இளைஞர் இலக்கியம்

இளைஞர் இலக்கியம்
எழுதியவர்: பாரதிதாசன்


தமிழ் தொகு

<poem>

தமிழ் வாழ்த்து தொகு

தமிழே வாழ்க! தாயே வாழ்க! அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க! கமழக் கமழக் கனிந்த கனியே அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!

சேர சோழ பாண்டிய ரெல்லாம் ஆர வளர்த்த ஆயே வாழ்க! ஊரும் பேரும் தெரியா தவரும் பாரோர் அறியச் செய்தாய் வாழ்க!

சீரிய அறமும் சிறந்த வாழ்வும் ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்; வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய் ஈர நெஞ்சே இன்பம் என்றாய்.

குமரி நாட்டில் தூக்கிய கொடியை இமயத் தலைமேல் ஏறச் செய்தாய். தமிழைத் தனித்த புகழில் நட்டாய் தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.

முத்தமிழ் அம்மா! முத்தமிழ் அம்மா! தத்துவ உணர்வை முதலில் தந்தாய்; எத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய் முத்துக் கடலே! பவழக் கொடியே!

எழுத்தே பேச்சே இயலே வாழ்க! இழைத்த குயிலே இசையே வாழ்க! தழைத்த மயிலே கூத்தே வாழ்க! ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க!

தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க!

முத்தமிழ் தொகு

படிப்பும் பேச்சும் இயற்றமிழ்! பாடும் பாட்டே இசைத்தமிழ்! நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே நாடகத் தமிழ் என்பார்கள்.

முடிக்கும் மூன்றும் முத்தமிழே! முத்தமிழ் என்பது புத்தமுதே! முடித்த வண்ணம் நம் தமிழே முத்தமிழ் என்றே சொல்வார்கள்.

மூவேந்தர் தொகு

சேர வேந்தர் தமிழ் வேந்தர்! சிறந்த சோழர் தமிழ் வேந்தர்! பாரோர் எல்லாம் புகழ்கின்ற பாண்டிய வேந்தர் தமிழ் வேந்தர்!

நேரே தமிழைக் காத்தாரே! நீண்ட நாட்டை ஆண்டாரே! வீரத் தாலே புகழெல்லாம் விளைத்த இவரே மூவேந்தர்.

தமிழ்மொழி - தமிழ்நாடு தொகு

நாம்பே சுமொழி தமிழ் மொழி!

நாமெல்லாரும் தமிழர்கள்!

மாம் பழம் அடடா! மாம் பழம்

வாய்க் கினிக்கும் தமிழ் மொழி!

தீம்பால் செந்தேன் தமிழ் மொழி!

செங்க ரும்பே தமிழ் மொழி!

நாம்பே சுமொழி தமிழ் மொழி!

நாமெல்லாரும் தமிழர்கள்!


நாம்பே சுமொழி தமிழ் மொழி!

நமது நாடு தமிழ் நாடு!

காம்பில் மணக்கும் மல்லிகை

காதில் மணக்கும் தமிழ் மொழி!

வேம்பா நஞ்சா தமிழ்மொழி?

விரும்பிக் கற்பது தமிழ் மொழி!

நாம்பே சுமொழி தமிழ் மொழி!

நமது நாடு தமிழ் நாடு!

கட்டாயக் கல்வி தொகு

பன்றி எதற்குத் தெருவில் வந்தது?

பாட்டையி லுள்ள கழிவை உண்ண.

என்ன கழிவு தெருவில் இருக்கும்?

இருக்கும் பிள்ளைகள் வெளிக் கிருந்தனர்.


என்ன காரணம் அப்படிச் செய்ய?

இருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர்.

சின்ன நடத்தை எப்படித் தொலையும்?

சிறந்த அறிவு பெருக வேண்டும்.


அறிவை எப்படி அடைய முடியும்?

அனைவர் தாமும் படிக்க வேண்டும்.

நிறைய எவரும் படிப்ப தெப்படி?

நீள முயன்றால் முடியும்.


குறைகள் தீர முயல்வ தெப்படி?

கூட்ட மக்கள் கிளர்ச்சி வேண்டும்.

கறைகள் போகா திருப்ப தென்ன?

கட்டாயக் கல்வி கிட்டாமை தான்.

தமிழன் தொகு

நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும்

நான் நான் நான்!

கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும்

ஏன் ஏன் ஏன்?


பல்லுயிர் காக்கும் எண்ணம் எனக்குண்டு

பார் பார் பார்!

செல்வத்திலே என்னை வெல்ல நினைப்பவன்

யார் யார் யார்?


சொல்லுடல் உள்ளம் ஞாலந் தாங்கும்

தூண் தூண் தூண்!

புல்லர்கள் என்னை வெல்ல நினைப்பது

வீண் வீண் வீண்!


தொல்லுல குக்குள்ள அல்லல்அ றுப்பதென்

தோள் தோள் தோள்!

வல்லவன் என்னை வெல்ல நினைப்பவன்

தூள் தூள் தூள்!

தமிழ்நாடு ஒன்றுபடுக! தொகு

தமிழ்நா டே!என் தாய்நா டே!நீ

தமிழைச் சேர்ந்தாய் எங்கள் உயிரில்

அமிழ்தைச் சேர்ந்தாய் எங்கள் வாழ்வில்

தமிழ்நா டேநீ வாழ்க! வாழ்க!


முத்தமிழ் அன்னாய்! முழுதும் நாங்கள்

ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது

செத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது

முத்தமிழ் அன்னாய் வாழ்க! வாழ்க!


குமரி தொடங்கி இமயம் வரைக்கும்

அமைந்த உன்றன் அளவும் குறைந்தது

தமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது

தமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது.


வாழ்விற் புதுமை மலரக் கண்டோம்!

தாழாத் தலைமுறை தழையச் செய்யும்

வாழைக் கன்றுகள் வளரக் கண்டோம்

வாழ்க அன்னாய் வாழ்க! வாழ்க!

தமிழ்தான் நீயா? தொகு

தமிழ்ப் பெண்ணே தமிழ்ப் பெண்ணே

தமிழ்ப டித்தாயா?


தமிழ்ப டித்தேன் தமிழ்ப டித்தேன்

தமிழப் பெண் நானே.


தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே

தமிழை ஏன் படித்தாய்?


தமிழ் "படித்தேன்" அதை உண்ணத்தான்

தமிழ்ப டித்தேன் நான்.


அமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி

அதை நீ உண்பாயா?


அமிழ்தும் தமிழுக் கதிக இனிப்பா?

அதுவா எனைவ ளர்க்கும்?


தமிழ்தான் நீயோ? நீதான் தமிழோ?

தமிழ்ப் பெண்ணே சொல்!


தமிழை யும்பார் என்னை யும்பார்

வேற்றுமை யே இல்லை!

வானொலி தொகு

வானொலி எல்லாம் தேனொலி ஆக்கும்

செந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு

நானும் மகிழ்வேன் நாடும் மகிழும்

நானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்!


ஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில்

இன்னொரு மொழியில் அமைந்த பாட்டை?

நானும் அழவா? நாடும் அழவா?

நமது நாட்டில் அதற்கென்ன வேலை?


தெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும்

செந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை?

தெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச்

சேர்ப்பதுண்டா? இல்லவே இல்லை!


விலங்கு பறவை செந்தமிழ் நாட்டில்

விரும்பிக் கேட்பதும் செந்தமிழ்ப் பாட்டை!

குலுங்கும் அரும்பும் செந்தமிழ் நாட்டில்

குளிர்ந்த செந்தமிழ் கேட்டு மலரும்!

இயற்கை தொகு

மழைக்காலம் தொகு

வானி ருண்டது மின்னல் வீசிற்று

மடமடவென இடித்து - பயிர்

வளர்ந்தது மழை பிடித்து.


ஆனது குளிர் போனது வெப்பம்

அங்கும்இங் கும்பெரு வெள்ளம் - அட

அதிலும் மீன்கள் துள்ளும்.


பூனை சுவரின் பொந்தில் ஒடுங்கும்

பொடிக் குருவிகள் நடுங்கும்-வண்ணப்

பூக்களில் ஈக்கள் அடங்கும்.


சீனன் கம்பளிக் குல்லாய் மாட்டிச்

சிவப்பு சால்வை போர்த்தான் - அவன்

தெருவில் வேடிக்கை பார்த்தான்!

மழை தொகு

வானத்தி லேபிறந்த மழையே வா! -இந்த

வையத்தை வாழவைக்க மழையே வா!

சீனிக்கரும்பு தர மழையே வா! - நல்ல

செந்நெல் செழிப்பாக்க மழையே வா!

கானல் தணிக்க நல்ல மழையே வா! - நல்ல

காடு செழிக்க வைக்க மழையே வா!

ஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் - நீ

அழகுப டுத்தநல்ல மழையே வா!

கோடை தொகு

சுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்

சுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்

மண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே

வழிந்து கொண்டே இருக்கும் வியர்வை

நொண்டிக் கொண்டே இருக்கும் மாடும்

நொக்கும் வெயிலால் உருகும் லாடம்

அண்டிக் கொண்டே இருக்கும் சூடும்

அழுது கொண்டே திரியும் ஆடும்.


கொட்டிய சருகு பொரித்த அப்பளம்!

கொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்!

தொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்!

சோலை மலர்ந்த மலரும் உலரும்!

கட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே!

கழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே!

குட்டை வறண்டது தொட்டது சுட்டது

கோடை மிகவும் கெட்டது கெட்டது!

குளம் தொகு

குடிக்கும் தண்ணீர்க் குளமே! - என்

குடத்தை நிரப்பும் குளமே!

படித்துறையில் எங்கும் - ஒரு

பாசி யில்லாக் குளமே!

துடித்து மீன்கள் நீரில் - துள்ளித்

துறையில் ஆடுங் குளமே!

எடுத்துக் கொண்டோ ம் தண்ணீர் - போய்

இனியும் வருவோம் குளமே!

குட்டை தொகு

சின்னஞ் சிறு குட்டை - அதில்

ஊறுந் தென்னை மட்டை! - அதோ

கன்னங் கரிய அட்டை! - எதிர்

காயும் எரு முட்டை! - அதோ

இன்னம் சோளத் தட்டை! -அந்த

எருமைக் கொம்பு நெட்டை - அதோ

பின்னால் எருது மொட்டை - நான்

பேசவாப கட்டை?

தாமரைக் குளம் தொகு

முழுதழகு தாமரைக் குளம்!

எழுத வருமா ஓவியப் புலவர்க்கும்? (முழுதழகு)


அழும் உலகை உவகையிற் சேர்ப்பது

அழகு சிரித் ததை ஒப்பது!

எழுந்த செங்கதிர் "ஏன்" என்று கைநீட்ட

தேன்கொண்டு செந்தாமரை விரிந்தது. (முழுதழகு)


செம்பும் தங்கமும் உருக்கி மெருகிட்டது

இதழ் ஒவ்வொன்றும் ஒளிபெற்றது.

அன்பு மதலை முகமென மலர்ந்தது

குதலை வண்டு வாய் மொழிந்தது. (முழுதழகு)


மிதக்கும் பாசிலைமேல் முத்து மிதக்கும்

நம்விழி மகிழ்ச்சியில் குதிக்கும்

கொதிக்கும் செங்கதிர் மேற்கில் நடந்தது

கூம்பிடும் தாமரையின் முகம் அதோ. (முழுதழகு)

ஏரி தொகு

மாரி வந்தால் நீரைத் தேக்கும் ஏரி - அது

வயலுக் கெல்லாம் நீர் கொடுக்கும் ஏரி.

ஊரில் உள்ள மாடு குடிக்கும் ஏரி - அங்

குள்ளவரும் தண்ணீர் மொள்ளும் ஏரி!


ஏரிக்கரை எல்லாம் பனை, தென்னை - அதன்

இடையிடையே அலரி நல்ல புன்னை

சார்ந்தவர்கள் எனக்குத் தந்தால் தொன்னை - பனஞ்

சாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை.

ஆறு தொகு

மேற்கிருந்து கிழக்கு நோக்கி

விரைந்து வந்தாய் ஆறே!

விதவிதப்பூப் பெரும்பெ ருங்கிளை

அடித்து வந்தாய் ஆறே!


தேற்ற வந்தாய் எங்கள் ஊரும்

சிறக்க வந்தாய் ஆறே!

செழிக்க உங்கள் நன்செய் என்று

முழக்கி வந்தாய் ஆறே!


நேற்றிருந்த வறட்சி எலாம்

நீக்க வந்தாய் ஆறே!

நெளிந்து நெளிந்து வெள்ளி அலை

பரப்பி வந்தாய் ஆறே!


காற்றோடும் மணத்தோடும்

கலந்து வந்தாய் ஆறே!

