கண்ணன் பாட்டு/9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

நகேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்


ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்


தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)


1.

தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

என்னப்பன் என்னையன் என்றால் - அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)


2.

தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன

செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;

மானொத்த பெண்ணடி என்பான் - சற்று

மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)


3.

அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை

அழஅழச் செய்துபின், கண்ணை மூடிக்கொள்;

குழலிலே சூட்டுவேன் - என்பான் - என்னைக்

குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)


4.

பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை

பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;

வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)


5.

புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது

பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்;

கள்ளால் மயங்குவது போலே - அதைக்

கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)


6.

அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்

ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;

எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்

எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)


7.

விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்

வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;

இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை

இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)


8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி

அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,

எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்

யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)


9.

கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை

குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;

ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்

அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத)