அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பசு காட்டிய பாதை


(60) சு காட்டிய பாதை



அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் என்னும் தீவில், ஹட்ஸன் நதிக்கரையில் குன்று ஒன்றில், பெரிய மாளிகை ஒன்றைக் கட்டினார் கோடீசுவரர் ஒருவர்.

செங்குத்தான அந்தக் குன்று கரடுமுரடானது. உச்சியில் இருக்கும் மாளிகைக்கு எந்த வழியாகப் பாதை அமைப்பது என்று புரியாமல் திகைப்புற்றார் கோடீசுவரர். அதற்கு தம் நண்பர் ஒருவரிடம் யோசனை கேட்டார்.

“அது என்ன பிரமாதம்! ஒரு பசுவைப் பிடியுங்கள் அது உதவி செய்யும்” என்றார் நண்பர்.

“பசுவா? அது எப்படி உதவி செய்யும்? சற்று விளக்கமாகக் கூறுங்கள்” என்று கேட்டார் கோடீசுவரர்.

"குன்றின் உச்சியில் ஒரு தொழுவம் அமைத்து அதில் ஒரு பசுவைக் கட்டுங்கள். தினமும் பசுவைக் குன்றின் அடிவாரத்துக்குக் கொண்டு வந்து விட்டு விடுங்கள். அது மேய்ந்து விட்டு தானாகவே குன்றின் உச்சிக்கு வழி கண்டு பிடித்துச் செல்லும், சில நாட்களில், மிகவும் சுலபமான வசதியுடன் கூடிய பாதை ஒன்றைப் பசு வகுத்து விடும்”என்று விளக்கினார் நண்பர்.

கோடீசுவரரும் நண்பர் கூறிய யோசனைப்படியே செய்யலானார்.

வளைந்து, வளைந்து குன்றின் உச்சிக்குச் செல்லும் சொகுசான வழி ஒன்றைப் பசு வகுத்து விட்டது.

அப்படியே தார் போட்டு அழகான சாலை அமைத்து விட்டார் கோடீசுவரர்.