கண்டுமகிழக் கெண்டைவிழி

காட்டி வந்தாய் ஆறே!

கடற்கரை தொகு

கடலைச் சுண்டல் விற்கின்றார் - அவர்

கடலோரத்தில் நிற்கின்றார்.

கடலைச் சுண்டல் வா என்றேன் - புதுக்

காசு கொடுத்துத் தா என்றேன்.

கடலைச் சுண்டல் கொடுத் தாரே - அவர்

கையில் கூடையை எடுத்தாரே!

கடலைச் சுண்டல் விற்கின்றார் - பின்னும்

கடலோரத்தில் நிற்கின்றார்.

கடல் தொகு

முத்துக் கடலே வாழ்க! - இசை

முழங்கும் கடலே வாழ்க!

தத்தும் அலைகள் கரையை - வந்து

தாவும் கடலே வாழ்க!

மெத்தக் கப்பல் தோணி - மேல்

மிதக்கும் கடலே வாழ்க!

ஒத்துப் பறவைகள் பாடி - மீன்

உண்ணும் கடலே வாழ்க!


வண்ணம் பாடிப் பொழியும் - நல்ல

மழையும் உன்னால் அன்றோ!

தண்என் றுவரும் காற்றை - நீ

தந்தாய் கடலே வாழ்க!

கண்ணுக் கடங்க வில்லை - நான்

காணும் போதுன் பரப்பு!

மண்ணிற் பெரிதாம் கடலே - நீ

வாழ்க! வாழ்க! வாழ்க!


நீலக் கடலே வாழ்க! - ஒளி

நெளியும் கடலே வாழ்க!

மாலைப் போதில் கடலே - வரும்

மக்கட் கின்பம் தருவாய்.

காலைப் போதில் கதிரோன் - தலை

காட்டும் கடலே வாழ்க!

ஏலே லோப்பண் ணாலே - வலை

இழுப்பார் பாடும் கடலே!

வயல் தொகு

மலர் மணக்கும் தென்றல் காற்றில்

மாமன் வயற் சேற்றில்

சலசல என ஏரை ஓட்டித்

தமிழ் பாடினான் நீட்டி!

மலைகள் போல இரண்டு காளை

மாடுகள் அந்த வேளை

தலைநிமிர்ந்து பாட்டுக் கேட்டுத்

தாவும் ஆட்டம் போட்டு!

சோலை தொகு

பச்சைமணிப் பந்தலல்ல "சோலை" - பசும்

பட்டுமெத்தை அல்லபுல்த ரைதான்!

நொச்சிச்செடிப் பாப்பாவை அணைத்துத் - தரும்

நூறுதரம் முல்லைக்கொடி முத்து!

மச்சிவீட்டை விட உயரம் தென்னை - மிக

மணம்வீசும் அங்கே ஒரு புன்னை!

உச்சிக்கிளை மேற்குயிலும் பாடும் - பார்

ஒருபுறத்தில் பச்சைமயில் ஆடும்.


மணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்கள் - அங்கு

வகைவகையாய்ச் சிந்துபாடும் ஈக்கள்!

தணிக்கமுடி யாவியர்வை கழுவும் - நல்ல

சந்தனத்துத் தென்றல் வந்து தழுவும்!

இணைக்கிளைகள் மரக்கிளையில் கொஞ்சும்-மிக

இடிக்கும் பலா மரத்திற் பிஞ்சும் பிஞ்சும்!

பிணிபோகும் மறைந்துபோகும் துன்பம்-இப்

பெருஞ்சோலை அளிப்பதெலாம் இன்பம்!

தோட்டம் தொகு

மாமரமும் இருக்கும்-நல்ல

வாழைமரம் இருக்கும்.

பூமரங்கள் செடிகள்-நல்ல

புடலை அவரைக் கொடிகள்,

சீமைமணற்றக் காளி-நல்ல

செம்மாதுளை இருக்கும்.

ஆமணக்கும் இருக்கும் - கேள்

அதன் பேர்தான் தோட்டம்.

தோப்பு தொகு

எல்லாம் மாமரங்கள் - அதில்

எங்கும் மா மரங்கள்;

இல்லை மற்ற மரங்கள்

இதுதான் மாந் தோப்பு.


எல்லாம் தென்னை மரங்கள் - அதில்

எங்கும் தென்னை மரங்கள்;

இல்லை மற்ற மரங்கள்

இது தென்னந் தோப்பு.


எல்லாம் கமுக மரங்கள் - அதில்

எங்கும் கமுக மரங்கள்;

இல்லை மற்ற மரங்கள்

இது கமுகந் தோப்பு.


எல்லாம் புளிய மரங்கள் - அதில்

எங்கும் புளிய மரங்கள்;

இல்லை மற்ற மரங்கள்

இது புளியந் தோப்பு.

மலை தொகு

அண்ணாந்து பார்த்தாலும் மலையே!-உன்

அடிதான் தெரியும்என் கண்ணில்.

மண்மேலே உட்கார்ந்த மலையே!-நெடு

வானத்தில் இருக்கும் உன் தலையே!

எண்ணாயி ரம்மரங்கள் இருக்கும் - அந்த

இலைபள பளவென்று சிரிக்கும்.

பண்ணாயிரம் கேட்கும் காதில் - அங்குப்

பல்லோரும் பாடுகின்ற போதில்.


வற்றா அருவிதரும் மலையே!-இங்கு

வாழ்வோர்க்கு நலம் செய்யும் மலையே!

சிற்றாடை கட்டிப்பல பெண்கள்-பூச்

செண்டாடிக் கொண்டிருக்கும் மலையே!

பற்றாக் குறை நீக்கக் குரங்கு-தன்

பல்லால் பலாப்பழத்தைக் கிழிக்கும்-நல்ல

தெற்குத் தமிழ்பாடிப் பெண்கள்-பெருந்

தினைப்புனம் காக்கின்ற மலையே!

விண்மீன் தொகு

மின்னாத வானில்

மின்னுகின்ற மீன்கள்

சின்ன சின்ன வயிரம்

தெளித்தமுத் துக்கள்

புன்னையின் அரும்பு

பூக்காத முல்லை

என்ன அழகாக

இருந்தன மீன்கள்!

கதிரவன் தொகு

தங்கத் தட்டே வாவா! - ஒரு

தனித்த அழகே வாவா!

பொங்கும் சுடரே வாவா!-பசும்

பொன்னின் ஒளியே வாவா!

எங்கும் இருப்பாய் வாவா!-நீ

எவர்க்கும் உறவே வாவா!

சிங்கப் பிடரைப்போல-பிடர்

சிலிர்த்த கதிரே வாவா!


கடலின் மேலே தோன்றி-நீ

காலைப் பொழுதைச் செய்வாய்.

நடுவா னத்தில் நின்று-நீ

நண்பகல் தன்னைச் செய்வாய்.

கொடிமேல் முல்லைம ணக்கும் -நல்

குளிர்ந்த தென்றல் வீசும்

படிநீ மாலைப் போதைப்-பின்

பரிவாய்ச் செய்வாய் வாழ்க!

நிலவு தொகு

சொக்க வெள்ளித் தட்டு - மிகத்

தூய வெண்ணெய்ப் பிட்டு!

தெற்கத்தியார் சுட்டு-நல்ல

தேங்காய்ப் பாலும் விட்டு

வைக்கச் சொன்ன தோசை-அது

வயிர வட்ட மேசை!

பக்க மீன்கள் பலவே-ஒரு

பட்டத் தரசு நிலவே.

நிலவு தொகு

வட்ட நிலவே!

வாடாப் பூவே!

சட்டிநி லாவே!

தாமரைப் பூவே!

தொட்டிப் பாலே!

சோற்றுத் திரளே!

எட்டி இருந்தாய்

இனியவி ருந்தாய்.


வெள்ளித் தட்டே!

விண்ணுக் கரசே!

பிள்ளை முகமே!

பேசுந் தமிழே!

உள்ளக் களிப்பே!

உலக விளக்கே!

அள்ளிப் புரிந்தாய்

அழகு விருந்தே.

நிலவு தொகு

பள்ளியை விட்டு வந்தேனா?

பட்டப் பகலும் மங்கினதா?

உள்ளே வீட்டில் நுழைந்தேனா?

உள்ள சுவடியை வைத்தேனா?

பிள்ளைகள் எல்லாம் வந்தாரா?

பெரிய தெருவில் சேர்ந்தோமா?

வெள்ளி நிலாவும் வந்ததே!

விளையா டும்படி சொன்னதே!


ஓடித் தொட்டோ ம் ஓர் ஆளை!

ஒளியும் ஆட்டம் ஆடினோம்!

பாடி நடந்தோம் எல்லோரும்!

பச்சைக் கொடிக்கு நீர்விட்டோம்!

தேடிக் கள்ள னைப்பிடித் தோம்

சிட்டாய்ப் பறந்தோம் வீட்டுக்கே!

ஆடச் செய்தது வெண்ணிலா

அழகைச் செய்தது வெண்ணிலா.

நிலவு தொகு

வானத் தூரார் வந்தார்-அவர்

மத்தாப் பைப்போல் நின்றார்

மீனுக் கெல்லாம் சொன்னார்-மேல்

மினுக்க வேண்டும் என்றார்!

நானும் அவரைப் பார்த்தேன் - அவர்

தாமும் என்னைப் பார்த்தார்.

ஏனோ வந்து குலவார்? - கீழ்

இறங்கு வாரா நிலவார்?

வெண்ணிலா தொகு

அல்லி மலர்ந்தது வெண்ணிலாவே!-நல்ல

அழகு செய்தது நீ வந்ததால்,

கொல்லை குளிர்ந்தது வெண்ணிலாவே!-கொடுங்

கோடை தணிந்தது நீ வந்ததால்,

சில்லென் றிருந்தது வெண்ணிலாவே!-எம்

செந்தமிழ் நாடு நீ வந்ததால்,

தொல்லை தணிந்தது வெண்ணிலாவே!-உடல்

சூடு தணிந்தது நீ வந்ததால்!


ஒளி பிறந்தது வெண்ணிலாவே!-நல்ல

உள்ளம் பிறந்தது நீ வந்ததால்,

களி பிறந்தது வெண்ணிலாவே!-முக்

கலை பிறந்தது நீ வந்ததால்,

எளிமை போனது வெண்ணிலாவே!-நெஞ்சில்

இன்பம் பிறந்தது நீ வந்ததால்,

நெளியும் கடலும் வெண்ணிலாவே!-அலை

நீள முழங்கிற்று நீ வந்ததால்.

மூன்றாம் பிறை தொகு

முல்லைக் காட்டின் அடைசலில் - ஒரு

முல்லை யரும்பு தெரிந்ததே.

வில்லேதான் மூன் றாம்பிறை-அது

விண்ணில் அதோதான் தெரிந்ததே!

சொல்லிச் சொல்லிக் காட்டினேன்

தொலையில் விரலை நீட்டினேன்.

இல்லை இல்லை என்றாரே-பின்

இதோ இதோ என் றுரைத்தாரே.

அவன் வந்தால் உனக்கென்ன? தொகு

அழகிய நிலவு வந்தா லென்ன?

அதுதான் கண்டு சிரித்தா லென்ன?

பழகிட எண்ணிப் பார்த்தா லென்ன?

பால்போல் மேனி இருந்தா லென்ன?

முழுதும் குளிரைச் செய்தா லென்ன?

முத்துச் சுடரைப் பொழிந்தா லென்ன?

ஒழுகும் தேனிதழ்த் தாமரைப் பெண்ணே

உன்முகம் கூம்பக் காரணம் என்ன?

முகிலைக் கிழித்த நிலா தொகு

பகல் இருண்டது கண் இருண்டது

பழகிய என்னைத் தெரியவில்லை கிளிக்கே-உடன்

பளபள வென்று வந்தது நிலா விளக்கே!


பகலைப் போல இரவிருந்தது

பார்த்த தெல்லாம் நன்குபுரிந்தது கண்ணில்-உடன்

நிலவை வந்து முகில் மறைத்தது விண்ணில்!


முகத்துக்கு முகம் தெரியவில்லை

மூலைமுடுக்குப் புரியவில்லை பின்பே-அந்த

முகிலைக் கிழித்து நிலவு வந்தது முன்பே!


தகத் தகஎன்று வெளிச்சம் வந்தது

தகத் தகத் தகத் தகத் தகவென ஆடி-யாம்

மகிழ்ந்தோமே சங்கத் தமிழ் பாடி!

நிலவு தொகு

வில்லடித்த பஞ்சு

விட்டெறிந்த தட்டு

முல்லைமலர்க் குவியல்

முத்தொளியின் வட்டம்

நல்வயிர வில்லை

நானில விளக்கு

மெல்ல இங்கு வாராய்!

