கனகி புராணம்

கனகி புராணம்
எழுதியவர்: நட்டுவச் சுப்பையனார்


பிள்ளையார் காப்பு தொகு

1.

சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக்
கத்தனாம் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும்
குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப்
பித்தனாயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே

நாட்டுப் படலம் தொகு

2.

தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத்,
தளதளத் தொன்றோ டொன்றமையா(து)
அடர்த்திமையாத கறுத்த கணதனால்
அருந்தவத் தவருயிர் குடித்து,
வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து,
மதகரிக் கோட்டினுங்கதித்துப்,
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து,
பருமித்த துணைக் கன தனத்தாள்

3.

நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரி, நாட்டிற் கொங்கைக்
குடந்தா நசைய, வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம்
விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையும் கட்டிவைத்தனரே.


சுயம்வரப் படலம் தொகு

4.

ஈட்டுந் தனத்தையே விரும்பி,
யிரண்டு தனமுந் தான் கொடுத்து,
மூட்டுங் காமக் கனலெழுப்பும்,
முகில்போலளகக் கனக மின்னே!
நாட்டுப் புறத்திலிருப்போரில்,
நல்லவுடையும், பொய்ம் மொழியும்,
காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணாற் பாரும், பெண்ணாரே.


பிரதி பேதம்

ஈட்டுந் தனத்தைத் தான் விரும்பி,
இரண்டு தனமுந் தானீந்து,
மூட்டுங் காமக் கனலெழுப்பு
மொழிசே ரழகே கனக மின்னே!
நாட்டுப் புறத்தி லிருப்போரில்
நல்லுடையும், பொய் மொழியுங்
காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணாற் பாருங் கோதையரே.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

5.

காட்டுக் குயிலைக் குடியோட்டிக்,
கனத்த நாவி னெய் தடவி,
மாட்டு மினிய சொல்லுடைய
மானே, கனக மரகதமே!
ஓட்டைக் காதினுடனிருப்போன்
ஒளி சேர் புடவை விற்கின்ற,
நாட்டுக் கோட்டையார் தமக்குள்,
நல்லாண்டப்ப னல்லாளே.


பிரதி பேதம்

காட்டுக் குயிலைக் கடி தோட்டிக்
கனத்த நாவி னெய் தடவி
மாட்டு மினிய சொல்லாளே
மானே தேனே கனக மின்னே!
ஓட்டைக் காதி னுடனிருந்
தங்குவந்தே புடவை விற்கின்ற
நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள்
நல்லாண்டப்ப னிவன் காணே.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

6.

சொல்லால் மயக்கி, யாடவர் தஞ்
சூழ்ச்சி யறிந்து, காம நிலை
எல்லார் தமக்கு மூட்டுவிக்கும்
இருள் போலளகக் கனக மின்னே!
பொல்லாதவர்க்குப் பொல்லாப்புப்
பூட்டுந் திறலினுடனிருப்போர்
மல்லாகத்தில் வீரரிவர்;
மற்றோர் நவாலி யூராரே.


பிரதி பேதம்

சொல்லால் மயக்கி ஆடவர்தஞ்
சூழ்ச்சி யறிந்து காம நிலை
யில்லாதவர்க்கு மெழுப்புவிக்கு(ம்)
இருள்சே ரளகக் கனக மின்னே!
பொல்லா மனமும் அழுக்காறும்
பொய்யும் புரட்டுமே மலிந்த
மல்லாகத்து வீரரிவர்
மற்றோர் நவாலி யூராரே.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

7.

நத்தே பெற்ற முத்தனையாய்,
நவிலும் திருப்பாற் கடல் கடைந்த
மத்தேயனைய தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோடொன்றிங் கவரென்னப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன் (சண்முகங் காண்)
புறத்தோன் தம்பியுடையானே.


பிரதி பேதம்

நத்தே யின்ற முத்தனையாய்
நவிலுந் திருப் பாற் கடல் கடைந்த
மத்தே யனைய ஸ்தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோ டொன்றிங் கிவரெனப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன்
புறத்தோன் தம்பி யுடையானே.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

8.

தாமரை முகையுங், கோங்கின தரும்பும்,
தந்தியின் கொம்புடன் சிமிழுங்,
காமரு சூதின் கருவியுங், குடமும்,
காமனார் மகுடமுங் கடிந்தே,
சேமமாய் வென்று, கூவிளம் பழத்தைச்
சேர்ந்திடு தனமுடைக் கனகே!
நாம மிங்கிவர்க்குக் களஞ்சியக்
குருக்கள், நங்கை நீ காணுதியென்றாள்.


