அரசூர் பஞ்சாயத்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

அரசூர் பஞ்சாயத்து

1 தொகு

அமிருதம் அரசூர் சின்னசாமிப் படையாச்சியின் மூத்த தாரத்து மகள். சின்னசாமிப் படையாச்சி கொஞ்சம் சொத்துக்காரன். ஆகையால் முதல் தாரம் செத்துப் போனதும் இரண்டாவது மனைவி கலியாணம் செய்து கொண்டான். இவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கொஞ்ச காலத்துக்கெல்லாம் சின்னசாமிப் படையாச்சி இறந்து போனான். அப்போது அமிருதத்துக்கு வயது பதினாலு.

காமாட்சி - இதுதான் சிறிய தாயார் பெயர் - அமிருதத்தைப் பிரியமாய் வளர்த்து வந்தாள். அமிருதம் பார்வைக்கு லக்ஷணமாயிருப்பாள். பள்ளிக்கூடத்தில் நாலாவது வரையில் படித்திருந்தாள். அவளைத் தன் தம்பி வைத்தியலிங்கத்துக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டுமென்று காமாட்சிக்கு ஆசை.

அமிருதத்துக்குச் சொந்தத் தாய் மாமனின் மகன் சந்திரகாசன். அமிருதமும் அவனும் குழந்தை பிராயம் முதல் கூடி விளையாடியவர்கள். அமிருதத்தின் தாயார் உயிர் வாழ்ந்தபோது சந்திரகாசு சில சமயம் அரசூருக்கு வருவான். சில சமயம் அமிருதம் சேமங்கலத்திற்குப் போவாள். அப்போதிருந்தே அமிருதத்தைச் சந்திரகாசனுக்குக் கொடுப்பதாகப் பேசி வந்தார்கள். அமிருதத்தின் தாயார் அடிக்கடி இதைப்பற்றிச் சொல்லுவாள். குழந்தைக்குப் பல் முளைப்பதற்கு முன்னிருந்து, - ஏன்? சில சமயம் கர்ப்பத்திலிருக்கும்போதே - கல்யாணப் பேச்சுப் பேசுவது நம் ஊர்களில் வழக்கமல்லவா?

வெகு நாளாகப் பழகி நேசங்கொண்ட சந்திரகாசனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று அமிருதம் பிடிவாதம் பிடித்தாள். வைத்தியலிங்கம் அவளுக்குத் திருட்டுத் தாலி கட்டிவிட எண்ணினான். ஆனால் காமாட்சி இதற்கு இடங் கொடுக்கவில்லை. அவள் அமிருதத்துக்கு எவ்வளவோ போதனை செய்து பார்த்தாள். ஒன்றும் பயன்படாமற் போகவே கடைசியில் அவள் சொன்னதாவது:- "நல்லது; உன் இஷ்டப்படியே செய். உன் மாமன் மகனையே கட்டிக்கொள். உங்கப்பனை உத்தேசித்துக் கல்யாணம் மட்டும் செய்து கொடுத்து விடுகிறேன். அதற்குப் பிறகு இந்த வீட்டு வழி நீ அடி எடுத்து வைக்கக்கூடாது. செருப்பாலடித்த சல்லிகூடக் கொடுக்க மாட்டேன். அப்புறம் என்மீது குறைப்படாதே. சந்திரகாசு கள்ளுக் குடிக்கிறான் என்று சொல்லுகிறார்கள். அவனுக்குச் சொத்து கிடையாது. ஓட்டைக்குச்சு வீடுதான் ஆஸ்தி. யோசித்து முடிவு செய்" என்றாள்.

அரசூரில் பாதிப் பேருக்குமேல் குடிப்பவர்கள். ஆகையால் சந்திரகாசு கள்ளுக் குடிப்பது அமிருதத்துக்குப் பெருங் குற்றமாகத் தோன்றவில்லை. இருந்தாலும் அவளுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. இந்தக் குற்றம் அவன்மீது சிறிய தாயார் சொல்லும்படியாயிற்றே என்று எண்ணினாள். குடிக்காமலிருந்தால் நன்றாகத்தான் இருக்கும். எப்படியும் கல்யாணம் ஆகிவிட்டால் குடியை விடும்படி செய்துவிடலாம் என்று நினைத்தாள். கல்யாணம் ஆயிற்று.


