எனது நாடக வாழ்க்கை/புதுக்கோட்டை தம்புடு பாகவதர்

புதுக்கோட்டைத் தம்புடு பாகவதர்

புதுக்கோட்டையில் தம்புடு பாகவதர் என்றால் அனை வருக்கும் தெரியும். அப்போது எங்கள் கம்பெனியில் ஆர்மோனியம் வாசித்து வந்த பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் புதுக்கோட்டையைச்சேர்ந்தவர்.அவர்தான் தம்புடு பாகவதரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தம்புடு பாகவதர் சிறந்த சங்கீதஞானம் உடையவர்; கதா காலட்சேபக் கலையில் விற்பன்னர்; புதுக்கோட்டையிலேயே தம் தந்தையின் பெயரால் ஒரு சிறந்த கலாசாலையை நடத்தி வந்தார் அவர்.

இளஞ் சிறுவர்களுக்குப் பாடல்களைப் பயிற்றுவிப்பதில் இவருக்கு நிகரான ஒருவரை நான் இதுவரையிலும் கண்டதில்லை. சிதம்பரபாகவதர் என்பது இவரது பெயர். ஆனால் எல்லோரும் தம்புடு பாகவதர் என்றே அழைப்பார்கள்.

இவர் துருவச் சரித்திரத்தை நாடகமாக எங்களுக்குப் பயிற்றுவித்தார். பாடங்கள் அனைத்தும் நல்ல கர்னடக இசையில் அமைந்திருந்தன. அவற்றை அவர் எங்களுக்குப் பயிற்றுவித்த முறையே போற்றத் தக்கதாக இருந்தது. நான் துருவகை நடித் தேன். புதுக்கோட்டையில் துருவன் நாடகத்திற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. இதைநாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி சென்றோம். அங்கும் துருவன் நாடகத்திற்குப் பிரமாதமான வரவேற்பும், வசூலும் இருந்தன. காரைக்குடியில் மட்டும் தொடர்ந்து துருவன் நாடகத்தையே பலமுறைகள் நடித்தோம். நாடகம் மக்களை மிகவும் கவர்ந்தது.

துருவனில் ஆங்கிலம்

அந்தநாளில் ஸ்பெஷல் நாடக நடிகர்கள் புராண இதிகாச நாடகங்களில் சாதாரணமாக ஆங்கில வார்த்தைகளைப் பயன் படுத்துவார்கள். ஆனால் பாலர் கம்பெனிகளில் இந்தக் கொடுமை யெல்லாம் இல்லை. துருவச் சரித்திரத்தில் மட்டும் ஆங்கிலம் எப்படியோ இடம் பெற்று விட்டது.

துருவன் நாடகத்தில் ஒரு காட்சி. துருவனும், உத்தான பாத மகாராஜாவின் இளையாள் பிள்ளை உத்தமனும் விளையாடும் காட்சி அது. அந்த நாளில் எல்லாம் பாடல்கள்தானே! பிள்ளைகள், பாடல்களிலேயே விளையாடுகிறார்கள். பிள்ளைகள் கூடி விளையாடும் இடத்தில் விகடப் பையனும் ஒருவன் இருந்தாக வேண்டுமே!...... துருவன் பாடியதும், விகடப் பையனாக வேடம் புனைந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பாடுவார்:

டென்னிஸ் புட்பாலடித்து
    ரவுண்டர்ஸ் பிளே செய்திடுவோம்
டிபன் கொஞ்சம்எடுக்க
    டி காபி பார்த்திடுவோம்

பாடலைக் கவனித்தீர்களா? டென்னிஸ், புட்பால் இவைபோன்ற விளையாடல்களை எல்லாம் துருவனும், உத்தமனும் விளையாடுகிறார்கள்! எப்படி? அந்தக் காலத்துப் புராண இதிகாச நாடகங்களில் ஆங்கில மொழி எப்படி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. பார்த்தீர்களா? இந்தக் கேலிக் கூத்தையெல்லாம் பொது மக்கள் அமோகமாக ரசிக்கத்தான் செய்தார்கள்!

