அற்புதத் திருவந்தாதி

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக


அற்புதத் திருவந்தாதி


காரைக்கால் அம்மையார் அருளியது


பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர் 1

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு2

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவதல்லால் -பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்3

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை4

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள் மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்5

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்னஞ்சத் தால்இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தான்என்பன் யான்6

யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயினேன்7

ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே யாமாறு -தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்8

அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு9

எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று10

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்
கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது11

அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு12

தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லேபாவம் தான்13

தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்
தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்
பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து14

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்
புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி15

இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்16

காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரன்17

அரனென்கோ நான்முக னென்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
யானவனை எம்மானை இன்று18

இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு19

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்20

அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து21

வந்திதனைக் கொள்வதே ஒக்குமிவ் வாளரவின்
சிந்தையது தெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரான்நீர் உம்சென்னிப் பிறை22

பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா வுள்ள மிது23

இதுவன்றே ஈசன் திருவுருவ மாமாறு
இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாய்என் சிந்தனைக்கே
இன்னும் சுழல்கின்ற திங்கு24

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எஙகும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று25

ஞான்ற குழற்சடைகள் பொன்வரை போல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பி்ன் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே தோன்றும் அரவு26

அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் -முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்27

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்கு
என்முடிவ தாக இவர்28

இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலம் கண்டார் பிறர்29

பிறரறிய லாகாப் பெருமையரும் தாமே
பிறரறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து30

மகிழ்தி மடநெஞ்சே மானிடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமம் சேர்ந்தாய் - இகழாதே
யாரன்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு31

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்32

நூலறிவு பேசி நுழைவிலா தார் திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்தது
எக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே யாம்33

ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தா லுள்ளி
அருகணையா தாரை அடும்34

அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்து
இடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு35

மறுவுடைய கண்டத்தீர் வாரசடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆவா - உறுவான்
தாளரமீ தோடுமேல் தானதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி36

மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்ததுவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு37

ஈண்டொளி சேர்வானத் தெழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு
கூரேறு கானேனக் கொம்பு38

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்
அம்பவள மேனி யதுமுன்னம் - செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து39

மறித்து மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்டு
உள்ளாதார் கூட்டம் ஒருவு40

ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து41

நேர்ந்தரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய் வளரமாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்க ளிது42

திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம் விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு43

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்44

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்றன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையிலும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது45

எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவி லீர்ஆவா -ஒளிகொள்மிடற்று
எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழும் திறம்46


திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாக மீந்தான்
திருவடிக்கண் சேரும் திரு47

திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவும் தேராது
அதுமதியொன் றில்லா அரா48

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய வோடி விராவுவதால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை49

சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் -முடிமேல்
வலப்பாலக் கோல மதிவைத்தான் தன்பங்கின்
குலப்பாவை நீலக் குழல்50

குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்
தெழிலாக வைத்தேக வேண்டா -கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு51

அங்கண் முழுமதியம் செக்கரகல் வானத்து
எங்குமினி தெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்52

சீரார்ந்த கொன்றை மலர் தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்53

காருருவக் கண்டத்தெம் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் -நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு54

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேல் பான்மதியி னுள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு55

வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலாத்தலையி னுள்ளூண் புறம்பேசக் கேட்டோ
நிலாத்தலையிற் சூடுவாய் நீ56

நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேலாட மிக்கு57

மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர் போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு58

பண்புணர மாட்டேன் நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைகண்டா- பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவது
எவ்வுருவோ நின்னுருவ மேல்59

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே -மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோது
அம்மான் திருமேனி அன்று60

அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைப்பேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது61

ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகாது
ஈதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோடு ஏற்றநாள்
வல்வேட னான வடிவு62

வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுவலி நின்றெரிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா 63

நிலாவிலங்கு பொன்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாவிருந்த
செக்கரவ் வானமே யொக்குந் திருவடிக்கே
புக்கரவங் காலையே போன்று64

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு65

மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங்கரிதாலோ
பைத்தாடு நும்மார்பிற் பாம்பு66

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியும்
தாம்பயின்று தாழருவி தூஙஅகுதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு67

சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் போல
சிலம்படிமேற் சொவ்வரத்தம் சேர்த்தி நலம்பெற்று
எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி68

முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் படிமேல்
குனியவல மாமடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு69

எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிராது
எமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரி பாய்ந்தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரி பாய்ந்தாடும் இடம்70

இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலம்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்71

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மிக்குலக மேழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து72

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது73

ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்74

கலங்கி புனற்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்கலாலும்
விரிசடையாம் காணில் விசும்பு75

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடம் தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி76

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு77

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து78

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு79

செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்தக் கால்80

காலனையும் வென்றோம் கடுநரகங் கைகழன்றோம்
மேலை யிருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து81

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே யொத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியவாம் -தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிரும் சாயும் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்82

மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலும் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது83

நெடிதாய பொங்கெரியும் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கண்ணான் கண்84

கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்85

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்86

நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்87

இருளி னுருவென்கோ மாமேக மென்கோ
மருளில் மணிநீல மென்கோ அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி 88

ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் -ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டம்இருள்
கொண்டவா றென்இதனைக் கூறு89

கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்டு
ஏறமிகப் பெருகின்என் செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடும் கங்கைத் திரை90

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோம் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைத்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்91

என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
அருளாகம் வைத்த அவன்92

அவன் கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு93

விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்புமகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்94

அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீர்
என்பணிவீ ரென்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமின் இங்கார்95

ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து96

மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்டு
உளைந்தெழுந்து நீஎரிப்ப மூவுலகும் உள்புக்கு
அளைந்தெழுந்த செந்தீ யழல்97

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ -கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு98

செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்டு
அப்பேய்க் கணமவைதாம் காணவோ - செப்பெனக்கொன்று
ஆகத்தா னங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடுன் நடம்99

நடக்கிற் படிநடுங்கும் நோக்கின் திசைவேம்
இடிக்கில் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னேறு
உருமேறோ வொன்றா வுரை100

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினால் காரைக்கால் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்றேத்துவார்
பேராத காதல் பிறந்து101

(மொத்தப் பாடல்கள் 101)

"https://ta.wikisource.org/w/index.php?title=அற்புதத்_திருவந்தாதி&oldid=1545116" இலிருந்து மீள்விக்கப்பட்டது