அலை ஓசை/பிரளயம்/கடவுளின் கருணை

முப்பத்தொன்பதாம் அத்தியாயம் கடவுளின் கருணை

மனிதர்களைச் சிற்றறிவினர் என்றும் கடவுளைப் பேரறிவாளன் என்றும் பெரியோர்கள் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கடவுளுடைய செயல்களையும் அச்செயல்களின் காரணங்களையும் நாம் அறிய முடிவதில்லை. அறிந்தால் நாம் மனிதத் தன்மையைக் கடந்து தெய்வத்தன்மைக்கே உரியவர்களாகி விடுவோம் அல்லவா? உலகத்தில் பிறப்பவர்கள் பலர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் துன்பப்பட்டே மடிந்து போகிறார்கள். ஒரு சுகத்தையும் காணாமல் கண்ணை மூடிவிடுகிறார்கள். அக்கிரமக்காரர்களின் அநியாயக் கொடுமைகளுக்கு ஆளாகிச் சாகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு நெஞ்சு கொதிக்கிறது. கடவுள் ஒருவர் இருந்தால் அவர் இத்தகைய கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறார் என்று எண்ணுகிறோம். கடவுள் ஒருவர் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அவரைத் 'தீனபந்து' என்று சொல்வது பெரும் பொய் என்று முடிவு செய்கிறோம். இதே உலகத்தில் பிறக்கும் வேறு சிலர் என்றைக்கும் சுக போகிகளாய் இருந்துவிட்டுப் போவதைப் பார்க்கும்போது, "ஆஹா! கடவுள் ஒருவர் இருந்தால் அவர் எத்தகைய பாரபட்ச முடையவராயிருக்க வேண்டும்?" என்று வியப்புறுகிறோம். இவையெல்லாம் நம்முடைய சிற்றறிவைக்கொண்டு பேரறிவாள னாகிய இறைவனுடைய செயல்களைக் கணிக்கப் பார்ப்பதினால் ஏற்படும் விபரீதங்கள் என்று பெரியோர்கள் அறிவுறுத்தி யிருக்கிறார்கள். அன்னை ஒருத்திக்கு நாலு குழந்தைகள் இருக்கின்றன. மூன்று குழந்தைகள் சுகமாயிருக் கின்றன. ஒரு குழந்தை மட்டும் நோய்ப்பட்டு மெலிந்து போயிருக்கிறது. அதன் ஜீரண சக்தி குன்றியிருக்கிறது. எழுந்து நடப்பதற்கும் முடியாமல் அந்தக் குழந்தை படுத்த படுக்கையாயிருக்கிறது. தாயார் மற்ற மூன்று குழந்தைகளுக்கும் நல்ல வளமான உணவு கொடுக்கிறாள். சோறும் கறி வகைகளும் பட்சணங்களும் பழமும் அக்குழந்தைகளுக்கு ஊட்டுகிறாள். மெலிந்த நோயாளிக் குழந்தைக்கு அத்தகைய நல்ல உணவு கொடுக்காமல் வெறும் கஞ்சி கொடுக்கிறாள். நோயாளிக் குழந்தை என்ன நினைக்கிறது? "பார்! நம்முடைய தாயாருக்குத்தான் எத்தனை பட்சபாதம்? நான் மெலிந்தவன்; எனக்கு நல்ல போஷாக்கு வேண்டும்; ஆயினும் எனக்கு வெறும் கஞ்சியைக் கொடுக்கிறாள். என்னுடைய அண்ணன்மார் நல்ல தடியர்களா யிருக்கிறார்கள். அவர்களுக்கு என் அன்னை நல்ல புஷ்டியான உணவைக் கொடுக்கிறாள்! இது என்ன அநியாயம்? இது என்ன பட்சபாதம்!" என்று எண்ணமிடுகிறது.