அமிருதம் ரொம்ப ரோஸக்காரி. சிற்றன்னையின் வார்த்தை அவள் மனதில் நன்றாய்ப் பதிந்திருந்தது. கல்யாணத்திற்குப் பிறகு அவள் தன் பிறந்தகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை. தம்பியின் கல்யாணத்துக்கு மட்டும் ஒரே ஒரு தடவை போனாள். அப்போது அவளுக்கு ஒரு பட்டுச் சேலை கொடுத்தார்கள். கல்யாணத்தன்று மாத்திரம் அதை உடுத்திக்கொண்டு உடனே திருப்பிக் கொடுத்துவிட்டாள். தம்பியும் சிறிய தாயாரும் எவ்வளவோ கெஞ்சியும் அவள் அதைத் தன்னுடன் எடுத்துவரவில்லை.

அவர்களுடைய வாழ்க்கை கூடியவரை சந்தோஷமாகவே இருந்து வந்தது. சந்திரகாசு ஒரு ஏர் பயிர்ச் செலவு செய்து வந்தான். சாகுபடி இல்லாத காலத்தில் கூலி வேலைக்குப் போவான். ஏதோ அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்து வந்தது. ஏழை வீட்டில் பிறந்த அவன் பள்ளிக்கூடம் போனதில்லை. அமிருதத்தின் சகவாசத்தால் அவனுக்கு இப்போது படிப்பில் ருசி உண்டாயிற்று. கொஞ்ச காலம் இரவுப் பள்ளிக் கூடத்துக்குப் போய் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான். அமிருதமும் சில சமயம் தெரிந்த வரையில் சொல்லிக் கொடுத்தாள். கள்ளுக்கடை ஒன்றுதான் அவர்கள் சந்தோஷத்துக்குத் தடையாயிருந்தது.

ஆனமட்டும் முயன்றும் சந்திரகாசுவினால் குடியை நிறுத்த முடியவில்லை. சில சமயம் ஒரு வாரம் இரண்டு வாரம் பல்லைக் கடித்துக் கொண்டிருப்பான். அப்புறம் ஒருநாள் புத்தி பேதலித்துவிடும். ஆயினும் அவன் பெருங் குடிகாரனாகவில்லை. அமிருதத்தின் அன்பு அவனை அடியோடு படுகுழியில் விழாமல் காப்பாற்றி வந்தது.

பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. அன்று முதல் சந்திரகாசு குடியை எப்படி விடுவது. பணம் எப்படிச் சேர்ப்பது என்று ஓயாமல் சிந்தித்து வந்தான். ஒரு நாள் முருகப்பக் கங்காணி சேமங்கலத்துக்கு வந்ததும் கினாங்குக்குப் போவதுதான் வழியென்று தீர்மானித்து விட்டான்.

2 தொகு

இரவு பன்னிரண்டு மணி. இன்பமான வெண்ணிலவு. சந்திரகாசுவும் அவன் மனைவியும் வீதியில் விரித்திருந்த ஒரு பழம் பாயில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் இன்னும் ஒரு வயது நிரம்பாத அவர்கள் குழந்தை பாயில் தூங்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் தொங்கிய சுருட்டை மயிர் இளங்காற்றில் சிறிது அசைந்தாடிற்று. குடிசைத் திண்ணையில் கிழவி - சந்திரகாசுவின் தாயார் - படுத்துப் பெருங் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

"எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டு வருஷம் பொறுத்திரு. உன்னையும் குழந்தையையும் விட்டுவிட்டு நான் ரொம்ப நாள் இருப்பேனா? கையில் ரூபாய் சேர்ந்ததோ இல்லையோ, ஓடிவந்து விடுகிறேன்" என்றான் சந்திரகாசு.

