அண்ணாவின் தலைமை உரைகள்/ஆசியப் பொதுச் சந்தை



6. ஆசியப் பொதுச் சந்தை


இந்தியாவில் ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, வெளிநாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதியும் குறைந்து விட்டது. ரூபாய் மதிப்பு குறைப்பின் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், அதன் மூலம் ஏற்றுமதியை அதிகப்படுத்த முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். மாறாக, இதனால் ஏற்றுமதி குறைந்தது. இதை அரசியலுக்காகக் கூறுவதாக யாரும் நினைக்கத் தேவையில்லை; ஏற்பட்ட நிலைமையினைத்தான் எடுத்துக் கூறுகிறேன்.

நமது நண்பர்கள் மூவரும் நிறைய நல்ல முறையில், நமது நாட்டில் தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்ததற்காகப் பரிசுகள் வழங்கினோம். இது பற்றி மெத்த மகிழ்ச்சி அடைகின்றேன், பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இருந்தாலும், நமது ஏற்றுமதியாளர்கள் இன்னும் ஏற்றுமதியை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். அதற்கான ஆக்கப் பணிகளில் ஊக்கம் காட்ட வேண்டும். ஆசிய நாடுகளில், வணிகர்கள் யாவரும் ஒன்று கூடி. ‘ஆசியப் பொதுச் சந்தை’ அமைத்து, ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை, நாட்டின் வளத்தைப் பெருக்கிட வேண்டும்; முன்னேற்றமடையச் செய்திட வேண்டும்!

ஏற்றுமதியைப் பெருக்கிட அயல் நாடுகளில் நாம், நமது உற்பத்திப் பொருள்களைப் பற்றிச் சிறந்த முறையில், பலவழிகளில் நிறைய விளம்பரம் செய்துவரவேண்டும். அப்போதுதான் நம் நாட்டு ஏற்றுமதிப்பொருட்களுக்கு அயல் நாடுகளில் நல்ல மதிப்பிருக்கும், நல்ல விலை போகும், நிறையத் தேவையும் ஏற்படும். வெளிநாட்டவர், நமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு நல்ல விளம்பரம் இல்லை என்று குறைபட்டுக்கொள்கின்றனர்.

நாம் நமது பொருட்களின் ஏற்றுமதிகளை விரிவு படுத்த நினைக்கும் இதே நேரத்தில் நாம், நமது இறக்குமதிகளையும் குறைத்திட எல்லா வழிகளையும் கையாளவேண்டும். அதற்கான முயற்சிகளை, இத்துறையில் ஈடுபட்டவர்கள் கையாளவேண்டும். நாம் நமது ஏற்றுமதியைப் பெருக்கிட மூலகாரணமாயுள்ள தொழிலாளர்களின் ஊதியத்தைக் காலத்திற்கேற்றார்போல் உயர்த்தித்தந்து, அவர்களையும் ஆதரிக்கவேண்டும்.

பட்டு மற்றும் கைத்தறித் துணிகளை எந்த அளவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யமுடியுமோ அந்த அளவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப் பாடுபட வேண்டும். இறக்குமதிகளை அடியோடுகுறைத்திட்ட ஒரு நாடுதான் உண்மையில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கமுடியும். படிப்படியாக நாம் இறக்குமதிகளைக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிருேம்.

உரங்கள், மருந்துப்பொருள்கள், இயந்திரங்கள் முதலியன தவிர, மற்ற இறக்குமதிகளும் குறைக்கப் பட்டு வருகின்றன. ஏற்றுமதியை அதிகப்படுத்த வெளிநாட்டில் அதிக அளவுக்கு நமது பொருள்களுக்கு விளம்பரங்கள் செய்ய வேண்டும். மத்திய அரசு விளம்பரத் துறை இதைக் கவனிக்க வேண்டும். ஏற்றுமதியை அதிக அளவில் செய்து வெற்றி பெற்றவர்கள், மீண்டும் அடுத்த ஆண்டும் பரிசுகளைப் பெற வேண்டும். அதே போல, மற்றவர்களும் பரிசுகளைப் பெற முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாணய மதிப்புக் குறைப்பினால், நமது ஏற்றுமதியின் அளவு உயரவில்லை. ஏற்றுமதி மதிப்பு குறைந்ததுதான் மிச்சம்.

இந்தியாவுக்கும், முற்போக்குள்ள நாடுகளுக்குமிடையே ஏற்றுமதித் தொடர்பான நிலைகள் நல்ல வாய்ப்பாக உருவாகவில்லை. ஆகையால், ஆசியாவில் பொதுச் சந்தையை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் வரியையும், மற்றக் கட்டுப்பாடுகளையும் குறைத்து, இந்தியா போன்ற நாடுகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்,

வகைப்பாடு :பொருளாதாரம்: ஏற்றுமதி இறக்குமதி
{19-4-67 அன்று சென்னையில் அதிக ஏற்றுமதி, இறக்குமதி செய்தவர்களுக்கு அளித்த கேடய வழங்கு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)