அகல் விளக்கு/அத்தியாயம் 2

சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி - சந்திரனுடைய சிற்றப்பா - தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார்.

வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு மற்ற நாட்களைத் தம் கிராமத்தில் சலிப்போடு கழிப்பார். அப்போதும் நிலம் எப்படி தோப்பு எப்படி என்று கவனிக்காமல், ஓர் ஆலமரத்தடியில் தம் தோழர்களோடு புலிக்கோடு ஆடிக் கொண்டிருப்பார்; புலிக்கோடு மாறிச் சீட்டாட்டம் வந்தபோது, அவர் கையில் சிகரெட்டும் வந்து சேர்ந்தது. சாராயத்தோடு மேனாட்டுக் குடிவகைகளும் வந்து சேர்ந்தன. சந்திரனுடைய சின்னம்மா நல்லவர் ; நல்லவராக இருந்து பயன் என்ன? பெண் என்றால் கணவன் சொன்னதைக் கேட்டு வாய் திறக்காமல் பணிந்து நடக்க வேண்டுமே தவிர, கணவன் சீரழியும் நிலையிலும் அன்பான இடித்துரையும் சொல்லக்கூடாது; தன் உரிமையை நிலைநாட்டித் தற்காப்பு முயற்சியும் செய்யக்கூடாது. உரிமையே இல்லாத பெண் கணவன் கெடும்போது தானும் சேர்ந்து கெடுவது தவிர, வேறு வழி இல்லாதவளாக இருக்கிறாள்.

சந்திரனுடைய சின்னம்மா அப்படித்தான் குடும்பம் கெடுவதைப் பார்த்து, உள்ளம் நொந்து கொண்டிருந்தார். நீந்தத் தெரிந்தும், கைகால்களை மடக்கிக் கொண்டு கிணற்றில் மூழ்குவது போல் இருந்தது அவருடைய நிலைமை. கடைசியில் சிற்றப்பாவின் நிலங்கள் ஏலத்துக்கு வந்தபோது, சந்திரனுடைய தகப்பனாரே ஏலத்தில் எடுத்துக் கடன்காரனை அனுப்பிவிட்ட பிறகு தம்பியின் குடும்பத்துக்கென்று ஐந்து காணி நன்செய் நிலங்களை ஒதுக்கிவிட்டு, மற்றவற்றைத் தம் சொத்து ஆக்கிக் கொண்டார். அந்த ஐந்து காணி நிலங்களையும் தம்பியின் பொறுப்பில் விடாமல், தம்பி பெயரில் வைக்காமல், தம்பி மக்கள் இருவர்க்கும் பொதுவாக எழுதி வைத்தார். தம் பொறுப்பில் பயிரிட்டு விளைந்ததை அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தார். அந்தச் செயலைப் பெருந்தன்மையானது என்று ஊரார் போற்றினார்கள். தம்பி மனைவியோ, அந்த உதவிக்காகத் தம் மூத்தவரைத் தெய்வம் போல் போற்றி அவர் கொடுத்ததைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

தம்பி கெட்டுப் போனதற்குக் காரணம் நகரத்துப் பழக்கமே என்பது சாமண்ணாவின் உறுதியான எண்ணம். அந்த எண்ணம் சந்திரனுடைய படிப்புக்கே இடையூறாக நிற்கும் போல் இருந்தது. அந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பதற்கே பள்ளிக்கூடம் இருந்தது. சந்திரன் எட்டாவது படித்த ஆண்டில், வீட்டுக்கு வந்தவர்கள் பலர், அவனுடைய தந்தைக்கு மேற்படிப்பைப் பற்றி வற்புறுத்தினார்கள். "இந்தப் படிப்பே போதும், நமக்கு இந்தக் கிராமத்தில் வேண்டியது என்ன?

