என் சரித்திரம்/24 காரிகைப் பாடம்

அத்தியாயம்—24

காரிகைப் பாடம்

குன்னத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டினராகிய ராமையங்கார் எனது நிலையை அறிந்து மிகவும் இரங்கினார். அப்பால் ஒரு நாள் என் தந்தையாரைப்பார்த்து, “இவனைச் செங்கணம் சின்ன பண்ணை விருத்தாசல ரெட்டியாரிடம் கொண்டுபோய் விட்டால் அவர் பாடஞ் சொல்வாரே” என்றார்.

“விருந்தாசல ரெட்டியார் என்பவர் யார்?” என்று என் தந்தையார் கேட்டார்.

“அவர் செங்கணத்திலுள்ள பெரிய செல்வர், உபகாரி, தமிழ் வித்துவான், இலக்கண, இலக்கியங்களை நன்றாகப் பாடஞ்சொல்லும் சக்தி வாய்ந்தவர்.”

“அவரிடம் போயிருந்தால் ஆகாரம் முதலியவற்றிற்கு என்ன செய்வது?”

“நீங்கள் குடும்பத்துடன் சென்று அங்கே இருக்கலாம். அவரே உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களை யெல்லாம் செய்து கொடுப்பார். நான் உங்களை அழைத்துச் சென்று அவரிடம் விடுகிறேன். அவர் என் நண்பர்” என்று ராமையங்கார் சொன்னார். அவர் பின்னும் விருத்தாசல ரெட்டியாருடைய குணாதிசயங்களைச் சொன்னார். தமிழ்ச் சித்த வைத்திய நூல்களில் ஐயங்கார் நல்ல பயிற்சியுடையவர். அதனால் அவருக்கும் ரெட்டியாருக்கும் பழக்கம் உண்டாயிற்று. அந்தப் பக்கங்களில் இருந்த தமிழ் வித்துவான்கள் யாவருக்கும் ரெட்டியாருடைய பழக்கம் உண்டு.

செங்கணம் சென்றது

ராமையங்கார் விருந்தாசல ரெட்டியாரைப் பற்றிச் சொன்னபோது எனக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. காலத்தை வீணாகக் கழிக்காமல் இயன்றவரையில் பாடம் கேட்கலாமென்று எண்ணினேன். என் தந்தையார் செங்கணம் செல்ல உடன்பட்டார்.

கார்குடியிலிருந்த கஸ்தூரி ஐயங்கார், சாமி ஐயங்கார், களத்தூர் ராமையங்கார் என்பவர்களுக்கும் விருத்தாசல ரெட்டியார் நண்பர். குன்னம் ராமையங்கார் செங்கணத்திற்குப் புறப்பட ஒருநாளை நிச்சயித்துக் கூறியபின், மேற்கூறிய மூவருக்கும் அதனை அறிவிக்க, அவர்களும் அன்று செங்கணத்திற்கு வந்து என்னை ரெட்டியாரிடம் சேர்ப்பிக்க வருவதாகச் சொல்லியனுப்பினர்.

குறித்த தினத்தில் குன்னம் ராமையங்கார் என்னையும் என் தந்தையாரையும் அழைத்துக்கொண்டு செங்கணம் சென்றார். என் தாயார் குன்னத்தில் இருந்தார். அன்று எங்களுக்கு முன்பே கார்குடி கஸ்தூரி ஐயங்கார் முதலிய மூவரும் அங்கே வந்திருந்தனர். நால்வரும் என்னைச் செங்கணம் ரெட்டியாரிடம் ஒப்பித்து என் இயல்பைப் பற்றிக் கூறினர்: “இவனை நல்ல நூல்கள் படிக்கும்படி செய்யவேண்டும். இவன் அதே நாட்டமாக இருக்கிறான். வேறொன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. அன்றியும் படிக்கிற வரையில் இவன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர். ரெட்டியார் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார். இயல்பாகவே உபகார சிந்தையை உடைய அவர் இந்த நான்கு பேர்களும் சொல்லும்போது என்னை ஏற்றுக்கொள்வதற்கு என்ன தடை?