பிரதி பேதம்

தாமரை முகையுங் கோங்கின தரும்பும்
தந்தியின் கொம்புடன் சிமிளுங்
காமர் சூதாடு கருவியு மெழில் சேர்
காமனார் மகுடமுந் தடிந்தே
ஏமமாகிய கூவிளங் கனி நிகராய்
எழில் சேர் அழகே கன மின்னே
நாமமிங்கிவர்க்கே களஞ்சியக்
குருக்கள் நங்கை நீ காணுதியென்றாள்.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

9.

அரிபாற் கடலைக் கடைந்த தினத்
ததிலே யெழுந்த மலர்த்திருவும்
உருவுக் கிலை நிகரென்றுரைக்கும்
ஒளி சேரழகே, கனக மின்னே!
தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்;
பின்னோன் தம்பி இவனாமே.


பிரதி பேதம்

அரிபாற் கடலைக் கடைந்த தினத்திலே
யெழுந்த மலர்த் திருவும்
உருவுக் கிலை நிகரென்ன வுரைக்கு
மொழிசே சேரழகே கனக மின்னே!
தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்
பின்னோன் தம்பி இவனாமே
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

10.

தாலக் கனி யொன்றினுக்காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு,
வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக
விசயம் பொருதும் வள நாடன்,
மால் பற்றிய நெஞ்சினனாகி,
வந்தான், கனகே, மன்றலுக்கு,
நீலக் கருங் கார்மேக நிற
நியூற்றனிவன் காண், நேரிழையே!


பிரதி பேதம்

தாலக் கனி யொன்றினுக் காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு,
வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக
விசயம் பொருதும் வள நாடன்
மால்பற்றிய நெஞ்சினனாகி வந்தான்
கனகே நின் மன்றலுக்கு
நீலக் கருங் கார் மேக நிற
நியூற்ற னிவன் காண், நேரிழையே.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

11

ஊரார் சுணங்கு தோற்றாமல்
உயர் சாந்தணிந்து, வடம் பூட்டி,
வாரான் மறைக்குந் தனக் கனகே!
வரி வண்டூத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவை வளர்
நெய்த நிலத்தான், வங்க நிறை
ஊராத்துறைக்கு மணிய மிவன்,
உடையா ரருணாசலத்தின் மகன்.


பிரதி பேதம்

ஊராற் சுணங்கு தொடராம லுயர்
சாந்தணிந்து வடம் பூட்டி
வாரால் மறைக்குந் ஸ்தனக் கனகே!
வரிவண் குமுத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவைவளர்
நெய்த நிலத்துக் கிறையாகும்
ஊராத்துறையின் மணியம் மற்றிவன்
காணென்ற னொண்ணுதலே.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

12

தொட்டுப் பிடிக்கத் தனமேனும்
தோளே யெனினுந் தான் கொடுக்கும்
மட்டுப் புரண்ட குழலாளே!
மாரன் வில்லைக் குனிப்பவளே!
எட்டுத் திக்கு முழு தாளு
மிதயத்துடனே யிங்கிருப்போன்
வட்டுக்கோட்டை நெற் கணக்கில்
வாழுஞ் சுப்பு காணு மென்றாள்.


பிரதி பேதம்

தொட்டுப் பிடிக்கத் தனத்தோடு
தோளை யீகுந் திறமுடைய
மட்டுக் கடங்காத் திறம் படைத்த
மானே தேனே கனக மின்னே!
பட்டுப் புடவை தனிற் கொணர்ந்து
பரிவாகப் பணத்தை யீகின்ற
வட்டுக்கோட்டை நெற் கணக்கன்
வாழுஞ் சுப்பு காணு மென்றாள்.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

13

பூப் பாயலின்மே லாடவரைப்
பொலிவோ டிருத்திப் பொருள் கவரக்
காப்பாங் கச்சுதனை நீக்கும்
கனகே! நடக்கு மனப் பெடையே!
பாப்பார் மிகவுந் தனைச் சூழப்
பங்கே ருகம்போல் வைகு மிவன்
கோப்பாய் முத்துக்குமாருவென்று
சொல்லுங் குமரர் போரேறே.


பிரதி பேதம்

பூப் பாயலி லாடவரைப் பொலிவோ
டிருத்திப் பொருள் கவரக்
காப்பாய கச்சுதனை நீக்குக்
கன்றே கனக மின்னே!
பாப்பார் மிகவுந் தமைச் சூழப்
பங்கேருகம் போல் வீற்றிருக்கும்
கோப்பாய் மணிய மிவர் தம்மைக்
கண்ணாற் பாருங் கோதையரே.
(ந. சி. கந்தையாபிள்ளை பதிப்பு)

14

மறுவற் றிலங்கு மதிமுகத்தில்
வாள்சேர்ந் தனைய வுண்கண்ணாய்
நிறையச் சொருகும் பூங்குழற்கு
நிகர்வே றில்லாக் கனகமின்னே!
அறிவுக் கினியான் அவனிதனில்
யார்க்கு முதவி செயவிரும்புங்
கறுவற்றம்பி யெனும் பெயரோன்
கண்ணன் றனக்குச் சரிவந்தோன்.

