அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/162-383

158. பூமியைப் பண்படுத்தி தானியவிருத்தி செய்யும் வேளாளத் தொழிலாளிகளே கவனியுங்கள்

கருணைதங்கிய நமது கவர்ன்மெண்டார் நெல்லிக்குப்பத்திற்கு அடுத்தப் பாலூர் விவசாயப்பண்ணையில் தங்களது விடாமுயற்சியாலும், பொருளுதவியாலும் பூமியைப் பண்படுத்தி நிலக்கடலை, கரும்பு மற்றும் நஞ்சை புஞ்சை தானியங்களை விளைவித்து அவைகள் செழித்தோங்கி வளர்ந்திருப்பதை மற்ற தேசங்களிலுள்ள வேளாளத் தொழிலாளர் வந்து பார்வையிட்டு தங்களுடைய பூமிகளையும் அவ்வகையாகப் பண்படுத்தி அவர்கள் விளைத்து பயிர்செய்துள்ளவாறு செய்து சீர்பெறும்படியான ஏதுக்களைச் செய்திருக்கின்றார்கள்.

விவசாயிகள் இத்தகைய காலத்தை வீண்போக்காது அப்பண்ணைகளுக்குச் சென்று பூமியைப் பண்படுத்தியிருக்கும் வகைகளையும், தானியங்கள் நடவுசெய்திருக்கும் நிலைகளையும், அவைகள் ஓங்கி வளர்ந்திருக்கும் பாங்குகளையும், கண்டுதெளிந்து தங்கடங்கள் பூமிகளையும் அவ்வாறு விருத்தி செய்வரேல் இத்தேசத்துள் பஞ்சமென்னும் ஐந்துவகைக் குறைகள் நேராதென்பது திண்ணம்.

அந்நியதேச ராஜாங்கங்களிலோ இராஜாங்கத்தார் ஏவுதலும் முயற்சியுமின்றி குடிகளே முயன்று தங்கடங்கள் விவசாயங்களை விருத்திசெய்து தாங்கள் வாழுந்தேசத்திற் பஞ்சமின்றி சுகமளிப்பதுடன் இராஜாங்கத்தோருக்கும் ஆறுதலளித்துவருகின்றார்கள். இவற்றிற்குப் பகரமாய் ஜப்பான் தேசத்தியக் குடிகளில் நூற்றிற்கு எழுந்து பெயர் வேளாளர்களாயிருந்து பூமியைப் பண்படுத்தி தானியவிருத்தி செய்வதுடன் புருஷர்கள் இரும்பு வேலை, தச்சவேலை, தையல் வேலை, முதலியவைகளுஞ்செய்து சுகத்திலிருக்கின்றார்கள். இஸ்திரீகளோ தங்கள் பண்ணைத்தொழிலைப்பார்ப்பதுடன் வியாபாரஞ் செய்யவும் வஸ்திரங்களைத் துவைக்கவும் கனிவிருத்திகள் செய்யவுமாகிய முயற்சியினின்று சுகத்தை அனுபவித்து வருகின்றார்கள். அத்தகைய சோம்பலற்ற விருத்தி செயலால் ஜப்பானிய தேசத்தோரும் ஜப்பானியரும் சுகசீர் பெற்றிருக்கின்றார்கள்.

