அன்பு வாழ்க்கை/புலிநகம்

புலிநகம்


1659!மராட்டிய மண்டலத்திலே மாவீரன் சிவாஜி வீர வெற்றிகளின் பயனாக, விடுதலை வேட்கை கொண்டவர்களின் மனதிலே கொலு வீற்றிருந்த சமயம், மணிமுடி தரித்துக் கொள்ளவில்லை' ஆனால் அவன் காலடியிலே கிடந்தது மணிமுடி! ஓய்வுதான் இல்லை. பட்டாபிஷேகத்துக்கான காரியங்களைக் கவனிக்க மராட்டிய மன்னன் என்ற பட்டம் இல்லையே தவிர, நிலை அதுதான். யார் இந்த மாயாவி ? மலைகளை அதிரச் செய்கிறான். மண்டலங்களை மண்டியிட வைக்கிறான். உழவர்களை வீரராக்குகிறான் ! எங்கும் அவன் வெற்றி! பரத கண்டத்திலேயே புதியதோர் ஒளியானான்! பரவி வரும் இஸ்லாமிய ராஜ்யத்துக்குப் புயலானான்! இவனை இப்படியே விட்டுவைப்பதா வீரன், தீரன் இரட்சகன் அவதார புருஷன் என்றெல்லாம் புகழ்ப்படுகிறான். புதிய அரசை சிருஷ்டிக்கிறான். சாத்பூராமலைச் சரிவுகளிலெல்லாம் அவனுடைய போர் வீரர்கள்! குகைகளிலே கூடித் திட்டம் வகுத்து விடுகிறான். பிறகு அரண்மனைகளிலே அழுகுரல் கேட்கிறதே சரித்திரத்திலே அவன் தேடும் இந்தச் சாமான்யக் குடியானவனை இப்போது வளர விடுவது ஆபத்து எதிர் காலத்திலே அவன் புகழ் நிலைத்து விடும்! சிவாஜியின் வெற்றி நிறுத்தப்பட வேண்டும்--என்று இந்திய உபகண்டத்திலே ஆங்காங்கு ஆச்சரியமும் அச்சமும் கலந்த பேச்சு. எங்கும் அந்த அஞ்சா நெஞ்சனைப் பற்றி. அவனை அலட்சியப்படுத்த முடியாது. அவன் வளர்ச்சியைச் சாமான்யமாகவும் கருதக்கூடாது. மண்ணிலே செம்பொன் கண்டெடுக்கிறான். மயங்கிய மராட்டியத்திலே மாணிக்கங்களை உண்டாக்கி விட்டான். மாசு மருவற்றவன் என்றும் புகழப்படுகிறான் குடியில்லை. கூத்தியில்லை, கோலாகல வாழ்வு இல்லை, வீரத்தின் சின்னமாய் விளங்குகிறான். மாற்றுக் குறையாத மராட்டியத் தங்கம் இந்த நிலையை நீடிக்கவிட்டால் இனி நமக்கு வரும் பங்கம்--என்று அரசு பீடத்தில் அமர்ந்திருந்தவர் அனைவரும் எண்ணிய காலம் அது. 1669-ம் ஆண்டு சிவாஜி ஜாகிர்தார் நிலைக்காக அல்ல சாய்ராஜ்யத்திபதியாவதற்காகவே வேலை செய்கிறான் என்பது விளங்கி விட்டது.

5000 குதிரை வீரர்கள் 2000 காலாட்படைகள் போர் முரசு கொட்டியபடி இப்பெரும் படையைத் தலையை தாங்கி நடத்தி வந்தான் தளபதி அப்சல்கான் குதிரைப் படை கிளப்பிய தூசுபோல சிவாஜியின் வெற்றிகள் இனி ஆகும் என்று எண்ணிணான். கோபத்தோடு உறுதியோடு அசைக்க முடியாத நம்பிக்கையோடு, சென்றான், அப்சல் கான். படையின் ஆர்பரிப்புக்கு இடையிலேயும், அவனுக்கு புறப்படுமுன்பு, தனக்கும் மன்னனுக்கும் நடந்த உறையாடல் காதிலே வீழ்ந்த வண்ணமேயிருந்தது வாழ்க்கையிலே முக்கியமான கட்டம் அது--அவனுக்கு மட்டுமல்ல--அவன் பணி புரிந்துவந்த அரசுக்கே.

"அப்சல்! உன் வாழ்நாளிலேயே மிக முக்கியமான செயலில் இறங்குகிறாய் இதிலே நீ வெற்றி பெறுவதை பொறுத்துத்தான இருக்கிறது பீஜ்பூர் மண்டலத்தின புகழ் என்று மன்னன கூறியபோது, "மன்னா! அந்த மலை எலி, இங்கு உலவுவது நமது மண்டலத்துக்கே இழிவு தருவது என்பது உணருகிறேன். இதோ புறப்படுகிறேன் சிவஜியைச் சிறைபிடித்து வருகிறேன் வெற்றியுடன் திரும்பி வருவேன். இது உறுதி" என்று வீரமாகப் பேசியதும், அப்சல்கானின் நினைவிலே பதிந்து விட்டது. படையைப் பார்க்கிறான் பூரிக்கிறான் தன் திறமையை எண்ணுகிறான் மகிழ்கிறான் சிவாஜியின் கண்முன் இப்படை தோன்றினால் போதும் பீஜபூர் மன்னன்முன் மண்டியிட அந்தமார்தட்டும் வீரன் ஓடோடி வருவான் என்று நினைத்தான். அப்சல்கான் சாமான்யனல்ல விரப்படைகளை கடத்திச் சென்று வெற்றி பல கண்டவன். எனவே அவன் எண்ணியது வீண் புகழ்ச்சியுமல்ல.

காடு கூடாரமாயிற்று! குதிரைகள் கானாறுகளிலே நீர் அருந்தின கடுகிச் சென்ற ஒற்றர்கள், கடும்புயல் மராட்டியத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதைச் கூறினர். கலங்காத உள்ளந்தான். ஆனாலும் காலாட் படை 7000 குதி ரைப்படை 5000 படைத்தலைவன் அப்சல்கான் என்று கேள் விப்பட்டால் சிவாஜியும் சோகிக்கத்தானே வேண்டி நேரிடும் இவ்வளவு பெரிய படையை நேரடியாகத் தாக்கி வெற்றி பெற முயற்சிப்பது, வீண் வேலை என்பதை, வீரத்துடன் யூகமும் தெரிந்த சிவாஜி தெரிந்துகொள்ளாமல் இல்லை. அப்சல்கான், பிரதாப்கார் நகருக்கு வெளியே, சிவாஜி தன் சிறு படையுடன் நகருக்குள்ளே! பெரும் புயல் வெளியே ஆபத்துக்கும் தனக்கும் இடையில் இருந்தது ஒரே ஒரு காடு - அதிலே இருந்ததும் ஒரே ஒரு பாதை. அந்தப் பாதையிலே பீஜ்பூர் படைகள் நுழைந்தால், சிவாஜின் படை, தப்பிச் செல்லவும் முடியாது. அதுவரை பெற்ற வெற்றிகள் அவ்வளவையும் அப்சல்கானுக்கு காணிக்கையாக்கிவிட வேண்டியதுதானா? மராட்டியம் மண்டியிட வேண்டியதுதானா? பீஜபூர் சுல்தானிடம் பணியத்தான் வேண்டுமா? வேறு மார்க்கமே இல்லையா?

1946! இன்று, இப்றாகீமுக்கு. இந்து தேச சரித்திரத்தைப் போதிக்கிறார் சுந்தரேச ஐயர்! அப்சல்கானின் பெரும்படையைக் கண்ட அஞ்சாநெஞ்சன் சிவாஜி என்ன செய்தான்?அப்சல்கானைத் தனியாக சந்திக்க வேண்டுமென்று கூறினான். பீஜபூரான் வந்தான். அவனைத் தழுவு வது போலச் சிவாஜி நடித்துத், தன் கரத்திலே வைத்தி ருந்த புலி நகத்தால் கீறிக்கொன்றான்!--என்று வரலாற்று ஆசிரியர் கூற, இபுறாகீம் தன்னையுமரியாது "பத்மாஷ்" என்று ஏச துஷ்ட நிக்ரஹார்த்தம் எதையும் செய்யலாம் என்று வரலாற்று ஆசிரியர் கொஞ்சம் வைதீக போதனையும் புரிகிறார் என்ன சமாதானம் சொன்னாலும் 'இபுறாகீம் "இது சதிச்செயல்! நம்பிக்கைத் துரோகம்! வஞ்சனை ஒரு வீரனின் இலட்சனமல்ல!" என்று கூறாமல் இருக்க முடியுமா? உண்மையிலேயே, மாவீரன் செய்யலாமா? சமரசம் பேச அழைத்துத தழுவி, தழுவுகிற நேரத்தில், வஞ்சகமாக கொல்வது, வீர மரபா? இல்லை! இபுறாகீம் மட்டுமல்ல வெளி உலகு முழுவதும், சிவாஜி அப்சல்கானைக் கொன்றார் அக்ரமம். சதி செய்தார், தன் கீர்த்திக்கே இதனால் ஓர் பழி தேடிக்கொண்டார் என்றே கூறும். ஆனால் இபுறாகீமுக்கும் தெரியாது இவ்வளவு ரிெய இலட்சிய புருஷன் ஏன் இந்தச் சதிச் செயல் புரியவேண்டும் என்று. தனிமையிலே சிந்தித்துச் சோகிக்கும் தோழர்களுக்கும் தெரியாது ஏன் சிவாஜி அங்ஙனம் செய்தார். வீர சிவாஜியை இந்த வஞ்சகம் புரியச் செய்த சூக்ஷய சக்தி எது? என்ற உண்மை வரலாற்று ஆசிரியரும் அதை கூறமாட்டார். சிவாஜி துரோகம் செய்ததாக, இபுறாகீம் எண்ணிக்கொண்டால் அவருக்கு என்ன நஷ்டம், அவர் இபுறாகீம் இனமுமல்ல, சிவாஜி பிறந்த மராட்டியக் குடியுமல்ல, அவர் பூதேவர் பரம்பரை சிவாஜியின் போக்குக்கான உண்மைக் காரணம் என்ன? அதை அறிய மீண்டும் நாம் கொஞ்சம் நேரம் அப்சல்கானின் படையுடன் போகவேண்டும். போவோம்.