வெண்ணிலவே நேராய்!


வீற்றிருக்கும் அன்னம்

வெள்ளித்தா மரைப்பூ

ஊற்றிய பசும் பால்

உண்ண வைத்த சோறு

ஆற்று நடுப் பரிசல்

அழகுவைத்த தேக்கம்

மாற்றமில்லை வாராய்!

வானிலவே நேராய்!

கொய்யாப்பூ தொகு

கொல்லை யிலே கொய்யாப்பூ - அது

கொண்டையிலே வையாப் பூ

நல்ல வெள்ளைத் தாமரை - அது

நன்றாய் மலர்ந்த தாமரை

கல்லை யிலே தேங்காய்ப்பால் - அது

காண இனிக்கும் கட்டிப்பால்

எல்லாம் என்றன் கண்ணிலா! - மிக

எழிலைத் தந்தது வெண்ணிலா!

சிற்றூர் தொகு

சின்னப் பள்ளி ஒன்றுண்டு

பெரிய கோயில் பல உண்டு.

நன்செய் புன்செய் நாற்புறமும்

நடவும் உழவும் இசைபாடும்

தென்னையம் பனையும் பலமரமும்

செடியும் கொடியும் அழகு தரும்

நன்னீர் வாய்க்கால் ஏரிகுளம்

நலம் கொழிப்பது சிற்றூராம்.


மச்சு வீடு ஏழெட்டு

மாடி வீடு நாலைந்து

குச்சு வீட்டு வாயில்கள்

குனிந்து போகப் பலவுண்டு

தச்சுப் பட்டறை ஒன்றுண்டு

தட்டார் பட்டறை ஒன்றுண்டு

அச்சுத் திரட்டும் கருமாரின்

பட்டறை உண்டு சிற்றூரில்.


காக்கா ஒருபுறம் கா கா கா

குருவி ஒருபுறம் கீ கீ கீ

மேய்கும் ஆடு மே மே மே

மின்னும் கோழி கோ கோ கோ

பாக்கும் பூனை மீ மீ மீ

பசுங் கன்றும் மா மா மா

ஆக்கும் இந்தக் கச்சேரி

அங்கங் குண்டு சிற்றூரில்.


கம்பும் தினையும் கேழ்வரகும்

கட்டித் தயிரும் சம்பாவும்

கொம்பிற் பழுத்த கொய்யா, மா,

குலையிற் பழுத்த வாழையுடன்

வெம்பும் யானைத் தலைபோல

வேரிற் பழுத்த நல்லபலா

நம்பிப் பெறலாம் சிற்றூரில்

நாயும் குதிரை போலிருக்கும்.

பேரூர் தொகு

நிற்க வரும் புகை வண்டி

நிலையம் உள்ள பேரூர்!

விற்கத் தக்க விளைவை எல்லாம்

வெளியில் ஏற்றும் பேரூர்!

கற்கத் தக்க பள்ளிக்கூடம்

கச்சித மாய் நடக்கும்.

உற்றுப் பார்க்கக் கோயில் - மட்டும்

ஊரிற் பாதி இருக்கும்!


பத்துத் தெருக்கள் மிதிவண்டிகள்

பவனி வரும் எங்கும்.

முத்து வெள்ளைச் சுவர்வீட்டின்

முன்னால் பொறியியங்கி!

கத்தும் இரிசு கட்டைவண்டி

கடைச் சரக்கை ஏற்றி

ஒத்து நகரை நோக்கி ஓடும்

உள்ளூ ரைஏ மாற்றி!


செட்டுத் தனம் இல்லை பல

தேவை யற்ற உடைகள்

பட்டணம் போகா தவர்கள்

பழங்காலத்து மக்கள்

கட்டு உடம்பு வற்றிப் போகக்

கையில் வெண்சு ருட்டுப்

பெட்டியோடும் உலவ வேண்டும்

இதன் பேர்தான் பேரூர்.

பட்டணம் தொகு

பல்கலைக்கழகம்

உயர்நிலைப் பள்ளி

செல்வச் சிறுவர்

செல்லும் பள்ளிகள்

நல்ல நூல்கள்

படிக்கப் படிப்பகம்

எல்லாம் இருக்கும்

அமைதி இராது!


பாட்டை நிறையப்

பலவகை வண்டிகள்

காட்டுக் கூச்சல்

கடமுடா முழக்கம்

கேட்டால் காதே

கெட்டுப் போகும்

ஈட்ட ஆலைகள்

இருபது கூவும்!


தூய ஆடைத்

தோகை மாரும்

ஆய உணர்வின்

ஆடவர் தாமும்

ஓயா துழைக்கும்

பலதுறை மக்களும்

தேய வழிகள்

செல்வார் வருவார்!


வெள்ளி மலையும்

தங்க மலையுமாய்

உள்ள வீடுகள்

வானில் உயரும்

அள்ளும் அழகுடை

அலுவல் நிலையம்

கொள்ளா வணிகம்

கொண்டது பட்டணம்!


நாடக சாலைகள்,

நற்படக் காட்சிகள்

ஆடல் பாடல்

அமையும் அவைகள்

ஈடிலாப் புலவர்

பேச்சுமன் றங்கள்,

காடுகள் சோலைகள்

கவிந்தது பட்டணம்!

பூச்செடி தொகு

மாடு குடிக்கும் தொட்டி அல்ல

மண் நிறைந்த தொட்டி!

வாடி மரத் தொட்டி அல்ல

மண்ணாற் செய்த தொட்டி!

வேடிக் கையாய்த் தொட்டி யிலே

விதைகளை நான் நட்டேன்;

ஆடிப் பாடிக் காலை மாலை

அன்பாய்த் தண்ணீர் விட்டேன்!


ஒரு மாதம் சென்றவுடன்

நிற நிறமாய் அரும்பி

விரை வாகப் பூத்த பூக்கள்

பெரிய பெரிய பூக்கள்

கரு நீலச் சாமந்தி

வெண்ணிறச் சாமந்தி

வரகு நிறம் சிவப்பு நிறம்

மணத்தை அள்ளி வீசும்!

முக்கனி தொகு

குண்டுபலா குலைவாழை

மண்டுசுவை மாம்பழங்கள்

கொண்ட மூன்றும் "முக்கனி" யாம்

உண்டு மகிழ்வர் தமிழர்!

வாழை தொகு

மலைவாழை செவ்வாழை

வங்காளவா ழைபார்!

வளர்ந்தநல்ல பேயன்வாழை

பச்சைவாழை பார்பார்!

பலவாழை மரங்களுண்டு

பழம்பழுப்ப துண்டு

பலவாழைப் பழங்களுமே

இனிக்கும்கற் கண்டு!


குலைகொடுக்கும் வாழைமரம்

இனிக்கும்பழம் கொடுக்கும்.

மலிவாக வாழைக்கச்சை

வாழைத்தண்டு கொடுக்கும்.

கலையாமல் வாழைப்பூவும்

கறிசமைக்கக் கொடுக்கும்.

தென்னை தொகு

தென்னைமரம் கண்டேன் - பல

தேங்காய்க்குலை கண்டேன்.

தென்னை ஓலை நீட்டு - அதில்

பின்னுவார்கள் கீற்று

தென்னம்பாளைச் சாறு - மிக்கத்

தித்திக்குந்தே னாறு

தென்னைமரம் பிளந்து - செற்றி

வாரை செய்வாய் அளந்து.


இளந்தேங்கா யின்பேர் - நல்ல

இளநீர்க்காய் என்பார்

இளந்தேங்காய் முற்றும் - அதில்

இருந்த நீரும் வற்றும்!

பிளந்த தேங்காய் தன்னை-நல்ல

செக்கில் ஆட்டிய பின்னை

தெளிந்த எண்ணெய் எடுப்பார்-நல்ல

தேங்காய் எண்ணெய் அதன் பேர்!

அறிவு தொகு

நேர்பட ஒழுகு தொகு

தரையிலே உட்கார வேண்டாம் - ஒரு

தடுக்குமா இல்லைஉன் வீட்டில்?

கரியாகிப் போகும் உன் சட்டை- நீ

கண்ட இடத்திலே புரண்டால்!


சரியான வழியில் நடப்பாய் - நீ

தண்ணீரில் ஆடக்கூ டாது

எரிந்திடும் நெருப்புமுன் னாலே - கேள்

என்கண்ணே உனக்கென்ன வேலை?

நேர்பட ஒழுகு தொகு

சுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே - நல்ல

சுவரிலும் கதவிலும் கிறுக்காதே

கண்ணாடி எடுத்தால் மெதுவாய்வை - அது

கைதவறி விட்டால் உடைவதுமெய்!

பண்ணோடு பாடநீ கூசாதே - உன்

பள்ளியில் எவரையும் ஏசாதே

மண், ஓடு, ஆணி, துணி கடிக்காதே - கேள்

மற்றவர் பொருளை நீ எடுக்காதே!

நேர்பட ஒழுகு தொகு

கண்ட இடத்திலே துப்பாதே!

காலிலே சேற்றை அப்பாதே!

துண்டு துணிகளைக் கிழிக்காதே!

துடுக்காய் எவரையும் பழிக்காதே!

பண்டம் எதையும்பா ழாக்காதே!

பாலைத்த லையிலே வார்க்காதே!

நொண்டியைக் கண்டு சிரிக்காதே!

நொளநொளப் பழத்தை உரிக்காதே!

நேர்பட ஒழுகு தொகு

எழுதிமு டித்தபின் உன்பலப்பம் - அதை

எடுத்துப்பை யில்வைப் பதுசுலபம்.

புழுதியில் எறிவது சரியில்லை - இனிப்

புதிதாய் வாங்கிடு வதுதொல்லை!

அழகாய் இருந்தி டும் உன்சுவடி - அதை

அழுக்கா காமல் எடுத்துப்படி.

வழவழப்பான உன்இறகு - அது

மண்ணில் விழுந்தால் கெடும்பிறகு!

நேர்பட ஒழுகு தொகு

நாயை அடித்தால் அது கடிக்கும் - ஒரு

நல்லபூனை எலிபிடிக்கும்

தாயைப் பிரியா மல்செல்லும் - என்

தங்கக் கோழிக் குஞ்செல்லாம்,

ஓயா மற்பாடும் குருவி - மேல்

உயரம் பறந்து வரும் காக்கை

ஆயா கண்டால் சோறிடுவார் - பிறர்

அடிப்பது கண்டால் சீறிடுவார்.

நேர்பட ஒழுகு தொகு

படுக்கைவிட் டெழுந்தால்

பாயைச் சுருட்டு - நீ

பானையிலே பாலைக் கண்டால்

நாயை வெருட்டு - சுவர்

இடுக்கினிலே தேளைக் கண்டால்

கொடுக்கை நசுக்கு - நீ

இருட்டறையில் போகுமுன்னே

விளக்கினை ஏற்று!


மடார் என்று வெடிவெடித்தால்

வாய் திறந்து நில் - நீ

மழைவரும் முன் காயவைத்த

வற்றலை எடுப்பாய்

கொடியவர்கள் தாக்க வந்தால்

தடியினைத் தூக்கு - வெறும்

கோழைகளை ஏழைகளை

வாழவைப்பாய் நீ!

நேர்பட ஒழுகு தொகு

அலைகடலின் தண்ணீரிலே ஆடக்கூடாது - நீ

அங்கும் இங்கும் தண்ணீரிலே ஓடக்கூடாது

தலைமேலே மண்ணை அள்ளிப் போடக் கூடாது - நல்ல

தாய்தடுத்தால் மலர்ந்த முகம் வாடக் கூடாது.


ஆழக்கடல் மேலே கப்பல் அழகாயிருக்கும் - பார்

அங்கே தோணி மிதப்பதுவும் அழகாயிருக்கும்

ஏழைமக்கள் இழுத்த வலையில் மீனாயிருக்கும் - அவர்

இழுக்கும் போத பாடும்பாட்டுத் தேனாயிருக்கும்.


கடல் தண்ணீர் அதிகசிலு சிலுப்பாயிருக்கும் - அதைக்

கையால் அள்ளி வாயில்வைத்தால் உப்பாயிருக்கும்

கடகடென்றே அலைபுரளும் கரைக டவாது - அந்தக்

காற்றினிலே குளிரிருக்கும் புழுக்கம் இராது.

நேர்பட ஒழுகு தொகு

கடன்வாங்கக் கூடாது தம்பி - மிகக்

கருத்தாய்ச் செலவிட வேண்டும்.

உடம்பினைக் காப்பாற்ற வேண்டும் - நீ

உணவினில் நல்லுணவை உண்பாய்!

உடைந்திடக் கூடாது நெஞ்சம் - நீ

உண்மைக்குப் பாடுபடும் போதில்!

