வந்தாய்! உனக்கு எப்படித் தெரியும்" உன்னோடு யாராவது வந்திருக்கிறார்களா?" என்று படபடப்பாகக் கேட்டான்.

"பொறு. சொல்கிறேன். அவசரப்படாதே. அவசரப்பட்டது போதும். உன்னுடைய நன்மைக்காகவே உன்னைத் தேடிக்கொண்டு வந்தேன். நீ இப்படிக் கல்மனத்தோடு பிரிந்து வந்துவிட்டாயே" என்றேன்.

"அதெல்லாம் இருக்கட்டும். யார் வந்திருக்கிறார்கள் சொல். எங்கே இருக்கிறார்கள் சொல்" என்றான்.

என்னால் எதையும் மறைக்க முடியவில்லை. உண்மையைச் சொன்னேன். "அய்யோ" என்று தலைமேல் கை வைத்துக் கொண்டு அந்த இடத்திலேயே மண்ணில் உட்கார்ந்தான்.

நானும் உட்கார்ந்தேன். "ஒன்றும் கவலைப்படாதே. ஆசிரியர் உனக்கு ஆகாதவரா? அப்பா பகையா? ஏன் இப்படிக் கலங்குகிறாய்? கவலை வேண்டா. சொன்னால் கேள்" என்றேன்.


அதற்குள், "என்னாங்க, என்னாங்க! எங்கே போய்விட்டாரோ, தெரியவில்லையே! இப்படித்தான் சொல்லாமலே எங்கேயாவது போய்விடுவார்" என்று தாயம்மாவின் குரல் கேட்டது. இருள் பரவியதால் நாங்கள் நின்றது தெரியவில்லை. பக்கத்து வீட்டு, அம்மா, "யார்? அவரா?" என்றாள். "ஆமாம். கணக்குப்பிள்ளைதான் வந்தார். மாயமாய் மறைந்துவிட்டார். என்ன அவசரமோ, தெரியவில்லை" என்று தாயம்மா எங்கள் பக்கமாகப் பார்த்தாள்.

சந்திரன் என் கையைப் பற்றிக்கொண்டு ஒரு மரத்தின் பக்கமாகச் சென்றான். அவனுடைய கருத்தை நான் உணர்ந்து கொண்டேன். எனக்கு ஒன்றும் செய்தி தெரியாது என்று அவன் எண்ணிக்கொண்டான். நானும் அவள் யார் என்று தெரியாதது போல் இருந்தேன்.

"நான் இந்த வீட்டில்தான் தங்கிச் சாப்பிடுகிறேன். தெரிந்தவன் ஒருவன் வீடு. அவன் இந்தத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறான். இங்கே உங்களுக்கு இடம் இல்லை. அப்பாவையும் ஆசிரியரையும் நீயே போய் அழைத்துக் கொண்டு வா. ஒரு தேநீர்க்கடை தெரிந்த கடை இருக்கிறது. அங்கே போய்ப் பேசுவோம். அதற்குள் நானும் அந்த வீட்டாரிடம் சொல்லிவிட்டு வருவேன்" என்றான்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனை விட்டுச் சென்றால், எங்காவது ஓடிவிடுவானோ என்று அஞ்சினேன். எப்படி நம்புவது? கேட்கவும் முடியவில்லை. தயங்கித் தயங்கி நின்றேன்.

"இங்கே உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியக்கூடாது. தெரிந்தால் வீணாக ஆரவாரமாய்ப் போய்விடும் அதற்காகச் சொல்கிறேன்."

இரண்டு அடி எடுத்து வைத்து மறுபடியும் நின்றேன்.

"எங்காவது ஓடிவிடுவேன் என்று எண்ணுகிறாயா? இங்கேயே இருப்பேன். போய் அழைத்து வந்துவிடு. என் மானத்தைக் காப்பாற்று, வேலு" என்றான்.

அவனுடைய குரல் நம்பலாம் போல் இருந்தது. நான் ஆலமரத்தை நோக்கி நடந்தேன். அங்கே வேறு யாரோ அவர்களோடு பேசிக்கொண்டிருந்தது கேட்டது. நான் நெருங்கியதும், பார்த்தாயா! இதோ வந்துவிட்டார். இவருக்காகத்தான் இங்கே காத்திருந்தோம்; போகிறோம்" என்று சொல்லி, ஆசிரியர் அந்தப் புதியவரை அனுப்பினார். அந்த ஆள் என்னை உற்றுப் பார்த்து நகர்ந்தார்.

அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த மரத்துப் பக்கம் சென்றேன். அங்கே சந்திரன் இல்லை. என் மனம் திடுக்கிட்டது. வீட்டிற்குச் சென்றானோ என்று அங்கே பார்த்தேன். அவன் வீட்டிலிருந்து வெளியே வந்தது கண்டேன். அவள் பின்தொடர்ந்து வந்து நின்றதும், கண்டேன். மனம் தேறியது. ஏதோ அவசர வேலை என்று பொய் சொல்லிவிட்டு வருகிறான் என்று தெரிந்து கொண்டேன். எங்களை நெருங்கி வந்ததும், மேல்துண்டால் வாயைப்பொத்திக் கொண்டு விம்மினான். "சந்திரா! சந்திரா!" என்று சாமண்ணாவும் விம்மினார். ஆசிரியர் அவனுடைய இடக்கையைப் பற்றிக் கொண்டு தேற்றினார். சந்திரன் ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான். நானும் சாமண்ணாவும் பின்னே வர ஆசிரியர் அவனுடன் நடந்தார். வழியில் அவன் விம்மி அழுதானே தவிர, வாய் திறந்து பேசவில்லை. எதிரில் யாரேனும் வந்தபோதெல்லாம், அந்த விம்மலையும் அடக்கிக்கொண்டு நடந்தான்.

பழைய தேநீர்க் கடைக்குத்தான் எங்களை அழைத்துச் சென்றான். விளக்கொளியில் பார்த்தபோது அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. "இங்கே இருங்கள். இதோ வருகிறேன்" என்று சொல்லி உள்ளே நுழைந்தான். எங்களுக்கு வழிகாட்டிய அந்த இளைஞனிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் எங்களை நோக்கி வந்தார்கள். "இவர்களுக்கு எங்காவது இடம் கொடு. இரவு உன்னோடு இருக்கட்டும். ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சாப்பிட்டு வருவோம். நீ எங்கேயாவது போய் விடாதே. இங்கேயே இரு. வந்துவிடுவேன்" என்று அவனிடம் சொல்லிவிட்டு, வேறோர் இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றான். அங்கே மட்டமான உணவு கிடைத்தது. வேறுவழி இல்லை என்று மூவரும் உண்டோம். அங்கிருந்து தேநீர்க் கடையை நோக்கி வந்தபோது, ஆசிரியர் சந்திரனைப் பார்த்து, "நாளைக்கு ஊருக்குப் போகலாம் வா" என்றார்.

"இனிமேல் நான் ஏன் வரணும்? அம்மாவும் இல்லையே" என்றான் அவன்.

சாமண்ணா கனிவான குரலில், "சந்திரா! என்னையும் சாகடிக்காதே. பேசாமல் புறப்பட்டு வாப்பா. அத்தை உன் ஏக்கமாகவே இருக்கிறாள். உன் தங்கை இருக்கிறாள். இப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டு வந்தாயே. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? உன்னை ஏதாவது கண்டித்தோமா? வெறுத்து ஒரு சொல் சொன்னோமா? ஊரில் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை அப்பா. இங்கே ஏன் இப்படித் திக்கற்றவன் போல் திரியணும்?" என்றார்.

சந்திரன் மறுமொழி கூறவில்லை.

சாமண்ணாவையும் ஆசிரியரையும் முன்னே போகச் செய்துவிட்டு, நான் சந்திரனோடு தனியே பேச முயன்றேன். எவ்வளவு முயன்றாலும் சந்திரனுக்கு அறிவுரை கூறுவதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. உண்மையாகவே எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது என்பதை அப்போது உணர்ந்தேன். அன்று சந்திரன் என்னைப் புறக்கணிக்கவில்லை. இகழ்ந்து நடக்கவில்லை. ஆனாலும், அவனோடு ஒத்த மனப்பான்மையோடு நட்புரிமையோடு அறிவுரை கூற என்னால் முடியவில்லை. என்ன என்னவோ எண்ணிக் கொண்டு வந்தேன். எண்ணியதை எல்லாம் விட்டு, "நாளைக்கே புறப்பட்டுப்போகலாம். அப்பா மிகவும் நொந்து போயிருக்கிறார்?" என்றேன்.

"இனிமேல் அங்கே வந்து வாழ்க்கை நடத்த எனக்கு மனமே இல்லை" என்றான்.

"உனக்கு யாராவது தீங்கு செய்தார்களா? யாராவது பகையா? உன்னை அன்போடு வரவேற்க எல்லாரும் காத்திருக்கும் இடத்துக்கு வந்தால் என்ன?"

"நான் செய்த குற்றம் தான்."

"குற்றம் செய்வது இயற்கை. திருந்துவதில் தவறு என்ன? என்னைவிட நீ எவ்வளவு வல்லவன்! உன் வாழ்க்கை நல்லபடி இருக்கும் புறப்பட்டு வா."

"நாளைக்குச் சொல்வேன்."

"அப்படி ஒத்தி வைக்காதே. உன் கணக்கு முதலியவைகளை எல்லாம் காலையில் ஒப்படைத்துவிட்டுப் புறப்படு"

"அய்யோ! நான் வேலையைவிட்டு ஊர்க்கு வருவது தெரிந்தால் இங்கே ஒரே ஆரவாரம் ஆகிவிடும்."

இவ்வளவும் அவன் வழியைப் பார்த்தோ, வானத்தைப் பார்த்தோ சொன்னானே தவிர, என்னுடைய முகத்தைப் பார்த்துச் சொல்லவில்லை. தப்பித் தவறி அவன் என் முகத்தைப் பார்த்தால் அப்போது என்னால் நேராகப் பார்க்க முடியவில்லை. நான் பார்வையை மாற்றிக்கொண்டேன். ஏதோ ஒன்று எங்கள் இருவருடைய உள்ளங்களுக்கும் இடையே குறுக்கே இருந்ததை உணர்ந்தேன்.

"அப்படியானால் ஒன்று செய். அவசரமாக ஊருக்குப் போய் வரவேண்டும் என்று மூன்று நான்கு நாள் விடுமுறை கேட்டுப் புறப்படு. அங்கே வந்த பிறகு கடிதம் எழுதிப் போட்டு நின்று விடலாம்."

"பார்க்கலாம்."

அதை அவன் சொன்னபோது, பழைய புறக்கணிப்பின் தன்மை இருந்தது. அதற்குமேல் என்னால் பேச முடியவில்லை.

தேநீர்க்கடையும் வந்துவிட்டது. அந்த இளைஞன் எதிரே இருந்தான். "நீங்கள் இங்கே இருங்கள். நான் அந்த வீட்டு வரைக்கும் போய் வந்துவிடுவேன்" என்று என்னைப் பார்க்காமல் நகர்ந்தான். நானும் வாய் திறக்கவில்லை. ஆசிரியரும் பேசாமல் இருந்தார். சாமண்ணா மட்டும் "சந்திரா!" என்றார். "காலையில் வருவேன் அப்பா" என்று திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

அதே நேரத்தில் அவனுடைய நெஞ்சில் ஒருவகை முரட்டுத் தன்மை இருந்தது என்பதை அவனுடைய சொல்லாலும் பார்வையாலும் உணர்ந்தேன். மேலும் வற்புறுத்தி ஏதாவது சொன்னால் பயன்படாமல் போகும் என்று பேசாமல் இருந்தேன். அந்தக் கடைக்கார இளைஞனும், "அதுதான் சரி, மெல்லத்தான் திருப்பணும்" என்றான்.

அன்று இரவெல்லாம் சாமண்ணாவின் மனக்கலக்கத்திற்கு மருந்து கொடுப்பதே பெருந்துன்பமாக இருந்தது. "பையனைத் தனியாக விட்டுவிட்டோம். உயிருக்கு ஏதாவது தேடிக்கொண்டால் என் கதி என்ன?" என்று எழுந்து எழுந்து அலறினார். ஒரு பக்கம் நீலகிரியின் குளிர் எங்களை வாட்டியது. மற்றொரு பக்கம் அவருடைய துயரம் வாட்டியது. கடைக்கார இளைஞன் சிறிது நேரம் எங்களோடு விழித்திருந்து பிறகு தன்னை மறந்து குறட்டை விட்டுத் தூங்கினான்.

விடியற் காலையில் அவன் விழித்துக் கொண்டதும் என்னிடம் நம்பிக்கையோடு சொன்னான். "அவர் ஒரு மாதிரியானவர். பொழுது விடியட்டும் பாருங்கள். அவரே வந்து புறப்படுங்கள் என்று சொன்னாலும் சொல்வார்" என்றான்.

"நீ கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்றேன்.

"அய்யோ! சொல்லக்கூடாது. முன் கோபக்காரர். பேசாமல் இருந்து விடுவது நல்லது. நான்தான் முதலிலேயே சொன்னேனே. நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியதே தெரியக்கூடாது" என்றான்.