பக்த ராமதாஸ் தயாரிப்பு

பக்த துருவனில் மகத்தான வெற்றியைக் கண்டதும். தம்புடு பாகவதர், மற்றொரு சிறந்த காலட்சேபக் கதையான பக்த ராமதாசையும் எங்களது வேண்டுகோளுக்கிணங்கி நாடக. மாக்க முனைந்தார். காரைக்குடி முடிந்து, சிவகங்கை சென் றோம். பக்த ராமதாஸ் பாடம் கொடுக்கப்பட்டது. வழக்கம் போல் எல்லோருக்கும் பாடல்களை முதலில் சொல்லிக் கொடுத். தார் பாகவதர். துருவச் சரித்திரத்தில் அவர் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தபோதே கணத்த குரலில் அவர் பாடும். பாணி, சாதாரணமாகச் சிலருக்கு நகைப்பையே உண்டாக்கும். நகைச்சுவை நடிகர்களுக்குக் கேட்க வேண்டுமா, என்ன! அவர் பாடும்போது தலையை அசைக்கும் பாங்கையும், உதடுகள் குவிந்து விரியும் தோற்றத்தையும் அப்படியே காப்பியடித்தார்கள் சிலர். இவர்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும், புளிமூட்டை ராமசாமியும் முதன்மையாக இருந்தனார். ராமதாசில் ஸ்ரீராம நவமி உத்ஸவத்தில் சாப்பிட்டு விட்டு வந்து, அதைப்பற்றி வர்ணித்துப் பாடும் இரு பிராமணர்களாக நடிக்க வேண்டிய நிலை இவ்விருவருக்கும் நேர்ந்தது. பிறருக்குச் சொல்லிக் கொடுப் பதையே நையாண்டி செய்யும் இவர்கள், தாங்களே பயிலும் நிலை ஏற்பட்டபோது, நிரம்பவும் திண்டாடினார்கள். ஒரு நாள் என். எஸ். கிருஷ்ணனையும், ராமசாமியையும் எதிரே உட்கார வைத்துக் கொண்டு பாகவதர் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார்.

கூட்டுக்கறிகள் பாருமே
    கோசம்பரி சட்னி பச்சடி லாம்பார் (கூட்டு)
அப்பளமிது செப்பரிதாகும்
    சொப்பனத்திலும் கண்டிலோம்
ஷோக்கு ஷோக்கென் றுண்டிடுவோம் (கூட்டு)

இதைத் தம்புடு பாகவதர் அவருடைய வழக்கமான ‘பந்தாவில்’ பாடத் தொடங்கிய உடனேயே என். எஸ். கிருஷ்ணனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவர் நேராகப் பாகவதர் முகத்தைப் பார்க்காமல் சிரிப்பை அடக்கிக்கொண்டு, ராமசாமியைப் பார்த் தார். அவரும் அதே நிலையில் இருந்தார். வாயைத் திறக்காமல் உதட்டைக் கடித்த வண்ணம் இருந்தால் ஒரளவு சிரிக்காமல் சமாளிக்க முடியும்; ஆனால் வாயைத் திறந்து பாடவேண்டுமே! இரண்டு மூன்றுமுறை பாகவதர் பாடிவிட்டு, ‘நீங்கள் பாடுங்கள், பாடுங்கள்’ என்றார். இருவரும் பாடுவதற்கு வாயைத் திறந்து, “கூட்டு கறிகள் பாருமே” என்றார்கள். ‘பா’ என்ற சொல்லிலேயே பற்கள் முப்பத்திரண்டும் தெரியும்படியாக ‘குபுக்’ என்று இருவரும் சிரித்துவிட்டார்கள். இது பாகவதருக்கு எப்படி இருந்திருக்கும். இளம்பிள்ளைகளின் விளையாட்டு என்ற முறையில் பெருந் தன்மையோடு “சரி நாளைப் பாடலாம்” என்று எழுந்து போய் விட்டார். செய்தி பெரியண்ணா காதுவரைக்கும் எட்டியது. அவர், இருவரையும் கூப்பிட்டுக் கண்டித்தார். “இனிமேல் சரியாகப் பாடுகிறோம்” என்றார்கள் நகைச்சுவை நடிகர்கள் இருவரும்.