"ஐயோ! அதெல்லாம் முடியாது. நமக்குப் பணமும் வேண்டாம்; எதுவும் வேண்டாம். ஏதோ நாலு காசு நீ சம்பாதித்து வருவதே போதும். கூழோ கஞ்சியோ குடித்துவிட்டுச் சிவனே என்று இருப்போம்" என்றான் அமிருதம்.

"இதுதான் பெண்பிள்ளை புத்தி. கொஞ்சநாள் கஷ்டப்பட்டால் பின்னால் எப்போதும் சுகமாய் இருக்கலாமென்பது உனக்குத் தெரியவில்லையே" என்றான் சந்திரகாசு.

"நீ மாத்திரம் புத்தியாய்ப் பேசுகிறாயா? நீ அக்கரை சீமைக்குப் போய்ப் பணம் தேடி வருவது என்ன நிச்சயம்? அக்கரைச் சீமை போனவர்கள் எத்தனையோ பேர் திரும்பி வருவதேயில்லை" என்று அமிருதம் சொன்னாள்.

சந்திரகாசு சிரித்தான். அன்று மாலை முழுவதும் அவன் கங்காணியிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பி வந்தபடியால் அமிருதத்தின் பேச்சைக் கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.

"முருகப்பக் கங்காணிக்கு இப்பொழுது ஒரு லட்ச ரூபாய் சொத்திருக்கிறது. அவன் பினாங்குக்குப் போனபோது கையில் ஓட்டாஞ் சல்லிக் கூடக் கிடையாது" என்றான்.

"ஏன் இப்படிப் பணம் பணம் என்று அடித்துக் கொள்கிறாய்? இந்தக் குஞ்சானின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதாதா?" என்று சொல்லி அமிருதம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

ரோஜா மொட்டு ஒன்று திடீரென வெடித்து மலர்ந்தாற்போல அப்போது குழந்தையின் இதழ்கள் சற்றே விரிந்து புன்னகை பூத்தது. கண்மட்டும் திறக்கவில்லை. பின்னர் மறுபடியும் அதன் இதழ்கள் குவிந்தன. தூக்கத்திலுங்கூடத் தாயின் அன்பு அதற்கு மகிழ்வூட்டியதோ? அல்லது இன்பக் கனவு கண்டதோ? யார் கண்டார்கள்?

"இவனுக்காகத்தான் நான் போக வேண்டுமென்கிறேன். நீயும் நானும் மட்டுமானால் கவலையில்லை. கிழவி இரண்டொரு வருஷத்துக்குமேல் இருக்கமாட்டாள். ஆனால் குழந்தையை நினைத்தால் தான் எனக்குப் பணம் சேர்க்கும் ஆசை உண்டாகிறது. ஐந்துவயதில் நான் மாடு மேய்த்தது போல் இவனையும் மாடு மேய்க்க விடப் போகிறோமா? பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டாமா? சொக்காய் குல்லாய் வாங்கிக் கொடுக்க வேண்டாமா? பார், இப்பொழுதுகூட இவன் கைக்குத் தங்கக் காப்பு செய்துபோட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!" என்றான் சந்திரகாசு.

"நீ கள்ளுக் குடிக்கிற காசை என்னிடம் கொடு. நாலு மாதத்தில் குழந்தைக்குத் தங்கக் காப்பு அடித்துப் போடுகிறேன்" என்றாள் அமிருதம்.

சந்திரகாசுவுக்குக் கண்ணில் நீர் ததும்பியது. அவன் சொன்னதாவது:- "இந்த மாதிரி நீ எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. நானும் எவ்வளவோ பார்க்கிறேன். என்னால் முடியவில்லை. கள்ளுக் கடையைக் கண்டதும் வெறி வந்து விடுகிறது. ஊரை விட்டுப் போனால்தான் இந்த வெறி போகும். இரண்டு வருஷம் கண்காணாமல் இருந்தால் மறந்து போய்விடும். அதற்காகவே முக்கியமாய் நான் போக வேண்டும்."

