அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/குதிரையிலே போய் விட்டாராம் !


(62) குதிரையிலே போய் விட்டாராம் !



கர்னல் டேவிஸ் என்பவர் எதைச் சொன்னாலும் சற்று மிகைப்படுத்தியே கூறுவது அவருடைய வழக்கம்.

ஒரு நாள் சில நண்பர்களிடம், “எனக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியோடு போட்டியிடுவது என்றால் மிகவும் பிரியம். தினந்தோறும் குதிரைப் பந்தய மைதானத்தில் என்னுடைய குதிரைமீது சவாரி செய்தபடியே, வடகோடியிலிருந்து தென்கோடி வரைக்கும் எக்ஸ்பிரஸ் வண்டியோடு ஒடுவேன். இந்தப் பந்தயத்தில் ஒவ்வொரு தடவையும் என் குதிரையே வெற்றிபெறுகிறது” என்று கர்னல் கூறினார்.

ஒரு நண்பர் அதை நம்பவில்லை. “உங்கள் குதிரையால் அது முடியவே முடியாது; நிரூபிப்பீர்களா? நூறு டாலர் பந்தயம் கட்டுகிறேன்” என்று சவால் விட்டார்.

'அதற்கு நான் சாட்சி' என்றார் மற்றொரு நண்பர்.

கர்னல் ஒரு கனவான் அல்லவா? பந்தயத்துக்கு ஒப்புக் கொண்டார்.

மறுநாள் காலையில், பந்தயம் கட்டியவரும் சாட்சியும் கர்னல் வீட்டுக்குச் சென்று, கர்னல் இருக்கிறாரா?” என்று கேட்டனர்.

"இல்லீங்களே, அவர் இப்பத்தான் வாஷிங்டன் நகரிலிருந்து டெலிபோன் செய்தார். ஏதோ அரசு அலுவலாக அங்கே போயிருக்கிறார்” என்றான் வேலையாள்.

“என்ன? இதற்குள் அங்கே போயிருக்க முடியாது, எந்த ரயிலும் இவ்வளவு விரைவில் போயிருக்க முடியாதே" என்றார் பந்தயம் கட்டியவர்.

"இல்லிங்க, அவர் ரயிலில் போகவில்லையாம், குதிரையிலே சவாரி செய்தபடியே போய்விட்டாராம்” என்று அமைதியாகப் பதில் சொன்னான் வேலையாள்.

பந்தயம் என்ன ஆயிற்று?