அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/044-383

40. பிரைமரி ஸ்கூல்களும் அதன் சூப்பர்வைசர்களும்

அதாவது சிறுவர் சிறுமிகளின் கலாசாலைகளில் அவர்கள் கல்வியின் அதிவிருத்தியை மேலுமேலும் கோரி அவர்களைக் கண்ணிமைப்போல் பாதுகார்த்து இடைவிடா விசாரிணையும் மேல்பார்வையுஞ் செய்துவரும் உத்தியோகஸ்தர்களுக்கு இஸ்கூல் சூப்பர்வைசர்கள் என்று கூறப்படும்.

இத்தகைய உத்தியோகஸ்தர்களை நமது காருண்ய கவர்ன்மெண்டார் ராஜாங்க உத்தியோகஸ்தர்களுக்குச் சமதையாய்ச்சேர்த்து சிறுவர்களின் கல்வியை ஆரம்பத்திலே செவ்வைப்படுத்தி விருத்திபெறச் செய்யும் வழிகளைத் தேடுகின்றார்கள்.

இராஜாங்கத்தோரின் இத்தகைய பரோபகார எண்ணத்தையும், எழிய சிறுவர்கள்மீதுண்டாய இதக்கத்தையும் நிலைபெறச் செய்யும் சூப்பர்வைசர்களின் எண்ணங்களும், செயல்களும் எவ்வகையில் இருக்கவேண்டும் என்னும் பொது ஆராய்ச்சியையும், இதன்பொறுப்பையும் கண்டு அவ்வத்தியோகத்திற்குப் பெரும்பாலும் எச்சாதியோரை நியமித்தால் இராஜாங்கத்தோரின் நல்லெண்ணம் விருத்திபெருமென்பதை குடிகளே விளக்கி அவற்றை நிலை நிறுத்தல்வேண்டும்.

அதாவது:- பெரிய சாதிகளென்று பெயர் வைத்துக் கொண்டிருப்போர்கள் சிறியசாதிகள் என்று அழைக்கப்படுவோர் வாசஞ்செய்யும் கிராமங்களிலுள்ளப் பள்ளிக்கூடத்து சிறுவர்களை அவர்கள் வாசிக்கும் சாலைகளுக்கே நேரில் போய் பார்வையிடவும், பரிட்சை செய்யவுமில்லாமல் தூரவிலகி சில தோப்புகளிலும், தங்களுக்கு வசதியான இடங்களிலும், உழ்க்கார்ந்து கொண்டு பிள்ளைகளை தருவித்து தூர நிறுத்திக் கொண்டு தாங்களும் பரிட்சை செய்துவிட்டோம் தாங்களும் பார்வையிட்டோமென்று (ரிப்போர்டுகள்) எழுதிவிடும்படியான சிலசாதியாரிருக்கின்றார்கள்.

அவ்வகை சாதியோரை இச்சூப்பர்வைசர்வேலைகளுக்கு நியமிப்பதானால் இராஜாங்கத்தோரின் நல்லெண்ணம் முற்றும் பாழடைந்து போவதுடன் இராஜாங்கத்தின் பணமும் வீண்விரயமாகும். ஆதலின் சாதிபேதமற்றவர்களும், சமயபேதமற்றவர்களும், தன்னவர் அன்னியரென்னும் பட்சமற்றவர்களும், மனிதர்களை மனிதர்களாக எண்ணுகிறவர்களும், பேராசை அற்றவர்களுமாகிய பெரியோர்களையே பார்த்து சூப்பர்வைசர் உத்தியோகங்களில் நியமிப்பதானால் சகலசாதி சிறுவர்களைக் கல்வி விருத்திச்செய்து காப்பாற்றுவதுடன் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் கருத்தையும் ஈடேற்றுவார்கள்.

- 2:33; சனவரி 27, 1909 -