"அங்கே மாத்திரம் கள்ளுக்கடை கிடையாதா?" என்று அமிருதம் கேட்டாள்.

"அதெப்படி அங்கே கள்ளுக்கடை இருக்கும்? இருக்காது" என்றான் சந்திரகாசு. பாவம்! போகுமிடத்திலும் 'பீர்'க்கடையும் பிராந்திக் கடையும் இருக்குமென்னும் எண்ணம் அவனுக்கு இதுவரை தோன்றவில்லை. மறுநாள் கங்காணியைக் கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். ஆனால் மறுநாள் பிரயாண தடபுடலில் மறந்து போனான்.

"எப்படியானாலும் நீ போகக்கூடாது. உன்னைப் பிரிந்து நான் இருக்க மாட்டேன். அப்படி என்ன பிரமாதமாகக் குடித்து விடுகிறாய்? போனால் போகட்டும். நீ சம்பாதிக்கும் பணம்தானே? இப்போது நாம் பட்டினியா கிடக்கிறோம்? வேணுமானால் இனிமேல் நானும் கூலி வேலைக்குப் போகிறேன்" என்றாள்.

"இப்படியெல்லாம் பேசாதே, அமிர்தி! நீ பிறர் வீட்டில் நெல்லுக் குத்தப் போவதை நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? எல்லாம் முடிவாகி விட்டது. மாட்டை இன்று விற்றுவிட்டேன் எண்பது ரூபாய்க்கு. ஐம்பது ரூபாய் வழிச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உனக்கு முப்பது ரூபாய் கொடுத்து விட்டுப் போகிறேன். நாலு மாதத்திற்குக் குதிரில் நெல் இருக்கிறது. அதற்குள் கட்டாயம் பணம் அனுப்புகிறேன். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து எனக்குப் போக உத்தரவு கொடு. தடை சொல்லாதே!" என்றான் சந்திரகாசு.

"அப்படியானால் நானும் வருகிறேன். குழந்தையையும் எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் போவோம்" என்றாள் மனைவி.

"கிழவியை என்ன செய்வது? அவளைச் சோற்றுக்கு ஆலாய்ப் பறக்க விட்டு விடலாமா?" என்று சந்திரகாசு கேட்டான்.

"ஐயோ! எனக்கு அழுகை வருகிறது" என்றாள் அமிருதம். அப்படியே அழத் தொடங்கினாள். சந்திரகாசன் வெகு நேரம் அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

3 தொகு

சந்திரகாசு பினாங்குக்குப் புறப்பட்டுச் சென்ற நான்காவது மாதத்தில் அமிருதம்மாளுக்கு ஒரு கடிதம் வந்தது. தபால்காரன் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இரண்டணா கேட்டான். அமிருதம் வீட்டிற்குள் ஓட்டமாய் ஓடிப் பழைய பெட்டியொன்றில் துழாவி, இரண்டணா எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். கடிதத்தை வாங்கி உடைத்துப் படித்தாள். அதிலே சந்திரகாசன் எழுதியிருந்த மொழிகளையும், பிரியமான வசனங்களையும் அவன் எங்கேதான் கற்றுக் கொண்டானோ தெரியாது. ஒவ்வொரு வரி படிக்கும் போதும் அமிருதத்துக்கு மயிர்க் கூச்சல் எறிந்தது. நாலுவரி படித்துவிட்டு, அவள் அழுதாள். இன்னும் நாலு வரி படித்துவிட்டுச் சிரித்தாள். இடையிடையே கடிதத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாள். இரண்டு மூன்று தடவை படித்தாள். பிறகு அதைக் கிழவியிடம் கொண்டு போய்ப் படித்துக் காட்டினாள். மறுபடி குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து கடிதம் முழுவதையும் அதற்குப் படித்துக் காட்டினாள். குழந்தையும் ஏனோ சிரித்தது. அதன் முகத்தில் கடிதத்தை வைத்து முத்தமிடச் செய்தாள். கடைசியாகப் பெட்டியில் பத்திரமாக வைத்துப் பூட்டினாள்.

