4

னத்தில் ஒன்றின்மேல் ஆசை அளவற்றுப் பெருகும்போது காரண காரியங்களைப்பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. சாத்திய அசாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. நியாய அநியாயங்களைப் பற்றிச் சிந்திக்க தோன்றாது. எதை விரும்புகிறோமோ அதுவே சாத்தியமென்று தோன்றும். எதன் மேல் ஆசைப் படுகிறோமோ அதுவே நியாயமென்று தோன்றும். அது மட்டுமே சரியென்றுகூடத் தோன்றும்.

சுமதியும் அன்று அப்படித்தான் இருந்தாள். வகுப்புக்களுக்குப் போவதில் அவளுக்கு நாட்டமில்லை. பாடங்களிலோ, படிப்பிலோ அவளுக்குக் கவனமில்லை. எப்படியாவது உடனே நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அந்த நூறு ரூபாயை மணியார்டர் செய்து அதன் ரசீதை உடன் இணைத்து, நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் அந்த நாடகக் குழுவுக்கு விண்ணப்பத்தை அனுப்பியாக வேண்டும். அல்லது நேரிலேயே விண்ணப்பத்தை எழுதி எடுத்துக்கொண்டு போயாவது பணத்தையும் கட்டிவிட வேண்டும்.

விடுதி அறைகளுக்கான கடிதங்களைப் பட்டுவாடா செய்யும் வேலைக்காரி வராந்தாவில் தென்பட்டாள்.

"லெட்டர் ஏதாவது இருக்கா மங்கம்மா?” "உங்க ரூமுக்கு இல்லே." "இங்கே வா... உன்னாலே ஒரு காரியம் ஆகணும்...” மங்கம்மா அறைக்குள் வந்ததும் மேரியை முதல் பீரியடு முடிந்து மணியடித்ததும் தன்னுடைய அறைக்கு

வரச்சொல்லி வேண்டி ஒரு சிறு துண்டுத் தாளில் அவளிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினாள் சுமதி.

முதல் பீரியடு முடிந்து எப்போது மேரி வரப்போகிறாள் என்று அவள் வருகிற நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்று தான் கூப்பிட்டுச் சொல்லியனுப்புகிற இதே மேரி சில வாரங்களுக்கு முன் தன் அறையைத் தேடி வந்தபோது தான் அவளை உதாசீனப்படுத்தி அனுப்பியது சுமதிக்கு நினைவு வந்தது. அன்று, தான் அவளிடம் நடந்து கொண்டதை நினைத்தால் இப்போது வருத்தமாகக்கூட இருந்தது. ஆனால் மேரி என்னவோ இவள் உதாசீனப்படுத்தியதைக்கூட அவ்வளவு ஸீரியஸ்ஸாக அன்று எடுத்துக் கொள்ளவில்லை.

'சரிǃ சரி! இப்போது இப்படித்தான் சொல்வாய். என்றாவது ஒரு நாள் நீயும் என் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்?’ என்று சொல்வது போல் சிரித்துக் கொண்டே போய்விட்டாள் மேரி. -

மேரி ஒரு தினுசானவள் என்பது கல்லூரியில் எல்லாருக்கும் தெரியும். நேரடியாகத் தெரியாதவர் களுக்கு இலைமறை காயாக அது தெரியும். மலேசியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், மொரீசியஸிலிருந்தும் அந்தக் கல்லூரியில் வந்து தங்கிப் படிக்கும் பல பெண்கள் மேரியின் தோழிகள். அந்த வெளிநாட்டுப் பெண்களுக்குப் பணத் தட்டுப்பாடு வரும் போது, பகுதி நேர வேலைகளில் இங்கேயே சம்பாதிக்கும் வழிகளை மேரி தேடிக் கொடுத்தாள். அவள் தேடிக் கொடுக்கிற வேலைகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றி வதந்திகளும், கேலிகளும், அபாண்டங்களுமாக நிறையப் பேச்சுக்கள் இருந்தன. ஆனாலும் அந்த வெளிநாட்டு மாணவிகளில் பலர் தொடர்ந்து மேரியிடம் விசுவாசமாகவும், பிரியமாகவும்தான் இருந்து வந்தனர். வெளிநாட்டு மாணவிகளைத் தவிர உள்நாட்டு மாணவிகளுக்குள்ளேயும் அழகிய தோற்றத்தை உடைய

