அலை ஓசை/எரிமலை/ஆண்டு நிறைவில் அடிதடி

மூன்றாம் அத்தியாயம் ஆண்டு நிறைவில் அடிதடி

சிரஞ்சீவி பாலசுப்பிரமணியன் ஆண்டு நிறைவுக் கலியாணம் மேளதாளத்துடன் சிறப்பாக ஆரம்பமாயிற்று. கலியாண வீட்டில் எல்லாரும் வெகு உற்சாகமாக இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் சூரியாவின் எதிர்பாராத வருகைதான். நெடுநாளாகப் பாராத பிள்ளையைப் பார்த்துக் கிட்டாவய்யரும், அவருடைய மனைவியும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். லலிதாவின் குதூகலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. தன்கணவன் சிறைச்சாலையில் இருப்பதைக் கூட அவள் அன்றைக்கு மறந்து கலியாண ஏற்பாடுகளில் உல்லாசமாக ஈடுபட்டு ஓடியாடிக் கொண்டிருந்தாள். லலிதாவின் மாமனார் ஆத்மநாதய்யருக்கு, சூரியாவின் வருகை காரணமாக எதிர் வீட்டுத் தாமோதரம்பிள்ளையுடன் மறுபடியும் பேச்சுவார்த்தை தொடங்கியது பற்றி மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று. சூரியாவுக்கும் அன்றைக்கு என்றுமில்லாத உற்சாகம் ஏற்பட்டிருந்தது. அப்பா அம்மா முதலியவர்கள் தன்னை எப்படி வரவேற்பார்களோ என்று அவன் மனத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகம் நீங்கிற்று. அமரநாதன் தன்னுடைய சிநேகத்தை மறந்து விடவில்லை என்பதும் அவனுடைய தகப்பனார் தாமோதரம்பிள்ளை கூடத் தன்னுடன் சல்லாபமாகப் பேசியதும் அவனுடைய உற்சாகம் வளரக் காரணமாயிருந்தன. இது மட்டுமா, அவனுடன் பெருஞ்சண்டை போட்ட தமையன் கங்காதரன் இன்று அன்பாகப் பேசினான். "சூரியா! அப்பாவுக்கு வயதாகிவிட்டது அவரால் பண்ணைக் காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. நானும் என் வேலையைவிட்டு கிராமத்துக்குப் போய்இருப்பது முடியாத காரியம். நீதான் ராஜம்பேட்டைக்குப்போய் அப்பாவுக்கு ஒத்தாசையாயிருக்க வேண்டும். குடியானவர்கள் விஷயத்தில் உன் இஷ்டம் போல் எப்படி வேணுமானாலும் செய்துகொள்; நான் ஆட்சேபிக்கவில்லை. ஐந்து வருஷம் அலைந்தது போதும், பேசாமல் ஊருக்கு வந்துவிடு!" என்று கங்காதரன் கூறியது சூரியாவுக்கு மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. எல்லோரும் தன்னிடம் இவ்வளவு அன்பாக இருப்பது ஏன் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டான். எல்லாரும், "சூரியா! சூரியா!" என்று அவனைப் பிரமாதப்படுத்துவதைப் பார்த்துவிட்டு லலிதாவின் சீமந்த புத்திரி பட்டுவும் அவனுடன் அதி விரைவில் சிநேகமாகி விட்டாள். சூரியாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு வேறு யார் அழைத்தாலும் வரமாட்டேன் என்று அந்தக் குழந்தை பிடிவாதம் பிடித்தது. இதனாலெல்லாம் சூரியா வெகு நாளாக அறியாத உற்சாகத்துடன் இருந்த சமயத்தில் காலை சுமார் எட்டு மணிக்கு, வாசலில் தபால்காரன் வந்தான். தபால்கார னுடைய குரல் சூரியாவுக்கு ஏற்கனவே கேட்ட குரலாகத் தொனித்தது. உடனே லலிதா, "தெரியுமா, அண்ணா உனக்கு? தபால்கார பாலகிருஷ்ணன் இப்போது இந்த ஊருக்கு மாற்றலாகி வந்துவிட்டான். இந்த வீதிக்கு அவன் தான் இப்போது தபால் கொண்டு வந்து கொடுக்கிறான்!" என்றாள். அவள் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே, "இந்த வீட்டிலே கே.