அடைந்ததைக் காப்பாற்ற வேண்டும் - நீ

அயல்பொருள் பறிக்க எண்ணாதே!

இயல்பலாதன செயேல் தொகு

அழுமூஞ்சி என்று சொல்வார்

அழுது கொண்டே இருந்தால்;

கழுதையே என்று சொல்வார்

கத்திக் கொண்டே இருந்தால்;

எழுதாமல் நீயி ருந்தால்

இடக்குத் தனம் என்பார்;

கொழுத்துக் குறும்பு செய்தாலோ

கொழுத்த தனம் என்பார்.


பள்ளி செல்லா விட்டாலோ

பழித்துப் பேசு வார்கள்

துள்ளிப் பொருளை உடைத்தாலோ

துடுக்குத் தனம் என்பார்

அள்ளி அரிசி தின்றாலோ

அறிவில் லையா என்பார்

கொள்ளி அருகிற் போனாலோ

குரங்கா நீ என்பார்.

நைவன நணுகேல் தொகு

இன்னது வேண்டும் என்றுகேள்

எதற்கும் அழுவது சரியில்லை

சொன்னது கேட்டால் மகிழ்வார்கள்;

தொல்லை கொடுத்தால் இகழ்வார்கள்

அன்னை தந்தை நல்லவர்கள்

அன்பை உன்மேல் வைத்தவர்கள்

என்ன கேட்டா லும்தருவார்

இன்னது வேண்டும் என்றுகேள்!


குளிக்க அழைத்தால் உடனேபோ

கொட்டம் செய்வது சரியில்லை

விளக்கை எடுத்தால் தடுப்பார்கள்

வீண் ஒட்டாரம் பண்ணாதே

வெளிக்கு வந்தால் உள்ளேபோ

வெளியில் போவது சரியில்லை

கிளிக்குச் சொல்வது போற்சொல்வார்

கெட்டுப் போக வா சொல்வார்?

ஏமாறாதே தொகு

ஆரஞ்சுப் பழத்தையும் தம்பி - நீ

ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு

நீர்சுண்டி இருக்கவும் கூடும் - அது

நிறையப் புளிக்கவும் கூடும்

ஓர்ஒன்றை உண்டுபார் தம்பி - உனக்கு

உகந்ததென் றால் அதை வாங்கு

பாரெங்கும் ஏமாற்று வேலை - மிகப்

பரவிக்கி டக்கின்றது தம்பி!


அழுகிய பழத்தையும் தம்பி - அவர்

அன்றைக்குப் பழுத்ததென் றுரைப்பார்

புழுக்கள் இருப்பதுண்டு தம்பி - உள்

பூச்சி இருப்பதுண்டு தம்பி

கொழுத்த பலாப்பழத்தி னுள்ளே - வெறும்

கோது நிறைந்திருக்கும் தம்பி

அழுத்தினா லும்தெரி யாது - அதை

அறுத்துக் காட்டச் சொல் தம்பி!


நெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார் - அதை

நேரில் காய்ச்சிப்பார் தம்பி

துய்ய பயறுகளில் எல்லாம் - கல்

துணிக்கை மிகவும் சேர்ப்பார்கள்

மையற்ற வெண்ணெயென்றுரைப்பார் - அதில்

மாவைக் கலப்பார்கள் தம்பி

ஐயப்பட வேண்டும் இவற்றில் - மிக

ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு!


வகுத்து வகுத்துச் சொல்வார்கள் - அதன்

வயணத்தை ஆராய வேண்டும்

பகுத்தறி வழியாச் சொத்தாம் - அதைப்

பாழாக்கக்கூடாது தம்பி

நகைத்திட எதையும்செய்யாதே - மிக

நல்லொழுக் கம்வேண்டும் தம்பி

தகத்தகப் புகழினைத் தேடு - நீ

தமிழரின் வழியினில் வந்தாய்!

களவு தொகு

கூழ்நிறைந்த குண்டான் - அதைக்

குப்பன் கண்டு கொண்டான்

ஏழ் குவளை மொண்டான் - மிக

இன்பமாக உண்டான்

வாழைத் தோட்ட முத்து - முன்

வந்து நாலு வைத்து

சூழ்ந்த நிழலில் படுத்தான் - அவன்

பசியில் நெஞ்சு துடித்தான்!

வீண் வேலை தொகு

மாமரத்தின் கிளையி லொரு

மாங்காய் தொங்கக் கண்டேன்;

மாங்காயின்மேல் கல்லைவிட்டேன்

மண்டை உடை பட்டேன்.


பூமரத்தில் ஏறி ஒரு

பூப்பறிக்கப் போனேன்;

பூப்பறிக்கத் தாவுகையில்

பொத்தென்றுவிழ லானேன்.


ஊமையைப்போல் இருந்த நாயை

உதைக்கக் காலை எடுத்தேன்;

உயரத் தூக்கிய வலதுகாலைக்

கடித்து விட்டது மாலை.


தீமையான செய்கைகளைச்

செய்யவுங்கூடாது;

செய்வோரிடம் எப்போதும்

சேரவும்கூ டாது!

ஏமாற்றாதே தொகு

கடைக்காரரே கடைக்காரரே

கற்கண்டு வேண்டும் என்றான்;

கடைக்காரர் உள்ளே சென்றார்

கடுகை அள்ளி மறைத்தான்.


கடைக்காரரே கடைக்காரரே

கற்பூரம் வேண்டும் என்றான்;

கடைக்காரர் உள்ளே சென்றார்

மிளகை அள்ளி மறைத்தான்.


கடைக்காரரே கடைக்காரரே

வெல்லம் வேண்டும் என்றான்;

கடைக்காரர் உள்ளே சென்றவர்

கடியத் திரும்பிப் பார்த்தார்.


கடையில் மல்லி அள்ளும் குப்பன்

கையோ டுபிடி பட்டான்;

கடுகளவு களவாடல்

மலையளவு குற்றம்!

மறதி கெடுதி தொகு

கண்ணாடிப் பெட்டியில் ஊசியிருக்கும்-அக்

கண்ணாடிப் பெட்டியில் அதை எடுத்தால்

எண்ணப்படி வேலை முடிந்த உடன்

எடுத்த இடத்திலே ஊசியை வை.


எண்ணெய் இருக்கும் இருட்டறையில்-அந்த

எண்ணெயை அங்கிருந்தே எடுத்தால்

எண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின்

எடுத்த இடத்திலே புட்டியைவை.


கண்ணாடிப் பெட்டியில் ஊசி கண்டான்

கண்ணப்பன் அந்த ஊசி எடுத்தான்;

எண்ணப்படி வேலை முடிந்தபின்-அவன்

எங்கோ வைத்தான் அவ்வூசியை.


எண்ணெய் இருக்கும் இருட்டறையில்-அந்த

எண்ணெயைக் கண்ணப்பனே எடுத்தான்;

எண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின் அவன்

எங்கேயோ புட்டியை வைத்துவிட்டான்.


கண்ணாடிப் பெட்டியில் ஊசி இருப்பதாய்க்

கண்ணப்பன் மறுநாள் தடவிப் பார்த்தான்;

கண்ணாடிப் பெட்டியில் ஊசியே இல்லை

கையிலே தேளொன்று கொட்டிவிட்டது!


எண்ணெய் இருந்த இருட்டறைக்குள்-அந்த

எண்ணெயைத் தேடிடும் கண்ணப்பனைப்

பிண்ணாக்குத் தின்னும் பெருச்சாலி-மிகப்

புண்ணாக்கி விட்டது கைவிரலை!

நோய் தொகு

மருத்துவர் தருவார் மருந்து

மகிழ்ச்சி யாக அருந்து

வருத்தப் படுதல் ஆகுமோ

வந்த நோய்தான் போகுமா?

திருத்த மாக நடப்பாய்

தீண்டுமா சொல் ஒரு நோய்?

கருத்தாய் நடப்போர் வாழ்வார்

கருத்தில் லாதவர் வீழ்வார்.

எண் தொகு

வேலா எவர்க்கும் தலை ஒன்று

மெய்யாய் எவர்க்கும் கண்இரண்டு

சூலத் தின்முனை யோ மூன்று

துடுக்கு நாயின் கால் நான்கு

வேலா உன்கை விரல் ஐந்து

மின்னும் வண்டின் கால் ஆறு

வேலா ஒருகை விரலுக்கு

மேலே இரண்டு விரல் ஏழு.


சிலந்திக் கெல்லாம் கால் எட்டே!

சிறுகை விரலும் நால் விரலும்

கலந்தால் அதன்பேர் ஒன்பது!

காண்பாய் இருகை விரல் பத்தே!

பலபல என்றே உதிர்ந்த பூ!

பத்தும் ஒன்றும் பதினொன்று

பலபல என்றே உதிர்ந்த பூ

பத்தும் இரண்டும் பனிரண்டு.


பத்தும் மூன்றும் பதின்மூன்று

பத்தும் நான்கும் பதினான்கு

பத்தும் ஐந்தும் பதினைந்து

பத்தும் ஆறும் பதினாறு

பத்தும் ஏழும் பதினேழு

பத்தும் எட்டும் பதினெட்டு

பத்தும் ஒன்பதும் பத்தொன்பது

பத்தும் பத்தும் இருபதே.

வாரம் தொகு

வாரமுதல் நாள் ஞாயிறு

மங்கா மறுநாள் திங்கள்

சேரக் கெளவும் செவ்வாய்

சேர்ந்து வருமாம் ஓர் புதன்

பாராய் அதன்பின் வியாழன்

பளிச்சென் றடிக்கும் வெள்ளி

நேரில் மறுநாள் ஓர்சனி

நிறைந்த வார நாள் ஏழாம்.

திங்கள் பனிரண்டு தொகு

சித்திரைவை காசிஆனி ஆடி ஆவணி - பு

ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி

ஒத்துவரும் தைமாசி பங்குனி எல்லாம் - இவை

ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.


கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே

கூவும்குயில்! மழைபெய்யும் கார்த்திகையிலே

மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக

வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே!

திசை தொகு

கதிர் முளைப்பது கிழக்கு - அதன்

எதிர் இருப்பது மேற்கு

முதிர் மையம் வடக்கு - அதன்

எதிர் குமரி தெற்கு.

நிறம் தொகு

வானம் நீலம்

மல்லிகை வெண்மை

ஆனை கருப்பே

அலரி சிவப்பே

ஏன் இதில் ஐயம்?

இலைதான் பச்சை

தேன்மா அரைக்கும்

தினைதான் மஞ்சள்.

கிழமை தொகு

ஞாயிறுதான் ஒன்று - பின்

நல்ல திங்கள் இரண்டு

வாயிற் செவ்வாய் மூன்று - பின்

வந்த புதன் நான்கு

தூய்வி யாழன் ஐந்து - பின்

தோன்றும் வெள்ளி ஆறு

சாயும்சனி ஏழு - இதைத்

தவறாமற் கூறு.

விருந்து தொகு

விருந்து வருவது கண்டால் - மிக

விரும்பி எதிர் கொண் டழைநீ

இருக்க இருக்கை காட்டி - அதில்

இருக்க வேண்டிக் கொள்வாய்

அருந்தச் சுவைநீர் தருவாய் - நீ

அடைகாய்த் தட்டும் வைப்பாய்

பரிந்து சிலசில பேசிப் - பின்

பசியை நீக்க முயல்வாய்.


குளிக்கத் தனியறை காட்டு - அதில்

குட்டை வேட்டி மாட்டு

குளிப்புத் தொட்டியின் அண்டை - ஒரு

குளிப்புக் கட்டியும் வைப்பாய்

குளித்த பின்கண்ணாடி - நல்

எண்ணெய் சீப்புவை தேடி

அளிப்பாய் கறியும் சோறும் -மிக

அன்பாய் மிளகின் சாறும்!

உயிர் எழுத்துக்கள் தொகு

அணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ

இலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ

உரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ

எலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ

ஐவருக்கும் சரியான முதலெழுத்தே ஐ தான்

ஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ

ஒளவையார் முதலெழுத்தே ஒளவாகும் பாராய்.

மெய்யெழுத்துக்கள் தொகு

செக்குக்கு நடுவெழுத்தே க்

சங்குக்கு நடவெழுத்தே ங்

உச்சிக்கு நடுவெழுத்தே ச்

பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ்

தட்டுக்கு நடுவெழுத்தே ட்

கண்ணுக்குப் பின்னெழுத்தே ண்

சித்திக்கு நடுவெழுத்தே த்

பந்துக்கு நடுவெழுத்தே ந்

சீப்புக்கு நடுவெழுத்தே ப்

பாம்புக்கு நடுவெழுத்தே ம்


நாய் என்றால் பின்னெழுத்தே ய்

தேர் என்றால் பின்னெழுத்தே ர்

வேல் என்றால் பின்னெழுத்தே ல்

செவ்வை என்றால் நடுவெழுத்தே வ்

யாழ் என்றால் பின்னெழுத்தே ழ்

புள்ளி என்றால் நடுவெழுத்தே ள்

ஏற்றமென்றால் பின்னெழுத்தே ற்

மான் என்றால் பின்னெழுத்தே ன்.