இரண்டு மாதங் கழித்து இன்னொரு கடிதம் வந்தது. அடுத்த மாதம் கட்டாயம் பணம் அனுப்புவதாக அதில் எழுதியிருந்தது. பின்னர் இரண்டு மாதங் கழித்து வந்த கடிதத்திலும் இப்படியே எழுதியிருந்தது. இதற்குள் குதிரில் இருந்த நெல்லெல்லாம் தீர்ந்து போயிற்று. பணத்திலும் பத்து ரூபாய் செலவழிந்து விட்டது. பாக்கி இருபது ரூபாயும் ஆபத்துக்கு வேண்டுமென்று அமிருதம் பத்திரப் படுத்திவிட்டுக் கூலி வேலை செய்ய ஆரம்பித்தாள். நெல்லுக் குத்தவும் களையெடுக்கவும் போனாள். அந்த நேரங்களில் கிழவி குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்படியே ஒன்றரை வருஷ காலம் சென்றது. இரண்டு மாதத்திற்கொரு முறை சந்திரகாசுவிடமிருந்து தவறாமல் கடிதம் வந்து கொண்டிருந்தது. ஆனால் பணம் மட்டும் ஒரு தம்பிடி கூட வந்தபாடில்லை. அமிருதத்துக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பகலெல்லாம் வெளியிலும், இரவில் வீட்டிலும், உழைத்து உழைத்து அவள் அலுத்துப் போயிருந்தாள். வெகுநாளாய், 'அனுப்புகிறேன், அனுப்புகிறேன்' என்று தன் புருஷன் ஆசை காட்டி வரும் பணம், உண்மையில் எப்போதுதான் வந்து சேருமோவென்று அவள் ஏக்கப்படலானாள். தபால்காரனைக் கண்டபோதெல்லாம் விசாரித்தாள். ஆனால் அவள் சந்திரகாசனுக்கு எழுதிய கடிதங்களில் இந்த ஆவலை அதிகம் வெளிக்காட்டவில்லை. கடைசியாக எழுதிய ஒரு கடிதத்தில் பணம் வந்து சேரவில்லையென்றும், மணியார்டர் தப்பிப் போயிருக்குமோவென்று சந்தேகப்படுவதாகவும், ஒருவேளை இதுவரை அனுப்பியிராவிட்டால் தெரிவிக்க வேண்டுமென்றும், கொஞ்சம் பணம் வந்தால் குழந்தைக்கும் கிழவிக்கும் சௌகரியமாய்த்தான் இருக்குமென்றும் எழுதினாள்.

இதற்குச் சந்திரகாசுவிடமிருந்து வந்த பதிலை படித்ததும் அமிருதம் இடி விழுந்ததுபோல் திடுக்கிட்டுப் போனாள். அவன் எழுதியிருந்தான்:- "உன்னிடம் இத்தனை காலமாய் ஒரு விஷயம் மறைத்து வைத்திருந்தேன். இனிமேல் சொல்லாமலிருக்கக்கூடாது. நான் கிளம்பிய அன்றைக்கு முதல் நாளிரவு நாம் நிலவில் உட்கார்ந்து பேசியது நினைவிலிருக்கிறதா? முக்கியமாக, கள்ளுக்கடையை மறப்பதற்குத்தான் நான் அக்கரை சீமைக்குப் போவதாகச் சொன்னேன். இங்கே கடை இராதென்று நினைத்தேன். ஐயோ! ஏமாந்து போனேன். அந்தப் பாழும் கடைகள் இங்கேயும் இருக்கின்றன. சம்பளம் அதிகம்தான் கொடுக்கிறார்கள். ஆனால் சாப்பாடுப்போக மிச்சமெல்லாம் குடிக்குத்தான் போகிறது. ஊரிலாவது எனக்குப் புத்தி சொல்லித் தடுக்க நீ இருந்தாய். இங்கே நீயும் இல்லை. அப்படியும் எவ்வளவோ கஷ்டப்பட்டு முப்பது வெள்ளி சேர்த்து உனக்கு அனுப்பலாமென்று வைத்திருந்தேன். பத்து நாட்களுக்கு முன்பு நான் குடித்துவிட்டுப் புத்தி தப்பியிருக்கையில் யாரோ பாவிகள் அதைக் கொண்டுபோய் விட்டார்கள். ஐயோ! நீங்கள் படும் கஷ்டத்தை நினைத்தால் வயிறு பகீரென்கிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவாகவே யிருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் எப்படியும் பணம் அனுப்புகிறேன்."