குழந்தை சிற்றறிவு படைத்தது, அதனால் அதற்குத் தன் தாயின் செயல் அர்த்தமாகவில்லை. தன்பேரில் உள்ள அன்பினாலேதான் அன்னை அவ்விதம் தனக்குப் பத்தியமாகக் கஞ்சி கொடுக்கிறாள் என்பதை அக்குழந்தை அறிந்துகொள்ள முடியவில்லை. உண்மையில் தன் தாயார் மற்ற மூன்று குழந்தைகளையும் விடத் தன்னைப் பற்றியே ஓயாக் கவலை கொண்டி ருக்கிறாள் என்பதை அக்குழந்தை அறியவில்லை. கடவுளைப் பற்றிப் புகார் கூறும் மாந்தர்கள் அந்தக் குழந்தையின் நிலையில் உள்ளவர்களே! கடவுளின் கருணையையோ, அக்கருணையை அடிப்படையாகக் கொண்ட அவருடைய செயல் களையோ அறிந்துகொள்ளும் சக்தி தம்முடைய சிற்றறிவுக்குக் கிடையாது. ஆகையினாலேயே குறைப்படுகிறோம்; குற்றம் கூறுகிறோம். அது காரணமாகவே நம் துன்பத்தையும் அதிகப்படுத்திக் கொள்கிறோம். நோய்ப்பட்ட குழந்தைக்குத் தன் அன்னையிடம் பூரண நம்பிக்கையிருந்தால், அது மேற்சொன்னபடியெல்லாம் எண்ணி மனம் வெம்ப வேண்டியதில்லை. குழந்தை யின் உடல் நோய்ப்பட்டிருந்தாலும் அதன் மனமாவது நிம்மதியாயிருக்கும். அதுபோலவே கடவுளுடைய செயல்களின் காரண காரியங்களை அறிந்து கொள்ளுவதற்கு வேண்டிய அறிவு நமக்கில்லாவிட்டால் பாதகம் இல்லை. கடவுளிடம் நம்பிக்கை யிருந்தால் போதும். அந்த நம்பிக்கையானது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லாவிதமான துன்பங்களையும் சகித்துக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள் சூழ்ந்திருக்கும் போதும் மன நிம்மதியுடன் வாழ்வதற்கு வேண்டிய தைரியத்தை அளிக்கிறது. மன நிம்மதியைக் காட்டிலும் ஒரு மனிதன் இந்த உலகத்தில் வேண்டிப் பெறக்கூடிய பேறு வேறு என்ன இருக்கிறது?....

இந்த வேதாந்த விசாரணைகளையெல்லாம் இவ்விடத்தில் நாம் நுழைத்திருப்பதற்கு அவ்வளவு முக்கியமான காரணம் ஒன்றுமில்லைதான். இனிச் சொல்லவேண்டியிருப்பதைச் சொல்லுவதில் நமக்கு ஏற்படும் தயக்கந்தான் உண்மையான காரணமாகும். வாசகர்கள் தயவுசெய்து மன்னிக்கும்படி கோருகிறோம். தாரிணி சொன்னதையெல்லாம் கேட்டு அளவில்லாத மனக்குழப்பத்துக்கு உள்ளாகியிருந்த சௌந்தரராகவனுக்கு அந்த டெலிபோன் அடித்த மணி ஒரு வரப்ரசாதமாகத் தோன்றியது. பேச்சை மாற்ற அது ஒரு சாதனம் ஆகுமல்லவா! "இந்த வேளையில் யார் டெலிபோனில் கூப்பிடுகிறார்கள்!" என்று எரிச்சலாகச் சொல்லிக்கொண்டே சௌந்தரராகவன் டெலிபோனை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு, "யார் அது?" என்று கேட்டான். டெலிபோனில் அவனுக்கு கிடைத்த செய்தி மிக அதிசயமான செய்தியாயிருக்க வேண்டும். அவனுடைய முகத் தோற்றத்தில் அவ்வளவு மாறுதல் காணப்பட்டது. டெலிபோனை வைத்துவிட்டுத் தாரிணியைத் திரும்பிப் பார்த்து, "கேட்டாயா, தாரிணி! சீதா ஆற்றில் முழுகி இறந்து விட்டாள் என்பது பெரும் பொய். சூரியா அந்த மாதிரி என்னிடம் எதற்காகப் புளுகினான் என்று தெரியவில்லை. உனக்குத் தெரியுமே, மாஜி திவானுடைய மகள் பாமாவை! அவளுடைய வீட்டில் இப்போது சீதா இருக்கிறாளாம். அங்கே சூரியாவும் இருக்கிறானாம். பாமா என்னை உடனே புறப்பட்டு வரச் சொல்லுகிறாள்! நீயும் வரு.....?" என்று சொன்னவன், சொல்ல வந்த வார்த்தையைப் பூர்த்தி செய்யாமல் சட்டென்று நடுவில் நிறுத்தினான். அவனுடைய குரலில் தொனித்த குதூகலத்தைத் தாரிணி நன்றாக அர்த்தம் செய்து கொண்டாள். சீதா உயிரோடிருக்கிறாள் என்பதனால் மட்டும் ஏற்பட்ட குதூகலம் அல்ல அது. ஒரு கையும் ஒரு கண்ணும் இழந்த இந்தக் கோரஸ்வரூபத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இனி அவனுக்கு இல்லையல்லவா? தாரிணி கேட்ட கலியாண சம்பந்தமான கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இனிமேல் இல்லையல்லவா?

