ஓ மனிதா/4. குரங்கு கேட்கிறது

4. குரங்கு கேட்கிறது

‘மனம் ஒரு குரங்கு’ என்று சொல்லிக் கொள்வதோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை; ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரணமாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஆராய்ச்சி பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்கென்றே ‘டார்வின் சித்தாந்தம்’ என்று ஒரு தனிச் சித்தாந்தத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் அதை ஒரு பெருமையாகக்கூட நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் அந்த அளவுக்கு எங்களுடைய பெருமையைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம் உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் ‘பகுத்தறிவு’ எங்களுக்கு இல்லாமல் இருப்பதுதானோ என்னவோ?

ராம-ராவண யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உங்களில் சிலருக்கு நாங்கள் வணக்கத்துக்குரிய ஜீவன்களாக இருந்து வருகிறோம். ஆயினும் என்ன கடவுளரைக் குறிக்கும் விக்கிரகங்களை வேண்டுமானால் நீங்கள் ‘நைவேத்தியம்’ என்ற பேரால் பழம்—பட்சணம் வைத்து வணங்குவீர்கள்— அவற்றை எடுத்து அவை தின்றுவிடாது என்ற தைரியத்தில்! எங்களை வணங்கும் போதோ?— ‘ராம ராமா!’ என்று கன்னத்தை வலிக்காமல் தொட்டுக் கொள்வதோடு சரி!

இதனால் என்ன நடக்கிறது? — எங்களுக்குவேண்டியதை நாங்கள் உங்களிடமிருந்து தட்டிப் பறித்தே தின்ன வேண்டியிருக்கிறது.

நாங்கள் மட்டும் என்ன, நீங்களும் ஒருவரை ஒருவர் நாசூக்காக, நாகரிகமாகத் தட்டிப் பறித்தே தின்று கொண்டிருக்கிறீர்கள்!

இது உங்கள் பிறவிக் குணம்; நீங்களாக யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டீர்கள். அப்படியே கொடுத்தாலும் ஏதாவது ஒரு லாப நோக்கோடுதான் கொடுப்பீர்கள். நல்ல வேளையாகக் கடவுள் உங்கள் கண்ணில் படுவதில்லை. பட்டால் அவருக்கு எதிர்த்தாற்போலேயே யாராவது ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு காசை எடுத்துத் தாராளமாகத் தருமம் செய்து விட்டு, ‘நான் தான் தருமம் செய்து விட்டேனே, எங்கே எனக்கு மோட்ச சாம்ராஜ்யம்? கொண்டா!’ என்று கூசாமல் கேட்டாலும் கேட்பீர்கள்!

‘இருப்பவன் எதையும் எதிர்பாராமல் இல்லாதவனுக்குக் கொடுப்பது’ என்ற ஒரு தருமத்தை மட்டுமாவது நீங்கள் அன்றிருந்தே கடைப்பிடித்து வந்திருந்தால், இன்று உங்களிடையே திருடர்களும் கொலைகாரர்களும் ஏன் உருவாகியிருக்கப் போகிறார்கள்?

அல்லது, ‘இந்த உலகத்தில் காணும் எல்லாமே எல்லாருக்கும் சொந்தமானவை. இவற்றில் உனக்கு, எனக்கு என்று எதுவும் இல்லை’ என்ற வேதாந்தத்தை எங்களைப் போலவே நீங்களும் உண்மையாகவே கடைப்பிடித்து வந்திருந்தாலும் உங்களிடையே ‘இருப்பவன்’ என்றும், ‘இல்லாதவன்’ என்றும், இப்போது எவனும் இருந்திருக்க மாட்டானே!

போகட்டும்; இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?— உங்களுக்குத் ‘தன்னம்பிக்கை’ இல்லாமற் போனதுதான்.

அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் குழந்தைகளுக்காவது இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதுவும் இல்லை.

நான் தான் சில சமயம் உங்கள் வீட்டுக் கூரையின் மேல் உட்கார்ந்து கொண்டு உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறேனே!—நீங்கள் பல் தேய்ப்பதைப் பார்த்துவிட்டு உங்கள் குழந்தை தானும் பல் தேய்க்க எண்ணிப் பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் கையில் எடுத்தால் போதும், ‘வேண்டாண்டா கண்ணு உனக்குத் தேய்க்கத் தெரியாது. இப்படிக் கொண்டா, நானே தேய்த்து விடுகிறேன்!’ என்று நீங்களே அதற்குப் பல் தேய்த்து விடுகிறீர்கள். குளிக்கப் போனால் உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!’ என்று நீங்களே அதைக் குளிப்பாட்டி விடுகிறீர்கள். சாப்பிடப் போனால், ‘உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!’ என்று நீங்களே அதற்கு ஊட்டி விடுகிறீர்கள். உடை அணிந்து கொள்ளப் போனால் ‘உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!’ என்று நீங்களே அதற்கு உடை அணிவித்து விடுகிறீர்கள்.

எல்லாம் முடிந்து பள்ளிக்கூடத்துக்கு போகும் போது அப்பா! பென்சில் வாங்க வேண்டும், காசு தா? என்று கேட்டாலோ, ‘உனக்கு என்ன தெரியும், பென்சில் வாங்க? வா, நானே வாங்கித் தருகிறேன்!’ என்று அவனைக் கையோடு கடைக்கு அழைத்துப்போய்ப் பென்சில் வாங்கித் தந்துவிட்டு, ‘பார்த்துப் போ, பத்திரமா போ!, பார்த்துப் போ, பத்திரமா போ!’ என்று ஆயிரம் ‘பார்த்து’களும், ஆயிரம் ‘பத்திர’ங்களும் சொல்லி அனுப்பி விட்டு வருகிறீர்கள். முடிந்தால் பள்ளி வரை சென்று அவனை அங்கே உட்கார வைத்த பின்னரே நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்கள்.

அதாவது, எடுத்ததற்கெல்லாம் ‘உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று சொல்லிச் சொல்லியே அவனை ஒன்றும் தெரியாதவனாக வளர்த்து, எதற்கும் தன்னை நம்பி வாழாமல் பிறரை நம்பி வாழக் கூடியவனாக அவனை உருவாக்கி விட்டு விடுகிறீர்கள்!

மனிதா! என்னையும் என் குட்டியையும் சேர்ந்தாற் போல் எங்கேயாவது பார்த்திருக்கிறாயா நீ— ‘ஐயோ, குழந்தைக்கு ஒன்றும் தெரியாதே! தவறிக் கீழே விழுந்து விடுமே!’ என்று நான் அதை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன்; அதுதான் என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும். அதுவும் எப்படி? — என் முதுகைத் தன் கால்களால் சுற்றி வளைத்துப் பிடித்தபடி, அடி வயிற்றில் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். நானோ அதைக் குனிந்து கூடப் பார்க்காமல் கிளைக்கு கிளை, மரத்துக்கு மரம் இரைத் தேடித் தாவிக் கொண்டே இருப்பேன். அப்படித் தாவும்போது, ‘பத்திரம், கெட்டியாகப் பிடித்துக் கொள்.’ என்றோ, ‘விழுந்துவிடப் போகிறாய், ஜாக்கிரதை!’ என்றோ அதனிடம் சொல்லி, அதை எச்சரித்தாவது வைப்பேன் என்கிறீர்களா?—மாட்டேன். தன்னைத் தானே தான் அது காப்பாற்றிக்கொள்ள