வாளையும் வேலையும், கூர்பார்த்துக்கொண்டும், இன்ன விதமான நிலையிலே இவ்விதமாகக் கததியை வீச வேண்டும் ன்ன இடத்திலே முன்னேறித் தாக்க வேண்டும். இந்த இடத்திலே, பக்கவாட்டில் தாக்க வேண்டும். என்று போருக்கான எண்ணம் ஏற்பாடு ஆகியவைகளிலே, அப்சல் கானின் படை ஈடுபட்டிருந்தது. கூடாரத்திலே அமர்ந்து வர இருக்கும் வெற்றியை நினைத்துக் குதூகலமாக வீற்றிருந்தான் அப்சல்கான். அந்தக் காட்டிலே கோபிநாத் பண்டிட் ஜீயும், அதே இடத்தில் உலாவுகிறார். அவரிடம் வாள் இல்லை. ஆனால் மற்றக் குலத்தவரைத் தம் காலடியிலே காண்பதற்கான மகத்துவத்தை மகேஸ்வரனிடம் பெற்றதாகக் கூறிக்கொள்ளும் பிரம்மகுலத்தவர், கோபிநாத் அப்சல்கான் சிவாஜியை முறியடிக்கப் படைபலத்துடன் வந்ததுடன், சமரஸம் பேசச் சிவாஜி விரும்பினால், அதை முன்னின்று முடித்து வைக்க அந்த முப்பிரியானையும், அழைத்து வந்தான் கோபிநாதரின் மனதிலே என்னென்ன எண்ணங்கள் கிளம்பின என்பதை வரலாறு எங்ஙனம் எடுத்துக் காட்டும்! சரிதங்களிலே சம்பவங்களைக் கொண்டு தானே, அவற்றுக்கான சிலபல சிந்தனைகளை யூகிக்க முடியும்! கோபி நாத பண்டிட்ஜி தூது அனுப்பப்பட்டார் சிவாஜியிடம் பெரியதோர் படைதயாராகயிருக்கிறது என்பதை எடுத்துக் கூறி, சிவாஜியைப் பணியவைக்கக் கிளம்பினார் கோபிநாத். மகத்தான பொறுப்பென ஓர் செயல் தரப்பட்டது, என்பதை எண்ணும்போது கோபிநாந் பெருமை அடைந்துதான் இருப்பார். ஒரு மண்டலாதிபதியின் தூதராக, மற்றோர் மாவீரனிடம் செல்வது சாமான்யமான காரியமல்ல. பண்டிட் ஜி, புறப்பட்டார். நாடுகளைக் காடாக்கி விடக்கூடிய படைபலம் பெற்றிருந்த அப்சல்கானின் தூதராகக கிளம்பிய அந்த ஆரியனின் அகம், முதலில் பெருமை கொணடிருக்கும். பிறகோ சிந்தனை வேறாகித்தான் இருக்கும் பரத கண்டத்திலே பல் வேறு இடங்களிலே நிலைபற்றிய நினைப்பு தோன்றாதிருக்குமா? கோபிநாத்தின் மனக்கண் முன் அப்போது என்னென்ன காட்சிகள் தோன்றியிருக்கும். அஸ்தினாபுரம் டில்லியாகி அங்கு அவுரங்கசீப் அரியாசனம் ஏறும் காட்சி, ஓர் புரம்! வங்கத்திலே இஸ்லாமியரின் வல்லமையால் ஆட்சி நிறுவப்பட்ட காட்சி மற்றோர் புறம்!

