அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/திருட்டுக் கதை


(85) திருட்டுக் தை



அமெரிக்கக் கதாசிரியர் சார்லஸ் வான் லோன் பல ஆண்டுகளாக சிறிய பத்திரிகைகளுக்கே எழுதி வந்தார்.

பெரிய பத்திரிகைகள், அவருடைய கதைகளைப் பிரசுரிக்கவே இல்லை.

ஒரு சமயம், அவருடைய கதையை, வேறு ஒருவர் திருடி, 'தி ஸாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்' என்ற பிரபல பத்திரிகைக்கு அனுப்பி விட்டார். அந்தக் கதையும் பிரமாதமாக வெளிவந்து விட்டது.

கதாசிரியர் வான் லோனின் நண்பர் 'போஸ்ட்' பத்திரிகாசிரியருக்கும் பழக்கமானவர். அவர் அந்தக் கதையைப் 'போஸ்டில்' பார்த்ததும், பத்திரிகாசிரியருக்கு ஒரு கடிதம் எழுத, "அது சரி, அந்தக் கதையை நீங்கள் வான் லோனிடம் நேரடியாகவே வாங்கியிருக்கலாமே, இப்படி ஏன் செய்தீர்கள்?" என்று கேட்டிருந்தார்.

அது முதல் கதாசிரியர் வான் லோனின் கதைகளை 'போஸ்ட்' ஆசிரியர் நேரடியாகவே அவரிடமிருந்து வாங்கிக் கொள்ளத் தொடங்கி விட்டார்.

'போஸ்ட்' பத்திரிகைக்கும் வான் லோனுக்கும் நீண்ட காலத் தொடர்பும் ஏற்பட்டது.