இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உரையைக்காண : உலகநீதி - மூலமும் திரு. ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் உரையும்

கடவுள் வாழ்த்து தொகு

உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு
பாடல் 01
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் [ஓதாமல் = படிக்காமல், பாடங் கற்காமல்]
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் [பொல்லாங்கு = கெட்டது, கெட்டசொல்]
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் [மாதா = தாய்]
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் [செய்வாரோடு இணங்க; இணங்கு = பழகு]
போகாத இடந்தனிலே போக வேண்டாம் [போகாத = போகத்தகாத, போகக்கூடாத]
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் [புறம் = முதுகு; புறஞ்சொல்லல் = ஆளில்லாத பொழுது பழித்தல்; திரி = நட]
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் [வாகு = பாகு, புஜம், மேற்கை, கைவலிமை; ஆரும் = நிறைந்த; வாகாரும் = வலிமைநிறைந்த]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 02
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் [நல்லவர்களின் தொடர்பு இல்லாதவரோடு]
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளுங் கெடுக்க வேண்டாம் [அடுத்தவர் = அண்டியிருப்பவர், நம்பி ஒட்டியிருப்பவர்]
மஞ்சாருங் குறவருடை வள்ளிபங்கன் [மஞ்சு = மைந்து, வலிமை; ஆரும் = நிறையும்; மஞ்சாரும் குறவர் = வலிமையான குறவர்]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே [மயிலேறும் பெருமாள் = மயிலேறும் கடவுள், முருகன்]
பாடல் 03
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் [மாற்றான் = பகைவன், எதிரி; எதிரியை நண்பனாய் நம்பாதே]
தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் [தனம் = செல்வம்; உண்ணாமல் = நுகராமல், புழங்காமல்; புதை = மறை, ஒளித்துவை]
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் [தருமம் = நற்செய்கை]
சினந்தேடி அல்லலையுந் தேட வேண்டாம் [அல்லல் = துன்பம்]
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம் [சினந்திருந்தார் = கோபக்காரர்; சேறல் = செல்தல், செல்லுதல்]
வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன் [வனம்= காடு; தேர்= வேட்டை விலங்கைத் தேடு; பங்கன் = துணைவன், கணவன்]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 04
குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் [பாராட்டு = பெரிதாக நினை, நினைத்துக்கொண்டே இரு]
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம் [களவு = திருட்டு, இணங்கு = பழகு]
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் [கற்பு = உறுதி, வாழ்வில் ஒருவனையே காதலிக்கும் உறுதி]
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் [கொற்றவன் = அரசன்; எதிர் = முன்; மாறு = பகை, பகையான பேச்சு]
கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளிபங்கன் [நிகர் = ஈடு, ஈடிணை ஒப்புமை; சரிசமம். தனக்கு ஈடிணையற்ற வள்ளிகணவன்]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 05
வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம் [வெம் = கடுமை; சமர் = போர்; புறம் = முதுகு; புறங்கொடு = முதுகுகாட்டிப் பயந்து ஓடு]
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் [குலம் = கூட்டம்]
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் [பொல்லாங்கு = கெட்டது]
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன் [வாழ்வு ஆரும் = நல்வாழ்வு நிரம்பும்]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாட்டு 06
வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம் [ஆசிரியர்க்கான ஊதியத்தைக் கொடுக்காமல் வைத்திருக்க வேண்டாம்;
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழாளன்ஒரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
பாடல் 07
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் [கருதாமல் = தீர எண்ணிப்பார்க்காமல்[
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம் [கணக்கழிவு = முறைகேடு, injustice]
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம் [பொருவார் = போர்புரிவார்]
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் [தாரம் = மனைவி]
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் [எதிரிடு = எதிரியாக்கு]
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன் [குருகு = பறவைகள்; புனம் = தினைவளரும் நிலம்; ஏழை = வஞ்சமற்றவள்]
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே [வேள் = தலைவன், கடவுள்]
பாடல் 08
சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் [குண்டுணி = கோள்சொல்வோன், கலகமூட்டுவோன், tale bearer]
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் [உதாசினம் = அலட்சியவார்த்தை, அவமதிப்பு]
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் [பேர் = பெயர்புகழ்; புகழ்தருஞ் செயல்களைத் தவிர்க்கவேண்டா]
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம் [பிணை = உத்தரவாதம், bail bond; குற்றஞ்செய்வார்க்கு உத்தரவாதமாகி]
வாராரும் குறவருடை வள்ளி பங்கன் [வார் = பெருமை, வேட்டை வலை; ஆரும் = அமையும், இருக்கும்]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 09
மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம் [மண்ணோரம் = நிலவழக்கில் நடுநிலையற்ற ஒருதலையான பேச்சு]
மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம் [சலித்து = தளர்ந்து; சிலுகிடு = சண்டைபோடு]
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம் [கண்ணழிவு = இரக்கமின்மை; துயர்காட்டு = துயரஞ் செய்]
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம் [கட்டுரைத்தல் = உறுதியாகச் சொல்லுதல்]
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் [புறம் சொல்லி = முதுகுக்குப் பின்னால் பழிகூறி]
மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன் [மண்ணளந்தான் = திருமால்; எங்கோன் = எம் மன்னன், எம் தலைவன்]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 10
மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம் [மறம் = வீரவலிமை; வீரம்பேசிச் சண்டைக்கு அலைவாரொடு பழகாதே]
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம் [வழக்கழிவு = அநியாயம், முறைகேடு]
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம் [திறம் = வலிமை]
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் [ஏசல் = திட்டல், நத்து = விரும்பு]
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
பாடல் 11
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் [அஞ்சுபேர் = வண்ணான், அம்பட்டன்/நாவிதன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவர்]
அதுஏது இங்குஎனின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி [நாவிதன் = அம்பட்டன், முடிதிருத்துவோன்; தஞ்சம் = பாதுகாப்பு]
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி [சகலம் = அனைத்து; ஓதுவி = படிக்கவை]
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்தன் கூலி [மகா நோவு = பெரு நோய்]
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதுஏது செய்வானோ ஏமன் தானே [ஏமன் = எமன்]
பாடல் 12
கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம் [கூறு = பகுதி; கூறாக்கி = குடும்பத்தாரைப் பிரித்து]
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் [தூறு = பழிச்சொல்; தூறாக்கு = பழிசொல்லு; தலையிடுதல் = புகுதல், அடுத்தவர் செய்தியில் புகுதல்]
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம் [துர்ச்சனர் = தீய மக்கள்]
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் [வீறு = தனிப்பட்ட சிறப்பு; இகழ் = அலட்சியப்படுத்ஹ்து, புறக்கணி]
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன் [மாறு = பகை, போராட்டம்; மாறான குறவர் = பகையில் ஈடுபடும் அல்லது போராடத் தயங்காத குறவர்]
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பாடல் 13
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி [ஆதரி = ஆசைகூர், ஆசைப்படு]
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும் [காதலி = விரும்பு]
கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு [களிப்பு = கவலையற்ற பேரின்பம்]
போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப் [போதம் = அறிவுத்தெளிவு]
பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே


உலகநாதன் பாடிய உலகநீதி முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=உலகநீதி&oldid=1526449" இலிருந்து மீள்விக்கப்பட்டது