பீஜபூரிலே ஒரு சுல்தான்-- தன்னைத் தூது போகச் செய்த அப்சல்கான் துடிதுடிக்கும் படையுடன் இருக்கும் காட்சி. எதிரே பிரதாப்கார நகரம்-- அங்கேயோ, மராட்டிய குலம் ஆள்கிறது. ஒரு புறம் இஸ்லாமியர் மற்றொர்புரம் மராட்டியர். ஆசிரியர் ஆட்சி பீடத்திலே எங்கும் தென்படவில்லை. பெருமையுடன் அந்த பூபாகத்தை பாரத் வருஷம் பரத கண்டம் ஆரியவர்த்தம் என்று பேசிக் கொள்ளும் ஆரியர் அரசபீடத்திலே இல்லை தூதுபோகும் வேலைதான் கிடைத்தது கோபிநாத் பண்டிட்ஜின், மனக்கண் இவை போன்ற காட்சிகளைக் காணாதிருக்க முடியாது!

அப்சல்கான் அனுப்பிவைத்த கோபிநாத் பண்டிட்ஜி சில சகாக்களும் பணியாட்களும் புடைசூழ நகருக்குள் நுழைநதார். 'பணிந்துவிடு சிவாஜி! இல்லையேல்! அழிவு இந்நகருக்குள் நுழையும் நீ அஞ்சா நெஞ்சனாக இருக்கலாம் ஆனால். அப்சல்கானிடம் இருக்கும் படை பிரமாண்டமானது" என்று கூற, சிவாஜி, கோபிநாத் பண்டிட்ஜீயை மரியாதையாக வரவேற்றான். உபசாரம் பல புரிந்தான். அவரும் உடன் வந்தோரும் தங்கியிருக்க, இடவசதிகள் ஏற்பாடு செய்து தந்தான். ஒரு பலம் பொருந்திய துரைத்தனத்தின் தூதுவராக வந்துள்ள பண்டிட்ஜியை மிக்க கெளரவமாக நடத்த வேண்டுவது முறைதானே முறை தெரியாதவரா வீர சிவாஜி முறைமட்டுமல்ல கொஞ்சம் யூகமும் தெரிந்தவர். கோபிநாத் பண்டிட்ஜி பிரம்ம குலத்தவர் என்பது தெரிந்ததும் சிவாஜிக்கு வர இருக்கும் ஆபத்தின்றும் தப்ப ஒரு வழி கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கை பிறந்தது.கோபிநாதருக்குச் செய்தமகத்தான உபசாரத்தின் உட்பொருள் அதுதான். அவருடன் வந்தவர்களுக்குத் தரப்பட்ட விடுதிகளினின்றும் கொஞ்சம் தொலைவான இடத்திலே பண்டிட்ஜிக்கு தங்கும் இடம் அமைக்கப்பட்டது. நள்ளிரவில் சிவாஜி அந்தத தனியிடம் சென்றான். கோபிநாத் பண்டிட்ஜியிடம் தனியாகப் பேச தூது கூற வந்தவரை இலகுவில் தன்பக்கம் இழுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் மராட்டிய மாவீரரின் நம்பிக்கை வீண் போகவில்லை. மறையவர் மலர்ந்த முகத்துடனேயே வரவேற்றார் சிவாஜியை.

"மாமுனியே, மராட்டிய மண்டலத்துக்கு வந்துள்ள ஆபத்தை நினைக்கும்போது.."

"மனக்கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மாவீரனே பணிவதன்றி வேறு மார்க்கம் இல்லை."

"பணிவது பற்றியல்ல பூதேவா நான் சோகிப்பது என் மனோபீஸ்டம் சங்கல்பம் பாழாகுமே."

"படை பலம் அவனிடம் அதிகம் எதிர்த்துப் பயன் இல்லை. தோல்வி நிச்சயம் சம்பவிக்கும். அழிவை அணைத்துக்கொள்வாருண்டோ?"

