அகல் விளக்கு/அத்தியாயம் 24

ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன்.

அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னைக்கு சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு ரூபாய் வருவாயில் இன்ஸ்பெக்டர் தொழில் பெற்றுத் தந்தார். மாலனுக்கு அதுவும் பெரிய மனக்குறையாக இருந்தது. நான் முந்நூறு ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற, என்னுடன் என்னைப்போல் படித்த ஒருவன் நூறு ரூபாயளவில் நின்றது யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? ஆனாலும் என்ன செய்வது? வேறு வழி இல்லையே என்று அத்தொழிலில் கொஞ்ச காலம் மனம் பொருந்தி இருக்குமாறு மாலனுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

சென்னைக்குப் போகவேண்டிய வாய்ப்பு எனக்கு ஒரு முறை நேர்ந்தது. தொழில் துறையின் தொடர்பாகவே போயிருந்தேன். முன்னதாகவே மாலனுக்கு எழுதியிருந்தேன். அவனுடைய வீட்டுக்கே போயிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு கற்பகத்தைப் பார்த்தது அப்போதுதான். "வாங்க" என்று அவள் வரவேற்றாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி இருந்தபோதிலும் சிறுமியாக இருந்தபோது கண்ட துடிதுடிப்பு இல்லை. மாலன் தன் குழந்தையைக் கொண்டு வந்து என் கையில் தந்தான்.

அன்போடு பெற்றுத் தோள்மேல் ஏந்திக்கொண்டு "என்ன பெயர்?" என்றேன்.

"எழுதியிருந்தேனே! மறந்துவிட்டாயா! நீ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறாய். என்னைப் போன்ற ஆட்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பாயா?" என்றான்.

"அப்படி என்னிடம் சொல்லக்கூடாது. நான் என்றைக்கும் உன் நண்பன். ஏதோ வாய்ப்பு என்று சொல்கிறார்களே! அதன்படி எனக்குப் பெரிய வேலை கிடைத்தது. உனக்குக் கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்படாதே."

"சும்மா சொன்னேன்."

அவன் அவ்வாறு சொன்னபோதிலும், அந்தச் சொல் அவனுடைய உதட்டிலிருந்து வந்த விளையாட்டுப் பேச்சு அல்ல என்றும், உள்ளத்தில் ஆழ்ந்திருந்த வேக்காட்டிலிருந்தே வந்தது என்றும் எண்ணினேன். "சரி, இவன் பெயரைச் சொல்" என்றேன்.

"திருவாய்மொழி" என்றான்.

"என் தம்பி பொய்யாமொழி. இவன் திருவாய்மொழியா? நல்ல பெயர்தான்" என்று சொல்லிக்கொண்டே கற்பகத்தின் முகத்தைப் பார்த்தேன். அவள் புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.

"சொந்த மாமா இப்படி எடுத்துப் பழகாவிட்டாலும் இந்த மாமாவையாவது பாரப்பா" என்றாள் கற்பகம்.

"நான் இந்தப் பையனுக்கு மாமாவா?" என்றேன்.

"ஆமாம்" என்று சிரித்தாள் கற்பகம்.

"என்ன மாலா! நான் உனக்குச் சம்பந்தி ஆகிவிட்டேன். இனிமேல் அண்ணன் தம்பி முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றேன்.

"நண்பர்களாக இருந்தால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் முறையை மாற்றிக் கொள்ளலாம். பெண் இருந்தால் மாமன் மைத்துனன். இல்லாவிட்டால் அண்ணன் தம்பி. உறவாக இருந்தால் இப்படி மாற்றிக் கொள்ளும் உரிமை இல்லையே" என்றான் மாலன்.

"மாமாவுக்கு எப்போது பெண் பிறக்கப்போகிறது என்று பார்க்கிறான்" என்றாள் கற்பகம்.

"இன்னும் நான்கு ஐந்து மாதத்தில்" என்றேன். மாலன் சிரிக்க, நானும் சிரித்தேன்.

"இப்போதே பணம் சேர்த்து வைத்துக்கொள். இல்லையானால் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைக்க மாட்டான்" என்றான்.

என் தங்கையின் வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது. உடனே அதைப் பொருட்படுத்தாமல், "இந்தப் பையனுமா அப்படிப் பணம் கேட்பான்?" என்றேன். குழந்தை திருவாய்மொழி அப்போது தன் பொக்கை வாய் திறந்து முழுச் சிரிப்பு சிரித்தான். அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எல்லோருமே குழந்தைகளாய் மாறிச் சிரித்தோம்.

மறுநாள் சென்னைக் கடமையை முடித்துக்கொண்டு ஊர்க்குப் புறப்பட்டேன். மாலன் ரயிலடிக்கு வந்திருந்தான். அவனுக்குத் தேறுதல் சொன்னேன். "இங்கே இருந்தபடியே வேறு நல்ல தொழில் கிடைத்தால் மாறிவிடலாம்" என்றேன்.

"எங்கே கிடைக்கிறது? வர வர வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. படிக்காதவர்கள் நன்றாகப் பிழைக்கிறார்கள். பணம் தேட அவர்களுக்கு வழி தெரிகிறது. படித்தவர்களுக்குத் தெரியவில்லை. எங்கள் ஊரில் நெல் ஆலை வைத்த ஒருவர் இன்றைக்குப் பெரிய செல்வராகி விட்டார். என்னோடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது வரையில் படித்தவன் லாரி வைத்துப் பணக்காரனாகி விட்டான். என்னை இந்த நூறு ரூபாய்ச் சம்பளத்துக்கு அழைக்கிறான். பேசாமல் இந்த வேலையை உதறிவிட்டு ஒரு நெல் ஆலையாவது லாரியாவது வைத்து நடத்தலாமா என்று எண்ணுகிறேன். அதைப்பற்றித்தான் இனி முயற்சி செய்ய வேண்டும்" என்றான்.

"அவசரப்படாதே நன்றாக எண்ணிப்பார். நமக்குப் பழக்கம் இல்லாத துறைகள்."

"படிக்காதவர்கள் செய்யும்போது படித்தவர்கள் செய்யக்கூடாதா?"

"வேண்டா என்றோ கூடாது என்றோ நான் சொல்லவில்லை. எண்ணிப் பார்த்து, ஒரு முறைக்குப் பல முறை எண்ணிப் பார்த்து இறங்கவேண்டும். படித்ததனாலேயே நமக்குத் திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. சின்ன பிள்ளைகள் ஒரு நாளில் சைக்கிள் விடக் கற்றுக்கொள்கிறார்கள். வளர்ந்த பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஒரு வாரத்துக்கு மேலும் ஆகிறது."

என் பேச்சை அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகு கற்பகத்தையும் குழந்தையையும் பார்த்த செய்தியை மனைவியிடம் சொன்னேன். "கற்பகத்தை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது" என்றாள்.

