அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/130-383

126. தனவான்கள் நோக்கம் ஏழைகளை நோக்கின் இராஜாங்க நோக்கம் தனவான்களின் வாக்கை நோக்கும்

தற்காலம் விவேகமும், பெருந்தண்மெயும் அமைந்த பெரியோர்கள் சிலர் கருணைதங்கிய இராஜாங்கத்தோரை நோக்கி இந்தியாவிலுள்ள சிறுவர்கள் யாவருக்கும் நான்காம் வகுப்புவரையில் (கம்பல்சரி எடிகேஷன்) எனும் பிடிவாதக் கல்வி அளிக்கவேண்டுமென்பதாய்க் கேட்டதற்கு அவை கூடாதென்பதாய் இராஜாங்கத்தோர் மாறுத்திரம் அளித்திருப்பதாகத் தெரியவருகின்றது.

இத்தகையாய் சிறுவர்கள்மீது அன்பு பாராட்டி கல்வி விருத்தியைத் தேடிய பெரியோர்கள் தங்களுக்குள்ளுள்ள தனவான்கள் யாவரையும் ஒன்றுகூட்டி பெருந்தொகையை சேகரித்து (டிப்பிரஸ்கிளா) சென்னும் எழிய சிறுவர்களுக்குப் புசிப்பளிக்கும் ஏற்பாட்டை முடித்துக் கொண்டு கருணைதங்கிய இராஜாங்கத்தோரை நோக்கி யாங்களெல்லோரும் ஒன்றுகூடி எழிய சிறுவர்களுக்கு அன்னமளித்து ஆதரிக்கின்றோம். தாங்கள் கிருபை கூர்ந்து (டிப்பிரஸ்கிளாஸ்) சிறுவர்களுக்கு நான்காவது வகுப்புவரையில் இலவசமாகக் (கம்பல்சரி எடிகேஷன்) கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுவார்களாயின் இவர்களது இதக்கம்போல் இராஜாங்கத் தோருமிதங்கி ஏழைகளைக் கல்வி விருத்தியில் ஈடேற்றுவார்கள்.

இத்தகைய இதக்கமின்றி இந்தியாவிலுள்ள சிறுவர்களுக்கெல்லாம் கம்பல்சரி எடிகேஷன் கொடுக்க வேண்டுமென்று வெறுமனே கேட்டபடியால் தனவான்களின் வாக்கை இராஜாங்கத்தோர் ஏற்பதற்கு ஏதுமில்லாமற் போயிற்று. ஏதுவாம் ஏழைகளுக்குப் புசிப்பளிக்குங் கருணை இவர்களுக்குத் தோன்றுமாயின் அதை அநுசரித்தே இராஜாங்கத்தோர் கருணை கல்வியளித்துக் காப்பார்கள்.

இத்தகையக் கேலியின்றி இந்தியாவிலுள்ள தனவான்கள் பிள்ளைகளுக்கும் ஏழைகள் பிள்ளைகளுக்கும் இலவசக்கல்வி அளிக்கவேண்டுமென்று கேட்பது நியாயமாமோ. இப்பெருஞ் செலவை நியாயமாக ஏற்றுக்கொள்ளும்படியானவர்கள் தேச பாதுகாப்புக்கும், சீர்திருத்தத்திற்கும் செலவிடும் இராணுவச் செலவையும் சிவிலியன்கள் செலவையும் அதிகமென்று கூற ஏற்படுவது யாது நியாயமோ விளங்கவில்லை. இராஜாங்கமும் ஆறுதலடையவேண்டும். ஏழைக் குடிகளும் சகல மக்களைப் போல் சீர்பெறவேண்டுமென்னுங் கனதனவான்கள் இராஜ விசுவாசமும் ஏழைகள் மீது கருணையும் வைப்பார்களாயின் எடுக்கும் முயற்சிகள் யாவும் நிறைவேறுவதன்றி எடுப்போரது பெருங் கீர்த்தியம் என்றென்றும் பிரகாசிக்கும். இதுவே தனவான்களின் செயலுமாகும்.

- 3:43; ஏப்ரல் 6, 1910 -