எஸ். நாராயணன் என்று யாராவது வந்திருக்கிறார்களா?" என்று பாலகிருஷ்ணன் கேட்டது சூரியாவின் காதில் விழுந்தது. உடனே சூரியா வீட்டுக்கு வெளியே சென்று "என்ன, பாலகிருஷ்ணா! சௌக்கியமா? என்னை நினைவு இருக்கிறதா?" என்று கேட்டான். "ஓகோ! நீங்கள்தானா ஸார்? அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். என்ன சேதி! என்ன சமாசாரம்? எப்போது வந்தீர்கள்? இந்தக் கடிதம் உங்களுக்குத்தானா பார்த்துச் சொல்லுங்கள்!" என்று ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். விலாசம் தாரிணியின் கையெழுத்தில் இருப்பதைக் கண்டு சூரியா ஆவலுடன் அதை வாங்கி, "ஆமாம், எனக்குத் தான்!" என்றான். "ஓகோ! கே.சூரிய நாராயணய்யர் என்ற பெயரை கே.எஸ். நாராயணன் என்று சுருக்கிக் கொண்டீர்களாக்கும்! நினைத்தேன்; நினைத்தேன். லலிதா அம்மாளுக்குக் கூட ஒரு கடிதம் இருக்கிறது, அதையும் நீங்களே..." என்று சொல்வதற்குள், லலிதா அங்கு வந்து சேர்ந்தாள். "இந்தாங்க அம்மா உங்களுக்கு ஒரு கடிதம். குழந்தைக்கு இன்றைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் போலிருக்கிறது. ராஜம் பேட்டையிலே நடந்த கலியாணம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது!" என்று சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் லலிதாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். பிறகு சூரியாவைப் பார்த்து, "ஸார்! மதகடியில் நாம் சண்டை போட்டோ மே ஞாபகம் இருக்கிறதா? கடிதத்தை நான் பிரித்துப் பார்த்துவிட்டேன் என்று கோபித்துக் கொண்டீர்களே?" என்றான். "அதைப்பற்றி இப்போது என்ன? எந்தக் காலமோ நடந்தது!" என்று சொன்னான் சூரியா. "அதற்காகச் சொல்லவில்லை; இப்போது உங்களிடம் கொடுத்தேனே, அந்தக் கடிதத்தை நான் பிரித்துப் பார்க்கவில்லை என்பதற்காகத் தான் சொன்னேன் தெரிகிறதா?" சூரியா உடனே சந்தேகத்துடன் தன் கையிலிருந்த கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பி உற்றுப் பார்த்தான். பால கிருஷ்ணன் புன்னகையுடன், "என்ன, ஸார்! பிரித்துப் பார்த்திருக்கிறதா!" என்று கேட்டான். "இல்லை" என்றான் சூரியா. "அதற்காகத் தான் சொன்னேன்; ஒருவேளை பிரித்துப் பார்த்திருந்தாலும் பிரித்தது நான் இல்லை. பழைய ஞாபகத்தை வைத்துக்கொண்டு என் பேரில் சந்தேகப்படாதீர்கள்; தெரிகிறதா? லலிதா அம்மா! உங்கள் கடிதத்தையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. மிஸ்டர் சூரியா பெரிய சந்தேகப்பிராணி ஆயிற்றே! அவர் என் பேரில் சந்தேகப்படக் கூடாது! நான் போய் வரட்டுமா?" "போஸ்டுமேன்! மத்தியானம் இங்கே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாமே?" என்றாள் லலிதா. "அந்தக் காலம் மலையேறிப் போச்சு; இப்போ எனக்கும் குடும்ப பாரம் சுமந்திருக்கிறது. மத்தியானம் வீட்டுக்குச் சாப்பிடப் போகாவிட்டால் நல்ல டோ ஸ் கிடைக்கும். சாப்பாடு கிடக்கிறது அம்மா! மனது நல்ல மனதாயிருக்க வேண்டும் அவ்வளவுதான். மிஸ்டர் சூரியா! உங்கள் கடிதத்தை நான் பிரித்துப் பார்த்ததாக எண்ணிக் கொள்ள வேண்டாம், தெரிகிறதா? என்ன லலிதா அம்மா, நான் சொல்கிறது என்ன?" என்று சொல்லிக் கொண்டே பாலகிருஷ்ணன் நடையைக் கட்டினான். அவன் கொஞ்ச தூரம் போனதும் சூரியா லலிதாவைப் பார்த்து, "பாலகிருஷ்ணனுடைய கிறுக்கு முன்னைவிட அதிகம் போலிருக்கிறதே? இப்படி உளறுகிறானே?" என்றான். "அவன் ஒன்றும் உளறவில்லை, அண்ணா! அவனுக்குக் கிறுக்கும் இல்லை. பாலகிருஷ்ணன் சொன்னதில் அர்த்தம் உனக்குப் புரியவில்லையா?" "அவன் சொன்னதில் அர்த்தம் வேறே இருக்கிறதா?" என்று கேட்டான் சூரியா. "ஏன் இல்லை? உனக்கு இது தெரியாதது ஆச்சரியமாயிருக்கிறது. வடக்கேயெல்லாம் ஒருவேளை இந்த வழக்கம் கிடையாதோ என்னமோ? இவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து எனக்கு வரும் கடிதங்களையெல்லாம் பிரித்துப் பார்த்துவிட்டுத் தான் அனுப்புகிறார்கள்; இதற்கு 'சென்ஸாரிங்' என்று பெயராம்..." சூரியாவுக்கு 'சுருக்' என்றது, மறுபடியும் கடிதத்தை முன் பின் திருப்பிப் பார்த்துவிட்டுத் தைரியமாக, "எனக்கு வந்திருக்கும் கடிதத்தை யாரும் பிரித்துப் பார்க்கவில்லை" என்றான். "உனக்கு எப்படித் தெரியும், பிரித்துப் பார்க்கவில்லை என்று? சில கடிதங்களைப் பகிரங்கமாகப் பிரித்துப் பார்த்து மேலே 'சென்ஸார் செய்யப்பட்டது' என்று சீட்டை ஒட்டி விடுவார்களாம். இன்னும் சில கடிதங்களைப் பிரித்து தெரியாதபடி திருப்பி ஒட்டிவிடுவார்களாம். எனக்கு இரண்டு விதமாகவும் வருவதுண்டு." "உன் அகத்துக்காரர் சிறையிலிருந்து உனக்கு எழுதும் கடிதங்களை அப்படியெல்லாம் பிரித்துப் பார்த்து அனுப்பலாம். ஆனால், நான் இன்றைக்கு வந்தவன்தானே? என் கடிதத்தை எதற்காகப் பிரிக்கிறார்கள்?" "அப்படியில்லை, அண்ணா, இந்த வீட்டு மேல் விலாசம் இருப்பதால் ஒருவேளை பிரித்துப் பார்த்திருப்பார்கள். நீயும் அப்படி இலேசுபட்டவன் அல்லவே? என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறாய் அல்லவா? நமக்குப் பார்த்தால் உறை பிரிக்கப்பட்டதாகவே தெரியாது. ஆனால் பாலகிருஷ்ணனுக்குப் பார்த்தவுடனே தெரிந்து போய்விடும். அவன் சொன்னதிலிருந்து நம் இரண்டு பேருக்கும் வந்த கடிதங்களைப் பிரித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் கடிதத்தைப் படித்துப் பார்க்கலாம்!" இவ்விதம் சொல்லிக் கொண்டே லலிதா உறையைப் பிரித்தாள். உள்ளேயிருந்த கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய முகம் மலர்ந்தது. "இவர் தான் ஜெயிலிலிருந்து எழுதியிருக்கிறார்! குழந்தையின் ஆண்டு நிறைவு அன்றைக்குச் சரியாக வந்து சேரும்படியாக எழுதியிருக்கிறார்.