உயிர்மெய் தொகு

க் மேலே அகரம் ஏற

இரண்டும் மாறிக் க ஆகும்

க் மேலே ஆ ஏற

இரண்டும் மாறிக் கா ஆகும்

க் மேலே இகரம் ஏற

இரண்டும் மாறிக் கி ஆகும்

க் மேலே ஈ ஏற

இரண்டும் மாறிக் கீ ஆகும்

க் மேலே உகரம் ஏற

இரண்டும் மாறிக் கு ஆகும்

க் மேலே ஊ ஏற

இரண்டும் மாறிக் கூ ஆகும்

க் மேலே எ ஏற

இரண்டும் மாறிக் கெ ஆகும்

க் மேலே ஏ ஏற

இரண்டும் மாறிக் கே ஆகும்

க் மேலே ஐ ஏற

இரண்டும் மாறிக் கை ஆகும்

க் மேலே ஒ ஏற

இரண்டும் மாறிக் கொ ஆகும்

க் மேலே ஓ ஏற

இரண்டும் மாறிக் கோ ஆகும்

க் மேலே ஒள ஏற

இரண்டும் மாறிக் கெள ஆகும்.

ஊர்தி தொகு

வண்டிகள் தொகு

பெரிய கட்டை வண்டி-அதன்

பின்னா லேவில் வண்டி!

முருகன் மொட்டை வண்டி-பின்னும்

முனியன் கூண்டு வண்டி!

கரிய னின்கை வண்டி-அது

காளை மாட்டு வண்டி

தெரியும் குதிரை வண்டி-அதோ

சீனன் இழுப்பு வண்டி!


உள்ளி இருப்பவர்கள்-எந்த

ஊருக் குப்போ கின்றார்?

உள்ளிருக்கும் பண்டம்-எந்த

ஊரைச் சேர வேண்டும்?

பிள்ளைத் தோட்டத் திற்கே-கேள்

பிடிக்க வேண்டும் ஓட்டம்;

வள்ளி திரு மணமே-ஒரு

மணிநே ரத்தில் துவக்கம்!

இரட்டை மாட்டு வண்டி தொகு

எங்கள் வண்டி மாடு-கேள்

இரண்டு வெள்ளை மாடு

தங்க வண்டியில் பூட்டி-நல்ல

தருமன் சென்றான் ஓட்டி!

எங்கே வண்டி போகும்?-அது

இரிசன் பாளையம் போகும்

அங்கே என்ன வேலை?-எனில்

ஆடல் பாடல் மாலை!

குதிரை வண்டி தொகு

ஓடும் நன்றாய் ஒரு குதிரை

உதைக்கும் கடிக்கும் ஒருகுதிரை,

ஓடையில் தள்ளும் வண்டியையே

உயிரை வாங்கும் ஒருகுதிரை,

சோடு தவறும் ஒருகுதிரை

சும்மா படுக்கும் ஒருகுதிரை,

வாடப்பின்னோ டேதள்ளும்

வாலால் அடிக்கும் ஒருகுதிரை!


நல்ல குதிரை பூட்டியதாய்

நல்ல ஆளே ஓட்டுவதாய்

எல்லா வண்டியும் இருக்குமா?

இருந்தால் உலகம் சிரிக்குமா?

பொல்லாங் கெல்லாம் நேருமா?

போக்கில் மூலை வாருமா?

நல்ல குதிரை வண்டியிலே

நாம்உட் கார்ந்தால் நலிவில்லை.

மாட்டு வண்டி தொகு

கலகலத்தது வண்டி-அந்தக்

காளைமாடும் நொண்டி

பொலபொலத்தது கூரை-மட்கிப்

பொடியைச் சிந்தும் ஆரை

வலிய அதட்டும் சீனன் - அந்த

வண்டிக்காரன் கூனன்

குலைந டுங்கிட உள்ளே-வந்து

குந்தி யவளும் நொள்ளை!


ஏரிக்கரை மேலே-அதை

இழுத்துப் போன தாலே

ஆரை ஓடிய பாரும்-அப்

படியே உட்காரும்

பாரும் எருதும் புரள-ஏரிப்

பள்ளத்திலே உருள

ஊரில் யாரும் இல்லை-அவர்

உதிர்த்தனர் பல பல்லை!

ஒற்றைமாட்டு வண்டி தொகு

ஒற்றை மாடு கட்டி-அதோ

ஓடினது வண்டி

ஒற்றைமாட்டு வண்டி-அது

உயர்ந்த கூட்டு வண்டி.

ஒற்றைமாட்டு வண்டி-தனில்

உள்ளே சிலர் குந்திச்

சிற்றூருக்குப் போனார்-அவர்

திரும்பி நாளை வருவார்.

மக்கள் இயங்கி தொகு

மக்கள் ஏறும் இயங்கு வண்டி

வழியே போகும்-பின்

வழியே மீளும்.


மக்கள் அதிலே நிறைந்திருப்பார்

வழியே போகும்-பின்

வழியே மீளும்.


மக்கள் இடையில் ஏறிக் கொள்வார்

வழியே போகும்-தன்

வழியே மீளும்.


மக்கள் இடையில் இறங்குவார்கள்

வழியே போகும்-பின்

வழியே மீளும்.


வண்டி யோட்டி சுக்கான் பிடிக்க

வழியே போகும்-பின்

வழியே மீளும்.


வண்டிக் கணக்கர் மேற்பார்வையில்

வழியே போகும்-பின்

வழியே மீளும்.


வண்டி கெட்டால் தள்ளிவிட்டால்

வழியே போகும்-பின்

வழியே மீளும்.


வண்டியிலே வசதி உண்டு

வழியே போகும்-பின்

வழியே மிளும்.

பொறிமிதி வண்டி தொகு

பொறிமிதி வண்டி

படபட என்று

போவதைப் பாருங்கள்.


குறுகிய இடத்தில்

ஒருவர் உட்கார்ந்து

போவதைப் பாருங்கள்


பிறைபோல் வளைபிடி

இருமுனை பிடித்துப்

போவதைப் பாருங்கள்.


பொறிமேல் நினைவொடு

மிதிமேல் காலொடு

போவதைப் பாருங்கள்


பொறிதான் இழுக்கச்

சுக்கான் திருப்பப்

போவதைப் பாருங்கள்


பொறிபழு தானது

சுக்கான் உடைந்தது

விழுவதைப் பாருங்கள்.


நெறிதவ றிட்டார்

நினைவு மறந்தார்

விழுவதைப் பாருங்கள்.


முறையே கருவிகள்

முற்றும் கெட்டன

விழுவதைப் பாருங்கள்.

மிதிவண்டி தொகு

மிதிவண்டியில் போகின்றார் கந்தசாமி-கடு

வெய்யிலிலே நீந்துகின்றார் கந்தசாமி!


மிதிவண்டியிலே போவதற்கே கந்தசாமி-அந்த

மிதிவண்டியில் போகின்றார் கந்தசாமி!


மிதிவண்டியில் போகத்தக்க வேலையேயில்லை-அந்த

வெய்யிலிலே நீந்துகின்றார் கந்தசாமி!


மிதிவண்டியும் கல்லில்பட்டு வீழ்ந்துவிட்டதால்-அவர்

மிதிவண்டிமேல் வீழ்ந்துவிட்டார் கந்தசாமி!

சரக்கேற்றும் பொறிஇயங்கி தொகு

சரக்கேற்றும் பொறிஇயங்கி பார்பார்!

தடதடென்றே ஓடுவதைப் பார்பார்!

சரக்கெல்லாம் சத்தத்துக்கே ஏற்றுவார்

தடதடென்றே ஓடுவதைப் பார்பார்!

சரக்குக்கே உடையவரின் வீட்டில்

சரக்குகளை இறக்குகின்றார் பார்பார்!

சரக்கேற்றிப் போனதற்கே சத்தம்

தருகின்றார் எண்ணிஎண்ணிப் பார்பார்.

பரிசல் தொகு

ஆற்றில் பரிசல் அழகாய் ஓடும்

அக்கரை இருந்தும் இக்கரை சேரும்

நேற்றுப் பரிசலில் பத்துப் பேர்கள்

நின்றிருந்தார் உட்கார்ந்திருந்தார்

காற்றைப் போலக் கரையை நோக்கிக்

கையிற் றுடுப்பை இருபுறம் வலிக்க

ஊற்றுக் கோலால் ஒருவன் உந்த

ஒருநா ழிகையில் அக்கரை சேர்ந்தது.


பரிசல் ஓட்டும் மூன்று பேரும்

பரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்

கிருகிரு வென்றே ஆற்று வெள்ளம்

கிழக்கை நோக்கி இழுத்துப் போய்விடும்.

ஒருகால் அந்த வட்டப் பரிசலை

உருட்டிவிட்டுப் போகக் கூடும்

பரிசல் ஓட்டும் மூன்று பேரும்

பரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்.

கப்பல் தொகு

சிங்கப் பூரின் கப்பல்-அது

சிட்டாய்ப் பறக்கும் கப்பல்

எங்கள் ஊரிலிருந்தே-அங்

கெட்டு நாளில் சேரும்

தங்கி யிருக்க அறையும்-அதில்

சாப்பிட நல்ல அறையும்

அங்கும் இங்கும் சர்க்கரை-மிக

அடுக்க இடமும் உண்டு.


கப்பல் ஓட்டும் அறிஞர்-அவர்

கையாட்கள் பலர் உண்டு.

கப்பல் மேலே நின்றால்-பெருங்

கடலின் அழகு தெரியும்.

எப்பக்கத்திலும் தண்ணீர்-அதை

எடுத்துக் குலுக்கும் காற்றுத்

தப்புவ ழிச்செல்லாமல்-அதைத்

தடுப்பது தான்திசை காட்டி.

புகைவண்டி தொகு

இழுப்பி வண்டி இழுத்தோடும்

இருபது பெட்டிகள் இணைந்தோடும்

வழியில் ஓடும் மரவட்டை

மாதிரி ஓடும் புகைவிட்டே!

இழுப்பி வண்டியை ஓட்டுபவர்

இரண்டு மூன்று கையாட்கள்

விழிப்போ டிருக்கத் தான் வேண்டும்

இல்லா விட்டால் பழி நேரும்!


இணைந்த பெட்டி வண்டிகளில்

இருப்பார் அவர்பேர் கண்காணி

மணியோ டும்சரி வகையோடும்

வண்டி புறப்பட லாம்என்று

அணையாய்ப் பச்சைக் கொடி அசைப்பார்;

அழிவுக்குச் செங்கொடி அசைப்பார்

அணைந்து போகும் நல்வாழ்வே

அறிவும் விழிப்பும் குறைவானால்!

புகைவண்டி போனது தொகு

புகைவண்டி வரும்நேரம் ஆனதே!

பொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே!


நகை எங்கே எனப் பதைத்தாள்

நாராயணன் பெற்ற பெண்ணாள்!

தகதகஎன் றாடு கின்றாள்

சரிகைச் சேலை தடவுகின்றாள்.

முகத்தின் எதிரில் இருக்கும் பெட்டியை

முன்னறையில் தேடுகின்றாள்;

மிகமிகமிகப் பரபரப்பாய்

வேலைக்காரி யிடம் சொல்வாள்:


புகைவண்டி வரும் நேரம் ஆனதே!

பொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே!


கூசா எங்கே சீசா எங்கே?

குங்குமச் சிமிழ் போன தெங்கே?

தோசை எங்கே நேற்றிடித்த

தூளெங்கே தூக்கெங்கே?

மேசையிலே பணமெங்கே?

வெள்ளிப் பெட்டியிற் சீப்பெங்கே?

ஆசை வண்டி ஓசையுடன்

அடுத்த நிலையம் போன பின்பும்


புகைவண்டி வரும் நேரம் ஆனதே

பொட்டுவைக்க எனக்கு மறந்த போனதே!

வானூர்தி தொகு

வான ஊர்தி வான ஊர்தி

எங்கே போகின்றாய்?-நான்

வாடிக்கையாய்ப் போவதே இ

லங்கை மாநகர்.


பானை ஒன்று குறுக்கில் கண்டால்

என்ன செய்குவாய்?-"அட

பானை ஏது சட்டி ஏது

வான வெளியிலே!"


ஆனை ஒன்று குறுக்கில் வந்தால்

என்ன செய்குவாய்?-"அட

ஆனை ஏது பூனை ஏது

வான வெளியிலே!"


