இன்பம்/இராய. சொக்கலிங்கம்

9
இன்பம்

இராய. சொக்கலிங்கம்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்கவேண்டும்? இவையற்றித் தோழர் ராய. சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய ‘இன்பம்’ என்ற நூலில் இருந்து முல்லைப் பதிப்பகத் தோழர் முத்தையா அவர்கள் தொகுத்தனுப்பிய கருத்து இங்கு தரப்படுகிறது.

இப்பரந்த பேருலகில் பிறந்தவர் அனைவரும் விரும்புவது இன்பம் என்பதை எவரும் மறுக்கத் துணியார். இன்பமன்றித் துன்பத்தைப் பேதையும் கருதார். ஆனால் இன்பம் எது என்பதிலேயே பெரிய ஐயப்பாடு இருக்கின்றது. உலகத்தில் வசிக்கும் மக்கள் பலப்பலகோடியாவர். இத்துணைக்கோடி மக்களில் இருவர் கருத்துக்கூட எல்லாவற்றினும் ஒவ்வுதல் அருமை. எத்துணை நெருங்கிய நண்பரும் மிகப் பெரும்பாலான கருத்துகள் ஒன்றுதல் பெற்றிருந்த போதிலும் சிலவற்றில் மாறுபட காண்கின்றோம். உளத்தின் போக்கு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி எனவே, வேண்டுவது எல்லோர்க்கும் இன்பம் என்ற ஒருபொருளே யெனினும், ஒவ்வொருவர் ஒவ்வொன்றை இன்பமாகக் கருதுகின்றனர். இது நாள் தோறும் கண்கூடாக அனைவரும் கண்டு வருவதே.

ஒருவர் வேளை தவறாது நன்றாகச் சாப்பிட்டுக்கொண்டு காலங்கழிப்பதை இன்பமெனக் கருதுகின்றார். ஒருவருக்கு வாணாளில் பெரும்பகுதி நன்றாக உறக்கம் பிடிப்பது இன்பமாக இருக்கின்றது-ஒருவர் மக்களை நிறையப் பெற்றுக் கொண்டிருந்தாற் போதும் அதுவே இன்பம் எனக் கொள்கின்றார். ஒருவர் உளம் பெரிய மாளிகை போன்ற வீடொன்றைக் கட்டிக்கொண்டு அதில் உறைதல் இன்பமென உணர்கிறது. ஒருவர் இயந்திர வண்டிகளிலேறி உல்லாசமாகத் திரிவது இன்பமென எண்ணுகின்றார். ஒருவர் உச்சிமுதல் உள்ளங்கால் வரையும் நல்ல ஆடை அணிகளைப் பூட்டிக்கொள்ளுதலே இன்பம் என நினைக்கின்றார். ஒருவர் பெண்ணின்பத்தைத் தவிர உலகில் வேறு இன்பம் எது எனப் பேசுகின்றார் ஒருவருக்குப் பிறன்மனை நச்சுதல் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு பிறன்தோள் பொருந்துதல் இன்பமqகத் தோன்றுகின்றது. ஒருவருக்குச் சீட்டாட்டத்தில் உள்ள இன்பம் வேறு எதிலும் இருப்பதில்லை. ஒருவருக்கு மது உண்டல் இன்பம். ஒருவருக்குப் புலால் அருந்துதல் இன்பம், ஒருவருக்குப் புகையிலை பாதி விழுங்குதல் பேரின்பம்,

ஒருவருக்குச் சட்டசபை செல்வதில் இன்பம் ஒருவருக்கு அதனை வெட்ட வெளியாக்குவதில் இன்பம் ஒருவருக்கு அங்கு சென்று முட்டுக்கட்டை போடுவதில் இன்பம், ஒருவருக்கு அதிகாரிகட்குக் காலணிபோல் நடப்பதில் இன்பம். ஒருவருக்குப் பட்டம் வாங்குவதில் இன்பம். ஒருவருக்கு அது நாராசமாகத் தோன்றுகிறது. ஒருவருக்குப் பிறருக்கு இடையூறு செய்வதில் இன்பம். ஒருவர் தம்மைப் பிறர் புகழ்வதே இன்பமென எண்ணுகின்றார். ஒருவர் பிறர் வசை உரைத்தலை இன்பமாகக் கொள்கின்றனர். ஒருவர் புறங் கூறுதலை இன்பமாகக் கூறுகின்றார். ஒருவர் பொய் புகல்தல் இன்பமெ நினைக்கிறார். ஒருவர் எவ்வாற்றானும் பொருள்சேர்த்தல் ஒன்றே இன்பமெனக் கருதுகின்றார். ஒருவர் தனக்குப் பலர் கீழ்ப்படிந்து நடத்தல் இன்பமென உணர்கின்றார். ஒருவர் தன்னைப் பெரிய மனிதன் என்று பலர் சொல்லுவதுதான் இன்பமென எண்ணுகின்றார்; அதன் பொருட்டு ஏராளமாகப் போருளைச் செலவிடுகின்றார். திருவிளையாடல் பலபுரிகின்றார். ஒருவருக்குத் தெருக்கூத்து இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு நாடகம் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு பாட்மிண்டன் என்று கூறுகின்ற பந்து விளையாட்டு இன்பமாக இருக்கின்றது. இவை நிற்க.