பலருக்கு மேரி அவ்வப்போது வலை விரித்துப் பார்த்தது உண்டு. பிடித்ததும் உண்டு. -

சுமதி ஒருநாள் கிண்டலும் குத்தலும், எகத்தாளமும் இயைந்து தொனிக்கிற குரலில், ”இங்கே பல மாணவிகளுக்கு நீதான் முதலாளியாமே...? ’பார்ட் டைம் ஜாப்’ எல்லாம் தேடித் தருகிறாயாமே?” என்று அவளிடம் கேட்டு வைத்தாள். சுமதி இப்படிக் கேட்டபோது சிரித்துக் கொண்டே போய்விட்ட மேரி அன்று மாலையிலேயே நேரே விடுதியில் அவள் அறையைத் தேடிக் கொண்டு வந்துவிட்டாள். அவள் தேடி வந்ததைப் பார்த்துச் சுமதிக்கு ஆத்திரமே வந்துவிட்டது.

"நீ தேடி வந்திருக்கிறதைப் பார்த்தாலே மத்தவங்க என்னைத் தப்பா நினைப்பாங்க’.. நீ தயவு செய்து உடனே இங்கேயிருந்து போயிடணும்”-என்றாள் சுமதி.

“போகமாட்டேன்... நீ என்ன செய்வே?” "ப்ளீஸ்... கெட் அவுட்..." 'நீ என்னைப்பத்தி அனாவசியமாத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கே சுமதி! நான் பலருக்கு உதவுகிறவள், யதார்த்தமாக இருப்பவள்.” -

"போதுமே! இந்தக் காலேஜிலே வந்து படிக்கிற ஃபாரின் ஸ்டுடண்ட்ஸ்லே முக்கால்வாசிப் பேரைக் கெட்ட வழியிலே சம்பாதிக்கப் பழக்கினதே நீ தானே?” 'உனக்கு யாரோ தப்பா என்னைப்பத்திச் சொல்லியிருக்காங்க... லெட்மீ எக்ஸ்ப்ளெய்ன் ஃபர்ஸ்ட்” "நீ சொல்லவே வேண்டாம்... எல்லாம் எனக்குத் தெரியும்.”

"என்ன தெரியும்? சொல்லேன்...” "பல அழகான பெண்களை நீ அடிக்கடி சினிமாவுக்கோ டிராமாவுக்கோ, ஷாப்பிங்குக்கோ அழைச்சுக்கிட்டுப் போற மாதிரி செயிண்ட்தாமஸ் மவுண்டிலே உங்க வீட்டுக்குப் பக்கத்திலே எங்கேயோ எதுக்கோ அழைச்சிக்கிட்டுப் போறே...”

"ஆமாம் ! அழைச்சிட்டுப் போறேன். எங்க வீட்டுக்குப் பக்கத்திலே ஃபேர்லேண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்'னு பணக்கார இண்டஸ்ட்ரியலிஸ்ட்டுகள் எல்லாம் சேர்ந்து ஒரு க்ளப் நடத்தறாங்க. அங்கே மாலை வேளைகளிலே 'டிரிங்க்ஸ் பார்ட்டி' நடக்கிறது உண்டு. அந்த பார்ட்டீஸ்லே குட் லுக்கிங் ஸ்மார்ட் கேர்ள்ஸ் ஸெர்வ் பண்ணினா சம்பாதிக்கலாம். ஃபாரின் கேர்ள்ஸ் மட்டுமில்லே சுமதி, உன்னைப்போல் அழகான நம்மூர்ப் பெண்கள் சில பேர்கூட அங்கே வராங்க. ஒரு டேபிள்லே ரெண்டு ரவுண்டு ஸெர்வ் பண்றதுக்குள்ளே முழு நூறு ரூபாய் நோட்டை டிப்ஸா வீசி எறியற பணக்காரன்கூட அங்கே இருக்கான்...”

“நீ நடத்தற ’பிராத்தலுக்’கு இப்படி ஒரு விளக்கமா ?”

'சுமதி ! டோண்ட் ஸே லைக் தட். பெண்கள் ஏர்ஹோஸ்டஸா இருக்கறதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே?”

"அதிலே என்ன தப்பு ?"