கடிதம் எழுதவும் செய்தித்தாள் படிக்கவும் வரவு செலவுக் கணக்குப் போடவும் தெரிந்தால் போதும். பையன் எட்டாவது படித்து முடித்தால் அதுவே போதும், நல்ல அறிவோடு இருந்தால், இருக்கும் சொத்தை வைத்துக்கொண்டே சீமானாக வாழலாம். நான் நாலாவது வரையில்தான் படித்தேன். அந்தப் படிப்பை வைத்துக் கொண்டே நான் இந்தக் கிராமத்திலும் பக்கத்து ஊர்களிலும் நல்ல மதிப்போடு வாழவில்லையா? இந்தப் படிப்புப் போதும்" என்று அவர் மறுமொழி கூறுவார். அவர்களோ, காலம் மாறிவிட்டது என்பதை வற்புறுத்தி, பக்கத்து நகரத்துக்கு அனுப்பிப் பத்தாவது வரையில் படிக்க வைக்க வேண்டும் என்றும், இந்தக் காலத்தில் அதற்குக் குறைவாகப் படித்த படிப்புக்கு மதிப்பு இல்லை என்றும் சொல்லி வற்புறுத்தினார்கள். நகரம் என்று சொல்லக் கேட்டதும், அவர்க்குத் தம் தம்பியின் சீர்கேடு நினைவுக்கு வரும். உடனே அவர்களைப் பார்த்து, "நீங்கள் சொல்கிறீர்கள், நானும் பார்த்திருக்கிறேன், பட்டணத்துப் பக்கம் போனால் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் திரும்புவதில்லை. அங்கே போய்ச் சில நாள் தங்கி வந்தால் போதும், சினிமா, ஓட்டல், கச்சேரி, ஆட்டக்காரிகள், குதிரைப் பந்தயம் இப்படிப் படிப்படியாகக் கெட்டுப்போய்க் கடைசியில் ஓட்டாண்டியாவதற்கு வழி தேடிக்கொள்கிறார்கள். அந்தப் பட்டணத்து வாழ்வும் வேண்டா; அதனால் வரும் படிப்பும் வேண்டா" என்று மறுத்துவிடுவார். அகல் விளக்கு

அந்தக் கிராமத்துக்கு ஆபீசர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; கிராமத்தார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், "அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா?" என்பார்கள். "நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா? கடலுக்குப் போனாலும் அந்தப் பெரிய அலைகளில் நீந்திப் பிழைக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாய் முடியும்" என்று சாமண்ணா ஒரே அடியாய் மறுத்துவிடுவார்.

இந்த உறுதி நெடுங்காலம் நிலைக்கவில்லை. ஆண்டு முடிவில் எட்டாவது தேர்வு நடத்துவதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவர் மாணவர்களின் திறமையை ஆராய்ந்தறிவதில் மிக வல்லவர். எட்டாவது வகுப்பு மாணவர்களில் சந்திரன் மிகத் திறமையாக விடைகள் எழுதியதைக் கண்டு வியந்தார் ; சிறப்பாகக் கணக்குத் தேர்வில் சந்திரன் ஒன்றுவிடாமல் போட்டு முடித்து நூற்றுக்கு நூறு எண்கள் வாங்கும் வகையில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்தார். அன்று மாலையில், பள்ளிக்கூடத் தலைமையாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரனைப் பற்றியும் அவனுடைய மேற்படிப்பைப் பற்றியும் கேட்டார்.

ஆண்டுதோறும் இப்படிச் சில பிள்ளைகள் தேர்ச்சி பெற்று வெளியூருக்கும் சென்று மேற்படிப்புப் படித்து உயர்ந்தால்தான் ஒரு கிராமம் முன்னுக்கு வரமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. அதன்படியே அவர் தணிக்கைக்குச் சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் அவருடைய அறிவுரையைக் கேட்டுச் சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மேற்படிப்புப் படிக்கவைத்து மகிழ்ந்தார்கள். இந்த ஆண்டில் சந்திரனைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட அவர், அவனுடைய மேற்படிப்பைப் பற்றித் தலைமையாசிரியரிடம் கேட்டார். தலைமையாசிரியர் சாமண்ணாவின் மனநிலையைப் பற்றியும் உறுதியைப் பற்றியும் சொன்னார். இன்ஸ்பெக்டர் வியந்தார் ; "கிராமத்தில் பொதுவாக இவ்வளவு அறிவு நுட்பம் வாய்ந்த பிள்ளைகளைக் காண்பதே அரிது. இந்தப் பிள்ளையின் கல்வியைப் பாழாக்குவதா! அது என்ன பிடிவாதம் ! போகலாம் வாருங்கள். நான் போய் அவனுடைய தந்தையிடம் பேசுவேன்" என்று சொல்லி எழுந்தார்.