கானலுக்கே இளைப்பாற

எங்கே தங்குவாய்?-"நான்

போனவுடன் கீழிறங்கிப்

பொழுது போக்குவேன்."


எத்தனைபேர் இருக்கின்றார்கள்

வானவூர்தியே?-"ஆம்

இருபதுபேர் இருக்கின்றார்கள்

என்வயிற்றிலே!"


மெத்தஉயரத் தேயிருந்து

விழிந்திடுவாயோ?-"என்

மேல் இருக்கும் பொறிகெட்டால்

விழுந்திடுவேனே!"


மொய்த்துப்புயல் வந்து விட்டால்

என்ன செய்குவாய்?-"அந்த

மொய்த்த புயல் தாண்டுவது

ஓட்டுவார் திறம்!"

மின்னாற்றல் தொகு

மின்னாற்றல் ஆக்கும் நிலையம்-அது

மிகமிகப் பெரியது பாராய்!

சின்ன பல கம்பிகள் வழியாய்-அது

செலுத்திடும் மின்னாற்றல் ஒளியை!

என் வீட்டில் எரியும் விளக்கும்

என் ஊரில் எரியும் விளக்கும்

மின்னாற்ற லால்எரியும்!-அந்த

மின்னாற்றல் வராவிடில் அவியும்!


என்வீட்டில் ஒவ்வோர் விளக்கும்

எரிவது மின்னாற்ற லாலே!

என்வீட்டுச் சுவரிலோர் பெட்டி

இருக்கும்அப் பெட்டியில் முளைகள்

ஒன்றினைத் தாழ்த்தினால் எரியும்;

உடனே அழுத்தினால் அவியும்!

முன்விளக் கின்வசதி குறைவே

மின்விளக் கின்வசதி மிகுதி!

தொழில் தொகு

குயவர் தொகு

தரையோடு தரையாய்ச்

சுழலும் உருளை!

அதிலே குயவர்

செய்வார் பொருளை!


கரகர வென்று

சுழலும் அதன்மேல்

களிமண் வைத்துப்

பிடிப்பார் விரலால்!


விரைவில் சட்டி

பானைகள் முடியும்;

விளக்கும் உழக்கும்

தொட்டியும் முடியும்!


சுருக்காய்ச் செய்த

பானை சட்டி

சூளை போட்டுச்

செய்வார் கெட்டி!


உரித்த மாம்பழத்

தோலைப் போலே

உருக்கள் மண்ணாற்

செய்யும் வேலை


இருக்கும் வேலை

எதிலும் பெரிதே!

இப்படிச் செய்தல்

எவர்க்கும் அரிதே!


சிரிப்ப துண்டு

மண் பாண்டத்தைச்

சிறுமை என்று

நினைப்ப துண்டு!


பெருத்த நன்மை

மண்பாண்டத்தால்

சமையல் செய்து

சாப்பிடு வதனால்!

தட்டார் தொகு

தோடி இழைப்பார் தட்டார்-புதுத் தொங்கல் செய்வார் தட்டார்; ஆடி அசைக்கும் கைக்கு-நல்ல அழகு வளையல் செய்வார்; போடப் போட ஆசை-தரும் புதிய சங்கிலி செய்வார்; ஓடைத்தா மரைபோல்-தலை உச்சி வில்லை செய்வார்!

தங்க நகை செய்வார்-அவர் வெள்ளி நகை செய்வார்; வங்கி நல்ல மாலை-கெம்பு வயிரம் வைத்துச் செய்வார். எங்கள் ஒட்டி யாணம்-அதை இன்னும் திருத்த வேணும்; எங்கும் புகழப் பட்டார்-நல்ல இழைப்பு வேலைத் தட்டார்.

கொத்தனார் தொகு

கடைக்கால் எடுத்துக் கல்லை அடுக்கி இடையிடைச் சேற்றை இட்டுப் பரப்பி நொடியில் லாமல் நூலைப் பிடித்து மடிவில்லாமல் மட்டம் பார்த்துத் தரையில் தொடங்கினார் சுவரை முன்பு பெரிய தாக வளர்ந்தது பின்பு! தெருவில் வீடுகள் கொத்தனார் வேலை தெருவும் ஊரும் கொத்தனார் வேலை!

கருமார் தொகு

கடமட என்று பட்டறை அதிரக் கருமார் வேலை செய்வார் குடமும் குண்டானும் குண்டும் கெண்டியும் கூசா தவலை செய்வார்; நெடுவடி தட்டும் நிறமாய்ச் செம்பும் நீண்ட விளக்கம் செய்வார் ஒடியாச் செம்பால் பித்தளை யாலே உயர்ந்த பொருள்கள் செய்வார்!

தச்சர் தொகு

மரத்தைச் செற்றுவார் மரத்தை அறுப்பார் மரத்தில் பெட்டி செய்வார்.

சரத்தைச் செய்வார் சன்னல் செய்வார் சாய்வுநாற் காலியும் செய்வார்!

அரத்தை எடுப்பார் வாள் அராவுவார் அலகைத் தீட்டி முடிப்பார்.

துரப்ப ணத்தைச் சுழற்றிப் பார்பார் தூக்கி மரத்தைத் துளைப்பார்!

பாரும் செய்வார் படியும் செய்வார் தேரும் செய்வார் தச்சர்;

ஏரும் செய்வார் ஏற்றம் செய்வார் யாரும் விரும்பும் தச்சர்!

ஊருக் கெல்லாம் உலகுக் கெல்லாம் உயிராகிய தொழில் தச்சு;

சீருக் கெல்லாம் சிறப்புக்கெல்லாம் செம்மையில் உரியவர் தச்சர்!

கொல்லர் தொகு

நிலத்தை வெட்டி எடுப்பார்-அதில்

நிறைய இரும்புத் தூளே

கலந்திருக்கும் அதையே-பின்

காய்ச்சிக் காய்ச்சி வார்ப்பார்!

வலுத்த கம்பி வார்ப்பார்-அதில்

வலுத்த தகடும் வார்ப்பார்

மெலுக்கு வளையம் வார்ப்பார்-மிகு

மிடுக்கு வளையம் வார்ப்பார்!


ஆணி வகைகள் செய்வார்-அதில்

அரங்கள் எல்லாம் செய்வார்

ஏணி வகைகள் செய்வார்-அதில்

ஏரின் முனையும் செய்வார்!

தோணி தூக்கும் கருவி-கப்பல்

தூக்கும் கருவி செய்வார்

வாணல் சட்டி வண்டி-பெரு

வான ஊர்தி செய்வார்!


இரும்பே இல்லா விட்டால்-இங்

கென்ன வேலை நடக்கும்?

கரும்பு வெட்டும் கொடுவாள்-பெருங்

காடு வெட்டும் கத்தி;

திரும்பு கின்ற பக்கம்-எங்கும்

தெரியும் பொருள்கள் எல்லாம்

இரும்பு கொண்ட பொருள்கள்-அவை

விரும்பத் தக்க பொருள்கள்!


இரும்பு வேலை செய்வோர்-அவர்

எல்லாம் "கொல்லர்" ஆவார்

இருந்து வேலை செய்யும்-அவர்

இடமே "உலைக்கூடம்"

திருந்திய தென் றால்ஊர்-அவர்

செய்த தொண்டா லேதான்!

வருந்தித் தொழில் செய்வார்-அவர்

வாழ்க வாழ்க வாழ்க!

இலை தைத்தல் தொகு

வேலை யில்லா நேரம்

வீட்டில் உள்ளோர் யாரும்

ஆலிலையைத் தைப்பார்

அதைக் கடையில் விற்பார்!

மூலை யிலே குந்தி

இருப்பவ ளோர் மந்தி வேலை செய்யும் பெண்கள்

வீட்டின் இரு கண்கள்!

கூடை முறம் கட்டுகின்ற குறத்தி தொகு

கூடே மொறே கட்டிலியே என்று

குளறிக் கொண்டு வருவாள்-அந்தக்

குறத்தி யிடம் கூடை முறம்

கொடுத்துக் கட்டச் சொல்வோம்.


கூடை களில் மூங்கிற் கூடை

கசங்கு, பிரப்பங் கூடை-அவை

கூட்டு விட்டால் கட்டு விட்டால்

கொடுத்துத் திருத்தச் சொல்வோம்.


மாடு தவிடு தின்னுங் கூடை

மற்ற இறை கூடை

மாவு சலிக்கும் சல்லடைகள்

வட்டத் தட்டும் உண்டு.


பாடு பட்டு வாங்கி வைத்த

கூடை முறம் எல்லாம்

பாணி கெடா திருக்க வேண்டும்

சாணி மெழுக வேண்டும்.

குடை பழுது பார்ப்பவர் தொகு

மழைக்கும் குடை வேண்டும்-நல்ல

வெய்யி லுக்கும் வேண்டும்-குடை

ஒழுக்கிருந்தால் உடைந்தி ருந்தால்

என்ன செய்ய வேண்டும்?


அழைக்க வேண்டும் உடனே-குடை

பழுது பார்க்கும் அவரை,

கிழிந்த துணியை மாற்றா விட்டால்

கேட்பது தான் எவரை?


கிழிந்த துணியைப் புதுக்கு-கம்பிக்

கீல் உடைந்தால் பொருத்து.

வழியில் போவார் கூவிக் கொண்டே

வரவழைத்துத் திருத்து.


கழி உடைந்தால் மாற்று-தடி

கழன் றிருந்தால் மாட்டு.

பழுதில் லாமல் அழுக்கில் லாமல்

அதை நீகாப் பாற்று.

சாணை பிடிக்கவில்லையா? தொகு

சாணை பிடிக்க வில்லையா?

சாணை பிடிக்க வில்லையா?

சரசர என்று பொரி பறக்கச்

சாணை பிடிக்க வில்லையா?


வீணாய்க் கிடக்க விடுவதா?

வீணாய்க் கிடக்க விடுவதா?

வீர வாளும் கூர் மழுங்கி

வீணாய்க் கிடக்க விடுவதா?


ஆணி கெட்டுப் போனதா?

அரிய முடிய வில்லையா?

அரியும் கத்தி அரிவாள் மணை

ஆணி கெட்டுப் போனதா?


ஏணி வைத்த சாணைக்கல்

எடுத்துக் கொண்டு போகின்றார்

இட்டுக் கொண்டு வந்து நீங்கள்

சாணை பிடிக்க வில்லையா?

பெட்டி பூட்டுச் சாவி தொகு

பூட்டுக்குச் சாவி போட வில்லையா?

வீட்டுக்குப் பூட்டுத் தைக்க வில்லையா?

கேட்டுக் கொண்டே போகின்றார் இப்படியே!

நாட்டுக்கு நல்லஓர் பாட்டாளி அவர்!


கதவின் பூட்டைக் கழற்றிப் பார்த்தார்;

அதை அராவிப் பழுது பார்த்தார்

புதிய சாவி காணாமற் போனதால்

அதற்கும் ஒன்று செய்து கொடுத்தார்.


நாலு பணம் வேண்டும் கூலி என்றார்

நாலு பணம் இந்தா கூலி என்றோம்

வேலை முடிந்ததும் பெட்டி எடுத்தார்

மேலும் அப்படியே கூவி நடந்தார்.

வடை தோசை தொகு

அண்டை வீட்டு நடையில்

அழகாய்ச் சுட்ட வடையில்

துண்டாய் இரண்டு வாங்கித்

தோசை நாலு வாங்கிக்

குன்டா னுக்குள் வைத்துக்

கொடுப்பேன் காசை எடுத்து

அண்டை வீட்டார் உதவி

அடடா! மிகவும் பெரிது!

எண்ணெய் தொகு

எள்ளை நன்றாய்க் கழுவி

எடுத்து வெயிலில் துழவி

அள்ளிப் புடைத்துச் செக்கில்

ஆட்டி எண்ணெய் எடுப்பார்

தெள்ளத் தெளிந்த எண்ணெய்க்கே

சேர்ந்த திப்பி பிண்ணாக்கே

உள்ள எண்ணெய் வீட்டுக்கு!

பிண்ணாக் கெல்லாம் மாட்டுக்கு!

அப்பளம் தொகு

சப்பளம் போட்டுக் குந்தி அம்மா

அப்பளம் போட்டார் சும்மா சும்மா,

கொப்பளம் காணப் பொரித் தெடுத்தார்

கொம்மாளம் போட்டுத் தின்னக் கொடுத்தார்

ஒப்பனை யாக உளுத்த மாவை

உருட்டி உருட்டி வைப்பது தேவை

அப்பள மணையில் எண்ணெய் தடவி

அதில் உருட்ட உருளும் குழவி!

உயிர்கள் தொகு

உயிர்கள் தொகு

பிளவு பட்ட குளம்புடையது மாடு!

பிளவு படாக் குளம்புடையது குதிரை!

முளைக்கும் இருகொம் புடையது மாடு!