ஏழாம் மாதம் வேலூரிலிருந்து அத்தையும் திருமந்திரமும் வந்து சிலநாள் இருந்து மனைவியை அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் முதல் முறை பிரிவுத் துன்பத்தை உணர்ந்தேன். மனைவி கண்ணீர் விட்டுக் கலங்கினாள். பக்கத்தில் வேலையாட்கள் இருந்ததையும் மறந்து, நானும் கண்ணீர்விட்டேன். ரயில் நகரும் வரையில் அவள் கலங்கிக்கொண்டே இருந்தாள். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. நான் மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தேன். என் உள்ளத்தை அடக்கிக்கொண்டிருந்தது பெரு முயற்சியாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் அறையில் நுழைந்த பிறகு என் உள்ளத்தை அடக்கு முறையிலிருந்து விட்டேன். நன்றாகக் கண்ணீர் விட்டு அழுதேன். அதன் பிறகு என் செயல் எனக்கே சிறுபிள்ளைத் தன்மையாக இருந்தது.

அடுத்த மாதமே வேலூர்க்குச் சென்று சில நாள் இருந்துவந்தேன். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான செய்தி அறிந்தவுடன் மற்றொரு முறை போனேன். அப்போது அம்மாவும் அப்பாவும் அங்கே வந்திருந்தார்கள். குழந்தைக்கு "மாதவி" என்று பெயர் வைத்தார் அப்பா. வந்தவர்களில் சிலர் குழந்தை அப்பனைப்போல் இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் மூக்கும் விழியும் மட்டும் தாயைப் போல் இருப்பதாகச் சொன்னார்கள். வளர்ந்த பிறகுதான் உண்மை தெரியும் என்று அம்மா தீர்ப்புச் சொல்லிவிட்டார்.

தங்கை தம்பி பாக்கியம் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று அம்மாவைக் கேட்டேன். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி துன்பமாக இருந்தது.

"கற்பகமும் அவளுடைய அப்பாவும் நம் தெருவில்தான் இருக்கிறார்கள். முன் இருந்த அதே வீட்டில் குடியிருக்கிறார்கள். ஊரில் சந்திரனுக்கும் அப்பாவுக்கும் சொத்து வகையில் சச்சரவாம்."

"அதனால் அவனுடைய அப்பா வந்தது சரி, கற்பகம் ஏன் கணவனை விட்டு வரவேண்டும்."

"அவன்தான் அனுப்பிவிட்டானாம். சோழசிங்கபுரத்தில் நெல் ஆலை வைக்க வேண்டும் என்று முயற்சியாம். அதற்காக மாமனாரிடம் பணம் கேட்கிறான். நீ போய் உட்கார்ந்து பிடிவாதம் செய்து வாங்கிக் கொண்டுவா என்று அனுப்பிவிட்டான். சந்திரன் மிகக் கெட்டுப் போய்விட்டானாம். கண்டபடி கண்ட பெண்களுக்கும் நோய்க்கும் பணத்தைச் செலவு செய்து சொத்தை அழித்து வருகிறானாம். அவன் இப்படிச் செய்வதைத் தெரிந்துகொண்டு மருமகன் கேட்கிறான். அழியும் சொத்தில் ஒரு பங்கு கொடுத்தால் என்ன என்று மகளும் கேட்கிறாள். ஆனால், மகன் ஒத்து வரவில்லை. வீண் குழப்பம் செய்கிறானாம். அப்பாவால் அந்த ஊரிலேயே இருக்க முடியவில்லையாம். மன அமைதியாவது கிடைக்கும் என்று மகளை அழைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறார். அவர் வேறு என்ன செய்வார்?" என்றார்.

"இருந்தாலும் கற்பகம் வந்திருக்கக் கூடாது" என்றேன்.

"நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?"

"மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?"

"அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? - அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே"

என்னால் நம்பவே முடியவில்லை. "அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு" என்றேன்.

"உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு முன் அவனைப் பற்றி உனக்குத் தான் எழுதி கேட்டார்களாம். நீ நல்ல பிள்ளை என்று எழுதியிருந்தாயாம். அந்தப் பெண் அதை என்னிடம் சொல்லிக் கண்ணீர் விடுகிறாள்" என்றார்.

என் உள்ளம் நைந்தது. சென்னைக்குச் சென்று அவர்களின் குடும்பத்தைக் கண்டபோது, அவர்கள் அன்பாக வாழ்ந்திருந்தார்களே என்று எண்ணினேன். அதை அம்மாவிடம் குறிப்பிட்டேன்.

"ஒருநாள் விருந்தாளிபோல் போய்ப் பார்ப்பவர்களுக்கு அந்தக் குடும்பத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதிலும் கற்பகம் நல்ல பெண். உள்ள துன்பத்தை வெளியே காட்டிக் கொள்வாளா?" என்றார்.

"மாலனா அப்படிச் செய்தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை அம்மா"

"நீ வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவன்."

இவ்வளவும் செய்துவிட்டு மாலன் எனக்கு ஒரு கடிதமும் எழுதாமலிருக்கிறானே என்று எண்ணியபோது அவன் மேல் வெறுப்பும் தோன்றியது.

ஈரோட்டுக்குத் திரும்பிச் சென்றபோது வீட்டில் அவனுடைய கடிதம் வந்திருந்தது கண்டேன். பிரித்துப் படித்தேன்.

"நான் உன்னிடத்தில் நேரில் சொன்னபடி ஊரில் நெல் ஆலை வைப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறேன். அதனால் வேலையை விட்டு விட்டேன். நீ என்மேல் வருந்தமாட்டாய் என்று நம்புகிறேன். என் தந்தை கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். அது போதவில்லை. மாமனாரிடம் கொஞ்சம் கேட்டு வாங்கிவருமாறு கற்பகத்தை அவளுடைய ஊர்க்கு அனுப்பியிருக்கிறேன்" என்று எழுதி இருந்தான்.

அம்மா சொன்னதற்கும் அவன் எழுதியதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தேன். இன்னும் கற்பகத்தைக் கேட்டால், அவள் சொல்வது எப்படி இருக்குமோ? ஒரே இடத்தில் நடந்த நிகழ்ச்சியை வெவ்வேறு கட்சிச் செய்தித் தாள்கள் வெவ்வேறு வகையாய்த் திரித்து எழுதுவது போல் இருக்கிறதே என்று எண்ணினேன். மாலன் சோதிடம் கேட்டிருப்பான். வியாபாரத்துக்கு வேண்டிய பொருத்தம் இருப்பதாகச் சோதிடர் ஏதாவது சொல்லி இருப்பார். அவனுடைய லக்கினாதிபதி இப்படிச் செய்து விட்டிருப்பான் என்று வெறுப்படைந்தேன்.