வாய்ப்பினை இழந்தோம்

மறுநாள் பொழுது விடிந்த உடனேயே, இன்று சிரிக்காமல் பாடவேண்டும் என்று இருவரும் தங்களுக்குள்ளேயே உறுதி செய்து கொண்டார்கள். பாகவதர் வந்து உட்கார்ந்தார். இருவரும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒழுங்கான பிள்ளைகளாக வந்து, எதிரில் அமர்ந்தார்கள். பாகவதர் பழைய தோரணையில் பாடலைத் தொடங்கினார். என். எஸ். கிருஷ்ணனும், ராமசாமியும், பாகவதர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டே பாடத் தொடங்கினார்கள். ஆனால் மிகுந்த சிரமத்தோடு அவர்கள் அடக்கி வைத்திருந்த அந்த சிரிப்பு ஒரு முறைதான் கட்டுப்பட்டிருந்தது. இரண்டாம் முறை அவர்கள் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு, சத்தத்தோடு பொட்டிச் சிதறியது. இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள். பாகவதர் பொறுமை இழந்தார். “இந்தப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க என்னால் இயலாது” என்றார். அப்படிச் சொன்னதோடு மட்டும் நில்லாமல் உடனடியாகப் புதுக்கோட்டைக்கும் பயணமானார், பெரியண்ணா அவரை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பயனில்லாமல் போயிற்று. என். எஸ். கிருஷ்ணன் இதற்காக மன்னிப்புக் கேட்டுப் பாகவதருக்குக் கடிதமும் எழுதினார். ஆனால் பாகவதர் திரும்பி வரவே இல்லை. நாங்கள் மிகவும் வருந்தினோம். மும் மொழி நாடகமான பக்த ராமதாசை அரங்கேற்றும் வாய்ப்பு அப்போது எங்களுக்குக் கிட்டவில்லை. அந்த நல்ல வாய்ப்பு மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபாவுக்குக் கிடைத்தது. பின்னர் சிவகங்கையிலிருந்து திருநெல்வேலிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

திருநெல்வேலியில் மீண்டும் வாத்தியார் கந்தசாமி முதலியாரும், அவரது புதல்வர் எம். கே. ராதாவும், கே. கே. பெருமாளும் வந்து சேர்ந்தார்கள். இம்முறை அவர்களோடு கே. பி. காமாட்சி சுந்தரமும் வந்து சேர்ந்தார். அவர்கள் வந்தபின் சந்திர காந்தா நாடகம் மீண்டும் பாடம் கொடுக்கப் பெற்றது.

தம்பி பகவதிக்கு டைபாய்டு

திருநெல்வேலியில் தம்பி பகவதி, அம்மா,சிற்றப்பா மூவரும் டைபாய்டு ஜுரத்தால் பீடிக்கப்பட்டார்கள். வீட்டில் வைத்து சிகிச்சை செய்யமுடியவில்லை. பாளையங்கோட்டைஆஸ்பத்திரியில் மாதக்கணக்கில் அவர்கள் இருக்க நேரிட்டது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அம்மாவும், சிற்றப்பாவும் விரைவில் குணமடைந்தார்கள். தம்பி பகவதி மட்டும் நீண்ட காலம் ஆஸ்பத்திரியிலேயிருந்து சிகிக்சை பெற்றான். ஆஸ்பத்திரியின் பிரதம கம்பவுண்டர் ரங்கமன்னார் நாயுடுவும், கம்பவுண்டர் ஷண்முக சுந்தரம் பிள்ளையும் இந்தச் சமயத்தில் எங்களுக்குப் பேருதவி புரிந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் எங்கள் குடும்ப நண்பர்களாகவே ஆகிவிட்டார்கள்.