ஒருவருக்குப் பத்திரிகை படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு நாவல் படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு அறிவு நூல்கள் படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு சொன்மாரி பொழிவது இன்பமாகவிருக்கின்றது ஒருவருக்கு அதனைக் கேட்பது இன்பமாக விருக்கின்றது ஒருவருக்கு இசையில் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு அவைத் தலைமை வகித்தல் இன்பமாக இருக்கிறது. ஒருவருக்கு கழுத்து நிறைய மாலை வாங்கிக்கொள்வது இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு உபசாரப் பத்திரம் பெறுவது இன்பமாக விருக்கின்றது ஒருவருக்குப் பிறர் இகழ்ச்சி புகழ்ச்சி எதையும் எண்ணாது செயலில் அன்பர் பணிசெய்தல் ஒன்றே இன்பமாக விருக்கின்றது.

இவ்வாறாக ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் இன்பமாகத் தோன்றுகின்றது. ஒருவருக்கு இன்பமாகத் தோன்றும் பொருள் மற்றொருவருக்குத் துன்பமாகத் தோன்றுகிறது. உதாரணம் பல கூறலாம் ஒருவருக்கு பிறனில் விழைதல் முதல் பேரின்பம், இன்னொருவருக்கு அதைக்கேட்பதும் பெருந்துன்பம் ஒருவருக்குப் படிப்பதில் இன்பம்; மற்றொருவருக்கு படிப்பென்றால் எல்றையற்ற துன்பம்; இப்படியே ஒவ்வொன்றினும் ஒரேபொருள் ஒருவருக்கு இன்பத்தையும் வேறொருவருக்குத் துன்பத்தையும் செய்கின்றது. எனவே இன்பம் என்ற ஒன்றை எப்பொருளும் பெற்றிருக்கவில்லை. எந்தப் பொருளுக்கேனும் அதன் இயற்கைக்குணம் இன்பமாக இருக்குமானால் அது ஒரே படித்தாக எல்லாருக்கும் இன்பந்தந்து நிற்கவேண்டும். அவ்வாறு எந்தப் பொருளும் எல்லோருக்கும் இன்பந்தந்து நிற்கமுடியாது. ஆதலின் எந்தப் பொருளுக்கும் இன்பம் தரும் குணமில்லை. மாம்பழத்திற்கு ருசி, இனிப்பு என்றால் அது எல்லோருக்கும் இனிக்குமேயன்றி எவருக்கேனும் பிறிதாக விருக்குமோ? இன்பத்தில் அவ்வாறில்லை. நூல்கள் விதித்தன. சிலருக்கு இன்பமாக இருக்கின்றன. நூல்கள் விலக்கியவற்றை இன்பமெனக் கொள்வாரும் எண்ணற்றாரிருக்கின்றன என்பதை முன்கூறியவை கொண்டே அறிதலாகும். ஆக, இன்பம் பாண்டிருக்கின்றது அது எப்பொருளினும் இல்லை. உள்ளத்தில் இருக்கின்றது. எவர் உள்ளம் எப்பொருளை இன்பமெனக் கருதிற்றோ ஆண்டு அப்பொருளிடத்து அவர் இன்பம் நுகர்கின்றார், எனவே இன்பம் என்பது உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சி என்பது தேற்றம்.

பொருளில் இன்பம் இருப்பதாகக் கருதுதல் அறியாமை. கூர்ந்து ஆராயும் எவரும் பொருளில் இன்பம் இல்லை யென்பதை ஏற்பர். இவ்வுண்மை ஓராமையினாலேயே மக்கள் இன்பம் இன்பம் என எண்ணித் தீய செயல்பல செய்தழிகின்றனர். இன்பம், எப்பொருளிலும் இல்லை, உள்ளத்தின் உணர்ச்சியே இன்பம் என்பது; இன்பமென எண்ணித்தீமை செய்தலாகாது என்பதை நன்றாக உணர்த்துவதற்காக இக்கட்டுரையில் அது விரித்துக்கூறப்பெறுகிறது. இன்பம் உள்ள உணர்ச்சியே என்பதை உள்ளம் பொருந்த உணர்ந்து விடுவார்களானால் பின்னர் இன்பம் என எண்ணிச் செய்யும் தீமைகளை யெல்லாம் போக்கிவிடுதல் கூடுமன்றோ! இன்பம் பொருளிலில்லை யென்பதற்கு ஈண்டுக்காட்டியதை விட இன்னும் விளக்கமாகக் காட்டவேண்டிய தில்லையன்றோ?