ரெட்டியார் என்னை நோக்கி, “என்ன என்ன நூல்களைப் படித்திருக்கிறீர்?” என்று கேட்டார். நான் இன்ன இன்ன நூலை இன்னார் இன்னாரிடத்தில் பாடம் கேட்டேனென்பதைச் சொல்லிவிட்டு, “நான் இந்த நூல்களைப் பாடங் கேட்டிருந்தாலும் ஒரு நூலிலாவது எனக்குத் தெளிவான ஞானம் உண்டாகவில்லை. எல்லாக் குறையும் தாங்கள் தீர்க்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். அவர் புன்னகையுடன், “அப்படியே ஆகட்டும்” என்றார்.

பிறகு “நீர் நன்னூல் காண்டிகை உரையைப் பாடம் கேட்டிருத்தலால் எழுத்துச் சொல் இலக்கணங்கள் ஒருவாறு தெரிந்திருக்கும். இந்த ஞானமே மேலே இலக்கியங்களைப் படித்தற்குப் போதுமானது. அடுத்தபடியாக யாப்பிலக்கணம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்; ஆதலால் முதலில் யாப்பருங்கலக் காரிகையைப் பாடங் சொல்லுகிறேன் அப்பால் சௌகரியம்போற் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறி என் தந்தையாரைப் பார்த்து, “நீங்கள் குடும்பத்துடன் இங்கே வந்துவிடுங்கள்” என்றார். என் தந்தையாருக்கும் எனக்கும் மகிழ்ச்சியினால் உள்ளம் பூரித்தது. யாவரும் ரெட்டியாரிடம் விடைபெற்றுக்கொண்டு குன்னம் வந்தோம். என் தந்தையார் என் தாயாரையும் என்னையும் அழைத்துக்கொண்டு செங்கணத்துக்கு ஒரு நல்ல நாளில் வந்தார். இடையிலே நின்றிருந்த தமிழ்க் கேள்வித் துறையில் மீட்டும் நான் புகுந்தேன்.

ரெட்டியார் எங்களுக்காக ஒரு ஜாகை ஏற்படுத்தி அதில் இருக்கும்படி செய்து, உணவுப் பொருள்களையும் வேண்டிய அளவு முன்னதாக அனுப்பி, செலவுக்குப் பணமும் கொடுத்து ஆதரித்தார். ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் தவறின்றி இரண்டு கல நெல்லும் இரண்டு ரூபாயும் அனுப்பி விடுவார்.

ரெட்டியார் இயல்பு

செங்கணத்தில் நாட்டாண்மைக்காரரில் பெரிய பண்ணையார், சின்ன பண்ணையார், பட்டத்துப் பண்ணையார் என்ற பகுப்பினர் இருந்தனர்! விருத்தாசல ரெட்டியார் சின்ன பண்ணையார் என்னும் பகுப்பினர். இம்மூவகையினரையும் நாட்டார் என்று வழங்குவர். அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி இருந்தமையால் எங்களிடம் அன்புவைத்து அவ்வப்போது வேண்டிய உபகாரங்களைச் செய்து வந்தார்கள். அவர்களில் சிலர் சைவ சமயத்தையும் சிலர் வைணவ சமயத்தையும் தழுவியவர்கள். ஆயினும் அவர்களுக்குள் விவாக சம்பந்தம் முதலியன உண்டு.

விருத்தாசல ரெட்டியார் குட்டையான வடிவினர். கறுப்பு நிறத்தினர். தேகம் பளபளப்பாக இருக்கும். எப்பொழுதும் சுத்தமாக இருப்பார். காலை ஐந்து மணிக்கு எழுவார். ஊரைச் சுற்றிலும் காடுகளும் நீரூற்றமும் மணற் பரப்புமுள்ள ஓடைகளும் உண்டு. ஏதேனும் ஒரு பக்கம் சென்று தந்த சுத்தி முதலியவற்றை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கு வீட்டிற்கு வருவார். கால், கையைச் சுத்தம்பண்ணிக்கொள்வதற்கும் முகத்தைச் சுத்தம்பண்ணிக்கொள்வதற்கும் அரை மணிநேரம் பிடிக்கும். பிறகு திருநீற்றை உத்தூளனமாக இட்டுக்கொண்டு படிக்கத் தொடங்குவார். பதினொரு மணி வரையிற் படித்துக்கொண்டேயிருப்பார். படிக்கும் நூல்களிலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து படித்துச் சிந்தித்துச் செல்வார். மத்தியான உணவுக்குப்பின் இரண்டு மணி முதல் இராத்திரி எட்டு மணி வரையில் படித்துக்கொண்டே இருப்பார். படிப்பதில் அவருக்குச் சலிப்பே தோற்றாது. இரவில் போஜனம் ஆன பிறகு தம்முடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியாருக்குக் கம்பராமாயணப் பாடம் சொல்வார். அவர் பேச்சு மிகவும் திருத்தமாக இருக்கும்.

கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றிருந்தமையின் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி யாரேனும் அயலூரிலிருந்து வந்து இரண்டொரு நாள் தங்கி அவரிடம் சம்பாஷித்துச் செல்வார்கள்.

அவர் கன்னையரென்னும் வீரசைவரிடம் பாடங் கேட்டவர். வீரசைவர்களுக்கும் ரெட்டியார்களுக்கும் ஒற்றுமையும் நட்பும் அதிகமாக இருந்தன. வீரசைவ வித்துவ சிகாமணியாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசரை அண்ணாமலை ரெட்டியார் என்னும் செல்வர் ஆதரித்துப் பாதுகாத்த வரலாற்றை அவ்விருவகையினரும் அடிக்கடி பாராட்டிச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சிவபிரகாச சுவாமிகள் பழகிய இடங்களையும், அவர் நீராடும்பொருட்டு அமைக்கப்பெற்ற நடை வாவிகளையும் நான் பார்த்திருக்கிறேன்.

பல தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் அச்சுப் புஸ்தகங்களையும் விருத்தாசல ரெட்டியார் தொகுத்து வைத்திருந்தார். எழுத அநேக ஏட்டுச் சுவடிகளை ஸித்தமாக வைத்திருப்பார். தம்மிடம் இல்லாத அரிய தமிழ் நூல்கள் கிடைத்தால் அவற்றில் எழுதிக்கொள்வார். ஏட்டுச் சுவடியில் விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார். எனக்காகச் சில தமிழ் நூல்களை ஏட்டுச் சுவடியில் எழுதித் தந்திருக்கிறார். சில சமயங்களில் நானும் அவரும் ஒரே சமயத்தில் ஒரு நூலைப் பிரித்துக்கொண்டு தனித்தனியே பிரதி பண்ணுவோம்.

படித்தலும் பாடம் சொல்லுதலும் வந்தவர்களிடம் சம்பாஷணை செய்தலுமின்றி வேறு ஒரு காரியத்திலும் அவர் புத்தியைச் செலுத்துவதில்லை. மிகுதியான பூஸ்திதி உள்ளவர் அவர். அவற்றை அவருடைய பிள்ளைகளும் காரியஸ்தருமே கவனித்து வந்தனர். இவ்வாறு அவர் இருத்தலில் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் மிக்க வருத்தம் இருந்தது. அதனை ரெட்டியார் உணர்ந்தும் சிறிதும் கவலைகொள்ளவில்லை.

நல்லப்ப ரெட்டியார்

நான் விருத்தாசல ரெட்டியாரிடம் பாடங்கேட்ட காலத்தில் அவருக்குச் சற்றேறக் குறைய ஐம்பத்தைந்து பிராயத்திற்கு மேல் இருக்கும். அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். மூத்தவராகிய நல்லப்ப ரெட்டியாருக்கு ஸ்ரீதன வருவாய் மிகுதியாக இருந்தது. பெண்மணிகளுக்கு அதிக ஸ்ரீதனம் வழங்குவது அந்த ஜாதியினருடைய வழக்கம். அதனால் பெண்மணிகள் சுதந்திரமும் விவேகமும் கணவர்களிடத்தில் மரியாதையும் உடையவர்களாக இருப்பார்கள்.

நல்லப்ப ரெட்டியார் நல்ல தியாகி. தமிழிலும் பயிற்சியுள்ளவர். உத்தமமான குணமுடையவர். என் தந்தையாரிடம் பேரன்பு பூண்டிருந்தார். அவர் தனியே எங்களுக்குச் செய்துவந்த உதவிகள் பல.

யாப்பருங்கலக் காரிகையைப் பாடங்கேட்டது

நல்லவேளையில் நான் காரிகை படிக்கத் தொடங்கினேன். யாப்பிலக்கணத்தைப் பற்றிச் சிறிதும் அறியாதநிலையில் இருந்தேன் நான். எனக்கு அதைக் கற்பிப்பது சிரமமான காரியந்தான். ஆனாலும் ரெட்டியார் தெளிவாக எனக்குக் கற்பித்தார். அவருடைய ஞானமும் என்னுடைய ஆவலும் சேர்ந்து அந்தத் தெளிவுக்குக் காரணமாயின.