அமிருதம் அன்று இரவெல்லாம் தூங்கவேயில்லை. ஓயாமல் அழுதுகொண்டேயிருந்தாள். புருஷன் க்ஷேமமாய் ஊர் வந்து சேர வேண்டுமென்று தெய்வங்களையெல்லாம் வேண்டினாள். மறுநாள் ஒரு கடிதம் எழுதினாள்.

பணம் சம்பாதித்தது போதுமென்றும், உடனே புறப்பட்டு வந்து விடும்படியும் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். "உங்கம்மாள் மேல் ஆணை; என் தலை மேல் ஆணை; குழந்தை மேல் ஆணை; மாரியம்மன் மேல் ஆணை; நீ இனிமேல் கள்ளுக்கடை வழிபோகக்கூடாது" என்று சபதம் வைத்தாள்.

சந்திரகாசு இதற்கெழுதிய பதிலில் தான் குடிப்பதை விட்டு விட்டதாகவும், இனிமேல் பணம் சேர்ந்து விடுமென்றும், இரண்டு மாதத்தில் நூறு ரூபாய் அனுப்புவதாகவும், பின்னர் ரூபாய் இரு நூறு சம்பாதித்துக் கொண்டு திரும்பி விடுவதாகவும் எழுதியிருந்தான்.

இப்படியே ஐந்து வருஷம் சென்றது. சந்திரகாசனாவது, பணமாவது வந்து சேர்ந்தபாடில்லை. இதற்கிடையில் கிழவி செத்துப் போனாள். அமிருதம் ஆபத்துக்கென்று வைத்திருந்த இருபது ரூபாயைக் கிழவியின் அந்நிய காலத்தில் அவளுக்கு வேண்டியது செய்வதற்குச் செலவழித்து விட்டாள். அடுத்த வருஷம் அவளே காயலாவாய்ப் படுத்துக் கொண்டாள். ஒரு மாதம் ரொம்பவும் கஷ்டப்பட்டாள். அந்தச் சமயத்தில் கல்லும் உருகும்படியான ஒரு கடிதம் அவள் சந்திரகாசுவுக்கு எழுதினாள்.

4 தொகு

கடிதம் ஒன்று வந்தது. "ரூபாய் நூறு மணியார்டர் செய்திருக்கிறேன்" என்ற வார்த்தைகளை படித்தபோது அமிருதத்தால் நம்பவே முடியவில்லை. உண்மையாகவே அப்படி எழுதியிருக்கிறதாவென்று திரும்பி திரும்பிப் படித்தாள். பிறகு ஓடிப்போய்த் தபால்காரனை வழிமறித்துக் கேட்டாள். "கடிதம் முதலில் வந்துவிடும். பணம் மெதுவாய்த்தான் வரும். பதினைந்து நாள் ஆகும்" என்று தபால்காரன் சொன்னான்.