15

பொன்னைப் பொருவு மருமத்திற்
புடைகொண் டெழுந்த வனமுலையாய்,
மின்னைச் சிரிக்கு நுண்ணிடையாய்,
வேய்த்தோட் கனகே யிவணிருப்போன்
தன்னைப் போல வேறொருவர்
தரணி தலத்தி லுள்ளாரோ?
வென்னப் பேசும் நன்னியிவன்
இடறுப் பூச்சு மெய்யானே.

16

மானினைக் கயலை வனத்தினிற் றுரத்தி,
மறலிக்குக் கொலைத் தொழில் காட்டிப்
பானலை யோட்டி வடுவினை வாட்டிப்
பருத்த செவ்வேலையும் பழித்துக்
கூனல்வாள் நஞ்சி னமுதினோடுறவு
கொண்டிடும் விழியுடைக் கனகே!
தேனின நீங்கா மலரணி புயத்துச்
செல்வநாயக மிவன் தேவே.

17

மானைக் கயலை வேல் வாளை
மறுநீர்க் கடலைக் குவளையை நற்
கானிற் கமலந் தனைவெல்லும்
கண்ணாய் கனகே யிவணிருப்போன்,
ஞானக் குணமும் நல்லறிவும்
நலஞ்சேர் புகழு மிகவுடையோன்,
ஆனைக்கோட்டை வேளாளன்
ஆறுமுகன்கா ணென்பாரே.

18

கொஞ்சிக் கடிக்கத் தனங் கொடுத்துக்
கொடுத்த தனத்தைத் தான் வாங்கும்,
மஞ்சட் புரண்ட முகத்தாளே!
மாரன் கரும்பை வளைப்பவளே!
கிஞ்சிற் றனமும் குத்திரமுங்
கேடு நிறைந்த மனமுடையோன்
வஞ்சக் கொடியோன் பெரியதம்பி
வரத்தால் வந்த வைத்தியனே.

19

வண்டார் மாலைக் குழலாளே!
மதிசேர்ந்தனைய முகத்தாளே!
கண்டார் வணங்குங் கண்ணாளே!
கனகென் றுரைக்குங் காரிகையே!
உண்டார் போக மிவனைப்போ
லுளரோ விந்த வூர்தனிலே,
தண்டார் புனையும் பண்டார
மென்றா ரந்தத் தாதியரே.

20

செப்பைப் பழித்துக் கலசத்தைச்
சிரித்துத் தெங்கி னிளநீரை
யொப்பப் புடைத்த தனக் கனகே!
யுன்னைப் புணரு மவாவுடையோன்
எப்போதெனினு முனதேவ
லெங்கே யென்று திரியுமிவன்
சுப்பிரமணியன் பெற்றெடுத்த
சூன னிவன்காண் சுரிகுழலே.

21

மானினைப் பழித்த கண்ணும்
வடிவினுக் குவமை யில்லாத்
தேனினு மினிய செஞ்சொற் றெரி
வையே கனகே கேண்மோ
ஊனுணும் பரிதி வேல் வாளொளி
பெற வீங்கிருப்போன்
தானை சூழுடுவில் வாழும் தன் கை
யொன்றில்லா வேந்தே.

22

கனத்துப் புடைத்துப் பருத்து விம்முங்
கதிர்ப் பூண் முலையாய், கனக மின்னே!
மனத்துக் கிசைந்த மணவாள
னிவன்றா(ன்) இந்த மகிதலத்தில்
தனத்துக் கிவனே; சரச மொழி
தனக்குமிவனே; தான் கொள்ளுஞ்
சினத்துக் கிவனே! திருமலைச்சின்
னையனிவன் காண் சேயிழையே.

வெட்டை காண் படலம் தொகு

23

வெட்டை யென்னும் வியாதி தலைப்பட்டுத்
தட்டுக் கெட்டுத் தனித்தனி யாடவர்
பொட்டுக் கட்டிய பூவையினா லென்று
முட்டுப்பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.

24

செட்டித் தேர்தெருத் தேவடியார்களுள்
மெட்டுக்காரி கனகியை மேவியோர்
தட்டுப் பட்டுத் தலைவிரிகோலமாய்
முட்டுப் பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.

25

மேகங்கள் யாவு முயர் விண்ணீங்கி வேசையர்தந்
தேகங்களில் வாசஞ் செய்கையான் - மாகமிசை
யாசைக்குங் கார்காணோ மவ்வேசையார் கொடுப்பர்
காசைக் கொடுப்பார்க்குக் காண்.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikisource.org/w/index.php?title=கனகி_புராணம்&oldid=1395997" இலிருந்து மீள்விக்கப்பட்டது