அவர் மட்டும் இங்கே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? நீ வந்ததற்காக எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?" என்றாள் லலிதா. இதற்குள் உள்ளேயிருந்து அம்மா கூப்பிடும் குரல் கேட்கவே லலிதா வீட்டுக்குள் சென்றாள். சூரியாவும் தனக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். பிரிக்கும்போதே அவன் மனதிலிருந்த கலக்கம் அகன்றுவிட்டது கடிதம் எழுதியிருப்பது தாரிணி. ஸி.ஐ.டி. போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய எந்த விஷயமும் அவள் எழுதியிருக்கமாட்டாள். புரட்சிக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதும்போது மனிதர்களின் உண்மைப் பெயர்களைக் கூடக் குறிப்பிடுவதில்லை, எல்லோருக்கும் மாறு பெயர்கள் இருந்தன. தாரிணிக்குச் 'சரித்திரம்' என்று பெயர் சூரியாவுக்கு 'தூதன்' என்று பெயர். இப்படி யெல்லாம் முன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது ஸி.ஐ.டி. பிரித்துப் பார்த்து என்ன தெரிந்து கொள்ள முடியும்? சூரியா எண்ணியது போலவே தாரிணியின் கடிதத்தில் போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் வேறுவிதக் கவலை சூரியாவுக்குத் தரக்கூடிய விஷயம் இருந்தது. தாரிணி வெகு சுருக்கமாகச் சில வரிகள் தான் எழுதியிருந்தாள். "அத்தங்காளின் நிலைமை முன்னைவிட மோசமா யிருக்கிறது. உடம்பு, மனது ஒன்றும் சரியாயில்லை; உங்களைச் சந்திக்க விரும்புகிறாள். கூடிய சீக்கிரம் வந்து சேரவும், நீங்கள் உடனே வந்து சேராவிட்டால் ஏதாவது விபரீதமாக முடியலாம். - சரித்திரம்." இந்தக் கடிதம் சூரியாவை ரொம்பவும் கலக்கிவிட்டது. தென்னாட்டுக்கு எந்த வேலையை முன்னிட்டு வந்தானோ அது பூர்த்தியாகி விட்டதாகச் சொல்வதற்கில்லை. ஆயினும் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பிப் போக வேண்டியது தான். ஆகா! இது என்ன தொல்லை! நல்ல அத்தங்காள் வந்து சேர்ந்தாள், தன்னுடைய வேலையையெல்லாம் கெடுப்பதற்கு! அந்த மூர்க்கன், அவளுடைய கணவன், இப்படியும் ஒரு மனிதன் உண்டா? சீதாவின் வாழ்க்கை எப்படி முடியப் போகிறதோ, தெரியவில்லையே? ஆண்டு நிறைவுக் கலியாணத்துக்காக வைதிகப் பிராமணர்களும் பந்துமித்திரர்களும் வரத் தொடங் கினார்கள். சூரியாவும் வீட்டுக்குள்ளே சென்றான், வைதிககாரியங்கள் ஆரம்பமாயின. வைதிகர்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள். ஸ்திரீகள் 'கௌரீ கலியாணம்' பாடினார்கள். நாதஸ்வர கோஷ்டியர் ஜாம்ஜாம் என்று முழங்கினார்கள். சூரியாவும் சற்று நேரத்தில் மேற்படி வைபவங்களில் முழுதும் மனதை ஈடுபடுத்தினான். தான் வந்த காரியத்தையும் புது டில்லி அத்தங்காளின் கஷ்டத்தையும் மறந்து விட்டான் என்றே சொல்லலாம். காலை மணி 10-30 ஆயிற்று; தாமோதரம்பிள்ளை தம்முடைய ஆபீஸ் அறையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். டெலிபோன் மணி அடித்தது; ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு பேசினார். "ஹலோ! தாமோதரம்பிள்ளை பேசுகிறது, போலீஸ் ஸ்டேஷனா? என்ன விசேஷம் - எதிர் வீட்டிலா? - ஓகோ? - நான் எதிர்வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கிறது கூடக் கிடையாதே... உங்களுக்குத் தான் நன்றாய்த் தெரியுமே?..