சந்திரன் மிகக் கெட்டுவிட்டான் என்றும், சொத்தை அழித்து வருகிறான் என்றும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. இனிச் சந்திரனை யாரும் திருத்த முடியாது; அவன் சொத்தை அழிக்கத் தொடங்கிய பிறகு அந்தச் சொத்தில் ஒரு பகுதியைக் கற்பகத்துக்கு எழுதி வைத்தால் நல்லதுதானே! ஏன் அவனுடைய தந்தை அப்படிச் செய்யத் தயங்குகிறார்? அப்படிச் செய்துவிட்டால் மாலன் எப்படியாவது வியாபாரமோ தொழிலோ செய்து முன்னேறுவானே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

உண்மை எதுவும் தெளிவாகத் தெரியாததால், மாலனுக்கு மறுமொழி எழுதாமலிருந்தேன். அடுத்த கடிதம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. எனக்கு வேலை மிகுதியாக இருந்தது. புதிய பொறுப்புகள் சில வந்து சேரவே, அவற்றில் சிந்தனை செலுத்தி இருந்தேன்.

மனைவியைக் குழந்தை மாதவியுடன் மூன்றாம் மாதத்தில் போய் அழைத்து வரலாமா என்று ஊருக்கு எழுதிக் கேட்டிருந்தேன். மூன்றாம் மாதத்தில் அம்மா போய் வாலாசாவுக்கு அழைத்து வருவதாகவும், ஐந்தாம் மாதத்தில் ஈரோட்டுக்கு அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்கள்.

இடையில் நான்கு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வர, ஈரோட்டில் இருக்க மனம் கொள்ளாமல், ஊருக்குப் புறப்பட்டேன். ஊருக்குச் சென்று வீட்டில் நுழைந்ததும் நான் முதலில் கண்ட காட்சி, கற்பகம் ஒரு சிறுமிக்குத் திண்ணையில் கணக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த காட்சிதான். கற்பகம் என்னைக் கண்டதும், "வாங்க அண்ணா; இப்போதுதான் வருகிறீர்களா?" என்றாள்.

"இது என்ன?" என்று அந்தச் சிறுமியை காட்டிக் கேட்டேன்.

"பாக்கியம் அக்காவிடத்தில் படிக்கும் பெண். கடைசி வீட்டுப் பெண். நானும் இப்போது அக்காவின் தொழிலைச் செய்யக் கற்றுக்கொள்கிறேன். என்ன செய்வது?" என்று வேதனையோடு கலந்த புன்சிரிப்பை மேற்கொண்டாள்.

"இருக்கட்டும். அப்பாவும் இருக்கிறாரா?" என்று வருந்தியவாரே கேட்டேன்.

"அதே வீட்டில்தான் இருக்கிறோம். அங்கே இருக்கிறார்" என்றாள்.

உள்ளே நுழைந்ததும் காக்கி உடை உடுத்தி ஒரு சிறு பையன் குறுக்கே நிற்பதைக் கண்டு வியந்தேன். "அடே யாரடா சிப்பாய்?" என்றேன்.

கற்பகம் என்பின் வந்தவள் "திருவாய்மொழி" என்றாள்.

உடனே, "என் மருமகனா? அடடே" என்று அவனைத் தூக்கித் தோள்மேல் வைத்துக் கொண்டேன்.

என் குரலைக் கேட்டதும் கயற்கண்ணி பால் குடிக்கும் குழந்தையுடன் எட்டிப் பார்த்தாள்.

"மாதவி என்ன செய்கிறாள்?" என்றேன்.

"அப்பா எங்கே என்று கேட்கிறாள்" என்றாள் கற்பகம்.

"இல்லை இல்லை. அப்பா வந்தால்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறாள்" என்றாள் என் மனைவி.

"நீ ஒன்றும் அடம்பிடிக்காமல் இருந்தால் போதும்" என்றேன்.

அம்மா ஆர்வத்தோடு வந்து பார்த்து, "கடிதமும் எழுதாமல் வந்து விட்டாயே. உன் மகள் மேல் ஏக்கம் வந்து விட்டதா?" என்கிறார்.

"பாட்டி ஆச்சு, பேர்த்தி ஆச்சு. உன் பேர்த்தியைப் பற்றி எனக்கு என்ன அம்மா ஏக்கம்?" என்று சிரித்தேன்.

சிறிது நேரம் வீடு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. எல்லாருடைய முகங்களும் மலர்ந்திருந்தன. கற்பகத்தின் மகன் திருவாய்மொழியும் சிரித்து ஆடிக்கொண்டிருந்தான். மாதவியும் தன் விரலைச் சுவைத்துக் கொண்டே ஆ ஊ என்று ஒலித்துக் கொண்டிருந்தாள். கற்பகத்தின் முகத்தில் மட்டும் துன்பத்தின் சாயல் வந்து வந்து கவிந்துகொண்டிருந்தது. தானும் மற்றவர்களோடு கலந்து மகிழ வேண்டும் என்று அவள் எவ்வளவு முயன்றபோதிலும் முழு வெற்றி பெறமுடியவில்லை.

மாலனைப் பற்றிக் கேட்பதற்கு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சிற்றுண்டி முடிந்ததும், கற்பகத்தைப் பார்த்தேன். அவள் அங்கே இல்லை. சிறிது நேரத்தில் வந்தாள். "உன் கணவர் கடிதம் எழுதினாரா?" என்று கேட்டேன்.

"இல்லை. உங்களுக்கு எழுதினாரா?" என்றாள்.

"எழுதினார். நான் எழுதவில்லை."

"நடந்ததெல்லாம் தெரியும் அல்லவா?"

"தெரியும். அம்மா சொல்லித் தெரிந்து கொண்டேன்?"

"உங்களுக்கு எல்லாவற்றையும் எழுதினாரா?"

"எழுதினார். சுருக்கமாக, அந்த நெல் ஆலை ஏற்படுத்தி ஆயிற்றா?"

"நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்."

அவளுடைய கழுத்தையும் கைகளையும் பார்த்தேன். நகைகள் காணப்படவில்லை. கேட்கலாமா என்று வாயெடுத்தேன். இப்போது கேட்டு அவளுடைய துயரத்தைக் கிளற வேண்டா என்று அமைதியானேன்.

"உன்னிடத்தில் உண்மை தெரிந்து கொண்டு கடிதம் எழுத எண்ணியிருக்கிறேன்" என்றேன்.

"எழுதியும் பயன்படாது. அவர் மனத்தை மாற்ற முடியாது. அவரே உணரும் காலம் வந்தால்தான் திருந்துவார்."

"வேறே ஒன்றும் கெட்ட பழக்கம் இல்லையே."

"நீங்கள்தான் திருமணத்துக்கு முன்னமே கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்தீர்களே. அப்படியேதான் இருக்கிறார்."

"பிறகு எப்படி இந்த முரட்டுக் குணம் வந்தது."

"யார் சொன்னது முரட்டுக் குணம் என்று. அப்படி ஒன்றும் இல்லையே."

வேண்டும் என்றே மறுக்கிறாளோ என்று அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அவள் பார்வை கூரையைப் பார்த்தப்படி இருந்தது. முகக் குறிப்பு ஒன்றும் தெரியவில்லை.

பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, "கற்பகம் வாய் திறந்து சொல்லமாட்டாள். இதோ நான் வந்து சொல்வேன். கொஞ்சம் இருங்கள்" என்றாள்.