நான் பாடங்கேட்கத் தொடங்கியது சுக்கில வருஷம் மார்கழி (1869) மாதத்திலாகும். விடியற்காலையில் நான்கு மணிக்கே அவர் என்னை எழுப்பிவிடுவார். திருவாசகத்தில் திருவெம்பாவையைப் படிக்கச் செய்வார். முதல்நாள் நடந்த பாடத்தை மறுபடியும் சொல்லிக் கேள்விகள் கேட்டு என் மனத்தில் பதியச் செய்வார். அக்கேள்விகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. பாடம் கேட்பவர் எவ்வளவு தூரம் கிரகித்துக்கொண்டார் என்பது தெரியாமலே தொடர்ச்சியாகப் பாடம் சொல்வதில் பயன் ஒன்றுமில்லை என்பதை அவர் அறிவார். கேட்ட பாடத்தைச் சிந்திக்கச் செய்து அடிக்கடி கேள்வி கேட்பதனால் கற்பித்த பாடம் உறுதிப்படும்.

யாப்பருங்கலக் காரிகையும் உரையும் மேற்கோட் செய்யுட்களும் என் உள்ளத்தே பதிந்தன. மேற்கோட் செய்யுளின் அர்த்தத்தையும் எந்த இலக்கணத்திற்கு உதாரணமாக அது காட்டப்படுகிறதோ அந்த இலக்கணம் அமைந்திருப்பதையும் ரெட்டியார் எடுத்துரைப்பார். அந்த இலக்கணத்தை அமைத்துப் புதிய செய்யுட்கள் எழுதும்படி சொல்லுவார். நான் எழுதியதைப் பார்த்து இன்ன இன்ன பிழைகள் இருக்கின்றன என்று விளக்குவார். ஒருவகைச் செய்யுளுக்குரிய இலக்கணத்தை அவ்வகைச் செய்யுளாலேயே உரைக்கும் இலக்கண நூல் தெலுங்கிலும் வட மொழியிலும் உள்ளனவாம். ரெட்டியாருக்குத் தெலுங்கு தாய்மொழி. அதிலும் அவருக்குப் பயிற்சி உண்டு. தெலுங்கு நூலைப் பற்றி என்னிடம் சொல்லி “அவ்வாறே நீரும் செய்து பழகும்” என்று உரைத்து அவ்வழியையும் கற்பித்தார். அப்படியே நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை நேரிசை வெண்பாவிலேயே அமைத்தேன்; ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஆசிரியப்பாவாலேயே கூறினேன். மிகவும் சிரமப்பட்டு இவ்வாறு பாடிக் காட்டுவேன். அச்செய்யுட்களில் உள்ள குணத்தைக் கண்டு முதலில் எனக்கு உத்ஸாகம் ஊட்டுவார்; பிறகு பிழை இருந்தால் அதனையும் எடுத்துக்காட்டுவார்.

காரிகையின் முதற்செய்யுளின் உரையில் உரையாசிரியராகிய குணசாகரர் வேறு மொழிகளிலுள்ள நூல்களை உவமையாக எடுத்துச் சொல்லுகிறார். அந்நூல்களைப் பற்றிய வரலாறுகள் மாத்திரம் ரெட்டியாரால் சொல்ல இயலவில்லை. ஆதலின் அவ்விஷயத்தில் சந்தேகம் இருந்தது. இடையிடையே வரும் மேற்கோள்களில் ஜைன சமயத் தொடர்புடைய பாடல்கள் பல. அவற்றில் அச்சமய சம்பந்தமான சில செய்திகளை அவர் விளக்கவில்லை. இவற்றைத் தவிர மற்ற எல்லாம் தெளிவாகவும் அழுத்தமாகவும் என் அறிவில் பதிந்தன. அந்த அஸ்திவார பலம் இன்னும் இருந்து வருகிறது. இலக்கணமென்றால் கடினமானதென்ற நினைவே இல்லாமல் சுலபமாகவும் மனத்துக்கு உத்ஸாகமுண்டாகும்வண்ணமும் ரெட்டியார் பாடஞ்சொன்ன முறையை நான் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அவரிடம் நான்கு மாதங்கள் நான் பாடங்கேட்டேன். ஆயினும் என் வாழ்வு முழுவதும் அப்பாடம் பயன்பட்டு இன்பம் தருவதாயிற்று.