"மறையரே என் சங்கல்பம் இங்கு பாரத்வர்ஷத்திலே, நமது ஜென்மபூமியில், புண்யபூமியி, இந்து சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்பதுதான். என் பொருட்டு அல்ல பிராமணோத்தமர்களின் பொருட்டேதான் இந்த பாடு படுகிறேன். என் இலட்சியம் தங்களுக்கு தெரிந்திருக்கும். பசு, பிராமணர் இவற்றின் இரட்சகன் சிவாஜி என்பதை ஸ்தாபிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். இந்த ராஜ்யம் ஏற்பட்டால்தான் பூர்வபெருமை நிலைக்கும் பண்டைச் சிறப்பு மீண்டும் தோன்றும் ஆரியவர்தத்திலே, வேதாச்சாரமும் குலதர்மமும் ஜொலிக்கும் ஸ்வாமி! சித்தம் குழம்பியிருக்கும் நான் தங்களை யாசிக்கிறேன். என் சங்கல்பம் ஈடேறவழி செய்யுங்கள். சனாதன தர்மம் தழைக்க உபாயம் கூறுங்கள். இந்த பீஜம்பூர் படையினால் அழித்துவிடலாமோ, நான் பாடுபட்டு வளர்த்துவரும பால்யன்! பூஜிதரே! ஒரு வழி காட்டும்"

"நானா? வழி காட்டுவதா? சிவாஜி நான் பீஜப்பூர் சுல்தானின் தூதுவன்"

"இல்லை சுவாமி தாங்கள் பார்த்வர்ஷத்தின் பிரதி நிதி ஆரியாவர்த்தத்தை இரட்சிக்க வேண்டிய ஆரியசிரேஷ்டர் தங்களை அப்சல்கான் அனுப்பியிருந்தாலும் சரி; பீஜப்பூர் சுல்தான் அனுப்பியிருந்தாலும் சரி, நான் தங்களை ஆண்டவன் அனுப்பிவைத்த தூதுவர் என்றே கொள்கிறேன். ஆரிய, ஆரியவர்த்தத்துக்கு ஆபத்து நேரிடுவதைத் தடுக்கப் பிரம்ம குலத்தவராகிய உமக்கு உரிமையுண்டு. உமது கடமையும் அதுதான். நான் ஆரிய சேவாசைன்யத்தை நடத்துபவன். கட்டளை பிறப்பித்துவிடும். ஆரியாவர்த்தத்தை அன்னியரிடம் தந்துவிடவா? அப்சல்கானின் அடிபணியவா? ஆரிய நான் அடிபணிவது என்றால் என்ன அர்த்தம்? ஆரிய வர்த்தம் அழிந்தது என்று பொருள்."

கோபிநாத் பண்டிட்ஜி வந்ததோ, சிவாஜியைப் பணிய வைக்க சிவாஜியோ, மேலே தீட்டப்பட்ட கருத்துக்களைக் கொட்டினான் கோபிநாத் முன்பு. கோபிநாத் கூறிவிட்டிருக்கலாம், "சிவாஜி துரோகம் செய்யமுடியாது. நம்பிக்கை மோசம் மகா பாவம் நான் பீஜப்பூர் சுல்தானின் உப்பைத் தின்பவன் அவனுக்கு ஊறுதேட மாட்டேன். அது கயவர் செய்யும் காரியம். தர்ம சாஸ்திரம் இதை ஏற்காது என்று ஆனால் கோபிநாத் அது போல கூறினாரா? இல்லை துரோகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் இல்லை. ஆரியவர்த்தம் ஆரிய சிரேஷ்டர் சனாதனம் எனும் சொற்களின் சுவையை ரசித்தார் பீஜப்பூர் சுல்தானைக் காட்டிக்கொடுக்க இசைந்தார் வந்தது தூதுவனாக ஒப்புக்கொண்டதோ துரோகியாவதற்கு எவ்வளவு நேரம் கோபிநாத் பண்டிட்ஜியின் மனதிலே போராட்டம் இருந்ததோ நாம் அறியோம் துரோகி என்று உலகு எதிர்காலத்திலேனும் தூற்றுமோ என்று துளியாவது அச்சம் பிறந்ததோ அறியோம். பக்தனின் தூபத்தைப் பெற்றுப் பரவசமடைந்த பண்டிட்ஜி, பழி, பாவம் எதையும் கருதாமல், எந்த பீஜப்பூர் சமஸ்தானத்தால் வளர்க்கப்பட்டாரோ அதே அரசுக்குத் துரோகியாக இசைந்தார்.கோபிநாதர், சாமன்யரா? பண்டிட்ஜி! வேதபுராண இதிகாசம் தெரிந்தவர்! அதாவது, நயவஞ்சகம், அடுத்துக் கெடுத்தல், அணைத்து அழித்தல், கொஞ்சி நஞ்சு தருவது போன்ற முறைகளை ஏராளமாகக்கூறும் ஏடுகளை நன்கு அறிந்தவர், பாரதத்திலே, திருதராஷ்டிரன், எதிரியை அணைத்து அழிப்பதுபற்றிப் படித்திருக்கிறார்! சூரியனையே சக்ராயுதத்தால் மறைத்துப்பொழுது சாய்ந்ததாகக் காட்டி எதிரியைக் கொல்ல அருச்சுனனுக்கு உதவிசெய்த கண்ணன் காட்டும் வழியை அறிந்தனர் கோபிநாத்! பாரதம், எதிரியை அழிக்க, "தர்மாதர்மம்" பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற ஆரியமார்க்கத்தை எடுத்துரைக்க, கோபிநாதருக்கு மட்டுமல்ல, சிவாஜிக்கும் தெரியும் பாரத--இராமாயணக் கதை பூசைக்குரிய இராமன் மரத்தின் பின்புறமிருந்து அம்பு எய்து வாலியைக் கொன்ற கதையை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்ததும், அதைக் கேட்டு ஆனந்தித்ததும். வீண் போகுமா? இப்படிப்பட்ட சமயத்திலே, அந்த இதிகாசங்களிலே தெரிந்து கொண்ட 'முறைகள்' பயன்பட வில்லையானால், அவைகளைப் படித்துத்தான் பயன் என்ன? கோபிநாத பண்டிட் சிவாஜிக்கு அப்சல்கானின் படையை முறியடிக்க; இன்ன யாகம் செய். அதனால் இன்ன அஸ்திரம் கிடைக்கும் என்று யோசனை கூறினாரா? இல்லை! தெய்வத்தை உபாசனை செய் இந்த மந்திரத்தை ஜெபித்துவிட்டுப் போருக்குக் கிளம்பு, என்று உபதேசம் செய்தாரா? அவர் 'குரு'வாக அமரவில்லை. பீஜப்பூர் குடிகெடுக்கும் துரோகியானார். அப்சல்கானுடன் போர் வேண்டாம்--பணிதலாகச் சொல்லி யனுப்பு பாவனைக்கு--அப்சல்கானிடம் நேரடியாக பணியத் தீர்மானித்திருப்பதாக செய்தி அனுப்பு--தனியாக அப்சல்கான் இங்கே விஜயம் செய்யட்டும், நான் அவரிடம் சரண் புகுந்து விடுகிறேன்--சமர் வேண்டாம் என்று அப்சல்கானிடம் தூது அனுப்பு என்று யோசனை கூறினார் பண்டிட் கோபிநாத்--பண்டிட்?--இல்லை...பாதகன்!