இல்லை, நான் பார்க்கவில்லை. தெரியாது, ஒன்றுமே தெரியாது!... வாருங்கோ! வாருங்கோ! பேஷாய் வாருங்கோ! எல்லாத் தமாஷையும் என் வீட்டிலிருந்தே பார்க்கிறேன்!" டெலிபோன் ரிஸீவரை வைத்த பிறகு தாமோதரம்பிள்ளை மேலே நோக்கியவண்ணம் இரண்டு நிமிஷம் யோசித்துக் கொண்டிருந்தார்; பிறகு, "அமரநாத்!" என்று அழைத்தார். அமரநாத் அறைக்குள்ளே வந்தான். "எங்கேயோ புறப்படுகிறாப்போல் இருக்கே?" என்றார். "ஆம், அப்பா! நானும் சித்ராவும் எதிர்வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் போகலாமல்லவா!" "அவசியம் போகலாம், அமர்நாத்! நீ எதிர் வீட்டுக் கலியாணத்துக்குப் போவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை ஆனால் ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்." "என்னத்தை யோசிக்கறது! நானும் சித்ராவும் கட்டாயம் போகத் தான் போகிறோம். நியாயமாய்ப் பார்த்தால் நீங்கள் கூட வரலாம். எத்தனை நாளைக்கு மனதிலே துவேஷத்தை வளர விட்டுக் கொண்டிருக்கிறது!" "கூடாது, கூடாது! துவேஷத்தை வளரவிடவே கூடாது. உண்மையில் நான் கூடக் கலியாணத்திற்கு வருவதாகத் தான் இருந்தேன் அதற்குள் ஒரு தடை குறுக்கிட்டிருக்கிறது..?" "அது என்ன தடை, அப்பா?" "உன் சிநேகிதன் சூரியாவைப் பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்கு ஏதோ தகவல் வந்திருப்பது போலத் தோன்றுகிறது...?" "என்ன? என்ன?" என்று திடுக்கிட்டுக் கேட்டான் அமர்நாத். "ஆமாம்; சூரியாவைப்பற்றி ஏதோ சி.ஐ.டி. தகவல் வந்திருக்கும் போலிருக்கிறது. இப்போது டெலிபோனில் டி.எஸ்.பி. என்னைக் கேட்டார். 'சூரியா என்கிற பையன் எதிர் வீட்டுக்கு வந்திருக்கிறது தெரியுமா' என்று கேட்டார்..?" "நீங்கள் என்ன சொன்னீர்கள்?" "எனக்கும் எதிர் வீட்டுக்கும் தான் ஜன்ம விரோதமாயிற்றே?" என்றேன். 'வீட்டு வாசலில் ஒரு புதிய இளைஞனைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டார். அங்க அடையாளம் கூடச் சொன்னார். 'தெருவிலே நின்று வருகிறவர் போவோரையெல்லாம் பார்ப்பது தான் எனக்கு வேலையா?" என்று நான் பதிலுக்குக் கேட்டேன்." "அப்புறம்" "அப்புறம் என்ன? சீக்கிரத்தில் போலீஸார் இங்கே வரப் போகிறார்கள்? எதிர் வீட்டில் அமளி துமளிப்படும். இந்த நிலைமையில் நான் எப்படி எதிர் வீட்டுக்குப் போவது? என்னை அங்கே பார்த்தால் டி.எஸ்.பி.