- காப்பு
- நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
- தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
- செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
- பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
- ஆடும் பணிவே லணிசே வலெனப்
- பாடும் பணியே பணியா யருள்வாய்
- தேடுங் கயமா முகனைச் செருவிற்
- சாடுந் தனியா னைசகோ தரனே. 1
- உல்லாச நிராகுல யோக விதச்
- சல்லாப விநோதனு நீயலையோ
- எல்லாமற என்னை யிழந்த நலஞ்
- சொல்லாய் முருகா கரபூ பதியே. 2
- வானோ புனல்பார் கனல்மா ருதமோ
- ஞானோ தயமோ நவில்நான் மறையோ
- யானோ மனமோ எனையாண் டவிடந்
- தானோ பொருளா வதுசண்முகனே. 3
- வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந்
- தளைபட் டழியத் தகுமோ தகுமோ
- கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
- தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4
- மகமாயை களைந்திட வல்ல பிரான்
- முகமாறு மொழிந்து மொழிந் திலனே
- அகமாடை மடந்தை யரென் றயருஞ்
- சகமாயையுள் நின்று தயங் குவதே. 5
- திணியா னமனோ சிலைமீ துனதாள்
- அணியா ரரவிந்த மரும்பு மதோ
- பணியா வென வள்ளி பதம் பணியுந்
- தணியா வதிமோக தயா பரனே. 6
- கெடுவாய் மனனே கதிகேள் கரவா
- திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
- சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
- விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7
- அமரும் பதிகே ளகமா மெனுமிப்
- பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
- குமரன் கிரிராச குமாரி மகன்
- சமரம் பொரு தானவ நாசகனே. 8
- மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
- பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
- தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
- திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9
- கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
- தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
- தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
- சூர்மா மடியத் தொடுவே லவனே. 10
- கூகா வெனவென் கிளைகூ டியழப்
- போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
- நாகாசல வேலவ நாலு கவித்
- தியாகா சுரலோக சிகா மணியே. 11
- செம்மான் மகளைத் திருடுந் திருடன்
- பெம்மான் முருகன் பிறவா னிறவான்
- சும்மா இருசொல் லறவென் றலுமே
- அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12
- முருகன் தனிவேல் முனிநங் குருவென்
- றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
- உருவன் றருவன் றுளதன் றிலதன்
- றிருளன் றொளியன் றெனநின் றதுவே. 13
- கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
- றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
- மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
- ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14
- முருகன் குமரன் குகனென்று மொழிந்
- துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
- பொருபுங் கவரும் புவியும் பரவுங்
- குருபுங் கவஎண் குணபஞ் சரனே. 15
- பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
- டோரா வினையே னுழலத் தகுமோ
- வீரா முதுசூர் படவே லெறியுஞ்
- சூரா சுரலோ கதுரந் தரனே. 16
- யாமோ தியகல் வியுமெம் மறிவுந்
- தாமே பெறவே லவர்தந் ததனாற்
- பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
- நாமேல் நடவீர் நடவீ ரினியே. 17
- உதியா மரியா வுணரா மறவா
- விதிமா லறியா விமலன் புதல்வா
- அதிகா வநகா வபயா வமரா
- பதிகா வலசூர பயங் கரனே. 18
- வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
- குடியுங் குலமுங் குடிபோ கியவா
- அடியந் தமிலா அயில்வே லரசே
- மிடி யென்றொரு பாவி வெளிப் படினே. 19
- அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
- உரிதா வுபதேச முணர்த் தியவா
- விரிதா ரணவிக் ரமவே ளி மையோர்
- புரிதா ரகநா கபுரந் தரனே. 20
- கருதா மறவா நெறிகா ணஎனக்
- கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
- வரதா முருகா மயில்வா கனனே
- விரதா கரசூர விபாட ணனே. 21
- காளைக் குமரே சனெனக் கருதித்
- தாளைப் பணியத் தவமெய் தியவா
- பாளைக் குழல் வள்ளி பதம்புணியும்
- வேளைச் சுரபூபதி மேருவையே. 22
- அடியைக் குறியா தறியா மையினால்
- முடியக் கெடவோ முறையோ முறையோ
- வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
- கொடியைப் புணருங் குணபூத ரனே 23
- கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
- சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ
- சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்
- போர்வேல புரந்தர பூப தியே. 24
- மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்
- தையோ அடியே னலையத் தகுமோ
- கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
- செய்யோய் மயிலே றியசே வகனே. 25
- ஆதா ரமிலே னருளைப் பெறவே
- நீதா னொருசற் றுநினைந் திலையே
- வேதா கமஞா னவிநோ தமனோ
- கீதா சுரலோ கசிகா மணியே. 26
- மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்
- என்னே விதியின் பயனிங் கிதுவோ
- பொன்னே மணியே பொருளே யருளே
- மன்னே மயிலேறிய வானவனே. 27
- ஆனா அமுதே அயில்வே லரசே
- ஞானா கரனே நவிலத் தகுமோ
- யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
- தானாய் நிலைநின் றதுதற் பரமே. 28
- இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
- பொல்லே னறியாமை பொறுத் திலையே
- மல்லே புரிபன் னிருவா குவிலென்
- சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. 29
- செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்
- றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
- அவ்வா றறிவா ரறிகின் றதலால்
- எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. 30
- பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
- வீழ்வா யென என்னை விதித்தனையே
- தாழ்வா னவைசெய் தனதா முளவோ
- வாழ்வா யினிநீ மயில்வா கனனே. 31
- கலையே பதறிக் கதறிக் தலையூ
- டலையே படுமா றதுவாய் விடவோ
- கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
- மலையே மலை கூறிடு வாகையனே. 32
- சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
- விந்தா டவியென்று விடப் பெறுவேன்
- மந்தா கினிதந்த வரோ தயனே
- கந்தா முருகா கருணா கரனே. 33
- சிங்கார மடந்தையர் தீநெறி போய்
- மங்காம லெனக்கு வரந்தருவாய்
- சங்க்ராம சிகா வலசண் முகனே
- கங்கா நதி பால க்ருபாகரனே. 34
- விதிகாணு முடம்பை விடா வினையேன்
- கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
- மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
- துதியா விரதா சுரபூ பதியே. 35
- நாதா குமரா நமவென் றரனார்
- ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
- வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
- பாதா குறமின் பதசே கரனே. 36
- கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
- பரிவா ரமெனும் பதமே வலையே
- புரிவாய் மனனே பொறையா மறிவால்
- அரிவா யடியொடு மகந் தையையே. 37
- ஆதாளியை யொன் றறியே னையறத்
- தீதாளியை யாண் டதுசெப் புமதோ
- கூதாள கிராத குலிக் கிறைவா
- வேதாள கணம் புகழ்வே லவனே. 38
- மாவேழ் சனனங் கெடமா யைவிடா
- மூவேடணை யென்று முடிந் திடுமோ
- கோவே குறமின் கொடிதோள் புணருந்
- தேவே சிவ சங்கர தேசிகனே. 39
- வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
- மனையோடு தியங்கி மயங் கிடவோ
- சுனையோ டருவித் துறையோடு பசுந்
- தினையோ டிதணோடு திரிந் தவனே. 40
- சாகா தெனையே சரணங் களிலே
- காகா நமனார் கலகஞ் செயுநாள்
- வாகா முருகா மயில்வா கனனே
- யோகா சிவஞா னொபதே சிகனே. 41
- குறியைக் குறியாது குறித்தறியும்
- நெறியைக் தனிவேல் நிகழ்த் திடலுஞ்
- செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
- றறிவற் றறியா மையு மற்றதுவே. 42
- தூசா மணியுந் துகிலும் புனைவாள்
- நேசா முருகா நினதன் பருளால்
- ஆசா நிகளந் துகளா யின்பின்
- பேசா அநுபூதி பிறந் ததுவே. 43
- சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
- சூடும் படிதந் ததுசொல் லுமதோ
- வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
- காடும் புனமுங் கமழுங் கழலே. 44
- கரவா கியகல்வி யுளார் கடைசென்
- றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
- குரவா குமரா குலிசா யுதகுஞ்
- சரவா சிவயோக தயா பரனே. 45
- எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
- சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
- கந்தா கதிர்வே லவனே யுமையாள்
- மைந்தா குமரா மறைநா யகனே. 46
- ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
- பேறா வடியேன் பெறுமா றுளதோ
- சீறா வருசூர் சிதைவித் திமையோர்
- கூறா வுலகங் குளிர்வித் தவனே. 47
- அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
- பிறிவொன் றறநின் றபிரா னலையோ
- செறிவொன் றறவந் திருளே சிதைய
- வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48
- தன்னந் தனிநின் றதுதா னறிய
- இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
- மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
- கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49
- மதிகெட்டறவா டிமயங் கியறக்
- கதிகெட்டவமே கெடவோ கடவேன்
- நதிபுத்திர ஞான சுகா திபவத்
- திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 50
- உருவா யருவா யுளதா யிலதாய்
- மருவாய் மலராய் மணியா யொளியாய்
- கருவா யுயிராய் கதியாய் விதியாய்
- குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51