"ஆமாம், நானும் வருகிறேன்!" என்றாள் தாரிணி. அவளைத் தன்னுடன் அழைத்துப் போக ராகவனுக்கு அவ்வளவு ஢ருப்பமில்லையென்பது தாரிணிக்குத் தெரிந்துதானிருந்தது. ஆயினும் சீதா உயிரோடிருக்கும் செய்தியை அறிந்த பிறகு அவளை உடனே போய்ப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? ராகவன் விரைந்து சென்று காரை எடுத்தான். தாரிணி பின் ஸீட்டில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். வண்டி போய்க் கொண்டிருந்தபோது ராகவன், டெலிபோன் பேச்சில் தான் அறிந்த சில விவரங்களைக் கூறினான்;- "சீதாவும் அவள் தகப்பனாரும் இத்தனை நாளும் பானிபத்தில் இருந்தார்களாம். இன்றைக்குக் காந்திஜியின் கடைசி ஊர்வலத்துக்காகச் சீதாவைச் சூரியா அழைத்து வந்தானாம். கூட்டத்தில் இருவரும் பிரிந்து போய் விட்டார்களாம். கூட்டம் கலையும் சமயத்தில் சூரியா பாமாவைத் தற்செயலாகச் சந்தித்துச் சீதாவைப் பிரிந்தது பற்றிச் சொன்னானாம். போலீஸுக்கு டெலிபோன் பண்ணித் தேடச் செய்யலாம் என்று இருவரும் பாமாவின் வீட்டுக்கு வந்தார்களாம். அங்கே அந்த வீட்டு வாசலிலேயே சீதா பிரக்ஞையற்றுக் கிடந்தாளாம். உள்ளே எடுத்துப் போய்ச் சிகிச்சை செய்து வருகிறார்களாம், டாக்டரும் ந்திருக்கிறாராம். இந்தச் சூரியா எதற்காக என்னிடம் அவ்வளவு பெரிய பொய்யைச் சொன்னான் என்று தெரியவில்லை. சீதா ஆற்றில் முழுகி இறந்து விட்டாள் என்று சொன்னானே? எவ்வளவு பெரிய அயோக்கியன் அவன்?...." தாரிணி அப்போது, "வீணாக ஏன் வைகிறீர்கள்? அவரைக் கேட்டால் அல்லவா உண்மை தெரியும்? ஒருவேளை உங்களைச் சந்தித்தபோது சீதா உயிரோடிருப்பது அவருக்குத் தெரியாமலிருந்திருக்கலாம்!" என்றாள். "இருந்தாலும் இருக்கலாம், ஆனாலும் என்ன அதிசயம் பார், தாரிணி! சீதா இன்றைக்கு அகப்பட்டது ஓர் அற்புதம் இல்லையா? கடவுளுடைய கருணை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்!" என்றான் ராகவன்.

வண்டி பாமா வீட்டு வாசலில் போய் நின்றது. வண்டிச் சத்தம் கேட்டதும் பாமாவும் சூரியாவும் தயாராக வாசற்பக்கம் வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய ராகவனைப் பாமா கையைப் பிடித்து, "சீக்கிரம் வாருங்கள்!" என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். போகும்போதே ராகவன், "சூரியா! நன்றாக என்னை ஏமாற்றினாய், போனால் போகட்டும்! வண்டியில் தாரிணி இருக்கிறாள் அவளைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். தாரிணியின் கோர ஸ்வரூபத்தைப் பார்த்ததும் சூரியாவின் மனப்போக்கு எப்படியிருக்கும் என்று சௌந்தரராகவனுடைய மனம் அச்சமயம் எண்ணமிட்டது. பரபரப்புடன் மோட்டார் வண்டியை அணுகி வந்த சூரியாவைப் பார்த்துத் தாரிணி, "என் அருகில் நெருங்க வேண்டாம், சூரியா! நான் அசுத்தமானவள்!" என்றாள். "அதை நான் ஒரு நாளும் நம்ப மாட்டேன். தாரிணி! எது எப்படி யிருந்தாலும் உன்னைப் போல் புனிதமான பொருள் இந்த உலகில் வேறொன்று இருக்க முடியும் என்று ஒப்புக்கொள்ள மாட்டேன்!" என்று சொன்னான் சூரியா. "அதைப்பற்றி அப்புறம் பேசலாம். சீதாவுக்கு உடம்பு எப்படியிருக்கிறது?" என்று தாரிணி கேட்டாள். "பிழைக்க மாட்டாள் என்று டாக்டர் சொல்கிறார். இப்போதுதான் கொஞ்சம் பிரக்ஞை வந்திருக்கிறது. பிரக்ஞை வந்ததும் உன் பெயரையும் வஸந்தியின் பெயரையும் சொன்னாள்" என்றான் சூரியா. "ஐயோ! அப்படியானால் உடனே போய்க் குழந்தையை அழைத்து வரவேண்டும். நம்முடைய பழைய வீட்டிலே இருக்கிறாள்! நீங்கள் என்னுடன் வருவீர்களா?" என்றாள் தாரிணி. "அவசியம் வருகிறேன், பாவம்! ராகவன் சீதாவின் அந்திய காலத்திலாவது அவளுடன் சிறிது நேரம் தனியாக இருந்து அவளுடைய மனம் குளிரச் செய்யட்டும்" என்றான் சூரியா.