இத்தேசத்திலோ சாதியாாசாரமென்னுங் கெட்டுப்போன கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு அதற்காதாரமாகப்பொய்ம்மத கடைகளைப் பரப்பி சாமிகளுக்கென்று வடை, பாயசம், தோசை, நெய்பொங்கல், சர்க்கரை பொங்கல் முதலியவைகளை செய்விக்கச்செய்து வாத்துக்களைப்போல் தொண்டைவரைத் தின்று சந்தனத்தைப் பூசி திண்ணைகளிற் புரளுவதே பெருமுயற்சியாகும். இம்முயற்சியிலிருந்து வடைக்குந் தோசைக்குஞ் சண்டையிடுவதே இவர்களது விடாமுயற்சித் தொழிலாகும். இத்தகையத் தொழிலாளரே சாதிகளுக்கெல்லாம் தலைவர்களாகும். இவர்களது சாதிக் கட்டிற்கும் மதக்கட்டிற்கும் அடங்கியுள்ளவர்களே அவர்களுக்குத் தாழ்ந்தவகுப்பார்களாகும். இவர்களது வகுப்பின் பேதமோ பிச்சை இரப்போர்கள் பெரியசாதி, பூமியைப் பண்படுத்துவோர்கள் சிறியசாதி, தச்சுவேலை செய்பவன் ஒருசாதி, இரும்புவேலை செய்பவன் ஒரு சாதி, தையல் வேலை செய்பவன் ஒருசாதி, ஒருவேலை செய்பவன் மறுவேலை செய்யப்படாது. இத்தகையாய் சாதித்தலைவர்கள் ஏற்பாடுகளை சிரமேற்கொண்டு மதச்சண்டைகளுக்கு மல்லுகட்டித்திரிவதும் பொய்ப் புராணங்களைப் புலம்பிக்கொண்டுத் திரிவதுமாகிய விசாரணையற்ற சோம்பேறிகளாய் மதக்கடைகளைப் பரப்பி எங்கள் தேவனே தேவன், எங்கள் சாமியே சாமியென்று துட்டுபறிப்பது ஒரு தொழில்விருத்தி, நாங்களே பெரியசாதி எங்களுக்கே பிச்சை கொடுக்கவேண்டுமென்று ஏமாற்றி பெண்டு பிள்ளைகளுடன் பிழைப்பது ஒரு தொழில் விருத்தி. இத்தகைய சுகப்பிரயோசன விருத்தியைக் கையாடிவரும் சாதித்தலைவர்களின் அடியார்கள் எந்த விருத்தியைக்கற்று எவ்விருத்தியிற் பழகி எத்தொழிலை விருத்திக்குக் கொண்டுவருவார்கள்.

சாதிவிருத்திகளையும் சாதியாலுண்டாம் பொறாமெய் விருத்திகளையும் மத விருத்திகளையும் மதத்தாலுண்டாம் சண்டை விருத்திகள் செய்துக்கொண்டு வித்தியாவிருத்தி, பூமிவிருத்திகளை மறந்து மாளா சோம்பலேறிவிட்டபடியால் தானியவிருத்தியும் வித்தியா விருத்தியுங்கெட்டு இந்திரதேசம் பாழடைந்துவிட்டது.

நாளுக்குநாள் அவைகளின் குறைவையும் பஞ்சவிருத்தியையும் கண்டுணர்ந்த நமது கருணை தங்கிய ராஜாங்கத்தார் தங்களுடைய ராஜாங்கவிஷயம் ஓர்புறமிருப்பினும் அத்தகைய செயலுடன் தானிய விருத்திகளையும் குடிகளின் க்ஷேமங்களையுங் கருதி விவசாயத்தொழிலிலும் பிரவேசித்து ஒவ்வோர் பண்ணையோருக்கும் அறிவுறுத்தி தானியவிருத்திச் செய்யும் வழிகளைப் படித்தரமாகக் காட்டிவருகின்றார்கள். அத்தகையோர் கருணை கொண்டு கற்பித்துவரும் பூமியின் விருத்தியைக் கற்று அவர்களது வார்த்தைகளை சிரமேற்கொண்டு தேச உழைப்பிற்கும் விழிப்பிற்கும் அஞ்சாது பஞ்சமென்பதைப் போக்கிக் குடிகளை ஆதரிக்க வேண்டுகிறோம்.

அங்ஙனமின்றி சாதித்தலைவர்கள் வாக்கே வாக்கு மதத்தலைவர்கள் போக்கேபோக்கென்று ஆடுகசாயிக்காரனை நம்பித் திரிவது போல் சாதித்தலைவர்களையும், மதத்தலைவர்களையும் பின்பற்றுவதாயின் தற்காலம் கருணை தங்கிய ராஜாங்கத்தார் அளித்துவரும் உள்ள சீருங் கெட்டு பாழடைவதாகும். ஆதலின் நமதுதேய வேளாளத்தொழிலாளர்கள் யாவரும் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் செய்தும் போதித்துவரும் விவசாயத் தொழிலைப் பின்பற்றி, அவர்கள் அழைக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்கள் விவசாயப் போதனைகளைக் கற்று அவரவர்கள் பூமிகளைப்பண்படுத்தி தானியவிருத்திசெய்து உலக உபகாரிகளாக விளங்குவார்களென நம்புகிறோம்.

கம்பர் ஏறெழுபது

வெங்கோபக் கலிக்கடந்த வேளாளர் விளைவயலுட்
பைங்கோல முடிதிருந்த யார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதைக் களியானை போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்குங்கோல் ஏறடிக்குஞ் சிறுகோலே.

வரப்புயர நீருயரும், நீருயர பயிறுயரும், பயிறுயர குடியுயரும், குடியுயர கோனுயரும் என்பதாம்.

- 4:17; அக்டோபர் 5, 1910 -