ஆடும் தீபம்/ஆளுக்கு ஓர் அத்தியாயம்

ஆளுக்கு ஓர்
அத்தியாயம்
நாவல் திசைப் பக்கமே திரும்பியவனல்ல நான். ஒரு விருந்து வைத்து, ஆசிரியர் என்னை இதில் சிக்க வைத்து விட்டார். ஆரம்பத்தில் பங்கு பெற இருப்பவர்கள் பட்டியலில், என் பெயர் வந்து கொண்டிருந்த போது, பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். ஒரு சமயம் மறுத்து விடலாம் என்று கூட, நினைத்ததுண்டு. ‘அது அழகல்ல’ என்றும் சொல்லிக் கொண்டேன்; புலியும் வந்து விட்டது.

ஒருவரே எழுதுகிற நாவலில், கதைச் சிக்கல்களை ஏற்படுத்தி, விடுவித்துக் கொள்வது அந்த ஆசிரியரது பொறுப்பு; எளிதுங் கூட. ஆளுக்கொரு அத்தியாயமாக, கதைப் போக்கை எப்படி எப்படி யெல்லாமோ திருப்பி விட்டு, எங்கோ கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள் முன்னோடிகள். நானும் என் பின்னோடியைப் பற்றி கவலைப்படாமல் அல்லியையும், இன்னாசியையும் ஒரு நிலையில் நிறுத்திக் குழப்பி விடுகிறேன். அடுத்தவர் பி. வி. ஆர். அவர் பார்த்துக் கொள்கிறார்!

சி. சு. செல்லப்பா