கண்ணன் பாட்டு/21. கண்ணம்மா - என் காதலி - 6

யோகம்


பாயுமொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! நிறையமுதே! கண்ணம்மா! ... 1


வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறும் நின்றன் கண்ணினொளி வீசுதடி! மாணுடையப் பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! ... 2


வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு; பானமடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;

ஞானவொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! ... 3


வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு; பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! ... 4


வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு; பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்? ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . ... 5


காதலடி நீ யெனக்குக், காந்தமடி நானுனக்கு; வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . ... 6


நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு; செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;

எல்லையற்றப் பேரழகே! எங்கு நிறை பொற்சுடரே! முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! ... 7


தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு; வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! ... 8