இசையமுது 1/காதல் பகுதி

காதல் பகுதி



வண்டிக்காரன்

தோ பாரடி அவரே என் கணவர்—
            அதோ பாரடி!

புதுமாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் என்னை வாட்டி!
            அதோ பாரடி!

இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி
ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி
தெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி?
சேரனே அவர்என்றால் அதில்என்ன அட்டி?

           அதோ பாரடி!

ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அடிசாயும் முன்னே வரவு மிசைந்தார்
அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா
"ஆசைமுத்தம்" என்று தந்து நடந்தார்!
           அதோ பாரடி!

மாடு மேய்ப்பவன்

மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை!—
               மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடி யிருந்தேன்—
               மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

"ஓடையில் தாமரை வாடிடும்" என்றான்
உள்ளங்கை விரித்தும் கூப்பியும் நின்றேன்
"வாடாத தாமரை உன்முகம்" என்றான்
மலர்காட்டி முகங்காட்டி வாய்பார்த்து நின்றேன்
"கூடியிருக்க" என்றான் கைகோத்து நின்றேன்
காடும் கமழ்ந்தது நான்விட் டகன்றேன்—
              மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

காளைசொற் படிமறு நாளைக்குச் சென்றேன்
"கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ?" என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து "குடி" என்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பால் என்றேன்
"அல்லடி காதற் கலப்பால் தான்" என்றான்--
             மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

பாவோடும் பெண்கள்

டை ஓவியங்கள்! அடடா!
நடுவீதியிற் பாவோடும் மடவார்—

              நடை ஓவியங்கள்!

இடதுகைத் திரிவட்டம் எழிலொடு சுழலும்
ஏந்தும் வலதுகை வீசுமுள் அசையும்—

              நடை ஓவியங்கள்!

தண்டை யாடிடும் காலில்!
கெண்டை விழிபோகும் நூலில்!
கொண்டை மேலெலாம் நறுமலர்க் காடு
கொடியிடை அசையும் மிகஅழ கோடு—

             நடை ஓவியங்கள்!

உலகினுக் குடை தேவை
உடைக்கு வேண்டும் நூற்பாவே
உலவும் மங்கைமார் இதனை எண்ணுவார்
உயிரும் உணர்வுமாய்த் தொண்டு நண்ணுவார்—
             நடை ஓவியங்கள்!

தறித்தொழிலாளி நினைவு

ழை யெலாம் அவள் பூங்
குழலோ! கைத்தறியின்— இழை

பிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள்—என்
விழியெலாம் அவளையே பொருத்தினாள்

தொழில் முடிந்ததும் உணவுண்டு—நான்
தூங்கு முன்னே எனைக் கண்டு—மங்கை,
"எழுதினீர்களா மேற்கொண்டு—பதில்
என்தாய்க்" கென்று கேட்டதுண்டு—தேன்
பிழியும் அவளிதழ் தின்றதா பிழை?—அவள்
பின்னும் என்னிடம் நின்றதா பிழை? இழை

தார்கொண்ட நாடாவைக் கையினால்—நான்
தறியில் கோப்பதும் தேவை—அன்றோ?
பார்கொண்ட மானத்தை—நான்
பாதுகாப்பதும் தேவை—மிகச்
சீர்கொண்ட என்குளிர்ப் பூங்காவை—நான்
சேரவும் கேட்க வேண்டும் அம்மாவை! இழை

உழவன் பாட்டு

சென்று பொழுதுசாய—வரு
கின்றேனடி விரைவாக!
இன்று தவறினால் ஈரம் போகுமடி
இருட்டிப் போகுமுன் விதைக்கலாகுமடி— சென்று

வேலி முள்சுமந்த கூலிகொடடி
ஆள் வந்தால்—நீ
வேளை ஆகுமுன் கொண்டுவா
கூழிருந்தால்!

வேலைக்காகப் பகல் போதில்
உன்னைப் பிரிந்தால்
விடியுமட்டும் யார் கேட்பர்
காதல் புரிந்தால்— சென்று

சேவல் குரல்கிழியக் கூவல்
கேளடி கரும்பு!—நின்
ஆவல் தெரியுமடி போக
விடைகொடு! திரும்பு!

தேவையிருக்கையில் உன்றன்
நெஞ்சோ இரும்பு!
சிவலைப் பசுவுக்கோ தீனி
வைக்க விரும்பு— சென்று

உழத்தி

ளை யெடுக்கின்றாள்— அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள்— அதோ
களை யெடுக்கின்றாள்!

வளவயல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்
களை யெடுக்கின்றாள்!


கவிழ்ந்த  தாமரை
முகம்  திரும்புமா?—அந்தக்
கவிதை  ஓவியம்
எனை  விரும்புமா?

                           
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவிநீரில் எப்போது முழுகலாம்?— களை


"செந்நெல்  காப்பது
பொதுப்பணி  செய்யல்!—ஆம்"
என்ற  நினைவினால்
என்னருந்  தையல்,

                        
மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட— களை

ஆலைத் தொழிலாளி

லையின் சங்கேநீ ஊதாயோ? மணி
ஐந்தான பின்னும் பஞ்சாலையின்...
சங்கே...

காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே,
வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே

ஆலையின் சங்கே...

மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே
வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே
மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே
விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே

ஆலையின் சங்கே...

குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும்
குந்திப்பேச இரு நாழிகை ஒழியும்
விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும்
வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும்

ஆலையின் சங்கே...

இரும்பாலைத் தொழிலாளி

ழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ஆருயிராம்!

பழுப்பேறக் காய்ச்சிய இருப்பினைத் தூக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி—இவ்

வழுக்குத் துணிக்குள்ளே

பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி ஆலைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு

அழுக்குத் துணிக்குள்ளே...

அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
"அறஞ்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
‘இறந்தார்போல் இருப்பேனோ’ என்பான்என் அத்தான்

அழுக்குத் துணிக்குள்ளே...

கோடாலிக்காரன்

வெய்யில் தாழ வரச் சொல்லடி—இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி

வெய்யில் தாழ வரச் சொல்லடி

கையில் கோடாலி கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்என்று

வெய்யில் தாழ வரச் சொல்லடி

கூரைக்குப்பின் னால் இருக்கும் தென்னை—அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை?

வெய்யில் தாழ வரச் சொல்லடி

தாய் அயலூர் சென்றுவிட்டாள்; நாளை—சென்று
தான் வருவாள் இன்றுநல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளழுகும் பாளை—நாள்
மாறிவிட்டால் ஆசை எல்லாம் தூளே

வெய்யில் தாழ வரச் சொல்லடி.

கூடை முறம் கட்டுவோர்

சங்கு சீவடி பிரம்பு செற்றடி
கைவேலை முடித் திடலாம்—நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயதைக் கொடுத் திடலாம்
பிசைந்து வைத்துள மாவும் தேனும்
பீர்க்கங் கொடியின் ஓரம்—அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்
கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே—இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப் பதுதான் வேலை
காடு வெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி—நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண் ணாட்டி
சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது—நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திடமுடி யாது
பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும்—அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்.

பூக்காரி

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்—நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!

பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்
பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து...

தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் கின்றாள்—ஒரு
பூவைக் காட்டிப் பேர்சொல் என்றேன்
பூவை "என்பேர் பூவை" என்றாள்
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து...

காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து—பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ
மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள் சேர்த்து...

குறவர்

காடைக் காரக் குறவன் வந்து
பாடப் பாடக் குறத்தி தான்
கூடக் கூடப் பாடி ஆடிக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்

சாடச் சாட ஒருபுறப் பறை
தக தக வென் றாடினாள்
போடப் போடப் புதுப் புதுக் கை
புதுப் புதுக்கண் காட்டினாள்

ஓடிச் சென்று மயிலைப் போல
ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே
மூடி மலர்க்கை திறந்து வாங்கி
முறிப்பும் முத்தமும் குறித்தனள்.

தேடத் தேடக் கிடைப்ப துண்டோ
சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள்
ஈடு பட்டது நேரில் முத்தமிழ்
ஏழை மக்களின் வாழ்விலே!

தபால்காரன்

ருகின்றார் தபால்காரர்—கடிதம்
தருகின்றாரோ இல்லையோ—
வருகின்றார் தபால்காரர்!

தருகின்றார் கடிதம் எனினும் அதுஎனக்
குரியதோ என் தந்தைக் குரியதோ!

வருகின்றார் தபால்காரர்!

வரும் அக்கடிதம் அவர் வரைந்ததோ
மாமியார் வரைந்ததோ?
திருமணாளர் வரைந்த தாயினும்
வருவதாய் இருக் குமோ இராதோ?

வருகின்றார் தபால்காரர்!

அன்பர் அவர் வருவதாயினும்
ஆடி போக்கியோ விரைவிலோ?
இன்று போதல் நூறாண்டு போதலே
அன்றி நாளைஎன் பதுவென் சாதலே!

வருகின்றார் தபால்காரர்!

சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்

ந்தையின் மாடு திரும்பையிலே—அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடு சென்றாள்—அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!

தொந்தி மறைத்திட வேட்டிகட்டி—அவன்
தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக் கொடுத் திட்டாண்டி—அவன்
எட்டி ஒரே முத்தம் இட்டாண்டி!

கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்—அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்
தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்—அவன்
தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள்

"கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ—இந்தக்
கோடை படுத்திடும் நாளில்?" என்றாள்
"தொட்டியின் தண்ணீர் கொதிக்கு" தென்றான்—"நீ
தொட்ட இடத்தில் சிலிர்க்கு" தென்றான்.

ஓவியக்காரன்

வியம் வரைந்தான்—அவன் தன்
உளத்தினை வரைந்தான்!
ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு
வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே

ஓவியம் வரைந்தான்!

கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்
கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி
மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி
வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித்
தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே
தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே

ஓவியம் வரைந்தான்!

காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான்
கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான்
ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான்
இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான்
கோதை அடியில்தன்கை கூப்புதல் போலவும்
கொள்கை மகிழ்ந்தவள் காப்பது போலவும்

ஓவியம் வரைந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=இசையமுது_1/காதல்_பகுதி&oldid=1647616" இலிருந்து மீள்விக்கப்பட்டது