"அப்போ இதிலேதான் என்ன தப்பு? ஏர்ஹோஸ்டஸும் பிரயாணிகளைப் பார்த்துச் சிரித்து மினுக்கித் தளுக்கி அவர்களுக்கு டிரிங்ஸ் எல்லாம் பரிமாற வேண்டியிருக்கு. அதே காரியத்தைத்தான் இங்கே எங்க ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் ’க்ளப்’லியும் பெண்கள் செய்யறாங்க...”

”நீயும் உன் ரெக்ரியேஷன் கிளப்பும் எக்கேடு கெட்டாவது தொலையுங்க. உடன் நீ இங்கேருந்து போயிடு...”

மேரி சிரித்துக் கொண்டே போய்விட்டாள். அவள் சிரித்துக்கொண்டு போவதைப் பார்த்து ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கு ரோஷமே இருக்காது போலிருக்கே என்று நினைத்துக் கொண்டாள் சுமதி. கல்லூரியில் நிறையப் பெண்கள் மேரியின் வலையில் விழுந்திருப்பது சுமதிக்குத் தெரிந்திருந்தது. ’ஏதோ ஏர் ஹோஸ்டஸ்

உபசரிப்பதுபோல்’ என்று ஒப்புக்குச் சொல்கிறாளே ஒழிய அவளோடு செயிண்ட்தாமஸ் மவுண்ட்டுக்குப் போய்ச் சம்பாதிக்கிற பெண்கள் தட்டுக் கெட்டுச் சீரழிந்திருப்பார்கள் என்றே சுமதி நினைத்தாள்.

அதே சுமதிதான் இன்று மேரியைத் தன் அறைக்குக் கூப்பிட்டனுப்பியிருந்தாள். மேரி வருகிறவரை சுமதியின் மனத்தில் ஒரே போராட்டமாயிருந்தது. ஒரே குழப்பமாகவும் இருந்தது. ’ஏர்ஹோஸ்டஸாயிருக்கிறது, எப்படியோ அப்படித்தான் இதுவும்’ என்று அன்றைக்கு மேரி கூறிய சொற்கள் இன்று திரும்பத் திரும்பச் சுமதியின் செவிகளில் ஒலித்தன. அவளைச் சமாதானப்படுத்தவும் முயன்றன.

காலை பதினொரு மணிக்கு மே ஐ கம்இன்? என்ற முதல் கேள்வியோடும், "கேன் ஐ டூ எனிதிங் ஃபார் யூ சுமதி?” என்ற அதையடுத்த இரண்டாவது கேள்வியுடனும் மேரி சுமதியின் அறைக்குள் நுழைந்தாள்.

"மேரீ! அன்னிக்கு நான் பேசினதை எல்லாம் நீ மறந்து என்னை மன்னிச்சுடனும்.”

"லெட் அஸ் ஃபர்கெட் த பாஸ்ட்! இப்போ நீ கூப்பிட்ட காரியம் பற்றிப் பேசுவோம் சுமதீ... பழசெல்லாம் எதுக்கு ?”

“முதல்லே நீ உட்காரு மேரீ! இன்னும் நின்னுக்கிட்டே இருக்கியே! மெஸ்ஸிலேருந்து காபி, டீ ஏதாவது குடிக்கக் கொண்டாரச் சொல்லட்டுமா ?”

"ஒண்ணும் வேண்டாம். நீ கூப்பிட்ட காரியம் என்னன்னு சொல்லு சுமதீ.”

சுமதிக்கு அதை எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்லுவதென்று தெரியவில்லை. எடுத்தெறிந்து பேசித் துரத்தியவளையே மறுபடி வலியக் கூப்பிட்டுக் கொண்டு வந்து, நீ சொன்ன காரியத்துக்கு நான் தயார் என்று கூறுவது எப்படி என்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் மேரியிடம் அதைச் சொல்லியும் ஆகவேண்டும்.

"கூச்சப்படாம எங்கிட்டச் சொல்லு சுமதி... நான் என்ன செய்யனும்? பீ பிஃராங் வித் மி...”