"அப்சல்கான் வருவானா?"

"அனுப்பி வைக்கிறேன், அதாவது, அவன் இங்கே தனியாக வரும்படி நான் செய்கிறேன்"

"வந்த பிறகு......?"

"வந்த பிறகு! மராட்டியத்தை உன் மண்டலத்தை உன் எதிர்காலத்தைக் கருக்கக்கூடிய எதிரி, துணையின்றி தனியாக வருகிறான் என்னைச் சந்திக்க! வந்த பிறகு...என்று என்னைக் கேட்கியோ, வகை கெட்ட..."

"அறிந்தேன் ஆரிய! ஆனால், அப்சல் ஆயுதபாணியாகத்தானே வருவான்?"

"பைத்தியக்கார! அப்சல்கான், அஞ்சி அடிபணியக் காத்துக் கொண்டிருக்கும் சிவாஜிக்குத் தஞ்சமளிக்கவன்றோ இங்கே வருவான்-- நிராயுதபாணியாகவே வருவான்--அவ்விதம் ஏற்பாடு நடக்கும்."

"பண்டிட்ஜி! தங்கள் பாதாரவிந்தம்"

கோபிநாத் பண்டிட்டின் சதியாலோசனையே சிவாஜியைத் தனியாகக் காண, அப்சல்கான் வருவது என்ற ஏற்பாட்டை உருவாக்கிற்று! வீர சிவாஜிக்கு வாள் ஏந்தத் தெரிந்த அளவுக்கு வஞ்சனை வீசத் தெரிந்திருக்க முடியாது. வேதிய குலத்தவராம் கோபிநாத் பண்டிதர், அந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டார், பரம்பரைப் பழக்கத்தின்படி! சிவாஜி மகத்தானதோர் 'இராஜ தந்திர' வெற்றி பெற்றதாக சந்தோஷித்தான் பண்டிட் கோபிநாத், மரரட்டியத்தை ஆரிய சேவா பீடமாக்கி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். அப்சல் கானோ திறமை மிகுந்த தூதுவர், திரும்பி வருவார், சீறிப்போரிட்ட சிவாஜியின் சரணாகதிச் செய்தியைத் தூக்கிக்கொண்டு, என்று எண்ணிச் சாய்ந்திருந்தான். கோபிநாத் பண்டிட்ஜி வந்து சேர்ந்தார்--அப்சல்கானின் கொலைக்கான ஏற்பாடு செய்துவைத்துவிட்டு! அப்சல் படை அறிவான், போர் அறிவான். பாதகம் சதி, பசப்பு இவைகளைத் தாங்கி நடமாடும் மனித உருவங்கள் தன் பக்கத்தில் இருப்பதை எங்ஙனம் அறிவான்!