கம்பெனியில் நடத்திக் கொண்டிருந்த எல்லா நாடகங்களையும் நடித்து விட்டோம். மேற்கொண்டு புதிய நாடகம் ஏதாவது நடத்தினால்தான் வசூலாகும்போல் தோன்றியது. நிலைமை நெருக்கடியாய் விட்டது. வெளியூர்களில் ஸ்பெஷலாகச் சில நாடகங்களை நடத்தினோம். வசூலாகவில்லை. தம்பி பகவதிக்குத் துணையாக அம்மாவையும் ஆஸ்பத்தியிரிலேயே இருக்கச் செய்து விட்டு, நாங்கள் மதுரைக்குச் சென்றோம். மதுரையிலிருந்து எட்டையபுரம் இளையராஜா காசிவிஸ்வநாதபாண்டியன் அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் எட்டையபுரம் சென்றோம். ஒரே ஒரு இரத்தினவளி நாடகம் மட்டும் போடவேண்டும் என்ற ஏற்பாட்டில் தான் போயிருந்தோம். ஆனால் எட்டையபுரத்தார் எங்களை விடவில்லை. தாத்தா மகாராஜா, தங்க மகாராஜா, காசி மகாராஜா ஒவ்வொருவர் அரண்மனை அரங்கிலும் இரத்தினவளி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. வாத்தியார் கந்தசாமி முதலியாருக்கு எட்டையபுரம் அரசர் ஏராளமான சன்மானங்கள் செய்தார். இரத்னவளியாக நடித்த செல்லத்திற்கு இரண்டு கைக் கொலுசுகள் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம். கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனுக்கு வைரக்கற்கள் பதித்த தம் கைக்கெடியாரத்தையே காசிமகாராஜா அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். மற்றும் எல்லா நடிகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பெற்றன.

கலைவாணர் தமக்கையார் வீட்டில்

எட்டையபுரத்தில் என். எஸ். கிருஷ்ணனின் மூத்த சகோதரி இருந்து வந்தார். நாங்கள் சகோதரர்கள் நால்வரும்: கலைவாணருடனும், வாத்தியார் முதலியாருடனும் அவரது இல்லத்தில் உணவு புசிப்பது வழக்கம். வாத்தியாருடன் நான் அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். ஒருநாள் நாங்கள் எல்லோரும் உணவு அருந்திக் கொண்டிருந்தபொழுது, வாத்தியாருக்குத் தாகம் எடுத்தது. அவர், எதிரிலிருந்த டம்ளரை எடுக்கக் கையை நீட்டினார். நான் உடனே விளையாட்டாக அவருக்குமுன் அந்த டம்ளரை எடுத்து, அதிலிருந்த தண்ணிரைக் குடித்துவிட்டு, வெறும் டம்ளரை வாத்தியார் முன்னால் வைத்தேன். எல்லோரும் சிரித்தார்கள். மீண்டும் டம்ளரில் ஜலம் ஊற்றப்பட்டது. வாத்தியார் கையை நீட்டினார். மறுபடியும் நான் டம்ளரிலுள்ள நீரை எடுத்துக் குடித்து விட்டேன். அவ்வளவுதான். வாத்தியார் விக்கி விக்கித் தவித்தார். அவரது கண்கள் மேலே செருகிப் போய்விட்டன. அப்படியே பின்னால் சாய்ந்தார். உடனடியாகத் , தண்ணிர் கொண்டுவரப்பட்டு, அவரது முகத்தில் தெளிக்கப்பட்டது. தண்ணீரைக் குடித்தார். பிறகு ஒருவாறாகச் சமாளித்து எழுந்து உட்கார்ந்தார். நான் திடுக்கிட்டுப் போய்விட்டேன். இப்படி நேருமென்று எதிர்பார்க்கவே இல்லை. எல்லோரும் என்னைக் கோபத்தோடு பார்த்தார்கள். பெரியண்ணாவின் கண்களைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. “சிறுபிள்ளை விளையாட்டாகச் செய்துவிட்டான்” என்று வாத்தியாரே மற்றவர்களைச் சமாதானப் படுத்தியது, எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

எட்டையபுரத்தில் அரண்மனைக்கு வெளியேயும் ஒரு பெரிய நாடகக் கொட்டகை இருந்தது. இரத்தினவளி நாடகம் அங்கும் நடிக்கப்பெற்றது. ஆக, ஒரே ஒரு நாடகத்திற்காக எட்டையபுரம் சென்ற நாங்கள், அரண்மனையின் உள்ளிலும், வெளியிலுமாக மொத்தம் பதினைந்து நாடகங்கள் நடிக்க நேர்ந்தது. மதுரைக்குத் திரும்பியதும் விரைவில் பட்டாபிஷேகத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தோம்.