திக்கு இல்லாமல் வந்து சேர்ந்த வெளியூரிலும் சந்திரன் இப்படி மற்றவர்களை அடக்கி வைத்திருக்கிறானே? ஒத்த உரிமை கொடுத்துப் பழகாமல் இப்படி உயர்வு மனப்பான்மையோடு முன் கோபத்தோடு பழகுவதாலேயே இவன் இடறி இடறிக் கெடுகிறான் என்று எனக்குத் தோன்றியது. ஒத்த உரிமையோடு பழகினால்தான் மற்றவர்கள் நெருங்கி வந்து அறிவுரை கூறமுடியும். திருத்த முடியும். மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று அறிவுச் செருக்கோடு நடந்தால் வழுக்கி விழும்போதும் துணை இல்லாமல் விழுந்து துன்புற வேண்டியிருக்கிறது. சந்திரன் கூர்மையான அறிவு படைத்திருந்தும் இதைத் தெரிந்து கொள்ளவில்லையே. தன் ஊரில் - கிராமத்தில் பெரிய வீட்டுப் பிள்ளையாய் எல்லோரும் ஏவல் செய்து பணியும் பெருமையோடு வளர்ந்தது காரணமாக இருக்குமா? அல்லது புத்தகப் படிப்பாக இருந்தாலும் நாடக நடிப்பாக இருந்தாலும் எதிலும் மற்றவர்கள் போட்டியிட்டு நெருங்க முடியாத அளவுக்குத் தனிச் சிறப்போடு உயர்ந்து நிற்கக்கூடிய அறிவின் திறமையால் ஏற்பட்ட தன்னம்பிக்கை காரணமாக இருக்குமா என்று எண்ணிக்கொண்டே பொழுது விடியும் நேரத்தில் உறங்கி விட்டேன்.

விழித்தபோது, அந்த இளைஞன் அங்கே இல்லை. தேநீரும் சிறு சிற்றுண்டியும் செய்து கொண்டிருந்தான். ஆசிரியரும் சாமண்ணாவும் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு, சந்திரன் வருவான் வருவான் என்று ஆவலுடன் அந்த வழியையே நோக்கிக் கொண்டிருந்தோம். மணி எட்டும் ஆயிற்று. ஒன்பதும் ஆயிற்று. அவன் வரவில்லை. சாமண்ணாவின் மனத்தில் இருந்த ஏமாற்றமும் திகைப்பும் எங்கள் மனத்திலும் புகுந்தன. கடைக்கார இளைஞனும் வருந்தினான். ஆனாலும் நம்பிக்கை ஊட்டிக்கொண்டே இருந்தான்.

சரியாக ஒன்பதரை மணிக்குச் சந்திரன் வெறுங்கையோடு வந்து சேர்ந்தான். கையில் ஏன் ஒன்றும் எடுத்து வரவில்லை என்று எண்ணினோமே தவிர, ஒருவரும் கேட்கவில்லை. அவன் வந்ததே போதும் என்று மகிழ்ச்சியோடு நோக்கினோம். கடைக்கார இளைஞனை அழைத்தான். அவன் கையில் இரண்டு ரூபாய் கொடுத்து, "தபால் எழுதுவேன்" என்று சொல்லிவிட்டு, ஆசிரியரைப் பார்த்து "வாங்க போகலாம்" என்றான். சாமண்ணாவின் முகத்தில் அப்போதுதான் மலர்ச்சி காணப்பட்டது. கடைக்கார இளைஞன் என்பின் வந்து, என் காதில் மட்டும் விழும்படியாக, "அப்படியே எனக்கும் ஒரு வேலை பார்த்து எழுதினால் நானும் அங்கே வந்துவிடுவேன்" என்றான். அவனுக்கு நம்பிக்கையாகச் சொல்லித் தலையசைத்துவிட்டு நகர்ந்தேன். ரயில் நிலையத்துக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வண்டி வந்தது. அதில் ஏறினோம்.

பயணத்தின்போது உணவு, சிற்றுண்டி, காப்பி இவற்றிற்காகப் பேசியது தவிர, வேறு எந்தப் பேச்சும் பேசவில்லை. நான்குபேரும் பேசா நோன்பு பூண்டவர்கள் போலவே வந்தோம். சந்திரனுடைய முகத்தை அடிக்கடி கவனித்தேன். அதில் தயக்கமோ தடுமாற்றமோ கலக்கமோ ஒன்றும் காணோம். கல்லூரி விடுதியைவிட்டு ஒருநாள் எப்படித் துணிந்து மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வந்து விட்டானோ, அப்படியே நீலகிரியை விட்டுத் துணிந்து தேயிலைத் தோட்டத்து உறவைப் பற்றிக் கவலைப்படாமல் வந்துவிட்டான். அவன் நிலையில் நான் இருந்திருந்தால் எவ்வளவோ வருந்தியிருப்பேன். அந்தத் தாயம்மாவுக்காகவும் கண்ணீர் விட்டிருப்பேன். அவனிடம் வருத்தமோ ஏக்கமோ சிறிதும் காணப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_18&oldid=7898" இலிருந்து மீள்விக்கப்பட்டது