முழுதுமே கொம்பில் லாதது குதிரை!


பளபளென்று முட்டையிடும் பறவை!

பட்டுப் போலக் குட்டிபோடும் விலங்கு!

வெளியில் வராக் காதுடையது பறவை!

வெளியில் நீண்ட காதுடையது விலங்கு!


நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலை

நீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்

நீர்நிலையில் குட்டிபோடும் விலங்கு

நிறை மீன்கள் முட்டைஇடும் நீரில்.


நீரிலுமே பாம் பிருப்ப துண்டு

நிலத்திலும் பாம் பிருப்ப துண்டு

ஊரிலுள்ள பாம்போடும் நீரில்

உள்ள பாம்பும் இடுவதுண்டு முட்டை!

உயிர்கள் தொகு

காகா என்று கத்தும் காக்கா

கோ கோ என்று கூவும் கோழி


வள்வள் என்று குரைக்கும் நாய்தான்

உள்ளூர் பன்றி உர்உர் என்னும்


குக்கூ என்று கூவும் குயில்தான்

தக்கக் தாஎன ஆடும் மயில்தான்


கறுகுறு என்று கொஞ்சும் புறாவே

கிறுகீர் என்று சுற்றும் செக்கு


தளபள என்று கொதிக்கும் சோறு

மளமள என்று வருமே மழைதான்


தடதடா என்றே இடிக்கும் இடிதான்

கடபடா என்று கதறும் கடலே


அம்மா என்றே அழைக்கும் கறவை

தும்தும் என்று தும்முவர் மக்கள்


ஒய்ஒய் என்றே ஊதும் வண்டே

ஞைஞை என்று நவிலும் பூனை


அக்கக் காஎன அழைக்கும் கிளிகள்

தெற்குத் தமிழ்தான் யாழின் துளிகள்.

நாய் வளர்த்தல் தொகு

நாயும் நல்ல நாய்தான்-அது

நன்றி யுள்ள நாய்தான்

வாயும் தூய்மை இல்லை-அது

வள்வள் என்று குரைக்கும்

பாயில் கழிவு கழிக்கும்-அது

பல்லால் வேட்டியைக் கிழிக்கும்

நாய் வளர்ப்பதை விட்டு-மிக

நலமடைந்தான் கிட்டு!

பசுப் பயன் தொகு

பசுவே கறக்கும் பாலை-அந்த

பாலைத் துவைத்தால் தயிராம்

விசையாய்த் தயிரைக் கடைந்தால்-நல்ல

வெண்ணெயும் மோரும் கிடைக்கும்

கசக்கா வெண்ணெயைக் காய்ச்சி-மணம்

கமழும் நெய்யை எடுப்பார்

பசுவின் பால்தயிர் வெண்ணெய்-மோர்

பசுநெய் எல்லாம் உணவே!

வண்டு தொகு

பாடிக் கொண்டே பறக்கும் வண்டு!

பறந்து கொண்டே பாடும் வண்டு!

தேடிக்கொண்டே திரியும் வண்டு!

தேனைக் குடிக்கப் பறக்கும் வண்டு!


சாடிக் குள்ளே நுழைவது போல்

தாமரையில் நுழையும் வண்டு!

மாடிக்குள்ளே விருந்து போல

மலரில் தேனை உண்ணும் வண்டு!


தங்கப் பொடியில் ஆடும் வண்டு!

சங்கத் தமிழைப் பாடும் வண்டு!

செங்குத் தாகப் பறக்கும் வண்டு!

செந்தூள் எங்கும் சிதறும் வண்டு!


எங்கும் மணத்தைப் பரவச் செய்யும்

இனிய தொண்டு புரியும் வண்டு!

மங்குவ தில்லை வண்டும் தேனும்

மணமும் பாட்டும் அந்தக் குளத்தில்!

பறவைகள் தொகு

மாடத்தில் தங்குவது மாடப் புறா-நல்ல

மரத்தினில் தங்குவது மணிப்புறா

கூடத்தில் உலவிடும் சிட்டுக் குருவி-ஏரி

குளத்தில் முழுகிவரும் பட்டுச் சிரவி

கூடு துலங்க வைக்கும் கொஞ்சும் கிளி-வீட்டுக்

கொல்லையில் காக்கைகருங் கொட்டாப்புளி,

ஆடப் பிறந்ததொரு சோலைமயில்-பண்

பாடப் பிறந்ததொரு நீலக் குயில்!


கரிய படம்விரிக்கும் வான்கோழி-அதி

காலை இசைத்திடும் தேன் கோழி,

தரையிலும் நீரிலும் உள்ள வாத்து-நாம்

கண்டால் சிரிப்பு வரும் குள்ள வாத்து

ஒருவெண் தாழம்பூ வுக்கு-நிகர்

உரைத்திடத் தக்கதொரு வெண்கொக்கே.

தெருவில் வீட்டிலும் காட்டிலுமாய்-அவை

திரிந்திடும் பலபல அழகழ காய்.

சிச்சிலி தொகு

நேரில் சிச்சிலி பறக்கும்-குள

நீரில் மீன் சிறக்கும்

நீரில் மீனை விழுங்கிப்-பின்

நேரில் சிச்சிலி பறக்கும்!


ஈயும் வந்து மேயும்-அதை

மாயப் பல்லி பாயும்

வாயின் ஈரம் காயும்-முன்ஓர்

ஈயம் வந்து மேயும்!

கோழி வளர்த்தல் தொகு

பண்ணையிலே கோழி-மிகப்

பரிந்து வளர்க்க வேண்டும்

திண்ணையிலே கோழி-வந்து

திரிந்தாலும் ஓட்டு.


கண்ணுக்கும் பிடிக்காது-அது

கழிக்கும் கழிவைக் கண்டால்-அது

மண்ணும் குப்பையும் சீய்க்கும்-எங்கும்

மட்டத் தூசி ஆக்கும்.

கிளி வளர்த்தல் தொகு

பச்சை கிளியை வளர்த்து வந்தான்

பழங்கள் எல்லாம் கொடுத்து வந்தான்;

குச்சிக் கூட்டைத் திறந்து விட்டான்

கூட்டில் அடைக்க மறந்து விட்டான்!


நச்சுப் பூனை பிடித்துத் தின்றது

நாயும் அங்கே குரைத்து நின்றது;

பிச்சை முத்து பட்டான் தொல்லை

பிறகு கிளிகள் வளர்ப்ப தில்லை!

சிட்டுக் குருவி தொகு

கெட்டிக் காரச்

சிட்டுக் குருவி

நெட்டைத் துடைப்பக்

கட்டை உருவிப்

பட்டுச் சேலை

இழையைச் சேர்த்தும்

கொட்டிய பஞ்சில்

கொஞ்சம் கோத்தும்

எட்டாச் சுவரை

ஒட்டிய வாரையின்

முட்டு முடுக்கின்

நட்ட நடுவில்

கட்டிய கூட்டில்

முட்டையும் இட்டது

ஒட்டிக் காத்துக்

குஞ்சும் பொறித்தது!

காக்கை தொகு

ஓயாத நாக்கா!

ஓய்ந்திருப்பாய் காக்கா!

வாயில் என்ன பாக்கா?

வாழைக் கச்சை மூக்கா!

ஆயாவைத்த தட்டை

அதிலி ருக்கும் பிட்டை

நீ பண்ணாதே சட்டை

நினைக்காதே திருட்டை!

ஆட்டப் புறா தொகு

ஆடும் புறா-பார்

ஆடும் புறா-தன்

அழகு சிறகுவிரித்

தாடும் புறா.


வேடிக்கை பார்-நல்ல

வேடிக்கை பார்-முத்து

வெள்ளை புறாக் காட்டும்

வேடிக்கை பார்.


தேடாச் செல்வம்-அது

தேடாச் செல்வம்-அதன்

சின்னக் காலும் மின்அடகும்

தேடாச் செல்வம்.


மேடைப் புறா-மணி

மேடைப் புறா-படம்

விரித்துக் களித்தாடும்

மேடைப் புறா!

எலிப்பொறி தொகு

எலிப்பொறியில் போளி-அதை

இழுத்தது பெருச் சாளி

எலிப் பொறியின் கதவு-தான்

சாற்றிக் கொண்டது பிறகு!


ஒளிந்தது பார் உள்ளே-அது

வரப் பார்த்தது வெளியே

வலியக் கோணியில் பிடித்தார்-அதை

மாண்டு போக அடித்தார்!

வேப்பமரத்திற்குக் குடிக்கூலி தொகு

வீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா

வேப்ப மரத்தில் தன் மூக்கால்

கூட்டைக் கட்டித் தீர்த்தவுடன்

குப்பன் அதையே பார்த்தவுடன்

கூட்டைக் கலைக்க வேண்டினான்

குடியைக் கெடுக்கத் தூண்டினான்

வீட்டுக் காரர் சீறினார்

வேண்டாம் என்று கூறினார்.


அரிதாய் முட்டை இட்டது

அப்புறம் குஞ்சு பொறித்தது

பெரிதாய்க் குஞ்சு பறந்தது

பிறந்த இடத்தை மறந்தது

சுருக்காய்க் கூட்டைக் கலைத்தார்கள்

சுள்ளிகள் பஞ்சுகள் எடுத்தார்கள்

சரியாய் நூறு ரூபாயின்

தாளும் கண்டு மகிழ்ந்தார்கள்!

தாலாட்டும் துயிலெழுப்பும் தொகு

தாலாட்டு (ஆண்) தொகு

யானைக் கன்றே தூங்கு-நீ

யாதும் பெற்றாய் தூங்கு!

தேனே தமிழே தூங்கு-என்

செங்குட்டு வனே தூங்கு!


வானவ ரம்பா நீயே-மிக

வளைத்துப் பார்க்கின் றாயே

ஆனஉன் விழியை வைத்தே-உன்

அழகிய இமையால் சாத்து.

தாலாட்டு (பெண்) தொகு

பட்டுப் பாப்பா தூங்கு!-நீ

பாலும் குடித்தாய் தூங்கு!

மொட்டில் மணக்கும் முல்லை!-என்

முத்தே என்ன தொல்லை?

சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன்

சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்

பிட்டும் தருவேன் தூங்கு!-என்

பெண்ணே கண்ணே தூங்கு!

தாலாட்டு (பொது) தொகு

தொட்டிலில் ஆடம் கிளியே!-என்

தூய தமிழின் ஒளியே!

கட்டிக்கரும்பே தூங்கு!-முக்

கனியின் சாறே தூங்கு!

தட்டிற் பாலும் சோறும்-நான்

தந்தே னேநாள் தோறும்;

சுட்டப் பத்துடன் வருவேன்-நீ

தூங்கி எழுந்தால் தருவேன்.

பள்ளி எழுச்சி (பெண்) தொகு

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

பொன்னைப் போல வெய்யிலும் வந்தது

பூத்த பூவும் நிறம்கு றைந்தது

உன்னால் தோசை ஆறிப் போனதே!

ஒழுங்கெல் லாமே மாறிப் போனதே!

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

காலைக் கடனை முடிக்க வேண்டும்

கடியக் கொஞ்சம் படிக்க வேண்டும்

நீலக் கூந்தல் வார வேண்டும்

நினைத்தது போல் உடுத்த வேண்டும்

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

நேரத் தோடு போகின்றார்

நிறையப் பெண்கள் தெருவில் பார்!

காரியத்தில் கண்ணாயிரு!

கைகாரப் பெண்ணாயிரு!

இன்னந் தூக்கமா? பாப்பா
இன்னந் தூக்கமா?

பள்ளி எழுச்சி (ஆண்) தொகு

இன்னந் தூங்கு தம்பி!-நீட்டி

இழுத்த இரும்புக் கம்பி!


சின்னக் குளத்தில் மட்டை போல

செற்றிப் போட்ட கட்டை போலத்

தன்னை மறந்து தலைய ணைமேல்

ஒட்டிக் கொண்ட அட்டைபோல


இன்னந் தூங்கு தம்பி!-நீட்டி

இழுத்த இரும்பு கம்பி!


எழுந்த வெய்யிலை எண்ண வேண்டாம்

என்னைச் சட்டை பண்ண வேண்டாம்

பழந்த மிழ்த்தேன் குடிக்க வேண்டாம்

பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டாம்


இன்னந் தூங்கு தம்பி!-நீட்டி

இழுத்த இரும்புக் கம்பி!

கை வீசல் தொகு

கைவீ சம்மா கைவீசு!

கடலை வாங்கலாம் கைவீசு!

நெய் உருண்டை கைவீசு!

நிறைய வாங்கலாம் கைவீசு!

பொய்யா சொல்வேன் கைவீசு!

போளி வாங்கலாம் கைவீசு!

வெய்யில் போகும் கைவீசு!