"சலாம்! பண்டிட்ஜி" என்று சந்தோஷமாக, கோபிநாத்தை வரவேற்றான். அன்று மட்டுந்தானா! 1946-ல் கூடத்தான்! வாங்க ஸ்வாமி' என்று கோபிநாதர்களை வரவேற்கிறார்கள்!

'சரண் அடையச் சம்மதித்து விட்டான்!'

'பஹுத் அச்சா! பண்டிட ஜீ! அவன் மகாமுரடன் என் பார்களே, எப்படிப் பணியச் சம்மதித்தான்?'

"முரடனாக இருக்கட்டுமே, சைன்யாதிபதி! அவன் நம் என்ன குருடனா, இந்தப் பிரமாண்டமான படை நம்மிடம் இருப்பதை அறியாதிருக்க!"

"ஒரு விதத்தில் என் வெற்றிதான்."

"ஒருவிதத்தில் மட்டுமா, சகல விதத்திலும் கோபிநாத்தின் வெற்றிதான் அது. போரிடப் புறப்பட்ட அப்சல் போரிடாமலேயே மாவீரனை மண்டியிடச்செய்து விட்ட மகிழ்ச்சிப் பெருக்கால், கேளிக்கையாகத்தானே இருந்திருப்பான். ஏன் இராது? எந்தப் பக்கமும் எந்த வீரனுடைய வெற்றி முரசு கேட்டு வந்ததோ, எந்த வீரனின் வெற்றிக் கொடி மலை உச்சிகளிலெல்லாம் மகோன்னதமாகப் பறக்க விடப்பட்டதோ, அந்த வீரன் மண்டியிடச் சம்மதிக்கிறான் என்றால், மகிழ்ச்சி பிறக்காதிருக்குமோ. அப்சல்கானுக்கு,

அந்த மகிழ்ச்சி பன்மடங்கு அதிகமாயிற்று, சிவாஜியால் அனுப்பப்பட்ட தூதன், அப்சலிடம் சரணாகதியை உறுதிப்படுத்த வந்தபோது. கோபிநாத் பண்டிட்ஜி அப்சல்கானால், அனுப்பப்பட்ட தூதன்! சிவாஜி அனுப்பிய தூதனும், ஓர் பிராமணனே! பெயர் கிருஷ்ணாஜி பாஸ்கர்.

'சிவாஜி, சமர் செய்ய விரும்பவில்லை. பீஜப்பூர் ஆட்சிக்கு அடங்கி நடக்க ஒப்புக்கொள்கிறார். பீஜப்பூர் சுல்தானின், அதிகாரத்துக்குக் கட்டுப்பட இசைகிறார் சரண் அடைய விரும்புகிறார். வீராதி வீரனே! எங்கள் சிவாஜியின் இந்த வேண்டுகோளைத் தயை கூர்ந்து ஏற்று அருள் வேண்டுகிறேன்'. என்று பாஸ்கரன் கூற அது கேட்டுப் பரமானந்தம் அடைந்த அப்சல்கான், நமது படையுடன், பிரதாப்கார் நகருக்குள் பவனி வருவோம், அங்கு சிவாஜி பணியட்டும், பீஜப்பூர் ஆட்சியின் கீழ் வாழச் சம்மதிக்கும் சிவாஜிக்கும் நாம், சுல்தானின் பிரதிநிதி என்ற முறையிலே, பேட்டி தருகிறோம்' என்று கூற, பாஸ்கரன் பயந்து தழதழத்த குரலில், ஒரு விண்ணப்பம்! சிவாஜி, சரணாகதி சம்பந்தமாகப் பேசுவதற்காகத் தங்களைத் தனியே சந்திக்க விரும்புகிறார், இங்கேயே வர எண்ணினார் என்று வலைவீசும் டேச்சைத் துவக்கினார் சதிக்கூட்டத் தலைவன் கோபிநாத், 'இங்கே இருக்கும் பெரும்படை முன்னர், அஞ்சுகிறான் உங்கள் அசகாயசூரன் பிராமணரே! ஏன் மறைக்கிறீர் வெட்கமோ!' என்று கூறினார். அப்சல்கானின் ஆனந்தம் அளவு கடந்ததாகிவிட்டது, 'கோபிநாத் பண்டிட்ஜி! அவ்வளவு பயங்கொள்ளியா சிவாஜி' என்று கேட்டான் அப்சல்.