கற்பகம் கண்ணைத் துடைத்துக்கொண்டே தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.

நான் என் மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து "நகைகள் காணோமே எங்கே?" என்றேன்.

"நகைகள் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து விட்டுத்தான் இங்கே வந்தாள்" என்றாள் மனைவி.

"இவளே கழற்றிக் கொடுத்துவிட்டாளா? அவனே வற்புறுத்தினானா?"

"இவளே கொடுக்க, இவளுக்குப் பைத்தியமா? அவர் வற்புறுத்தினார் கொடுத்தாள். கடன் கடன் என்று கேட்டாராம் கொடுத்து விட்டாள். அப்படியாவது அவருடைய கவலை தீருமா, அன்பாக நடத்துவாரா என்று எதிர் பார்த்தாள். அவர் ஒன்றும் மனம் மாறவில்லை."

பெருமூச்சு விட்டேன். "சிக்கனமானவன். கடன்படக் காரணம் இல்லையே" என்றேன்.

"அது பெரிய கதை. பாக்கிய அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். அவருக்குத்தான் முழு உண்மையும் தெரியும்."

திகைத்தேன். "அவனே பெருங்காஞ்சிக்கு வந்து விட்டு விட்டானா" என்று கேட்டேன்.


"வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு வேளையும் சாப்பிடாமல், சொல்லாமல் போய்விட்டாராம். கற்பகத்தின் அண்ணி எவ்வளவோ சொல்லி வேண்டிப்பார்த்தாளாம். பின் தொடர்ந்து சென்று அழைத்தும் முயன்றாளாம். அவர் திரும்பி வராமலே போய்விட்டாராம். அப்போது கற்பகத்தின் அப்பா இல்லையாம். எங்கோ போயிருந்தாராம்."

"அண்ணன் சந்திரன்?"

"அவர் வீட்டிலேயே சரியாகத் தங்குவதில்லையாம் மனம்போன படி வாழ்கிறாராம்."

"அய்யோ குடும்பமே! இந்த நிலைமைக்கா வரவேண்டும்?

"இவள் என்ன செய்வாள்? நல்லவள்; சூது வாது அறியாதவள்."

அப்போது அம்மா வந்து, "போனது போகட்டும் அப்பா. இப்படி நடப்பது உண்டுதான். நீ போய் அவளுடைய வீட்டுக்காரரைப் பார்த்துத் தக்கபடி சொல்லி அழைத்து வா. எப்படியாவது கணவனும் மனைவியுமாக வாழும்படியாகச் செய். கர்ப்பமாக இருக்கிற பெண் அடிக்கடி கண்ணீர் விட்டுக் கலங்குவது நல்லது அல்ல. கற்பகத்தின் அப்பாவுக்கும் தீராத கவலையாகிவிட்டது. மகனால் ஒரு பங்கும், மருமகனால் ஒரு பங்கும். அப்பனும் மகளுமாய் வீடு வாசல் நிலபுலம் எல்லாவற்றையும் மறந்து இங்கே வந்து கலங்கி நிற்கிறார்கள்" என்றார்.

சோழசிங்கபுரம் போய் மாலனைக் கண்டு பேசி முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். "அப்படியே செய்கிறேன் அம்மா" என்றேன். அதற்குள் முழுச் செய்திகளும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

தோட்டத்தை நோக்கிச் சென்றேன். அங்கே பாக்கியம் பருப்பில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தார். கற்பகம் பக்கத்தில் உட்கார்ந்து தொலைவில் உள்ள எதையோ பார்ப்பதுபோல் ஒரே பார்வையாக இருந்தாள்.

பாக்கியம், என்னைப் பார்த்து "நீ ஏதாவது கேட்டாயா, தம்பி?" என்றார்.

"ஆமாம் அக்கா. எனக்கு உண்மை தெரிந்தால்தானே நான் அவரைக் கேட்க முடியும்?" என்றேன்.

"இதைவிட உங்களுக்கு என்ன உண்மை வேண்டும்? நிறையச் செல்வத்தோடு வந்தால்தான் வாழலாம் என்கிறார். இல்லையானால் வரவேண்டா என்று சொல்கிறார்" என்று கற்பகம் சட்டென்று சொன்னாள்.

இதுதான் நல்ல வாய்ப்பு. இப்போதே அவளுடைய வாயிலிருந்து செய்திகளை வருவிக்க வேண்டும் என்று எண்ணினேன். "எவ்வளவு செல்வம் வேண்டுமாம்? எதற்காகவாம்?" என்றேன்.

"எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று கேட்டார். அப்பா அதற்கு இசையவில்லை. ஐந்து காணி நன்செய் நிலம் எழுதி வைத்திருக்கிறார். அதையும் அவரோ நானோ விற்க உரிமை இல்லாமல் எழுதி வைத்திருக்கிறார். அதற்கு மேல் பணமாகக் கேட்டால் இல்லை என்கிறார்."

"நிலம் எழுதி வைத்தது அவருக்குத் தெரியுமா?"

"தெரியும். கடிதம் எழுதியாயிற்று. ஆள் வாயிலாகச் சொல்லியும் ஆயிற்று. அங்கிருந்து அவரும் சொல்லி அனுப்பினார் பணம்தான் வேண்டும் என்று."

"இந்தப் பணப் பைத்தியம் அவருக்கு எப்படி வந்தது?"

"அது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும்."

பழைய அம்பே முன்போல் என்னைப் புண்படுத்தியது.

"நீ நான்கு ஆண்டுகள் பழகியிருக்கிறாயாமே அப்போது இப்படிக் கெட்டவராகத் தெரியவில்லையா" என்று பாக்கியம் கேட்டார்.

"இல்லையே அக்கா. பிறகுதான் அவர் எப்படியோ மாறிவிட்டார்."

"அப்புறமும் மாறியிருக்க மாட்டார். இவர் முந்நூறு, நானூறு, சம்பளம் வாங்குகிறார். இவரைப்போல் அவரும் ஆகியிருந்தால் ஒருவேளை நல்லவராகவே இருந்திருப்பார். அல்லது இவராவது பெரிய வேலைக்குப் போகாமல் அவரைப் போலவே நூறு ரூபாய்ச் சம்பளத்திலேயே இருந்தால் அவருடைய மனம் கெட்டிருக்காது."

இப்படிக் கற்பகம் பச்சையாகச் சொன்னபோது, என்னால் நம்ப முடியவில்லை. என்மேல் மாலன் பொறாமை கொண்டிருந்தது.

"உங்களுக்குள் குடும்பத்தில் வேறு எந்தக் காரணத்தாலும் மனக் கசப்பு இல்லையே" என்று கேட்டேன்.

"உண்டு. எல்லாம் பணத்தின் காரணமாக வந்தது தான்."

"எப்படி?"

