உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு

6. வழிபாடு

கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும்.

-பிலிப்ஸ் புரூக்ஸ்

கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார்.

-ஸாக்ரடீஸ்

மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒருநாளும் செவிடாய் இருப்பதில்லை.

-குவார்ல்ஸ்

கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமலிருக்க வேண்டும் என்பதே.

-ருஷ்யப் பழமொழி

நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார்.

-ஜெரிமி டெய்லர்
நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம்.
-ஜெரிமி டெய்லர்

'கடவுளே! தைரியம் அருளும்' என்று பிரார்த்தித்தால், துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி.

-ஸெஸி

என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்தனம் அளிக்குமாறு வாழ்ந்துவிட்டேன்.

-ஜீன் இன்ஜெலோ

அறியாமலே எம் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு.

-விக்டர் ஹகோ

ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும்.

-ஹூக்கர்

சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும்; கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர்.

-லவல்

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள்: முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம்.

-ஸெனீகா
பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம்.
-லெய்ட்டன்

★ ★ ★