யிடம் சொன்னது பொய் என்று ஏற்பட்டுவிடும் அல்லவா!" "அப்பா! இப்போது என்ன செய்யலாம்? சூரியாவுக்கு ஓர் எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா?" "அது உன் இஷ்டம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்; அப்புறம் உன் உசிதம் போலச் செய். ஒரு விஷயம், எச்சரிக்கை செய்வதாயிருந்தால் உடனே செய்ய வேண்டும். இன்னும் பதினைந்து நிமிஷத்தில் போலீஸ் படை இங்கே வந்து விடும். சூரியாவை அரஸ்டு செய்து கொண்டு போனால், அவன் அறியாத உண்மைகளையெல்லாம் சொல்லும்படி செய்வார்கள்... நம்ஊர்ப் போலீஸ்காரர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று நீ கனவிலே கூட எண்ணியிருக்க முடியாது; தெரிகிறதா?" "அப்பா! நீங்கள் சொல்லும்போதே எனக்கு மயிர்க்கூச்சல் உண்டாகிறது. ஆனால் சூரியாவுக்கு இப்போது வெறுமனே எச்சரிக்கை செய்து என்ன பிரயோசனம்? இன்னும் பதினைந்து நிமிஷத்திலே போலீசார் வந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள். அதற்குள் அவன் எப்படித் தப்பிக்க முடியும்? எங்கே போய் ஒளிந்து கொள்வான்!" "இதையெல்லாம் என்னைக் கேட்டு என்ன பயன்? நீயும் உன்னுடைய சிநேகிதனும் எப்படியாவது போங்கள். திடீரென்று அவன் எங்கே போய் ஒளிந்து கொள்வான்? அக்கம் பக்கத்தில் யாராவது உதவி செய்தால் தான் தப்பித்துக் கொள்ளலாம்." "அப்பா! மன்னித்துக் கொள்ளுங்கள்; சூரியாவுக்கு இந்த வீட்டில் அடைக்கலம் கொடுக்கலாமா?" "மறுபடி என்னைக் கேட்கிறாயே? இந்த வீட்டில் எனக்கு எவ்வளவு பாத்தியதை உண்டோ , அவ்வளவு உனக்கும் உண்டு; உன்னிஷ்டம் போல் செய். மேலே மாடியில் பின்கட்டு அறையில் போட்டுப் பூட்டிச் சாவியை வேணுமானாலும் காணாமல் அடித்துவிடு! ஆனால் உன் இஷ்டம் என்னை இந்த விஷயமாக ஒன்றுமே கேட்க வேண்டாம்! தெரிந்ததா!" மறு நிமிடம் அமரநாத் வெளியேறி எதிர் வீட்டுக்குச் சென்றான். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் சூரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினான். மேல் மச்சுக்கு அழைத்துப் போய்த் தகப்பனார் சொற்படி பின்கட்டு அறையில் அடைத்துக் கதவைப் பூட்டினான். சில நிமிஷத்துக்கெல்லாம் வீதியில் தட தட தட தட என்று மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. மோட்டார் சைக்கிளுடன் ஜீப் ஒன்றும் வந்தது. வீதியின் இரு புறத்திலிருந்தும் போலீஸார் மார்ச் செய்து கொண்டு வந்தார்கள். கைதிகளைப் போட்டு அடைத்துக் கொண்டு போகும் இரும்புக் கூண்டு போட்ட போலீஸ் வண்டி ஒன்றும் வந்தது. ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலிலும் கொல்லையிலும் போலீஸ் ஜவான்கள் நின்று கொண்டார்கள். அப்புறம் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. வைதிகப் பிராமணர்கள் மந்திரம் சொல்வதை நிறுத்திவிட்டு வெளியில் ஓடிவந்தார்கள். அவர்களையெல்லாம் குண்டாந்தடியால் அடித்துப் போலீஸார் வீட்டுக்குள்ளே விரட்டினார்கள். "யாரையும் வெளியில் விட வேண்டாம்" என்று ஒரு பெரும் அதிகாரக் குரல் உத்தரவிட்டது. ரேழியில் உட்கார்ந்திருந்த