சந்திரனுடைய தந்தையாரைக் கண்டதும், "உங்கள் குடும்ப நன்மைக்காக வந்திருக்கிறேன். தவறாக எண்ணக்கூடாது. நான் சொல்வதைப் பொறுமையாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு வாரம் இரண்டு வாரம் கழித்து முடிவுக்கு வரலாம்" என்று அடிப்படையிட்டுப் பேசத் தொடங்கினார். தம் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

சாமண்ணா பொறுமையோடு கேட்டிருந்து, முடிவில் பழையபடி தம் தத்துவத்தை விளங்கினார். இன்ஸ்பெக்டர் சிரித்தார். "கலைமகள் வலிய உங்கள் வீட்டைத் தேடிக்கொண்டு வருகிறாள். நீங்கள் திரும்பிப் போகுமாறு சொல்லி வழியடைக்கிறீர்கள். உங்களுக்குத்தான் இந்த ஊரில் எல்லோரையும்விட நிலபுலம் மிகுதி என்று கேள்வி. நீங்களே இப்படிச் சொல்லிப் பயந்தால்..." என்று நிறுத்தினார்.

"இந்தக் காலத்தில் எப்படி அய்யா நம்புவது? நம் குடும்பத்தில் நம் வசமாக இருக்கும் வரையில்தான் நம்முடைய பிள்ளை. வெளியே போனால் அப்புறம் சொல்ல முடியாது" என்று சாமண்ணா கொஞ்சம் நெகிழ்ந்தாற்போல் பேசினார்.

அவருடைய பேச்சின் நெகிழ்ச்சியைக் கவனித்த இன்ஸ்பெக்டர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, "நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பையன் ஒருகாலும் அப்படிக் கெட்டுப் போகமாட்டான். படிப்பு வராத மக்குப் பிள்ளைகள்தான் அப்படிக் கெட்டுப் போவது வழக்கம். உங்கள் பையன் சந்திரன் ஒருநாளும் அப்படிக் கெட்டுப்போக மாட்டான், உறுதியாய்ச் சொல்லுகிறேன். ஆடு மேய்க்கிறவனுக்குத் தான் ஆட்டைப் பற்றித் தெரியும். ஊர் ஊராய்ப் போய்ப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் திறமையைப் பார்க்கிறவன் நான்.

உங்கள் பிள்ளையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தான் தெரியும். இந்த ஆண்டில் எத்தனையோ பள்ளிக்கூடங்களைப் பார்த்திருக்கிறேன் ; எத்தனையோ பிள்ளைகளைப் பார்த்து வருகிறேன். அவர்கள் எல்லோரிலும் சந்திரனைப் போல் ஒருவன் இல்லை. அவன் நாக்கில் கலைமகள் வாழ்கிறாள். நான் சொன்னால் நம்புங்கள். தனியே அனுப்பிப் படிக்கவைத்தால் கெட்டுப்போவானோ என்ற பயம் இருந்தால் அப்படி வேண்டா. கடவுள் உங்களை ஏழையாகப் படைக்கவில்லை. செல்வமும் கொடுத்திருக்கிறார். செலவு ஆனால் ஆகட்டும், நகரத்தில் ஒரு சிறு வீடு பார்த்துப் பையனுடைய அம்மாவையோ யாரையோ அனுப்பிச் சமைத்துப் போடச் செய்யுங்கள்.