"நகைகளை ஒவ்வொன்றாய்க் கேட்டார். மறுத்து வந்தேன். அதனால், முதலில் என்மேல் வெறுப்பு ஏற்பட்டது. பிறகு ஒவ்வொன்றாய்க் கொடுக்கத் தொடங்கினேன். பிறகும் அவருடைய மனம் அமைதியடையவில்லை என்மேல் வெறுப்பு வளர்ந்தது."

"பணத்தைக் கொண்டு என்ன செய்தார்?"

"அதை ஒருநாள் பிடிவாதமாய்க் கேட்டேன். அன்று என்னை - வேண்டா. அதை எல்லாம் கேட்காதீர்கள்" இவ்வாறு சொல்லிக் கற்பகம் கண்ணீர் விட்டாள்.

"எடுத்ததற்கெல்லாம் அழுது கண்ணீர் விடுவதால் பயன் இல்லை. அஞ்சாமல் போரிடவேண்டும். அல்லது அடியோடு பணிந்து அடங்கிப்போகவேண்டும். இரண்டும் இல்லாமல் இப்படி அழக்கூடாது" என்றேன்.

"நீ கேள் தம்பி. நான் சொல்கிறேன்" என்றார் பாக்கியம்.

"பணம் நகை எல்லாம் என்ன செய்தார்?"

"குறுக்கெழுத்துப்போட்டி முதல் குதிரைப் பந்தயம் வரையில் வழிகள் இல்லையா?"

"குதிரைப் பந்தயமா?" என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.

"அது அவ்வளவாக இருக்காது. இவளுக்கு எப்படித் தெரியபோகிறது? அதுபோன்ற தீமைகள் உண்டு என்று சொல்லலாம். இவள் கண்ணாரப் பார்த்தது ஒன்று. யாரோ சாமியார் ஒருவரை அழைத்துவந்து அவருக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்திருக்கிறார். பித்தளையைப் பொன் ஆக்குவதற்கு, இரும்பைப் பொன் ஆக்குவதற்கு என்று சொல்லி அந்தச் சாமியார் காசைக் கரி ஆக்கியிருக்கிறார். அதை இவளே பார்த்திருக்கிறாள். இவள் பார்த்து இரண்டு நாள் நடந்தது. பார்க்காமல் இருபது நாள் நடந்திருக்கும். அது ஒரு காரணம். இவளை அடித்துத் துரத்தியதற்கு, இவள் இல்லாவிட்டால் எங்காவது இருந்துகொண்டு எந்த வித்தையாவது செய்துகொண்டிருக்கலாம் அல்லவா?

"அடித்தா துரத்தினார்? உண்மையாகவா?" என்று துன்புற்றுக் கேட்டேன்.

"இல்லை" என்றாள் கற்பகம்.

என் மனம் ஒரு சிறிது ஆறுதல் அடைந்தது.

"அடித்திருந்தாலும் இவள் சொல்லமாட்டாள். குடும்பத்துக்குச் செய்த தீங்கைச் சொல்வாளே தவிர, தனக்குச் செய்த தீங்கைச் சொல்லமாட்டாள். கண்ணகியும் அப்படித்தானே பொறுத்து நடந்தாள்?" என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே, "அதோடு உனக்குப் பிறகு அவருக்கு வேறொரு நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் ஆவியுலகத்தில் எல்லாரோடும் பேச வல்லவராம். இறந்துபோன திலகர், கோகலே, பாரதியார், திருவள்ளுவர், அவ்வையார், ஐந்தாம் ஜார்ஜ், விக்டோரியா எல்லாரும் அந்த நண்பரோடு வந்து பேசுகிறார்களாம். உலகம் இப்படி இப்படி ஆகப்போகிறது என்று அவரிடம் மறைக்காமல் வந்து சொல்கிறார்களாம்" என்றார்.

"இவர்கள் எல்லாம் இன்னுமா தனித்தனியாக அப்படியே இருக்கிறார்களாம்?" என்றேன்.

"என்னவோ? அப்படி ஒரு நண்பர் கிடைத்து அவருக்கு ஆசையூட்டுகிறாராம்" என்றார் பாக்கியம்.

"இருக்கும். இதை நம்புகிறேன்" என்றேன்.

"எதை? ஆவியுலகத்தையா நீ நம்புகிறாய்?" என்று பாக்கியம் கேட்டார்.

"இல்லை அக்கா, கற்பகத்தின் வீட்டுக்காரர் இதை எல்லாம் நம்பக்கூடியவர். இப்படி ஏமாறக்கூடியவர் என்று நம்புகின்றேன். ஏன் என்றால், படிக்கும்போதே அவருக்கு ஆயிரத்தெட்டு மூடநம்பிக்கைகள் இருந்தன" என்றேன்.

"எல்லாவற்றிற்கும் சேர்த்து இப்போது பயன் விளைகிறது" என்று மின்வெட்டு போல் பேசினாள் கற்பகம்.

"அந்தத் தொழிலிலேயே இருந்து கிடைப்பது போதும் என்று எளிய வாழ்க்கை வாழலாமே! அதையும் விட்டு விட்டாரே!" என்றேன்.

"நீங்களும் பக்கத்திலேயே இருந்து அதே தொழிலில் நீங்களும் இருந்திருந்தால் ஒருவேளை விடாமல் ஒட்டி இருந்திருப்பார். முதலிலேயே அரை மனத்தோடு சேர்ந்தார். எந்த ஆவி வந்து என்ன சொல்லியதோ அந்த வேலையை விட்டு விட்டார். அதைப்பற்றி என்னிடம் சொல்லவே இல்லை. தாய் வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி தெரிந்தது" என்றாள்.

"ஊரில் நெல் ஆலை வைக்கிறாராம். அதற்காகக் கொஞ்சம் பணமாவது கொடுத்து உதவியிருக்கலாம்" என்றேன்.

பாக்கிய அம்மையார் மறுமொழி சொன்னார். "அப்படிச் செய்திருக்கலாம் என்று நானும் எண்ணினேன். கற்பகத்தின் அப்பா அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. இப்படிப்பட்டவர் நாளைக்கு எல்லாவற்றையும் அடகு வைத்து விற்றுக் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போய் விடுவார். நம்ப முடியாது.

மகன் தன்னால் கெட்டான். மகள் நல்லவள். அவளும் நடுதெருவில் நின்று கலங்க வேண்டுமா? ஒருக்காலும் நிலத்தை விற்றுப் பணமாகக் கொடுக்கமாட்டேன் என்கிறார். மகளை வைத்துக் கொண்டு வாழாவிட்டாலும் சரி நிலம் விற்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார். அவர் சொல்வதும் ஒரு வகையில் நல்லதாகத் தெரிகிறது. நாளைக்கு என்ன துன்பம் வந்தாலும், பேரப் பிள்ளைகளுக்கு விற்க உரிமை வைத்து எழுதியிருப்பதால், அந்த ஐந்து காணி நன்செய் நிலமாவது கற்பகத்தைக் காப்பாற்றும், அவளுடைய குழந்தைகளைக் காப்பாற்றும், மனம் திருந்தி வந்தால் அவளுடைய கணவரையும் காப்பாற்றும்" என்றார்.

நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், "அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை" என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே.

பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல் வந்து உட்கார்ந்தேன். சந்திரனோடு விளையாடியும் படித்தும் காலம் போக்கியது நினைவுக்கு வந்தது. கற்பகம் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லையே, அவனுடைய குற்றம் குறைகளைப் பற்றிப் பேசவில்லையே. ஒருகால், அவனுடைய கதை பழங்கதையாய்ப் போயிருக்கலாம். திருத்த முடியாதவன் என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்.

உடனே கற்பகத்தின் தந்தையைப் பார்க்கவேண்டுமே என எண்ணி, நேரே அந்த வீட்டை நாடிச் சென்றேன்.

அங்கே அவருடைய பேரன் திருவாய்மொழி சில குச்சிகளையும் நெருப்புப் பெட்டிகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவர் ஒரு மூலையில் எதையோ ஆழ்ந்து சிந்தனை செய்தபடி உட்கார்ந்தவாறே சாய்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், "வாப்’பா, கற்பகம் சொன்னாள். நான் வந்து பார்க்கலாம் என்று இருந்தேன். அதற்குள் இவனை என்னிடம் விட்டுவிட்டு அவளே அங்கே போனாள்" என்றார்.

"இங்கே வந்திருக்கிறீர்கள்" என்றேன்.

"என்ன செய்வது? பிள்ளையையும் பெண்ணையும் பெற்று வளர்த்து விட்டுவிட்டு, அவள் சுகமாகப் போய்விட்டாள். கவலை எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. பிள்ளையால் துன்பப்பட்டால் பெண்ணால் சுகப்படலாம் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டு வகையிலும் துன்பமே. ஊரில் இருக்க முடியவில்லை. பையனுடைய நடத்தை குடும்பத்திற்கே பழியாகிவிட்டது. உனக்குத் தெரிந்திருக்கும். அவனுடைய உடம்பும் கெட்டுவிட்டது; அது தெரியுமா?" என்றார்.

"தெரியாதே" என்றேன்.

"தொழுநோய் போல வந்துவிட்டது. உடம்பெல்லாம் பரவிவிட்டது. நாட்டு மருந்து சாப்பிட்டுப் பயன் இல்லை. இப்போது அடிக்கடி ராணிப்பேட்டைக்குப் போய் ஊசி போட்டுக்கொள்கிறானாம். அது எப்படியாவது போகட்டும் என்றால், அவனுடைய மனைவி - நல்ல பெண் - அவனிடத்தில் அகப்பட்டுக்கொண்டு சிறுமைப்படுகிறாள். அவளை மிருகம் போல் நடத்துகிறான், அடிக்கிறான், உதைக்கிறான். அதை எல்லாம் கண்ணால் பார்த்துக்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. சாப்பிடவும் மனம் வரவில்லை.

நாங்கள் வந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியே வாழும்போதாவது அன்பாக இருக்கட்டும் என்றுதான் வந்துவிட்டேன். அந்தப் பெண்ணோ, நாங்கள் புறப்பட்ட போது கதறிக் கதறி அழுதாள். தானும் எங்களோடு வருவதாகச் சொல்லி அழுதாள். எங்கள் குடும்பம் இப்படி இந்த நிலைக்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லையே" என்று அவர் கண்ணீரோடு கூறினார். பிறகு "மருமகன் செய்தி எல்லாம் சொல்லியிருப்பார்கள். நான் வேறு சொல்ல வேண்டியதில்லை. நல்ல பிள்ளை என்று எல்லாரும் சொன்னார்கள். நீயும் எழுதியிருந்தாய். அவன் இப்படி மாறிவிட்டான். எல்லாம் நான் வந்தவழி" என்று தலையில் அடித்துக் கொண்டு வருந்தினார்.

சிறிது நேரம் பேசியிருந்து ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினேன். அவருடைய மனத்தில் மகளைப் பற்றிய கவலையைவிட மகனைப் பற்றிய கவலையே மிகுதியாக இருந்ததை அறிந்தேன். கற்பகம் முதலானவர்களுக்குச் சந்திரனுடைய வாழ்க்கை இயற்கையாகிப் பழங்கதை ஆகிவிட்டது. ஆனால் சாமண்ணாவின் மனத்தில் அது இன்னும் ஆறாப் புண்ணாகவே இருந்து வருத்தி வந்தது.

மறுநாள் சோழசிங்கபுரத்துக்குப் போய் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். புறப்பட்டபோது அம்மா என்னைப் பார்த்து, அப்படியே தங்கை வீட்டுக்குப் போய் வா. அங்கிருந்து ஏழெட்டு மைல்தான் இருக்கும்" என்றார். சில அடி நடந்தபிறகு "அப்பா! அவள் வருவதாக இருந்தால் நீயே அழைத்துக் கொண்டு வா" என்றார்.

சோழசிங்கபுரத்தில் இறங்கி மாலனுடைய பெயரைச் சொல்லிக் கேட்டேன். நெல் ஆலை பற்றிச் சொன்னவுடனே வழி காட்டினார்கள். அங்கே சென்று கேட்டபோது அவன் ஊரில் இல்லை என்று அறிந்தேன். யாரோ ஒரு சாமியாருடன் காலையில்தான் திருத்தணிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், இன்னும் இரண்டு மூன்று நாள் கழித்துத் திரும்பக்கூடும் என்பதாகவும் சொன்னார்கள். காணமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் தோன்றியது. "அவருடைய நண்பர் ஒருவர் இங்கே லாரி வைத்திருக்கிறாராமே. அவர் யார்? எங்கே இருக்கிறார்?" என்று கேட்டேன். சொன்னார்கள். அவரைத் தேடிச் சென்றேன்.

அவரிடம் சென்று மாலனுடைய நண்பன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். "ஆமாம், ஆமாம் நினைவு வருகிறது. சொல்லியிருக்கிறார். எங்கேயோ பெரிய வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக இருக்கிறீர்களாமே, உட்காருங்கள்" என்றார்.

"அவரைப் பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன். ஊரில் இல்லையாம்" என்றேன்.

"அப்படியா? மறுபடியும் வெளியூர்க்குப் போய்விட்டாரா? எனக்குச் சொல்லவில்லையே. அவர் ஊரில் இருப்பதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. பார்த்தீர்களா? நெல் ஆலை நடத்துகிற முதலாளி இப்படி அடிக்கடி வெளியூர்க்குப் போனால் தொழில் எப்படி நடக்கும்?"

"உண்மைதான்."


"உங்கள் வேலை போல் ஒரு பெரிய வேலையாக அவருக்கும் வாங்கி கொடுத்திருக்கக் கூடாதா? பேசாமல் வேலையைச் செய்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவலை இல்லாமல் இருக்கலாமே. ஏன் இந்த வம்பு?"

"பெரிய வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லையே."

"உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?"