வெளியில் போகலாம் கைவீசு!

தட்டாங்கி தொகு

தட்டாங்கி தட்டாங்கி

தலைமேலே தாழம்பூ

பட்டாலே சட்டை

பஞ்சாலே சல்லடம்

செட்டாக அணிந்து

சீராக முந்தி

தட்டுநீ தட்டு

தட்டாங்கி தட்டாங்கி!

சிரிப்பு தொகு

மின்விளக்கு நின்றது தொகு

சாப்பிடும் போது விளக்கு நின்றது

சட்டிப் பொரியலைப் பூனை தின்றது

கூப்பிடக்கேட்ட அம்மாவ ரும்போது

கொம்பினில் மோதக் காதுகி ழிந்தது

காப்பைக் கழற்றினான் ஐயோ என்று

கதறினான் தம்பி தெருவில் நின்று

கோப்பை உடைந்தது பானை உருண்டது

கொட்டாப் புளிஎலி மேலேபு ரண்டது!


அறைவிட்டு வந்த அப்பாவின் பல்லை

அக்கா தலைஉடைத் திட்டது தொல்லை

குறைநீக்க வந்த என் கூனிப் பாட்டி

குந்தாணி மேல்உருண் டாள்தலை மாட்டி

உறைவிட்டு நீங்கிய கத்தியைப் போலே

ஒளிமின்விளக்குமுன் போல்வந்த தாலே

நிறைவீட்டில் எல்லார்மு கத்திலும் மகிழ்ச்சி

நிறைந்தது நிறைந்தது பறந்ததே இகழ்ச்சி.

நெருப்புக்குச்சிப் பெட்டி தொகு

நெருப்புக் குச்சிப் பெட்டி-அதில்

நெருப்புக் குச்சியைத் தட்டி

இருக்கும்விழல் தட்டி-மேல்

எறிந்தான் ஒரு மட்டி!


இருக்கும் விழல்தட்டி-பற்றி

எரிந்தனால் தொட்டி!

இரட்டைப்பூனைக் குட்டி-எல்லாம்

எரிய என்ன அட்டி?

சிரித்த பொம்மைகள் தொகு

அம்மா முறுக்குச் சுடும் போதே

அழகன் ஒன்றைத் தெரியாமல்

கைமேல்வைத்து மறைவினில்

கடித் திருந்தான் அறையினிலே.

சும்மா இருந்த அவன் அக்கா

சுட்டதில் ஒன்றை மிகு சுருக்கா

கைம்மேல் வைத்தே எடுத்தோடி

அதேஅறை புகுந்தாள் இடந்தேடி!


சொல்லா தேஎன்றான் அழகன்

சொல்லா தேஎன்றாள் அக்கா,

தில்லு முல்லுக் காரர்கள்

தின்று முடித்து விட்டவுடன்

எல்லா முறுக்கை யும்சுட்டே

எடுத்து வந்தம் மா வைத்தார்

கொல்லென்று சிரித்தனர் இரு பொம்மை

கொட்ட மறிந்தார் அவர் அம்மா!

பெருமாள் மாடு தொகு

தவிடா வேண்டும்?

புரும் புரும் புரும்
தலை அசைத்தது
பெருமாள் மாடு-


அவலா வேண்டும்?

புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு-


சுவரா வேண்டும்?

புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு-


துவரை வேண்டுமா?

புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு-


சல்லி வேண்டுமா?

புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு-


வெல்லம் வேண்டுமா?

புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு-


புல்லா வேண்டுமா?

புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு-


பல்லாக்கு வேண்டுமா?

புரும் புரும் புரும்
தலையை அசைத்தது
பெருமாள் மாடு-


மாப்பிளை போலப்

புதிய வேட்டி
கேட்பாயா நீ?
புரும் புரும் புரும் புரும்


கீழே குனிந்தது

பெருமாள் மாடு-
சோப்ப ளாங்கியா?
புரும்புரும் புரும் புரும்


துரத்தி வந்தது

பெருமாள் மாடு-
பாப்பா போட்டுக்
கிழித்த சட்டை


கேட்பாயா நீ?

புரும் புரும் புரும் புரும்
தலையை அசைத்தது -
பெருமாள் மாடு!

குடுகுடுப்பைக்காரன் தொகு

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!

நல்ல காலம் பிறக்கும் குடுகுடு

எல்லா நலமும் ஏற்படும் குடுகுடு

பொல்லாங் கெல்லாம் போனது குடுகுடு

தொல்லை கொடுத்தவர் தொலைந்தார் குடுகுடு!


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!

காணி விளைச்சல் காணும் குடுகுடு

தோணியில் சரக்கு துறையில் குடுகுடு

மாணிக்கம் போல் வாழ்வீர் குடுகுடு

நாணித் தொலைவர் எதிரிகள் குடுகுடு!


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!

கிழிந்த சட்டை கொடுபபீர் குடுகுடு

குழந்தை பிறக்கும் குண்டாய்க் குடுகுடு

பழஞ்சிற் றாடை போடுவீர் குடுகுடு

தழைந்து தழைந்து வாழ்வீர் குடுகுடு

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு!

9. சிறுகதைப் பாட்டு தொகு

சிறுகதைப் பாட்டு தொகு

பால்கறந்தான் முத்தன் - அந்தப்

பாலை அங்கே வைத்தான்

மூலையிலே தானே - ஒரு

முழுத்திருட்டுப் பூனை

பாலையெல்லாம் நெட்டி-அந்தப்

பாற்செம்பை உருட்டிக்

கோலெடுத்த கைம்மேல்-அது

குதித்தேறிடும் சுவர்மேல்.

காக்கை எறும்பு தொகு

எருமைக் கொம்பில் ஒருகாக்கா

ஏறிக் கொண்டதாம்

எறும்பை அது கூவிப் பெருமை

காட்டிச் சிரித்ததாம்.


எருமைக் காதில் அந்த எறும்பு

புகுந்து கொண்டதாம்

எருமை காது வலியால் தன்

தலையை அசைத்ததாம்.


இருந்த காக்கா விரைவாகப்

பறந்து விட்டதாம்

எறும்பதனைக் கண்டு விழுந்து

விழுந்து சிரித்ததாம்.


பெருமை பேசித் திரிந்திடுவார்

அது சரியில்லை

பின்னால் சிறுமை யடையக் கூடும்

அது பெருந் தொல்லை.

ஏழ்மை தொகு

தென்னந் தோப்புக் குள்ளே-அதில்

சிறிய குடிசைக் குள்ளே

ஒன்றல் லஇரண் டல்ல-மிக

ஒழுங்காய் ஏழு பிள்ளை.


அன்னை யோநோ யாளி-நல்

அப்பன் தொழி லாளி;

இன்றைக் கெல்லாம் தொல்லை-அவர்

எவரும் சாப்பிட வில்லை.


வேலை கிடைக்க வில்லை-தம்

வீட்டில் அரிசியும் இல்லை;

பாலுக் கழும்ஓர் பிள்ளை-நல்ல

பருக்கைக் கழும் ஓர் பிள்ளை.


ஓலைக் குடிசையில் எங்கும்-வாய்

ஓயா அழுகை பொங்கும்;

காலை கிடைத்தது வேலை-பின்

கண்டார் கூழை மாலை.

நல்ல பாட்டி தொகு

சின்னஞ் சிறிய தங்கை

தெருவில் போன நுங்கை

அன்னையிடம் கேட்டாள்

அன்னை மறுத்துத் தீர்த்தாள்.


சின்னஞ் சிறிய தங்கை

தெருவில் ஓடி நுங்கை

என்னிடத்தில் வாவா

என்று கூவி அழைத்தாள்.


எட்டிச் சென்ற பாட்டி

கிட்டச் சுமந்து வந்தார்

பொட்டும் வேண்டாம் நுங்கே

போபோ என்றாள் தங்கை.


எட்டச் சென்ற என்னை

இதற்கா அழைத்தாய் என்று

கொட்டிக் கொண்டே போனார்

குலுங்கும் சிரிப்பைப் பாட்டி!

குரங்காட்டி தொகு

கோலை வைத்துக் குதிரை ஏறும் குருங்கு-நல்ல

குல்லாப் போட்டு வில்லாய் வளையும் குரங்கு

தாலி கட்டிய பெண்ணாய் வரும் குரங்கு-தன்

தலை கீழாய் மேல் சுழலும் குரங்கு

நீலச் சட்டை போட்டு வரும் குரங்கு-அது

நிறையக் காசு கேட்டு வரும் குரங்கு

சோலிவிட்டுக் குந்திவிடும் குரங்கு-அவன்

கோல்எடுத்தால் பின்னும் ஆடும் குரங்கு!

பாம்பாட்டி தொகு

பட்டுச் சட்டைக் காரன்-ஒரு

பாம்பாட்டி வந்தான்

பெட்டியைத் திறந்தான்-அவன்

பெரிய மகுடி எடுத்தான்

பட்டி மாட்டுத் தாம்பு-தன்

படமெடுத்தது பாம்பு;

எட்டுக்காசு கொடுத்தேன்-பாம்பைப்

பெட்டிக்குள்ளே அடைத்தான்.

நைவன நணுகேல் தொகு

கண்ணன் திண்ணன் என்றே

அண்ணன் தம்பி இருவர்!

திண்ணன் ஏணி ஏறிச்

சின்னப் பரணில் உள்ள

உண்ணும் பண்டம் எடுத்தே

உண்டு வேலை முடித்தே

எண்ணிக் கீழே இறங்க

ஏணி பார்த்தான் இல்லை.


திண்ணன்மனம் நலிந்தான்;

அண்ணன் அங்கே ஒளிந்தான்.

திண்ணன் அண்ணே என்றான்.

கண்ணன் மறைந்து நின்றான்.

கண்ணெதிர் வந்தார் அம்மா

திண்ணன் அழுதான் சும்மா.

அண்ணன் கண்டு சிரித்தான்

அம்மா கண்டு முறைத்தார்.

பூதம் தொகு

பூதம் பூதம் பூதம்-அதோ

போவது பார் பூதம்

பூதம் என்றால் பூதம்-அது

புதுமையான பூதம்

காத மிருந்து வந்தார்-அவர்

கையாற் செய்த பூதம்

தோது பட்ட கொம்பைக்-கொண்டு

தொகுத்துக் கட்டிய தொம்பை.


மாடிக் குமேல் உயரம்-அது

மலை யைவிட உப்பல்

ஆடி வரும் பூதம்-உள்

ஆளிருப்ப தாலே

ஓடி வரும் பூதம்-ஆள்

உள் இருப்பதாலே

வேடிக்கையாய் நடக்கும்-அது

வேறொருவன் காலால்.


கோழி முட்டைக் கண்கள்-பெருங்

குந்தாணிபோல் கழுத்தே

ஏழுமுழம் கைகள்-ஓர்

எருமுட்டை போல் காது

கூழைமட்டை மூக்கு-நீள்

கொல்லூறுபோல் நாக்கு

போழ்தெலாம் இவற்றால்-இங்கு

பூச்சி காட்டும் பூதம்.


கூடாய்ச் செய்த பூதம்-அந்தக்

கூட்டிற் புகுந்த ஒருவன்

மாடாய்ச் சுமக்கும் பூதம்-அவன்

வந்தால் வரும் பூதம்.

ஆட ஆடும் பூதம்-அவன்

ஆட்டி வைக்கும் பூதம்.

சோடித்த ஓர் மொம்மை-வந்து

தொடுவ துண்டா நம்மை!

கெட்ட பொன்னன் தொகு

ஆட்டி விட்ட ஏணையில்

அழகுக் குழந்தை தூங்கையில்

பாட்டுப் பாடிக் கதவையே

படபட என்று குலுக்கினான்.

போட்டு டைத்தான் பெட்டியை

பொத்த லிட்டான் சட்டியை.

நீட்டுக்கழ் தூக்கியே

நின்றடித்தான் தகரத்தை.


ஆட்டி விட்ட ஏணையில்

அழகுக் குழந்தை அலறியே

நீட்டி நீட்டி அழுததே

நிறையக் கண்ணீர் வடித்ததே.

கேட்டு வந்தார் அம்மாவும்

கிளம்பி வந்தார் அப்பாவும்

போட்ட ஓசை யார் என்றார்

பொன்ன னைத்தான் சீ என்றார்.

வாழ்க! தொகு

தமிழ் மொழி வாழ்க! தமிழர் வாழ்க! நமது தாய் நாடு நற்றமிழ் நாடு! தமிழரின் கலைகள் தமிழர்நா கரிகம் தமிழர் பண்பாடு தழைந்துவா ழியவே!

(முற்றும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=இளைஞர்_இலக்கியம்&oldid=1526447" இலிருந்து மீள்விக்கப்பட்டது