என் சரித்திரம்/41 ஆறுமுக பூபாலர்

அத்தியாயம்‌—41

‘ஆறுமுக பூபாலர்‌’

றுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும் இருப்பார்; நான் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும் அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம் அதிகமான அன்புகாட்டுவதையும் அவர் அறிவார், அப்படி இருந்தும் அவர் என்னிடம் இன்முகத்தோடு பேசுவதில்லை. பிள்ளையவர்கள் என்பால் அன்புடையவராக இருப்பதைக்கூட அவர் அந்தரங்கத்தில் ஒருவேளை வெறுத்திருக்கலாமோ என்று நான் எண்ணியதுண்டு.

பிள்ளையவர்கள் வைத்திருந்த பேரன்புதான் எல்லாவிதமான இடையூறுகளையும் பொறுத்துவரும் தைரியத்தை எனக்கு அளித்தது.

நள்ளிரவில் விருந்து

ஆறுமுகத்தா பிள்ளை அனுசரிக்கும் முறைகள் சில மிகவும் விசித்திரமானவை. மாலையில் அவர் அனுஷ்டானம் செய்த பிறகு கந்த புராணத்தைப் பாராயணம் செய்வார். பிள்ளையவர்களுக்கு முன் இருந்து அதைப் படிப்பார். அவர் கேட்டால், பிள்ளையவர்கள் இடையிடையே கடினமான பதங்களுக்குப் பொருள் சொல்லுவார். அப்படி அவர் படித்ததை முறைப்படி பாராயணம் செய்ததாகவோ, ஒழுங்காகப் பாடம் கேட்டதாகவோ எண்ண இடமில்லை. ஆனாலும் அவர் பாராயணம் செய்துவிட்டதாகவும் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டுவிட்டதாகவும் பலரிடம் சொல்லி மகிழ்வார். இப்பாராயணம் இராத்திரி ஒன்பது மணி வரையில் நடைபெறும்.

நான் பாடங் கேட்கும்போது அவர் பாராயணம் செய்ய வந்தால் தம்மை நான் அலக்ஷியம் செய்வதாக ஒருவேளை எண்ணிவிடுவாரோ என்று பயந்து என் பாடத்தை உடனே நிறுத்திப் புஸ்தகத்தை மூடிவைப்பேன். அவர் படிக்கும்போது நானும் கவனித்து வருவேன்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் படுத்துக்கொள்வார்கள்; சாப்பிடாமலே படுத்து உறங்குவார்கள். பன்னிரண்டு மணி அல்லது ஒரு மணிக்கு ஆறுமுகத்தா பிள்ளை எழுந்து இலைபோடச் சொல்லுவார். தூங்கினவர்களை எழுப்பி உண்ணச் செய்வார். அயலூர்களிலிருந்து யாரேனும் வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களையும் அழைத்து உணவுகொள்ளச் சொல்லுவார்.

இந்த அர்த்தராத்திரி விருந்து நடைபெறும்பொழுது நான் பிள்ளையவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பாடங் கேட்க வேண்டும். ஆறுமுகத்தா பிள்ளை இட்ட கட்டளை இது.

ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் படுத்துக்கொண்ட பிறகு நான் சிறிதுநேரம் படித்துவிட்டுத் தூங்கிவிடுவேன். அஸ்தமித்தவுடன் பிள்ளையவர்கள் அனுஷ்டானம் செய்து மீளும்பொழுதே அக்கிரகாரத்தில் என் ஆகாரத்தை முடித்துக்கொள்பவன் நான். பாதிராத்திரியில் விழித்துக்கொண்டு பிள்ளையவர்கள் சாப்பிடும்போது பாடங் கேட்பதால் என்ன பயன் விளையப்போகிறது? எனக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கும். என் ஆசிரியர் உண்ணும்போதே எப்படித் தடை இல்லாமல் பாடஞ் சொல்ல முடியும்? ஆதலின் அப்போது நான் கேட்கும் பாடம் என் நன்மையை உத்தேசித்ததாக இராது. ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியை எண்ணியே நான் அர்த்தராத்திரியில் பாடங் கேட்டு வந்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம்