ஒரு வாரத்திற் கெல்லாம் குழந்தைக்கு வைசூரி வார்த்தது. அமிருதம் பெரிதும் கவலைப்பட்டாள். பணம் வந்ததும் ஊர்க் கோயில்களுக்கெல்லாம் அபிஷேகம் செய்து வைப்பதாய் வேண்டிக் கொண்டாள். ஒவ்வொரு நாள் காலையும் தூக்கம் விழித்ததும், 'இன்று பணம் வராதா?' என்று எண்ணிக் கொண்டே எழுந்திருந்தாள்.

வெள்ளிக்கிழமை வந்தது. "ஐயோ! இன்று பணம் வந்தால் மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்றலாமே?" என்று நினைத்தாள். தபால்காரன் வருகிறானாவென்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசியாக, உச்சி வேளையில் தபால்காரன் வந்தான். மணியார்டரும் கொண்டு வந்தான். அமிருதம் தன் கலி தீர்ந்துவிட்டது, தான் தெய்வங்களை வேண்டியதெல்லாம் வீண் போகவில்லையென்று எண்ணினாள்.

தபால்காரன் சாட்சி போடுவதற்கு ஒருவனைக் கூட அழைத்து வந்திருந்தான். அவன் அந்த ஊர்க் கள்ளுக்கடைக் குத்தகைக்காரன். தபால்காரன் அமிருதத்தினிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு குத்தகைக்காரனிடம் சாட்சியும் வாங்கிக்கொண்டான். பிறகு, தொண்ணூற்றெட்டு ரூபாய் எண்ணிக் குத்தகைக்காரனிடம் கொடுத்தான். பிறகு அமிருதத்தைப் பார்த்து, "நூறு ரூபாய் வந்தால் ஐந்து ரூபாய் வாங்குவது வழக்கம். நீங்கள் ஏழையானதால் இரண்டு ரூபாய் எடுத்துக் கொண்டேன்" என்றான் தபால்காரன்.

அமிருதம் அவர்கள் செய்தது, சொன்னது, ஒன்றும் புரியாமல், பணம் பெற்றுக் கொள்வதற்காகக் கையை நீட்டினாள்.

குத்தகைக்காரன் "அம்மா! இது எனக்குச் சேர வேண்டிய பணம். உன் புருஷன் எனக்கு நாற்பது ரூபாய்க்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தான். வட்டியும் முதலும் சேர்ந்து இப்பொழுது நூற்றுப் பத்து ரூபாய் ஆகிறது. தொண்ணூற்றெட்டு ரூபாய் போனால் பாக்கி பன்னிரண்டு ரூபாய்" என்று சொன்னான்.

இடி விழுந்ததுபோல் அமிருதம் திகைத்துப் போனாள். அவள் தலை கிறுகிறுவென்று சுழன்றது. எங்கேயோ அவளையே உயரத் தூக்கிக்கொண்டு போவதுபோல் இருந்தது. அப்போது குத்தகைக்காரன், "உன்னை அடியோடு வயிற்றிலடிக்க எனக்கு மனமில்லை. இதை வாங்கிக் கொள்ளு" என்று சொல்லி, நாலு ரூபாய் எடுத்துக் கொடுக்க வந்தான். அமிருதத்துக்கு அப்போதுதான் நிலைமை என்னவென்பது கொஞ்சம் விளங்கிற்று. "ஐயோ! இதென்ன அநியாயம்! இந்த ஊரிலே கேட்பாரில்லையா?" என்று அவள் கூச்சலிட்டாள்.

கூக்குரல் போட்டதும் கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் நாட்டாண்மைக்காரரில் ஒருவன் வந்தான். "இதைப் பஞ்சாயத்துப் பண்ணித்தான் தீர்க்க வேண்டும். அதுவரையில் பணம் என்னிடம் இருக்கட்டும்" என்று சொல்லி வாங்கிக் கொண்டான். அன்று சாயங்காலம் ஊர்ச் சாவடியில் பஞ்சாயத்துக் கூடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்த ஊரில் வழக்க மென்னவென்றால், எந்த வழக்குக்காகப் பஞ்சாயத்துக் கூடினாலும் வாதி பிரதிவாதி இரண்டு பேரும் சேர்ந்து பஞ்சாயத்துக்காரர்களுக்காகக் கள்ளு வாங்கி வைத்துவிட வேண்டும். வெள்ளையப்பன் உள்ளே போனால் தான் நியாயம் நன்றாய் விளங்குமென்பது அந்த ஊர்ப் பிரமுகர்கள் அபிப்பிராயம். ஆனால் இந்த வழக்கிலே வாதி ஏழைப் பெண்பிள்ளை யானதினாலும், பிரதிவாதி கள்ளுக் கடைக்காரனாதலாலும் பிரதிவாதியே எல்லாருக்கும் கள்ளு 'சப்ளை' செய்ய வேண்டியதென்று தீர்மானித்தார்கள்.

ஊர்ச் சாவடியில் பஞ்சாயத்துக் கூடிற்று. மொந்தைகள் ஏராளமாய் உருண்டன. பஞ்சாயத்துக்காரர்களுக்கு மட்டுமின்றி வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்குங்கூட அன்று வெகு 'மஜா'. நெடு நேரம் நியாயம் பேசியான பிறகு, பத்திரம் காலாவதியாகி இருந்தாலும் வாங்கிய கடனைக் கொடுக்கத்தான் வேண்டுமென்றும், ஆகையால் பணம் கள்ளுக் குத்தகைகாரனுக்கே சேர வேண்டுமென்றும், இருந்தாலும் அமிருதத்தின் ஏழ்மையை உத்தேசித்து, அவளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து விட்டு 88 ரூபாய் அவன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், பத்திரத்தைக் காது கிள்ளி அவளிடம் கொடுத்து விட வேண்டுமென்றும் பஞ்சாயத்து சபையார் தீர்ப்பளித்தார்கள்.

அமிருதத்தின் அம்மை வார்த்த பையன் நாலு நாளைக்கெல்லாம் இறந்து போனான். பஞ்சாயத்துச் செய்தவர்கள் உள்பட ஊரார் மிகவும் இரக்கப் பட்டுப் பொதுச் செலவில் பிரேதத்தை எடுத்து அடக்கம் செய்தார்கள். அன்றைய தினமே அமிருதத்துக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரகாசன் மிகவும் நீளமாய் எழுதியிருந்தான். ஆனால் கரை காணாத துக்கத்தில் மூழ்கியிருந்த அமிருதத்துக்குப் பின்வரும் விஷயங்கள் தான் அதில் புலப்பட்டன:- "பணம் அனுப்பியதும், ஊருக்கு வந்து உன்னையும் குழந்தையையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று - வெறி பிடித்தாற்போல் இருந்தது - கையில் பணமில்லை - ஐம்பது ரூபாய் திருடிக் கொண்டு கிளம்பினேன் - பிடித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள் - இரண்டு வருஷம் கடுங்காவல் - இதுவும் நல்லதுதான் - ஜெயிலில் கள்ளு சாராயம் கிடையாது - இரண்டு வருஷத்தில் மறந்து விடுவேன் - விடுதலையானதும் உன்னைப் பார்க்க ஊருக்கு ஒரே ஓட்டமாய் ஓடி வருவேன்."


மறுநாள் அமிருதம் காணாமற் போனாள். அரசூருக்கு எட்டு மைல் கிழக்கே ஒரு ஸ்திரீயின் பிரேதம் ஆற்றில் மிதந்து வந்து ஒதுங்கிற்று. அவ்வூர் கிராமாதிகாரி அதை எடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, விஷயத்தைப் போலீசுக்குத் தெரியப் படுத்தினார்.


இரண்டு வருஷம் கழித்துச் சந்திரகாசு வெகு ஆவலாக ஊருக்குத் திரும்பிவந்து சேர்ந்தபோது தன் குடிசை இருந்த இடத்தில் குப்பைமேடு போடப்பட்டிருப்பதைக் கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அரசூர்_பஞ்சாயத்து&oldid=484352" இலிருந்து மீள்விக்கப்பட்டது