சந்திரகாந்தா அரங்கேற்றம்

இம்முறை சந்திரகாந்தா நாடகம் எவ்வித விக்கினமும் இல்லாமல் அரங்கேறியது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், கோவையில் நேரில் வந்து ஒத்திகை பார்த்து அனுமதி கொடுக் காமல் போன ஜே. ஆர். ரங்கராஜு, இப்போது அதைப் பார்க் காமலே அனுமதி கொடுத்துவிட்டார். வாத்தியார் முதலியாரின் நாடகத் தயாரிப்பில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

சந்திரகாந்தா, இராஜேந்திரா முதலிய நாவல் நாடகங்களில் இப்போது கே. பி. காமாட்சி பிரதம வேடம் தாங்கினார், காமாட்சி மிகச் சிறந்த நடிகர். “இந்தியன் எடிபோலோ” என்று அடைமொழி கொடுத்து, அவர் பெயரை விளம்பரப் படுத்துவது வழக்கம், அவருடைய நடிப்பு, மற்றவர்கள் நடிப்பினின்றும் முற்றிலும் வேறுபட்டிருக்கும். கைகால்களே அதிகமாக அசைக் காமல் முகத்திலேயே உணர்ச்சிகளைக் காட்டி நடிப்பார். அவரது அற்புதமான நடிப்புத் திறமையை எல்லோரும் புகழ்வார்கள்.

காரைக்குடியில் கம்பெனியை விட்டுப்போன எம். ஆர். சாமிநாதன் மீண்டும் இப்போது கம்பெனியில் சேர்ந்திருந்தார். ஆனால் பழைய ஸ்தானம் அவருக்குக் கிடைக்கவில்லை. என். எஸ். கிருஷ்ணன் அவருடைய இடத்தைப் பிடித்துக்கொண்டதால் சாமிநாதன் வேறு சில்லரை வேடங்களே புனைய நேர்ந்தது. நாடகங்களில் இரண்டாவதாக வரும் நகைச்சுவை வேடமே அவருக்குக் கொடுக்கப் பெற்றது. சந்திரகாந்தாவில் நாவிதர் முனிசாமியும், திருக்கள்ளுர் பண்டார சந்நிதியும் கலைவாண ருக்கே கிடைத்தன. எம். ஆர், சாமிநாதனுக்கு மொந்தையூர் பண்டாரசந்நிதி வேடமே கொடுக்கப்பட்டது. நான் அவரிடம் மிகவும் அனுதாபம் கொள்வேன். ஆனால் சாமிநாதன் இதுபற்றிக் கவலைப்படாதவர் போல் காட்டிக் கொள்வார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு, அவரது மனநிலை ஒருவாறு தெரியும். எனவே அவர், எம். ஆர். சாமிநாதனிடம் எப்போதும் மரியாதை கொடுத்து, அன்புடனேயே பழகி வந்தார்.

சுண்டூர் இளவரசன்

நான் சுண்டூர் இளவரசனாக நடித்தேன். சின்னண்ணா சந்திரவதனாவாக நடித்தார். சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன் ஒரு பொறுப்பான பாத்திரம். அந்த வேடத்திற்கு எனக்கென்றே தனியாக வாத்தியார் ஒரு ஆங்கில வசனம் எழுதினார். அந்த வசனம் ஒரு சிறந்த கவிதைபோல் அமைந்திருக்கும். அதற்குத் தெளிவாகப் பொருள் கூறிச் சொல்லிக் கொடுத்தார். அந்த ஆங்கில வசனத்தை நான் பேசியபொழுது ரசிகர்கள் மகிழ்ச்சி யோடு கைதட்டிப் பாராட்டினார்கள். சுண்டுர் இளவரசன் வேடத்தில் எனக்குப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. அந்த நாளில் நான் நடித்த பாத்திரங்களில், எனக்கு மிகவும் பிடித்தமான பாத்திரம் சுண்டூர் இளவரசன்தான்.