அந்தக் கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோபிநாத், முகஸ்துதியை வாரி வாரி வீசினான் அப்சல்கானின் யூகம் அறியுமளவு.

'அதிலென்ன ஆச்சரியம். சேனாதிபதி அவன், உமது ஜெயங்களைப் பற்றிக் கேள்விப்படாமலா இருந்திருப்பான் ஏன் தான் அதுவரையில் நாதியற்ற நகரங்களையும் நெஞ்சில் உறுதியற்ற கும்பலையும் வெற்றிகண்டேன் என்று வீறாப்பு பேசித்திரிந்தான் இன்று மகத்தானதோர் படையை நடத்தும் தீர புருஷனாகிய அப்சல்கான். களத்திலே சிம்மம்போல் நிற்கும் தலைவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததும், நடு நடுங்கிப் போய்விட்டான். பீஜப்பூர் சமஸ்தானத்தின் பெருமையை அறியானா? தன் பக்கம் பீஜபூரின் திருஷ்டி படாதிருந்தவரையிலே தப்பிப் பிழைத்தான். இப்போது?'

இந்த முகஸ்துதி, அடியோடு அப்சலைக் கவிழ்த்து விட்டது.

'சரி! பயம் வேண்டாம் என்று சொல் நாளை நாம் தனியாக ஆயுதமின்றி வருகிறோம். சிவாஜியின் சரணாகதிக்கானை சம்மதத்தைப் பெற' என்று கிருஷ்ணாஜி பாஸ்கருக்குக் கூறி அனுப்பிவிட்டு, 'இப்படிப்பட்ட பயங்காளியை நான் கண்டதே இல்லையே!' என்று எண்ணி எண்ணிப் பூரித்தான்.

சதியாலோசனைத் திட்டத்தின்படியே சந்திப்பு நிகழ்ந்தது. போர் வீரர்களின் துணையின்றி, ஆயுதமுமின்றி சிவாஜியை சந்திக்க அப்சல்கானை அழைத்து வந்தான் கோபிநாத், சிவாஜி நேசத்தையும், சமரசத்தையும் காட்டுவது போல, அப்சல்கானைத் தழுவினான்.'ஐயோ' என்று அலறினான் அப்சல்கான் அவன் அடிவயிற்றிலே புகுந்தது சிவாஜியின் கரத்திலே, மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிநகம்? சரணாகதியை ஏற்றுக் கொள்ள வந்த அப்சல்கான், வஞ்சகமாக வதைக்கப் பட்டான். இதற்குள் அப்சல்கானின்படை புகக்கூடிய பாதை அடைக்கப்பட்டுவிட்டது சிவாஜியின் படை இனிப்போர் இல்லை, என்று எண்ணி, ஆயுத்தம் ஏதும் செய்யாது, ஆனந்தத்திலே மூழ்கியிருந்த அப்சல்கானின் படைமீது பாய்ந்தது அங்கேயும் படுகொலை தான் கோபிநாத் பண்டிட்ஜீயும் கிருஷ்ணாஜீ பாஸ்கரும் சிவாஜியை வஞ்சணையில் ஈடுபடச் செய்து சதிச்செயல் புரியவைத்து மறைக்க முடியாத பழியை மரவீர் தலைவனுக்கு வாங்கித் தந்தனர் அப்சல்கானின் உயிரையும் போக்கினர் அப்சல்கானைச் சிவாஜி அக்ரமமாகக்கொன்ற வரலாற்றுச்சம்பவத்தையே மக்கள் அறிவர் வாலாற்று ஆசிரியர் கூறுவர். ஆனால் கோபிநாத் பண்டிட் கிருஷ்ணாஜி பாஸ்கர் என்பவர்களைப்பற்றிக் கூறார். சரித்திரம் என்றால் மன்னர்கள் கதைதானே என்று மக்களும் எண்ணிக்கொண்டு கோபிநாத் பாஸ்கர் போன்றவர்களைக் கண்டுபிடிக்க  முயல்வதில்லை ஆனால் இந்த உபகண்டத்து வரலாற்றிலே கோல் கொண்டவர்களைப் பற்றி அறிந்து கொள்வதை விட கோபிநாத்களைப்பற்றித் தெரிந்துகொண்டால்தான் உட்பொருள் விளங்கும் உண்மை துலங்கும் அப்சல்கானின் மரணம், புலிநகத்தால் என்று கூறுவதைவிட பூசுரனின் புன்னகையால் என்று கூறுவதே பொருந்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அன்பு_வாழ்க்கை/புலிநகம்&oldid=1646127" இலிருந்து மீள்விக்கப்பட்டது