நாதஸ்வரக்காரர்கள் வெளியேறப் பார்த்தார்கள். அதன் பயனாகத் தவுல் வாத்தியம் இரண்டு பக்கமும் படார் என்று கிழிந்தது. நாதஸ்வரக் குழாயும் ஒத்து வாத்தியமும் நொறுங்கின. ஜாலராத் தாளங்கள் சுக்குநூறாயின. போலீஸ் உத்தியோகஸ்தர்கள் வீட்டுக்குள்ளே பிரவேசிக்கப் பார்த்தபோது கிட்டாவய்யர் வந்து வாசற்படியில் நின்றார். தன்னுடைய பிள்ளையைப் பிடிக்கத் தான் வந்திருக்கிறார்கள் என்று ஒருவாறு தெரிந்து கொண்டார் போலும். பையன் வெளியேறி விட்டான் என்பது அவருக்குத் தெரியாது. ஆகையால் கையைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்று, "உள்ளே வைதிக காரியம் நடக்கிறது; ஒருவரும் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் என் செத்த உடம்பை மிதித்துக் கொண்டு தான் போகவேண்டும்" என்றார். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் மண்டையில் ஒரு அடி, கழுத்தில் ஒரு கல்தா. ஆத்மநாதய்யர் முன் வந்து, "ஏன், ஸார், இவ்வளவு தடபுடல் செய்கிறீர்கள்? சாவதானமாகப் பரிசோதனை செய்து யார் வேண்டுமோ அவரைக் கொண்டு போங்கள் யாரும் தடுக்கவில்லை. வீணாகப் பெண் பிள்ளைகளைப் பயப்படுத்த வேண்டாம்" என்றார். ஆத்மநாதய்யருடைய சாந்தமான பேச்சின் பயனாக அவருக்கு மண்டையில் இரண்டு அடி கிடைத்தது. அவ்வளவு தான்; போலீஸார் தடதட என்று வீட்டுக்குள்ளே பிரவேசித்தார்கள். முன்கட்டிலும் பின்கட்டிலும் மேல் மாடியிலும் ஒவ்வொரு அறையாகப் புகுந்து தேடினார்கள். காலில் தட்டுப்பட்டதை எல்லாம் உதைத்துத் தள்ளினார்கள். கையில் அகப்பட்டதை எல்லாம் உடைத்து நொறுக்கினார்கள். எதிரில் தட்டுப்பட்டவர்களைப் பிடித்துத் தள்ளினார்கள்; அல்லது தடியால் அடித்தார்கள். படுக்கையறைக்குள்ளே புகுந்து மெத்தை தலையணைகளைப் பிய்த்து எறிந்தார்கள். சாமான் அறைக்குள்ளே புகுந்து சட்டி பானைகளை உடைத்தார்கள். சமையல் கட்டுக்குள்ளே பிரவேசித்து அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் குண்டாந்தடியை விட்டுத் துளாவிப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆசாமி எங்கேயும் அகப்படவில்லை. வீட்டு ஸ்திரீகள் இன்னது செய்வது என்று தெரியாது அழுது கொண்டே அங்குமிங்கும் ஓடினார்கள்; குழந்தைகள் 'கோ' என்று கதறினார்கள். இதற்குள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்து வந்து கிட்டாவய்யர், "எதற்காக எல்லாரும் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? எல்லோரும் பேசாமலிருங்கள்; நடக்கிறது நடக்கட்டும்; பகவான் ஒருவர் இருக்கிறார்" என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். முதலில் போலீஸார் தாங்கள் தேடி வந்த ஆசாமி கங்காதரனோ என்று அவனைப் பிடித்து நாலு அடி கொடுத்தார்கள். ஆனால் அவனுடைய தலையில் வைத்திருந்த கட்டுக்குடுமி, புரட்சிக்காரன் அவன் இல்லை என்பதை நிரூபித்தது பிறகு அவனை விட்டுவிட்டார்கள். அநாவசியமாக அடிபட்ட