மாமாவுடன் மனத்தாங்கல்

ஆஸ்பத்திரியிலிருந்து தம்பி பகவதி உடல் நலமாகி வீடு வந்து சேர்ந்தான். டைபாய்டு ஜுரம் அவனை உருக்குலைத்திருந்தது. மிகத் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்த பகவதியின் வார்த்தையில் இப்போது தடுமாற்றம் காணப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தோம். நாகர் கோவிலில் நாடகம் தொடங்கியது. அப்போது கைவசமிருந்த சொற்பத் தொகையைக் கொண்டு நாகர்கோவிலில் ஒரு நிலம் வாங்க எங்கள் தாயார் திட்டமிட்டார்கள். மாமா செல்லம் பிள்ளை ஒரு நிலம் பார்த்து வந்தார். அந்த நிலம் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அது சம்பந்தமாக அம்மாவுக்கும், மாமாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. வார்த்தை வளர்ந்தது. மாமா ஏதோ தவறாகப் பேசினார். அம்மா மாமாவைக் கன்னத்தில் அறைந்து விட்டார்கள். அவர்கள் தம்பி என்ற முறையில் அடித்தாலும், அவ்வளவு பெரியவரை அடித்தது எங்களுக்கெல்லாம் கஷ்டமாகவே இருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பெரியண்ணாவுக்கும், மாமாவுக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. அடுத்த ஊர் திருவனந்தபுரம் வந்ததும் மாமா, கம்பெனியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கும் பெரியண்ணாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை அறிய எங்களால் முடியவில்லை. பெரிய அண்ணாவும் அதை யாரிடமும் சொல்லவிரும்பவில்லை. திருவனந்தபுரத்தை விட்டுப் புறப்பட்டபோது, அப்போது முக்கிய பெண் வேடதாரியாக இருந்த செல்லம், கம்பெனியோடு வர மறுத்து விட்டான். அவனை மாமா மிகவும் அபிமானத்தோடு நடத்தி வந்ததால், மாமா இல்லாமல் அவன் வர விரும்பவில்லை. மாமாவே செல்லத்தைப் போக வேண்டாமென்று சொல்லி நிறுத்தி விட்டதாகவும் கேள்விப்பட்டேன். பணம் சம்பந்தமாகவும் மாமா எங்களுக்குப் பெரிய மோசடி செய்துவிட்டதாக அம்மா கூறினார்கள். எனவே, மேற்கொண்டு நான் எதுவும் கேட்க விரும்பவில்லை.

காவடிக் கட்டு

திருவனந்தபுரம் புத்தன் சந்தையிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எனக்குக் காவடி எடுக்கும் நேர்த்திக் கடன் இருந்தது. அம்மா எப்போதோ நேர்ந்திருந்தார்கள். இதற்கு முன் திருவனந்தபுரம் சென்றபோதெல்லாம் இக்கடனைத் தீர்க்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இம்முறை அதை நிறைவேற்ற முடிவு செய்தார்கள். காவடியைத் தூக்கித் தோளில் வைத்ததும் சுவாமி வரும்; தன் நினைவே இராது என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். நான் கடவுள் நம்பிக்கை உடையவன். என்றாலும் இதில் எனக்கு நம்பிக்கையில்லை. நேர்வுக் கடன் தீர்க்கும் தினத்தன்று காலை நீராடிக் காவியுடை கட்டி, பூஜைக்கு ஆயத்தமானேன். செண்டை, முரசு, நாதசுரம், தவுல் போன்ற மேளதாளச் சத்தங்கள் என் செவிகளைத் துளைக்கத் தொடங்கின. காவடி எடுத்துத் தோளில் வைத்ததும், என் முன்னே இசைக்கருவிகளை உச்ச ஸ்தாயையில் முழக்கி, ஆட்டம் போடலாயினார். அவ்வளவுதான். தலை சுற்றுவது போன்ற நிலை; என் உணர்வில் ஒரு எழுச்சி. நினைவை இழந்தேன். மீண்டும் எனக்கு நினைவு வந்தபோது, சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முன் காவடியோடு நின்று கொண்டிருந்தேன். ஏறத்தாழ ஒரு மைல் தொலைவிலுள்ள கோவிலுக்கு எப்படி வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அனுபவம் எனக்குப் புதுமையாக இருந்தது.