"முதல் வகுப்பில் தேறியிருந்தேன். முதல் முறையிலேயே தேறியிருந்தேன். அப்போது சில வேலைகளும் காலியாகியிருந்தன. எனக்குக் கிடைத்தது ஒரு குருட்டு வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். நானே இப்போது முயற்சி செய்வதாக இருந்தால் கிடைக்காது."

"போகட்டும் என் லாரி கம்பெனியில் நூறு நூற்றைம்பது சம்பளம் தருகிறேன் என்று அழைத்தேன். அதையும் மறுத்துவிட்டார்."

"இப்போது என்ன? இந்த நெல் ஆலையை நன்றாக நடத்தலாமே."

"நடத்தலாம், நடத்தினால்தானே? அந்த நூறு நூற்றைம்பது ரூபாய் இதில் ஒழுங்காய் கிடைக்காதுபோல் இருக்கிறதே."

"அய்யோ! ஏன் அப்படி? நல்ல வரும்படி கிடைக்கும் என்று சொன்னாரே!"

"இவர் அந்தப் புது ஆலை தொடங்கியவுடன், பழைய நெல் ஆலைக்காரர் இருவரும் போட்டிக்காகக் கூலியைக் குறைத்து விட்டார்கள். அவர்கள் முன்னமே லாபம் தேடிக் கொண்டவர்கள். கையில் பணம் இருக்கிறது. ஆகவே புது ஆலை வளராதபடி கெடுப்பதற்காக இப்போது லாபம் இல்லாமல் வேலை செய்யத் துணிந்துவிட்டார்கள். வேண்டும் என்றே கூலியைக் குறைத்து நெல் ஆடித் தருகிறார்கள். இன்னும் போனால், கூலி இல்லாமலே இலவசமாகவே நெல் ஆடித் தந்தாலும் தருவார்கள். முன்னமே பணம் சேர்த்திருக்கிறார்கள். அதில் கொஞ்சம் போனால் போகட்டும் என்று, துணிந்து செய்வார்கள். நம் நண்பர் என்ன செய்ய முடியும்? ஆலையை மூடவேண்டியதுதான்."

"மூடினால், கடன்காரருக்கு வட்டி கொடுக்கவேண்டுமே அதற்கு எங்கே போவது" என்றார் பக்கத்தில் இருந்து எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்.

"மாமனாரிடத்தில் கொஞ்சம் பணம் எதிர்பார்த்திருக்கிறார். மாமனாரோ பணத்தில் அழுத்தமானவர் போல் தெரிகிறது. ஒரு பைசாவும் கொடுக்கவில்லை" என்றார் லாரிக்காரர்.

"சே! அப்படிச் சொல்லக்கூடாது. நல்ல நன்செய் நிலமாக ஐந்து காணி மகள் பேரில் எழுதி வைத்திருக்கிறாராம்" என்றார் பக்கத்தில் இருந்தவர்.

"அதுசரி. நாளைக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும். இன்றைக்கு வேண்டிய களாக்கனி எங்கே?" என்றார் லாரிக்காரர். மறுபடியும் அவரே, "வந்த பெண்டாட்டியாவது இவருடைய மனம் தெரிந்து நடப்பவராகத் தெரியவில்லை. நான் ஒன்று சொல்கிறேன். மனைவி சரியாக இருந்தால் யாருக்குமே சாமியார் பைத்தியம் பிடிக்காது. இந்த ஆள் சாமியார் சாமியார் என்று யார் யார் பின்னாலோ சுற்றுகிறார். இந்த அளவுக்கு அந்த அம்மா இவரை விட்டிருக்கக் கூடாது. அந்த அம்மாவே வீட்டிலே பூசை பண்டிகை சடங்கு மந்திரம் தந்திரம் என்று பலவகையான அமர்க்களங்கள் செய்து கொண்டிருந்தால், இவருக்கு அதிலே சலிப்பு ஏற்பட்டுப் போயிருக்கும். இப்போது இவரே அல்லவா அவற்றை எடுத்துக்கொண்டு அலைகிறார்."

"அந்த அம்மா விட்டுக்கொடுத்து நயமாகப் பழகத் தெரியாத பேர்வழிபோல் இருக்கிறது" என்றார் பக்கத்தில் இருந்தவர்.

"ஆமாம் ஆமாம். எதற்கு எடுத்தாலும் சட்டம் பேசுகிற மனைவியாம். அதனால் ஒத்துப்போக முடியவில்லையாம். வாழ்க்கை ஏறுமாறாகப் போயிற்று. இவருக்குத் தெரியாதிருக்குமா? நாம் சொல்ல வேண்டுமா?" என்று சிகரெட் பெட்டியை எடுத்து என்னிடத்தில் நீட்டினார். நான் அன்போடு மறுக்கவே பக்கத்திலிருந்தவரிடம் நீட்டினார், இருவரும் புகைத்தார்கள்.

நான் பேசாமலே இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணி, "ஆனாலும் கடன்பட்டு இந்த ஆலை தொடங்கியிருக்கக் கூடாது" என்றேன்.

"தொடங்கின பிறகு அக்கறையாகக் கவனிக்கவேண்டும். இது என்ன ஆபீஸ் வேலையா? ஐந்து மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு துண்டை உதறித் தோள் மேல் போட்டுக் கொண்டு போகக்கூடிய வேலையா இது? அங்கே வேலைக்கு ஒரு நேரம், பொழுதுபோக்குக்கு ஓர் இடம், சாப்பாட்டுக்கு ஓர் இடம் ஒரு நேரம் என்று எல்லாம் ஒழுங்காக இருக்கும். இங்கே வியாபாரத்தில் இந்தத் தொழிலில் நடக்குமா? காலையில் எழுந்து பல்லைத் துலக்கிக் கொண்டு வந்து விட்டால், தொழில் பொழுது போக்கு சாப்பாடு வேடிக்கை வம்பு தூக்கம் எல்லாம் இங்கேயே வைத்துக் கொண்டு பன்னிரண்டு மணி நேரமோ இருபது மணி நேரமோ இருந்தே ஆகவேண்டும்.

அப்படி இருந்தால் வேலையாட்களை வேலை வாங்க முடியும். சில நாட்களில் நெருக்கடியாக இருக்கும்போது மனைவி மக்கள் நினைவும் எங்களுக்கு வருவதில்லை. உங்கள் நண்பர் ஒரு நாளாவது அப்படி ஆலையில் உட்கார்ந்து வேலை செய்திருப்பாரா? கேட்டுப் பாருங்கள். ஒரு தொழிலில் இறங்கினோமா, ஒரே உறுதியாக இறங்கிவிடவேண்டும். அப்புறம் வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. வேறு எதிலும் ஈடுபடக்கூடாது" என்றார்.

"நீங்கள் சொல்லக்கூடாதா?"

"இந்தக் கல்வி எல்லாம் சொல்லி வரக்கூடாது. சொல்லாமலே பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?" என்றார்.

"அப்படியும் சொன்னோம். பயன் இல்லை" என்றார் பக்கத்தில் இருந்தவர்.

அப்படியே சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து அவர்களோடு தேநீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.