மக்கள் செய்யவேண்டுவதென்ன? நூல்கள் விதித்த நற்கடமையாகிய அறனே பிறிது செய்யக் கனவினும் கருதலாகாது. அறன் ஒன்றே இன்பமெனக் கருதப் பழகிவிட்டால், அதன் பாற்பட்ட நற்செயல்கள் தவிரப்பிறயாவும் துன்பமாகவும் அவையே இன்பமாகவும் தோன்றும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. அப்பழக்கமே - அறமே இன்பமெனக்கருதும் அறிவே மக்கள் பெறுதல் வேண்டும். அவ்வறிவு படைத்தாலன்றி மக்கள் யாக்கை பெற்ற பயன் இல்லை இல்லை முக்காலும் இல்லை. மக்கள் அறத்தையே இன்பமாகக் கருதும் அறிவுபெற வேண்டுமென்று கருதியே யன்றோ இன்பம் நுகர இவ்வுலகிற் பிறந்த மக்கட்கு முதலில் அமைந்த ஒளவைபிராட்டியருளிய அருஞ்சொற்றொடர் “அறஞ்செயவிரும்பு” எனப் பணித்தது. “எப்பொருளும் அவரவர் எண்ணத்தின் வழி இன்பமாகத் தோன்றுங்கால் அவரவர்களுக்கு இன்பமாகத் தோன்றுவதை அவரவர் செய்யலாமே” என்ற கேள்வி வருமோ என்றஞ்சுகிறேன். அவரவர்க்குத் தோன்றியதை அவரவர் செய்வதென்றால் உலகில் நூல்கள் வேண்டுவதில்லை, ஒழுங்குகள் வேண்டுவதில்லை; ஒன்றுமே வேண்டுவதில்லை யென்றாகிவிடும். அதனை எண்ணியே “மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்ற மூதுரை எழுந்தது. இதனால் எவர் எண்ணத்தின் உரிமையையும் நான் பிடுங்குகின்றேனென்று எவரும் தருதலாகாது. உலகில் எல்லோரும் பேரறிவு படைத்தவர்களாகவிருந்து செய்வன தவிர்வன உணர்ந்தவாகளாகவிருப்பாரானால் அவரவர் எண்ணத்தின் வழிநடப்பதில் தடையொன்றுமிராது, உலகில் பேரறிவு படைத்தவர் ஒரு சிலரே இருத்தல் இயல்பு. இது என்றுங்கண்ட உண்மை; இதனை ஆதாரத்தோடு மறுக்கமுடியாது இதனால் யாரும் தாங்கள் அறியாமையுடையவர்கள் என்று கோபங் கொள்ளலாகாது. உண்மையுணரும் ஆற்றல் வாய்ந்த பேரறிஞர் ஒரு பகுதியார் பண்டும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். பண்டிருந்த பல்லோர் செய்யத் தக்கன இன்னதென உலகத்து மக்கள் உய்யும் பொருட்டு அறநூல்கள் எழுதி வைத்துள்ளனர். இன்றுள்ள ஒருபகுதியாரும் அவைகளை விளக்குவதோடு காணும் உண்மைகளையும் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். அவைகளை நன்கு ஓர்தல்வேண்டும். அவை யனைத்தையும்” அப்படியே கொள்ளவேண்டுமென்றும் நான் கூறவில்லை. அகமூடக் கொள்கைக்கட்கெல்லாம் ஈண்டு இடமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் அறிவு கொண்டு எல்லாப் பொருள்களையும் எல்லோர் கருத்தையும் அலசி ஆராய்லாம் தாங்கள் தெளிந்து கொள்ள முடியாதவற்றை நெருங்கிய அன்பர்கள் துணைகொண்டு அறியலாம். அதனின்றும் தாங்கள் உண்மைதேறி அவ்வழியொழுகுதலே மாண்புடைத்து.

எவரேனும் தான் சொல்லுவதுதான் சரி, அதை எல்லோரும் ஆராயாமலே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறுவாரானால் அவரே பேரறியாமையுடையவர் என்பது நிச்சயம். அறம் வகுத்த பேரறிஞர்களுள் வள்ளுவரை நிகர்த்தார் எவருமலர் என்பது அறிஞர்களின் கருத்து. அப்புலவர் பெருமானார் நான் சொல்வதே மறை: அதனை ஏற்றுக்கொள்க என்று கூறினாரல்லர். அவ்வாறு கூறியிருந்தால் அவர் உலகம் போற்றும் அறிவுபெற்றிருக்கமுடியாது. “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கண்பதறிவு” “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்னும் இரண்டு அருங்குறட்களை அருளினார் அப்பெருந்தகை.

எனவே அறிஞர்கள் கருத்துவழித் தம் அறிவைச் செலுத்திமெய்ப்பொருள் காண்டில் வேண்டும். அது கண்டு ஒழுகிய அன்றுதான் பிறவிப்பயன் உண்டு. அம்மேலான நிலையையே இன்பம் எனக்கருதல் வேண்டும். கடமையே இன்பமெனக் கருதும் உளம் பெற்றால் பிற எதுவும் இன்பமாக ஆண்டுத் தோன்றாது.

திராவிட நாடு
10-6-45