5  பாட்டும் மொழியும்!


பாட்டெனப் படுவது பண்ணும் கருத்தும்
கூட்டி மகிழ்தலும் கொடுந்துயர் நீக்கலும்
உள்ளத் தாழ்ந்த உள்ளுணர் வெழுந்து
வெள்ளத் தோசையில் விளைக்கும் சொற்குழு!
ஆற்றிய நிகழ்ச்சியை முற்றும் மறந்துளம்
சுற்றிய தொன்றின் பான்மையைச் சொற்களால்
அழகுறக் காட்டி அணைக்கும் மகிழ்வைப்
பழகுநற் கூட்டும் பான்மை யுடையது!
எண்ணமே மலர்ந்தோ ரிசைபட வருதலாற்
என்ன மொழியிலும் எழுந்துயிர் பெறுவது!


கிளர்த்தெழு ணர்வைக் கிளத்துதல் மொழியின்
வளத்தைப் பொறுத்தது? வைய மொழிகளுள்
படலி லாமொழி பயனில தெனலாம்!
தேடருஞ் சொற்கள் திகழ்திரு மொழியே
பீடுறு மொழியாம்! பாட்டெனும் இசைப்பெண்
ஆடுநல் அரங்கமம் மொழியே எனலாம்!
இசையினுக் கேற்ற மெல்லொலிச் சொற்கள்!
வசையினுக் கேற்றவை வல்லொலிச் சொற்கள்!


இன்னவை இரண்டும் இனியநம் தமிழில்
கன்னலில் இன்சுவை கலந்தது போலக்
கலந்துள தறிவோம்! காணும் மொழிகளுள்
இலவா மிவ்வகை! எடுத்துக் காட்டுவோம்!
கரடும் முருடும் கடிபொருட் சொற்கள்!
பறித்தலும் முறித்தலும் பாடுடை வன்செயல்!
‘பேசுதல்’ என்பது மெதுவாய்க் கடிதலும்!
ஏசுதல் என்பது வலிவாய் இரைதலாம்!
திட்டுதல் என்பது தீமொழி கூறலாம்!
முன்னிரு சொற்களில் மொய்க்கும் எளிமையும்
வாய்விட் லொலிக்கின் வல்லோர் உணர்வர்!
புல்லைப் ‘பறித்தனன்’ என்பதும், மென்மைப்
‘பூவைக் கொய்தனன்’ என்பதும் காண்மின்!
வேற்று மொழிகளில் வினைச்சொல் பெயர்ச்சொலை
ஏற்று வருவதை எங்கும் கண்டிலம்!

‘யாய்’ எனக் கூறுதல் ‘என்தாய்’ எனப்படும்!
‘ஞாய்’ என மொழிதலோ ‘நும்தாய்’ என்றலை!
அவன் தாய் என்றலைத் தாயென மொழிகுவர்!
எவர் மொழி தமிழ்விட் டியம்புமிவ் வாறு!
ஏவலி னொரு சொல் லோ‘டல்’ விகுதி
தாவல் செய்யின் வினைச்சொல் தோன்றும்!
ஒவ்வொரு செயற்கும் ஒவ்வொரு புதுச்சொல்
பயிறல் என்பது பண்தமிழ்க் கண்ணிலை!

பாடு எனப் படுமோர் ஏவலோடு 'அல்' வரின்
‘பாடுதல்' எனுமோர் வினைவரும்! இதுபோல்
கூடுதல் தேடுதல் குனிதல் குரைத்தல்,
ஓடுதல் உண்ணல், உடுத்தல் உலவுதல்,
எனவரும்! இத்தகு முறைஆங் கிலத்தில்
உண்டென் றியம்பினும் உறுந்தொடர் வினைக்கும்
ஒன்றென நிற்கும், மயக்கொன் றுண்டு
இத்துணைச் சொற்சிறப் பேற்றநந் தமிழில்
இசைபொருட் கேற்ற வகைசில காண்போம்!
எத்துணைச் சிறப்பொடு, எழுந்தது இலக்கியம்!
மேனாட் டார்கள் மிகுதியும் கருத்தையே
வீணாய்ப் புகுத்தினர்! வேட்டல் கொடுத்திடும்
சொற்களின் அழகிலாச் சொற்றொடர் மனத்தில்
நிற்கு மென்பது நிலையிலாக் கொள்கை!
பெருங்கருத் தெனினும் பாடலோ டியன்ற
அருந்திறன் பெற்றகத் தமைந்திடும் விரைவில்!
இதனை எண்ணியே இலக்கணம் என்னும்
பொதுவரம் பதனைப் பாடலிற் புகுத்தி
எளிதினில் யாவரும் உள்ளத் திறுத்திட
தொல்காப் பியனெனுந் தொன்முது புலவனும்,
பவணந்தி என்றொரு நன்னூல் முனிவனும்,
மொழியினுக் கடித்தள வன்மைசெய் வார்போல்
அழியா இலக்கணம் அன்றே செய்தனர்
இலக்கணம் என்னும் ஈடிலாச் செல்வமும்
இலக்கிய வழக்கொடு இருப்பது தமிழ்போன்
றெம்மொழி தனிலும் இலை யென் றெண்ணி
இம்முறை யொன்றே ஈடிலாப் பெருவாய்!

-1955(?)
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/008-089&oldid=1514323" இலிருந்து மீள்விக்கப்பட்டது