ஆனாலும் சில தினங்களில் நான் விழித்துக்கொள்ளாமல் தூங்கிப் போய்விடுவேன். அதனால் பாடங் கேளாமற்போக நேரும். அத்தகைய சமயங்களில் ஆறுமுகத்தா பிள்ளை சாப்பிட்டவுடன் வந்து என்னை எழுப்பிக் கண்டிப்பார்; உடனே எழுப்பாவிடினும் மறுநாளாவது கண்டிக்கத் தவறமாட்டார். “உமக்கு எங்கே படிப்பு வரப்போகிறது? சாப்பிடுவதும் தூங்குவதுமே உமக்குப் பிரியமான தொழில்கள்; நீர் பெரிய சோம்பேறி. இராத்திரி எழுந்து பாடங் கேட்பதைவிட உமக்கு வேறு வேலை என்ன?” என்று கோபித்துக் கொள்வார். பிறருடைய கஷ்ட சுகங்களை அறிந்துகொள்ள முயலாத மனிதர்களிடம் பழகுவதைவிட அவர்களுடைய சம்பந்தமே இராமல் வாழ்வது நலம். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபத்தை ஆற்றுவதற்கு உரிய சக்தியில்லாதவன்; “தெய்வமே!” என்று அவருடைய கோபச்சொற்களைக் கேட்டு வாய்பேசாமல் நிற்பேன்.

புஸ்தகம் மறைந்த மாயம்

ஒருநாள் நள்ளிரவில் வழக்கப்படி நான் பாடங் கேட்கத் தவறிவிட்டேன்; எல்லோரும் உண்பதற்கு எழுந்தபோது நான் எழவில்லை. விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வழக்கம்போல் பாடங் கேட்க எண்ணி முதல்நாள் இரவு புஸ்தகம் வைத்த இடத்திலே போய்ப் பார்த்தேன். அங்கே அது காணப்படவில்லை. நான் மாயூரப் புராணத்தைக் கேட்டு வந்த காலம் அது. வேறு சில இடங்களில் அப்புஸ்தகத்தைப் பார்த்தேன்; காணவில்லை. வேறு எதையாவது படிக்கலாமென்று எண்ணி என் புஸ்தகக்கட்டு இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தேன்; அந்தக் கட்டும் அங்கே இல்லை. “ஆறுமுகத்தா பிள்ளை செய்த வேலை இது; அவருடைய கோபம் இன்னும் என்ன என்ன கஷ்டங்களை விளைவிக்குமோ!” என்று எண்ணும்போது என் உடல் நடுங்கியது. “இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமே!” என்று வருந்தினேன்.

வாடிய முகத்துடன் ஆசிரியரிடம் சென்று, “புஸ்தகங்களைக் காணவில்லை” என்று சொன்னேன். அவர் அங்கிருந்த வேலைக்காரர்களிடம் சொல்லித் தேடச் செய்தனர். அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. “இந்த விஷயத்தைத் தம்பியிடம் சொல்லலாமே” என்றார்.

ஆறுமுகத்தா பிள்ளை அப்பொழுது தூக்கத்தினின்றும் எழவில்லை. அவர் எப்பொழுதும் எட்டுமணி வரையில் தூங்குவார். எட்டுமணியளவில் கண்ணை மூடியபடியே எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருப்பார்; “துரைசாமி” என்று தம் பிள்ளையைக் கூப்பிடுவார். அச்சிறுவன் அவர்முன் வந்து நின்று “ஏன்?” என்பான். அவர் அவன் முகத்தில் விழிப்பார். பிறகுதான் எழுந்து வெளியே வருவார். தம் குமாரன் முகத்தில் விழிப்பதால் நாள் முழுவதும் சந்தோஷமாகச் செல்லும் என்பது அவர் எண்ணம். மனிதனுடைய வாழ்நாளில் சந்தோஷம் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் உலகத்தில் எல்லோரும் இம்மார்க்கத்தைக் கைக்கொள்ளலாமே!

