அண்ணா சில நினைவுகள்/சிலப்பதிகாரம் அணிந்த சிறப்புரை

சிலப்பதிகாரம் அணிந்த சிறப்புரை

உலகமே வியப்பினால் விழியை அகல விரித்திட, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்திக் காட்டினாரல்லவா அண்ணா? பணிகளைக் கவனித்திடப் பல்வேறு துணைக் குழுக்களை அமைத்த போது, சிலவற்றில் அண்ணா எனக்கும் இடந்தந்திருந்தார். ஆயினும், எனக்கு அதிக விருப்பமும் ஈடுபாடும் உடைய இன்னொரு பணியில்தான் நான் முழு மூச்சாக முயன்று வந்தேன். நூல்கள் பதிப்பிக்கும் அலுவல் அது!

கலைஞரின் சிலப்பதிகாரம்-நாடக வடிவில் இருந்த தைப் பெரிய அளவில் நூலாக வெளியிட்டோம். எனது அஞ்சல்துறை (தணிக்கைப் பிரிவு) நண்பரும், என் அன்பினால் கட்டுண்டவரும், அரிய ஆங்கிலப் புலமை வாய்க்கபெற்றவருமான T. G. நாராயணசாமி, சிலப்பதி காரத்தை அப்படியே கலைஞரின் எழுத்து நயங்குன்றாது, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தர, அதனையும் ஒரு நூலாக்கினோம்.

தமிழ்ப் புத்தகம் பெரியண்ணனுடைய ஐடியல் பிரிண்டர்சிலும், ஆங்கிலம் B. N. K. பிரசிலும் அச்சாயின. தினமும் இந்த இரண்டு இடங்களுக்கும் போக வர எனக்கு நேரம் சரியாக இருந்தது. ஒவியர்கள் அமுதோன், விஜயா ஆகியோரின் கைவண்ணம் சிறப்பு அம்சம். பூம்புகார் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த படங்களையும் பயன் படுத்தினோம்.

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் இந்த நூல்களை வழங்கிட வேண்டுமெனக் கலைஞர் விழைந்தார், அதாவது, 1968 ஜனவரி முதல் வாரத்தில் நூல்களை முடித்திட வேண்டுமென எனக்குக் கட்டளை, வழக்கம் போலவே இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன். இதன் விளைவாய்ப், பல லட்சம் மக்கள் பங்கேற்ற பெருங்கூட்டத்தில், அண்ணா கவியரங்கத்திற்கு ஓடிவந்து கலந்துகொண்டு, திரும்ப ஒடிச் சென்ற ஒன்றைத் தவிர, உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சி வேறெதையும் நான் காணக்கூட இயலவில்லை!

ஆங்கிலச் சிலப்பதிகார நூலுக்கு, அண்ணாவிடம் ஓர் அணிந்துரை கேட்டார் கலைஞர். “தருகிறேன்” என்று அவரிடம் எளிதாகக் கூறிவிட்டார் அண்ணா. “வாங்கிப் போட்டுக்குங்க சார்” என்று ஆணை எனக்கு. அப்போது முதல், அண்ணாவை அடிக்கடி சந்தித்து, “அண்ணா, சிலப்பதிகாரம்! அண்ணா சிலப்பதிகாரம்!” என்று நினைவூட்டத் தொடங்கினேன். முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள அண்ணாவிடம் எழுதி வாங்குதல் அவ்வளவு எளிதான காரியமா?

நண்பர் கஜேந்திரன்தானே P. A.? அவரிடமும் சொல்லி, அண்ணாவுக்கு நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டேன், பலமுறை “ஆகட்டுங்க, கருணானந்தம்.! அண்ணாவுக்கு நேரமில்லிங்க!” என்ற பதிலையே அவரும் அலுக்காமல் தந்து வந்தார். ஒருநாள் எழும்பூர் ரயிலடி சென்று, இரவு திருச்சிக்குப் புறப்பட்ட அண்ணாவைச் சந்தித்து, “வெளியிலிருக்கும்போது, அல்லது ரயிலில் இருக்கும்போது தொந்தரவு குறைவாயிருக்குமே, அண்ணா? இந்தச் சிலப்பதிகார அணிந்துரையை எழுதி வாருங்கள்!” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன். என் பரிதாபத்தைப் பார்த்து இரங்கி, “நாளை மறுநாள் திரும்பும்போது, நிச்சயம் எழுதிக்கிட்டு வர்றேன்யா” என அண்ணா உறுதிமொழி வழங்கினார்கள். மிகுந்த நம்பிக்கையோடு திரும்பினேன். மூன்றாம் நாள் அறு காலையில் எழுந்து, ஒரு டாக்சியில் எக்மோர் சென்தி, இரண்டாம் பிளாட்பாரத்தில் காத்திருந்தேன்! முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கிய அண்ணாவின் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டே, பிச்சைக் காரன்போல் இருகைகளையும் ஏந்தினேன். உதட்டைப் பிதுக்கி ‘இல்லை’ என உணர்த்தினார் அண்ணா! எத்தகைய ஏமாற்றம் ?

