அமலனாதிபிரான்

திருப்பாணாழ்வார் பாடியருளிய தொகு

அமலனாதிபிரான் தொகு

(அழகிய மணவாளனது திருமேனி அழகில் ஈடுபட்டுப் பாதாதி கேசாந்தமாகப் பாடியருளியது)


திருமலைநம்பிகள் அருளிச்செய்த தனியன் தொகு

காட்டவே கண்ட பாதம் கமலநல் லாடை யுந்தி
தேட்டரு முதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபு குந்து
பாட்டினாற் கண்டு வாழும் பாணர்தாள் பரவி னோமே.


(இப்பாடல் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)


நூல் தொகு

அமலனாதிபிரான் தொகு

பாடல்:1 (அமலனாதி) தொகு

அமல னாதிபி ரானடி யார்க்கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.


பதப்பிரிப்பு


(கமலபாதத்தின் அழகு)


அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே.


பாடல்: 2 (உவந்தவுள்ளத்தன்) தொகு

உவந்த வுள்ளத் தனாயுல கமளந் தண்டமுற
நிவந்த நீண்முடி யனன்று நேர்ந்த நிராசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழி லரங்கத் தம்மானரைச்
சிவந்த வாடையின் மேற்சென்ற தாமென் சிந்தனையே.


பதப்பிரிப்பு


(சிவந்த அரை ஆடையின் அழகு)


உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிராசரரைக்
கவர்ந்த வெம்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்றதாம் என் சிந்தனையே.


பாடல்: 3 (மந்திபாய்) தொகு

மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்யநின் றானரங் கத்தர வினணையா
னந்தி போனிறத் தாடையு மதன்மே லயனைப்படைத்த தோரெழி
லுந்தி மேலதன் றோவடி யேனுள்ளத் தின்னுயிரே.


பதப்பிரிப்பு


(உந்தி அழகில் உள்ளம் ஈடுபடல்)


மந்தி பாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல்நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே.


பாடல்: 4 (சதுரமாமதிள்) தொகு

சதுர மாமதிள் சூழிலங் கைக்கிறை வன்றலைபத்
துதிர வோட்டி யோர்வெங்கணை யுய்த்தவ னோதவண்ணன்
மதுர மாவண்டு பாட மாமயிலாட ரங்கத் தம்மான் றிருவயிற்
றுதர பந்தமென் னுள்ளத் துண்ணின் றுலாகின்றதே.


பதப்பிரிப்பு


(உதரபந்தத்தின் அழகு)


சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெம்கணை உய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று
உதர பந்தம் என் உள்ளத்து உள்நின்று உலாகின்றதே.


பாடல்: 5 (பாரமாய) தொகு

பார மாய பழவினை பற்றறுத் தென்னைத்தன்
வார மாக்கிவைத் தான்வைத்த தன்றியென் னுட்புகுந்தான்
கோர மாத வஞ்செய் தனன்கொ லறியே னரங்கத் தம்மான்
வார மார்பதன் றோவடி யேனை யாட்கொண்டதே.


பதப்பிரிப்பு


(மார்பின் அழகு மனதைக் கொள்ளைகொள்ளல்)


பாரம் ஆய பழ வினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொல் அறியேன் அரங்கத்தம்மான்
வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.


பாடல்: 06 (துண்டவெண்பிறை) தொகு

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னஞ்சிறைய
வண்டு வாழ்பொழிற்சூ ழரங்கநகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண் டத்தொரு மாநிலமெழு மால்வரை முற்று
முண்ட கண்டங் கண்டீரடி யேனையுய் யக்கொண்டதே.


பதப்பிரிப்பு


(கண்டத்தின் அழகு)


துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்டர் அண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே.


பாடல்: 07 (கையினார்) தொகு

கையி னார்சுரி சங்கன லாழியர் நீள்வரைபோல்
மெய்ய னார்துள பவிரை யார்கமழ் நீண்முடியெம்
மய்ய னாரணி யரங்கனா ரரவி னணைமிசை மேய மாயனார்
செய்ய வாயையோ வென்னைச் சிந்தை கவர்ந்ததுவே.


பதப்பிரிப்பு


(செய்ய (சிவந்த) வாய் என் சிந்தை கவர்ந்தது)


கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
அய்யனார் அணி அரங்கனார் அரவின் அணை மிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.

பாடல்: 08 (பரியனாகி) தொகு

பரிய னாகிவந் தவவு ணனுடல் கீண்டமரர்க்
கரிய வாதிபி ரானரங் கத்தம லன்முகத்துக்
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்
பெரிய வாயகண்க ளென்னைப் பேதைமை செய்தனவே.


பதப்பிரிப்பு


(பெரியவாய கண்களின் பேரழகு)


பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்டு அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதைமே செய்தனவே.


பாடல்: 09 (ஆலமாமரத்தின்) தொகு

ஆல மாமரத் தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமு்ண் டானரங் கத்தரவி னணையான்
கோல மாமணி யாரமு முத்துத் தாமமு முடிவில்ல தோரெழில்
நீல மேனியை யோநிறை கொண்டதென் நெஞ்சினையே.


பதப்பிரிப்பு


(நீலமேனியின் நிறை அழகு)


ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர்எழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.


(இந்த ஒன்பது பாடல்களும் ஆசிரியத்துறை)


பாடல்: 10 (கொண்டல்வண்ணனை) தொகு

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெ
யுண்ட வாயனென் னுள்ளங் கவர்ந்தானை
யண்டர் கோனணி யரங்க னென்னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.


பதப்பிரிப்பு


(அரங்கனையே காணும் எம் கண்கள்)


கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.


(இப்பாடல் கலிவிருத்தம்)

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் முற்றும் தொகு

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=அமலனாதிபிரான்&oldid=1543307" இலிருந்து மீள்விக்கப்பட்டது