வள்ளிமலைப் பக்கமாகப் போகும் பஸ் பற்றிக் கேட்டு நடந்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தவுடனே மாலனுடைய நண்பர்கள் சொன்னவற்றை எல்லாம் எண்ணி எண்ணி அவனுக்காக வருந்தினேன். கற்பகத்தைப் பற்றி அவர்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சாமண்ணாவைப் பணத்தில் அழுத்தக்காரர் என்று சொன்னதுபோல், அதுவும் பொய்யோ; எல்லாம் மாலன் வேண்டுமென்றே அவர்களிடம் சொல்லி வைத்த பொய்கள் என்று உணர்ந்தேன்.

வள்ளிமலையில் இறங்கித் தங்கையின் கணவருடைய பேரைச் சொல்லி, ஆசிரியர் வீடு எங்கே என்று கேட்டுச் சென்றேன். வீட்டின் வாயிலில் நின்றதும் தங்கை ஏதோ புத்தகம் படிப்பது கேட்டது. மைத்துனர் பாயில் படுத்தவாறே கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். என்ன புத்தகம் என்று அறிவதற்காக அமைதியாக நின்றேன். சாரதாமணி அம்மையார் என்று பெயர் கேட்டதால் அவருடைய வரலாறாக இருக்கலாம் என்றும் எண்ணினேன். அதற்குள் யாரோ ஒரு பையன் என் பக்கத்தில் வந்து நின்று, "அய்யா! யாரோ ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்" என்று சொன்னான். அவனுடன் வேறுயாராவது வந்திருக்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். ஒருவரும் இல்லை, என்னைத்தான் சொல்கிறான் என்று உணர்ந்தேன்.

மைத்துனரும் தங்கையும் எழுந்து வந்து அன்போடு வரவேற்றார்கள். ஊரில் அம்மா அப்பா பொய்யாமொழி எல்லோரைப் பற்றியும் கேட்டார்கள், பாக்கியத்தைப் பற்றியும் கேட்டார்கள், என் மனைவியைப் பற்றியும் குழந்தை மாதவியைப் பற்றியும் கேட்டார்கள்.

அந்தப் பையன் வந்து, அய்யா என்று விளித்தது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. "யார் அந்தப் பையன்?"

"எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் படிக்கிற மாணவன்" என்றார் மைத்துனர்.

"சார் என்று அழைக்காமல் அய்யா! என்று விளிக்கிறானே" என்றேன்.

"சார் சார் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த ஊருக்கு வட நாட்டார் ஒருவர் வந்தார். சார் சார் என்று மாணவர்கள் சொன்னது அவருக்கு வெறுப்பாக இருந்தது. 'உங்கள் நாட்டில் சிதம்பரம் பிள்ளை, பாரதியார், போன்ற பெரிய பெரிய தேசபக்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும், அந்நியமோகம் இப்படி இருக்கிறதே. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் சார் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறீர்களே. நம்முடைய தாயாரை டியர் மதர் என்று அழைத்தால் நன்றாக இருக்குமா? நாங்கள் எங்களை மறந்திருக்கும்போதும் சார் என்று சொல்லமாட்டோம். எங்கள் தாய்மொழியில் 'ஜீ' என்றுதான் சொல்வோம்.

வேண்டுமானால் எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள் பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆபீஸ், விளையாடும் இடம், உணவுக்கடை எங்கே வேண்டுமானாலும் வந்து பாருங்கள். எங்கள் நாட்டார் ஜீ ஜீ என்று தான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள். இங்கே கிராமங்களில் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளையே இப்படி கெடுக்கிறீர்களே' என்று மிக மிக வருத்தப்பட்டார். அவருடைய உருக்கமான பேச்சைக் கேட்ட பிறகுதான், நாம் செய்யும் தவறு எனக்குப் புலப்பட்டது. அன்று முதல் மாணவர்களுக்குச் சொல்லி மாற்றிவிட்டோம்" என்றார் மைத்துனர்.

பிறகு தங்கையின் எளிய குடும்ப வாழ்க்கையைக் கண்டேன். ஒரு கட்டிலும் இல்லை. மெத்தையும் இல்லை. தங்கையின் உடம்பு முன்னைவிட மெலிந்திருந்ததையும் கண்டேன். உண்ண உட்கார்ந்த போது உணவின் எளிமையும் கண்டேன். தாய்வீட்டில் இது நன்றாக இல்லை, அது நன்றாக இல்லை என்று உணவில் குறைசொல்லிக் கொண்டிருந்தவள் இங்கே மிளகு நீரும் சோறும் இருந்தால் போதும் என்று வாழ்கின்றாளே என வருந்தினேன். குடும்பம் நடத்தும் முறை பற்றிச் சில கேட்டேன்.

வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இட்டளியும் தோசையும் செய்வதாகவும் மற்ற நாட்களில் சிற்றுண்டியோ காப்பியோ இல்லை என்றும் அறிந்தேன். வரும் சம்பளத்திலேயே பத்து ரூபாய் மைத்துனருடைய பெற்றோர்க்கு அனுப்பப் படுவதாகவும் அறிந்தேன். விருந்தினர் வருகையாலோ நோய் காரணமாகவோ செலவு மிகுதியாகிவிட்டால், அதற்கு ஈடு செய்யும் வகையில் நெய் முதலிய சில பொருள்களை வாங்குவதில்லை என்றும், எதற்கும் வேலையாட்களே இல்லாமல் எல்லாக் கடமைகளையும் தானே செய்து வருகிறாள் என்றும், அடுத்த ஆண்டில் ஒரு தையல் பொறி வாங்கிக் கணவருடைய சொக்காய்களையும் தானே தைக்கக் கற்றுக்கொள்ள எண்ணம் உண்டு என்றும் அறிந்தேன்.

உடனே நான் அந்தத் தையல் பொறியின் விலையைத் தருவதாகச் சொல்லி மகிழ்வித்தேன். "வேண்டாம் அண்ணா! நகரத்தில் வாழ்க்கை நடத்தும் உங்களுக்கு எவ்வளவோ செலவுகள் ஏற்படும். இந்தத் துன்பம் வேண்டா" என்றாள். அதனால் ஒரு துன்பமும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். "இப்போது ஊருக்கு வரவில்லை. அடுத்த விடுமுறையின் போது இருவரும் வருவோம்" என்று கூறி எனக்கு விடை கொடுத்தாள்.

ஊருக்கு வந்ததும், தங்கையை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்வியைத்தான் முதலில் அம்மா கேட்டார். பிறகு தங்கையின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். தையல் பொறி வாங்கும் முயற்சிக்கு நான் பண உதவி செய்யப்போவதைக் கூறியவுடன் அம்மாவின் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

பிறகு சோழசிங்கபுரம் பற்றிப் பேச்சு வந்தது. மாலன் ஊரில் இல்லாததைச் சொன்னபோது, எல்லோர்க்கும் பெரிய ஏமாற்றம் ஆயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_24&oldid=7904" இலிருந்து மீள்விக்கப்பட்டது