கங்காதரன், "எனக்கு அப்போதே தெரியும், நான் சொன்னால் யார் கேட்கிறார்கள். அந்தக் காலிப் பயலை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது என்று சொன்னேன், கேட்டீர்களா? அருமைப் பிள்ளை என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டீர்கள். அவன் தான் சனீசுவரனுடைய அவதாரம் ஆயிற்றே? வரும்போதே சங்கடத்தையும் கூட அழைத்துக் கொண்டு வருவானே?" என்று இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தான். போலீஸார் வீடு முழுவதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தும் பயனில்லை; தேடிய ஆசாமி அகப்படவில்லை. மேலே, கீழே, அறைக்குள்ளே,அலமாரிக் குள்ளே, அரிசி மூட்டைக்குள்ளே, சாம்பார் பாத்திரத்துக்குள்ளே, மெத்தை தலையணைக்குள்ளே, எங்கேயும் அவனைக் காணவில்லை. தரையிலே சுரங்க அறை ஏதேனும் இருக்குமோ என்று சில போலீஸ் ஜவான்கள் குண்டாந்தடியால் தட்டிக் கூடப் பார்த்தார்கள்; அதிலும் பயனில்லை. அரை மணி நேர அமர்க்களத்துக்குப் பிறகு போலீஸ்காரர்களுக்குத் திரும்பி போக உத்தரவு பிறந்தது. தாமோதரம்பிள்ளை தம்முடைய வீட்டு வாசலில் வந்து நின்று எதிர்வீட்டில் நடந்த அமர்க்களத்தை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். பார்க்கப் பார்க்க, அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வந்த காரியம் பயன்படாமல் போலீஸ்காரர்கள் வெளியில் வந்ததையும் அவர் பார்த்தார். அவர் தம்முடைய சிநேகிதர் டி.எஸ்.பி.யின் அருகில் சென்று, "இன்று நீங்கள் செய்த காரியம் எனக்கு வெட்கத்தை உண்டாக்குகிறது. இந்தப் பஞ்சாங்கப் பிராமணர்களை இப்படித் தடியால் அடித்ததில் உங்களுக்கு என்ன திருப்தி? இந்தச் சூரத்தனத்தை எல்லாம் ஜப்பானியரிடம் அல்லவா காட்ட வேண்டும்!" என்றார். "மிஸ்டர் பிள்ளை, நீங்கள் விஷயம் தெரியாமல் பேசுகிறீர்கள். 'ஸாபோடாஜ்' கோஷ்டியைச் சேர்ந்த ஒரு பையன் இந்த வீட்டுக்கு வந்திருந்ததாகத் தகவல் கிடைத்தது. காவேரிப் பாலத்தை வெடி வைத்து இடிக்கச் சதியாலோசனை நடந்திருக்கிறது.." "ஆமாம்; காவேரிப் பாலத்தை இடித்து விட்டார்கள், போங்கள், ஸார்! அவர்களுடைய மூளையைச் சொல்கிறதா? உங்களுடைய அக்கிரமத்தைச் சொல்கிறதா? இப்படியெல்லாம் செய்துதானா இராஜாங்கத்தினிடம் விசுவாசத்தை வளர்த்து விட முடியும்?...சரி...தேடிய பையன் அகப்பட்டானா?" "பையன் இந்த வீட்டில் இல்லை ஆனால் இந்த டவுனிலே தான் இருக்கிறான் எப்படியும் பிடித்து விடுவோம்?" என்றார் டி.எஸ்.பி. மோட்டார் சைக்கிளும், ஜீப்பும், குண்டாந்தடிப் போலீஸும் ஏக ஆர்ப்பாட்டத்துடன் அவ்விடத்தி லிருந்து புறப்பட்டுச் சென்றன. ஆத்மநாதய்யரின் வீட்டுக்குள்ளே லலிதாவின் விம்மல் சத்தம் கேட்டது. அத்துடன் அவளுடைய இரண்டு குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கலந்தது. இவ்வாறு சிரஞ்சீவி பாலசுப்பிரமணியனின் ஆண்டு நிறைவுக் கலியாணம் சிறப்பாக முடிவடைந்தது.