"எனக்கு ஒரு நூறு ரூபாய் அவசரமா வேணும்...” அப்பாடா! விஷயத்தை ஒரு மாதிரி எப்படியோ மேரியிடம் சொல்லிவிட்ட திருப்தி சுமதிக்கு ஏற்பட்டது. அப்படியானால் நீ இன்றே ஃபேர்லாண்ட்ஸ் ரிக்ரியேஷன் கிளப்புக்கு வர்த் தயாரா?' என்று மேரி உடனே தன்னைத் திருப்பிக் கேட்கக்கூடும் என்று சுமதி எதிர்பார்த்தாள். ஆனால் மேரி மறுபேச்சுப் பேசாமல் தன் கையிலிருந்த சிறு டம்பப் பையைத் திறந்து புத்தம் புதிதாகப் பத்துப் பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி உடனே சுமதியிடம் நீட்டினாள். எந்த நிபந்தனையு மின்றியே நீட்டினாள்.

இவ்வளவு விரைந்து அவளிடமிருந்து பணம் கிடைக் கும் என்பதை எதிர்பார்த்திராத சுமதி அதை வாங்கு வதற்குத் தயங்கினாள். மேரி பணத்தை மேஜைமேல் வைத்து அது காற்றில் பறந்துவிடாமல் அருகிலிருந்த ஒரு புத்தகத்தையும் அதன் பாதிப்பகுதி மறைகிறாற்போல் ‘வெயிட்' ஆக மேலே எடுத்து வைத்தாள்.

அப்போது உடனே சுமதியின் மனக்கண்ணில் பிரமையாக ஒரு தோற்றம் உருவாகித் தோன்றியது. செயிண்ட் தாமஸ் மவுண்டில் ஒரு பெரிய தோட்டத் தோடு கூடிய ஒட்டடுக்கு வீட்டில் அகன்ற நடுக்கூடத்தில் தொந்தியும் தொப்பையுமாக அமர்ந்து சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டே சீட்டாடும் ஒரு கோஷ்டிக்குமுன் மேரி தன்னை அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி ஒரு டிரேயையும் தன் கையில் கொடுத்துப் "போ சுமதி! இதமாக நடந்துக்கோ... எல்லாம் ரிச் பீப்பிள்” என்று அவர்களை நோக்கித் தன்னை துரத்து வதுபோல் தோன்றியது. ஆனால் அது தானாகக் கற்பித் துக் கொண்டது என்பதை அடுத்தகணமே சுமதி உணர முடிந்தது. மேரி பணத்தை எடுத்து வைத்துவிட்டு,

”எனிதிங் எல்ஸ்...? நான் கிளாசுக்குப் போகணும் நேரமாச்சி..." என்று கிளம்பத் தயாராகி விட்டாள்.

"இந்தப் பணத்தை நான்..." என்று சுமதி ஏதோ ஆரம்பித்தாள். அவள் அதை முடிக்கவிடாமல்,

“ஒன்றும் அவசரமில்லை சுமதிǃ மெல்லப் பார்த்துக் கொள்ளலாம்” என்ற தானே வாக்கியத்தை வேறுவிதமாகச் சொல்லி முடித்துவிட்டாள் மேரி.

”இரு மேரிǃ நான்கூட ஸெகண்ட் அவர் கிளாஸுக்கு வரலாம்னு நினைக்கிறேன். ஃபேஸை வாஷ் பண்ணிண்டு வரேன்.”

"உன் ஃபேஸ்க்கு என்னடி சுமதி ! இப்படியே வந்தால்கூட ’கிளியோபாட்ரா’ மாதிரி இருப்பே”. மேரியின் கவனம் தன் உடல் அழகிலேயே இன்னும் இருப்பது சுமதிக்குப் புரிந்தது.

"மலேசியாவிலிருந்து படிக்க வந்திருக்கிறாளே உன் ஃபிரண்டு ஷீலா; அவளைவிடவா என்னை அழகுன்னு சொல்றே?” - -

-ஏதோ உள்ளர்த்தம் வைத்துக் கொண்டுதான் சுமதி இப்படிக் கேட்டாள்.

"ஷீலா மட்டுமென்ன? உன்னைவிட அழகானவள் இந்தக் காலேஜிலேயே வேறு யாரும் கிடையாது.டி... சுமதி" என்று அதே பாணியில் ஓர் உள்ளர்த்தம் பொதிந்த பதிலை மேரியும் அப்போது சுமதிக்குச் சொன்னாள். மேரியின் அங்கீகாரம் சுமதிக்குப் புரிந்தது. சுமதியின் இசைவு மேரிக்கும் ஒருவிதமாகப் புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/4&oldid=1146874" இலிருந்து மீள்விக்கப்பட்டது