அவர்கள் பையனைக்கூட இருந்து கவனித்துக் கொள்வார்கள். எப்படியோ பையன் படிக்க வேண்டும். அதுதான் வேண்டியது. செல்வம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். கல்வி அப்படிப்பட்டது அல்ல. யாரோ ஒருவரைத்தான் கலைமகள் தேடி வருவாள். உங்கள் குடும்பத்தை இப்போது தேடிவந்திருக்கிறாள். அவளை அவமதிக்க வேண்டா, சொன்னால் கேளுங்கள். உங்கள் பையன் படித்துப் பட்டம் பெற்று, நாளைக்கு ஒரு கலெக்டராக வந்தால், உங்களுக்கு எவ்வளவு பெருமை! ஊருக்கு எவ்வளவு பெருமை! எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு ஈடு ஆகுமா?" என்று சாமண்ணாவின் நெஞ்சைத் தொடும்படி எடுத்துச் சொன்னார்.

சாமண்ணாவின் நெஞ்சில் ஏதோ புத்துணர்ச்சி பிறந்தது. உடம்பிலே ஒருவகைக் குளுமை நாடி நரம்பெல்லாம் பாய்வதுபோல் உணர்ந்தார். ஒன்றும் பேசாமல் தலை குனிந்திருந்தார். "சரி என்று சொல் அப்பா" என்று தொலைவில் யாரோ ஒரு குடியானவனுடைய குரல் கேட்டது. சாமண்ணா தலை நிமிர்ந்து, அவன் யார் என்று பார்த்தார். இரண்டு ஆட்கள் பேசிக் கொண்டு போவதைக் கண்டார். வீட்டின் முகப்பில் ஒரு பல்லி டிக் டிக் என்றது. அது என்ன திசை என்று கவனித்து உள்ளே எழுந்து சென்று பஞ்சாங்கக் குறிப்பைப் பார்த்தார். அந்த வேளையில் அந்தத் திசையில் பல்லி சொன்னால் என்ன பலன் என்று பார்த்தார். "யோகம்" என்று இருந்தது. தம் மனைவியிடம் சென்று ஒரு பெரிய தட்டில் பழங்களும் வெற்றிலை பாக்கும் கொண்டுவரச் சொன்னார். வேலையாளை அழைத்து நான்கு தேங்காய் உரித்துவரச் சொன்னார். இன்ஸ்பெக்டரை நோக்கிப் புன்முறுவலோடு சென்று அவரெதிரே உட்கார்ந்தார்.

"ஒன்றும் அவசரம் இல்லை. பத்து நாள் பொறுத்து முடிவு செய்யலாம். பையனுடைய படிப்பு உங்களால் கெட்டதாக ஏற்படக் கூடாது. அதைச் சொல்லிவிட்டுப் போகவே வந்தேன். அவ்வளவுதான்" என்று எழுந்தார்.

"இருங்கள், வெற்றிலைபாக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்" என்று சாமண்ணா தடுத்தார். "நீங்கள் தெரிந்துதான் சொல்கிறீர்கள். உங்களைப்போல் பெரியவர்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியது தான்" என்றார்.

வெற்றிலை முதலியன வந்த பிறகு, இன்ஸ்பெக்டர் அவற்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, "நான் வந்த காரியம் முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். பையனுடைய நல்ல காலம்" என்று சொல்லிக் கொண்டே விடைபெற்றார்.

"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சாமண்ணா கை கூப்பினார்.

வேனில் விடுமுறை முடிந்தது. ஆனி மாதத்தில் சந்திரனும் அவனுடைய அத்தையும் வேலையாள் ஒருவனுமாக மூவரும் எங்கள் தெருவில் ஒரு வீட்டில் குடிவந்தார்கள்; சந்திரன் கிராமப் பள்ளிக் கூடத்தை விட்டு நகரப் பள்ளிக் கூடத்து மாணவன் ஆனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_2&oldid=7871" இலிருந்து மீள்விக்கப்பட்டது