ஆறுமுகத்தா பிள்ளை தினந்தவறாமல் காலையில் துரைசாமியின் முகத்தில்தான் விழித்து வந்தார். ஆனால், அவர் வாழ்வில் அதிக இன்பம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இவ்வளவு ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்துகொண்டு விழிக்கும் ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புஸ்தகத்தைக் காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதை நான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும் நான் பேசாமல் வாடியமுகத்துடன் அங்கேயே நின்றேன்.

‘ஒரு செய்யுள் செய்யட்டும்’

சிறிதுநேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில்நீங்கி எழுந்து அவ்வழியே சென்றார். செல்லும்போது நான் சும்மா நிற்பதைப் பார்த்து, “ஏன் இவர் சும்மா நிற்கிறார்? பாடங் கேட்பதற்கு என்ன?” என்று சொன்னார். என் ஆசிரியர் மெல்ல, “இவர் புஸ்தகம் வைத்த இடத்தில் அது காணப்படவில்லையாம்” என்றார்.

“அப்படியா சமாசாரம்? படிக்கிற புஸ்தகத்தைக்கூட ஒழுங்காக வைத்துக்கொள்ளாதவர் என்ன படிக்கப் போகிறார்? இவருக்கு ஐயா பாடம் சொல்வது வீணான காரியம். படிப்பதில் ஊக்கமிருந்தால் இவர் இவ்விதம் கவலையில்லாமல் இருப்பாரா?” என்று அவர் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.

”இப்படியே புறப்பட்டு ஊருக்குப் போய்விடலாமா?” என்றுகூட எனக்குத் தோன்றிவிட்டது. அவர் கூறிய வார்த்தைகளுக்குப் பதில்கூறும் துணிவு எனக்கு உண்டாகவில்லை.

மறுபடியும் அநத் மனிதர் வந்தார்: “இவர் இவ்வளவு காலமாகப் படித்து வருகிறாரே; தமிழில் இவருக்கு ஏதாவது பயிற்சி ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள் வருந்தி வருந்தி ஓயாமல் பாடஞ் சொல்லிக்கொடுக்கிறீர்களே; இவர் நன்றாகச் சிந்தனை செய்து அறிந்துகொள்ளுகிறாரா? உங்களுடன் பழகும் இவர் ஒழுங்காகப் பாடம் கேட்டிருந்தாரானால், இப்போது தமிழில் செய்யுள் இயற்றும் பழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே. எங்கே, இப்போது இவரை ஒரு செய்யுள் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம். நான் போய் வருவதற்குள் ஒரு செய்யுளை இயற்றி இவர் சொன்னால் இவர் புஸ்தகங்கள் எங்கே இருந்தாலும் வருவித்துக் கொடுக்கிறேன்; இல்லையானால் புதிய புஸ்தகங்களை வாங்கித் தருகிறேன்” என்று சொன்னார்.

“தம்பியின் விஷயமாகவே ஒரு செய்யுள் செய்து சொல்லும், பார்க்கலாம்” என்று ஆசிரியர் என்னை நோக்கிக் கட்டளையிட்டார்.

ஆறுமுகத்தா பிள்ளை நானாகச் செய்யுள் செய்கிறேனா என்பதைக் கவனிக்கும்பொருட்டு ஒருவரைக் காவல் வைத்து, “நான் வருவதற்குள் செய்யுளை இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று எச்சரிக்கையும் செய்து சென்றார்.