“என்னங்க கஜா! புத்தகம் முழுவதும் பிரிண்ட் ஆகி, எல்லா பாரங்களையும் உங்களிடம் தந்துள்ளேன். ராப்பரும் பிரிண்ட் ஆகிறது. உங்கள் மேட்டருக்காகத் தான் காத்திருக்கிறேன்!” என்று சிறிது சினங்கலந்த குரலில் கூறினேன். “நிச்சயம் இன்று இரவு நீங்கள் வரும் போது மேட்டர் தயாராயிருக்கும், கவலைப்படாதிங்க, போங்க!” என்றார் சா. கஜேந்திரன் B. A.

ஆ! என்ன விந்தை! சொன்ன வண்ணம் Matter தந்தார் அன்றிரவு! இரண்டு பக்கம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. அப்போதே எனக்குச் சந்தேகம்- “ஏனுங்க, இது என்ன நீங்க எழுதினதா?” என்றேன். ஆமாங்க! அண்ணாவுக்கு நேரமில்லிங்க! நல்லா எழுதியிருக்கேன். அண்ணா பெயரிலேயே போட்டுக்குங்க! எனப் பதற்றமின்றிச் சொன்னார்.

என் கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கோபாலபுரம் திரும்பினேன். கஜேந்திரன் நன்கு ஆங்கிலம் எழுதுவார். எங்களோடு 1944-45இல் ஈரோட்டுக்கு குரு குலத்திலிருந்தபோது அய்யா நடத்திய Justicitc இதழை அவர்தான் பார்த்துக் கொண்டார். ஆனால், அவருடைய எழுத்தையா நாங்கள் மாபெரும் ஒர் இலக்கிய நூலுக்கு அணிந்துரையாகப் போட முடியும்?

எனக்கே ஏகப்பட்ட கோபம் என்றால், கலைஞருடைய உணர்வுகள் எப்படியிருந்தன என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பிறகு நானே கலைஞரைச் சமாதானம் செய்துவிட்டு, அட்டை உட்பட எல்லா அச்சிட்ட ஃபாரங் களையும் மீண்டும் இணைத்து எடுத்துக் கொண்டுபோய், நேரே அண்ணாவின் கையில் தந்து, அண்ணா! இந்த அணிந்துரை உங்கள் பேனாவால்தான் எழுதப்பட வேண்டும். அவரும் அப்படியே கேட்கச் சொல்கிறார் அண்ணா. நாளை இரவு வருகிறேன்!” என்று சொல்லி விட்டுச் சற்று விரைவாகக் கீழே இறங்கி விட்டேன்.

அண்ணா என்றால் அண்ணா தான்! இனியும் இந்தத் தம்பிகளை ஏமாற்றக் கூடாது என்று, எடுத்தார் பேனாவை. ஷேக்ஸ்பியரும் பெர்னாட்ஷாவும் ஓடி வந்தனர் ஊற்றுப் பேனாவின் மையாக அகில உலகையும் கட்டியாண்ட ஆங்கிலத்தின் இருபத்தாறு எழுத்துகளையும், தம் சிந்தனையால் பாங்குடன் கட்டியாண்ட அண்ணா எழுதத் தொடங்கவும், செங்குட்டுவக் கோமானின் இளவலாம் இளங்கோவடிகளும், பெருந்தகை அண்ணாவின் பேரன்புத் தம்பியாம் கலைஞர் கருணாநிதியும் கரங்கோத்துக் கொண்டு அண்ணாவின் திருமுன்னர் வருகை புரிந்து, “அண்ணா அண்ணா! எங்களையும் எழுதுங்கள்!” என்று இறைஞ்சியதுபோல் உருண்டோடி உதிர்ந்தன எழுத்து முத்துக்கள்.

உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்த பன்னாட்டுப் பன்மொழிப் பிரதிநிதிகள் அனைவர்க்குமே கலைஞருடைய ஆங்கிலத்-தமிழ் சிலப்பதிகாரப் பிரதிகள் இரண்டுமே வழங்கப்பட்டன உரிய நேரத்தில், அண்ணாவின் கருணையால் 18.1.1968 அன்று மாலை. ஆங்கிலச் சிலப்பதிகார நூலை அண்ணா வெளியிட, ஆஸ்திரேலியப் பிரதிநிதி ஜோர்தான் பெற்றுக் கொண்டார்.

(அண்ணாவின் அந்த அணிந்துரையிலிருந்து சில வைர வரிகளை இங்கே படித்துப் பயன்பெறுவோமா?)

No lover of the Tamil classics can risist being, inspired by SILAPPATHIKARAM. One amongst the Five Fine classics of Tamil Literature. Ilango’s magic touch makes every position of this engrossing Epic no true to nature that when one is reading, SILAPPATHIKARAM, he is taken to ancient Tamilagam, with all the Pageantry alive, Nature’s beauty laid before us, a veritable panorama of events and a parade of different types, and all pulsating with life-with brilliance all around.

It is most appropriate that THAMBIKARUNANITHI should give us SILAPPATHIKARAM in his own inimitable diction and under the caption POOMPUKAR for his command over the Tamil Language and his mastery over the art of portrayal, so well-known and so well appriciated, gives him sit enough tight to render SILAPPATHIKARAM in the dramatic form-keeping the high standard of diction intact and at the same time embellish it with certain interpretations of events so as to offer logical explantions to some of the events that appear to us being inexplicable, may even unwanted.