‘மாறுமுகச் செம்மல்’

பிள்ளையவர்கள் என்னை அழைத்துக்கொண்டு வேறிடம் சென்றார். அப்போது எனக்குக் காவலாக இருந்தவரும் உடன் வந்தார். நாங்கள் செல்லும்போதே நான் ஒரு வெண்பாவை மனத்துக்குள் இயற்றி முடித்தேன்; அதனை ஆசிரியருக்குச் சொல்லிக்காட்ட நினைந்து, “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்று ஆரம்பித்தேன். அதைக் கேட்டவுடன் பிள்ளையவர்கள், “இருக்கட்டும்” என்று கூறிவிட்டு எங்களுடன் வந்தவரிடம், “நீர் போய்த் தவசிப்பிள்ளையிடம் என் பூஜைக்கு இடம் பண்ணும்படி சொல்லிவாரும்” என்று கூறி அவரை அனுப்பினார். பின்பு என்னை நோக்கி, “நீர் சொல்லிய தொடர்களைச் சீர்மருவும் மாறுமுகச் செம்மலே” என்றும் பிரிக்கலாம். தம்பி அதைக் கேட்டால் கோபித்துக்கொள்வார். இவ்வித தவறான அர்த்தம் தோன்றும்படி செய்யுள் செய்தல் கூடாது” என்று அறிவித்ததோடு ஒரு வெண்பாவை எனக்காக முடித்து என்னிடம் சொன்னார். நான் அதை மனனம் செய்துகொண்டேன்.

அந்தச் செய்யுள்

ஆறுமுகத்தா பிள்ளை அப்பக்கம் வரவே நான் அவரிடம் சென்று மிக்க பணிவோடு என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளைச் சொன்னேன்.

“ஆறுமுக பூபால வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டால் மதிப்பவரார் - கூறுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயை செய் நீ”

என்ற அந்த வெண்பாவை நான் சொல்லும்போதே அவர் முகத்தில் சிறிது சந்தோஷத்தின் குறிப்புத் தோற்றியது. அவரைப் பூபாலரென்று சொன்னதில் அதிகமான சந்தோஷம் உண்டாயிருக்க வேண்டும். அவருடைய முகத்தைக் கவனித்துக்கொண்டே பாடலைச் சொல்லி வந்த நான். “நல்ல வேளையாக, இப்பாட்டில் குற்றம் கண்டு கோபம் கொள்ள மாட்டார்” என்று தெரிந்து சிறிது ஆறுதல் அடைந்தேன்.

கண்டத்தினின்று தப்பியது

“இனிமேல் நன்றாகப் பாடங் கேட்டு வாரும்; சோம்பேறித்தனத்தை விட்டுவிடும். செய்யுள் இயற்றிப் பழகும்” என்று அவர் எனக்கு ‘உபதேசம்’ செய்யத் தொடங்கினார். அப்போது ஒரு வேலைக்காரன் என் புஸ்தகக்கட்டையும் மாயூரப்புராணத்தையும் எடுத்து வந்தான். அவனிடமிருந்து மாயூரப்புராணத்தை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டுப் புஸ்தகக்கட்டை முன்னிருந்த இடத்திற் கொண்டுபோய் வைக்கும்படி கட்டளையிட்டார். நான் அப்புராணத்தைப் பெற்று என் ஆசிரியர் இருந்த இடம் சென்றேன். “ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பினோம்” என்ற எண்ணத்தோடு அவரை அணுகி நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.

அவர் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிதுநேரம் உதாரணங்களுடன் சொல்லி விளக்கினார். பிறகு மாயூரப்புராணத்தில் விட்டஇடத்திலிருந்து பாடங் கேட்க ஆரம்பித்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் ஆக்ஞைப்படி நானாக இயற்றிய பாட்டு என் மனத்தில் பிறந்தது; அது வெளிப்படாமலே நின்றுவிட்டது. நானும் அதை மறந்து விட்டேன். “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்ற பகுதியை மாத்திரம் நான் நினைவில் வைத்திருக்கிறேன். இயல்பாகவே நிமிஷத்திற்கு நிமிஷம் மாறும் முகச் செம்மலாகிய ஆறுமுக பூபாலர் என் சொந்தப் பாட்டைக் கேட்டிருந்தால் என்னை என்ன பாடுபடுத்தி வைத்திருப்பாரோ, கடவுளே அறிவார்!