களையும் பயிர்தான்! காக்கையும் கிளிதான்!
தத்துப் பித்தென் எழுதித் தள்ளலாம்! 30
எத்திப் பிழைத்திட எவரும் முன் வரலாம்!

குடியன் உளறலும் கோணையன் மொழிவதும்
தடியர் பிதற்றலும் தவளைக் கூச்சலும்
அழகு மங்கை ஆடை களைவதும்
பழகு தமிழில் பக்கம் பக்கமாய் 35
எழுதித் தள்ளலாம்? இழிவென்ன இழிவு?
புழுதிக் கருத்துகள் பொல பொல வென்று
நந்தமி ழகத்தின் எழுதுவார் நாவில்
வந்து மொழிவதும் இலக்கிய வளர்ச்சியே!

'பிடித்த'தைப் 'பிடிச்ச'தென் றெழுதலாம் இனிமேல்! 40
‘பெற்ற தைப் 'பெத்த' தென் றெழுதலாம் இனிமேல்!
‘போன'தைப் ‘போச்'செனப் புகலலாம் இனியே!
‘வேண்டு' மென்பதை ‘வேணு மென் றெழுதலாம்!

மொத்தமாய்க் கூட்டிக் கழித்து மொழிந்தால்
முத்துச் சண்முகம் கருத்துப் படியினி 45
அத்திம்பேர் அம்மாமித் தமிழே இலக்கியம்!
முத்தமிழ் வளர்ச்சியைப் பாருங்கள் தமிழரே!

முத்துச் சண்முகம் மூதறி வாளன்(!)
திக்குவாய்த் தமிழன் தெ. பொ. மீ.யின்
தக்கநல் லடியான்; அவன் தாள் பிடிப்பவன்! 50
படித்தவன்; படித்துப் பட்டம் பெற்றவன்;
நடிப்பவன் தமிழ் நலம் நாடுவான் போல;
மொழிநலம் பேணும் மொழியா சிரியன்!
இழிவு அவனுக்கா, தமிழர்க்கே என்க!

மெய்யாய்ச் சொல்லுவேன் முத்துச் சண்முகம் 55
வையா புரியின் வகையிலோர் புது ஆள்!
கழிசடை நாயும் கண்டதை உணாதே!
இழிவுற அவனோ எதையும் உண்பவன்!
இத்தகை யான இழிந்த பிறவிகள்
முத்தமிழ் நலத்தை முழுவதும் அழிக்கப் 60

புறப்பட் டனர்காண்! தமிழனே! பாரடா!
இறப்பத் தூங்கினை! எழடா இனிமேல்!

யாழிசைப் போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!
பாழாய் இசைப்போன் பழிக்கப் படுவான்;
நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்! 65
பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!

ஆனால்,

முத்துச் சண்முகம் எனும் முழு மகனின்
முத்துக் கருத்து யாதெனில், தாளெடுத்
தெழுதுவ தெல்லாம் இலக்கியம்! அதனை 70
எழுதுவோர் யாவரும் இலக்கியப் புலவரே!
கல்லார் உளறும் மொழியே உயிர்மொழி!
எல்லா ரும் அதை எழுதிடல் சாலும்!
மொழிக்கெனப் பயிற்சி தேவையே இல்லையாம்!
மொழியா சிரியனின் முழுமைக் கருத்திது! 75
மொழிக்கெனப் பயிற்சி தேவையே இன்றால்
மொழியா சிரியனுக் கிங்கென்ன வேலை?

பாண்டியன் பேணிய பண்பார் தமிழைத்
தோண்டிப் புதைத்திட இவனுந் தோன்றினான்!
முப்பழங் கழகத்து முகிழ்த்த தமிழைத் 80
தப்புந் தவறுமாய்த் தாழ்த்துகின் றானே!
ஏடா, தமிழனே! எடுத்தெறி எழுதுகோல்!
நீடார் பழம்புகழ் நினை! வாள் தூக்கு!

அன்றிலும் மானும் அலைந்த சோலையுள்
பன்றியும் கழுதையும் தமிழைக் கலக்குவ! 85
மொழியென் பெயரால் முள்ளங்கிப் பற்றைபோல்
கொழிக்கின் றனரே கொள்ளை ஊதியம்!
அத்தனைப் பணமும் தமிழர் அளித்ததே!
இத்தனை நாட்களும் தமிழரை ஏய்த்தனர்!

அணிதமிழ் கற்க அண்ணா மலைவரும் 90
மணியெனும் அமெரிக்க மாணவ ரிடத்துத்

தமிழ்மொழி ஈதெனத் தகவிலா மொழியை
உமிழ்ந்து கொள்ளை ஊதியம் பெறுவான்!

ஒன்றை 'ஒன்னாய்' இரண்டை ‘ரெண்டா'ய்
மூன்றை ‘மூனா'ய் அவரிடை மொழிவான்! 95
பேச்சுத் தமிழெனக் கல்லார் பிதற்றலைக்
காச்சு மூச்செனக் கற்பிக் கின்றான்!
அரைவேக் காட்டின் ஆசிரி யன்மார்
விரைவாய்க் கற்றுக் கொடுத்திடும் இழிவை
நேரிலே காணில் நெஞ்சு கொதித்திடும்! 100
அரசினர் கேளார்! அண்ணா மலையின்
கரிசனக் காரர் கவனியார் இதனை!
தெ. பொ. மீ.யின் தலைமையில் தமிழ்மொழி
காப்பா ரின்றிக் குலைந்தது நாளும்!

பன்மொழிக் குரிசில் பாவா ணர்தம் 105
வன்மொழி யறிவு வாடிக் குலைந்திட
ஒலிமுறை சொன்முறை மொழிவர லாறு
துளியும் அறிகிலாப் பேதையர் யாவரும்
அண்ணா மலையுள் அமர்ந்து கொண்டே
உண்ணா உணவுக்குத் தமிழ்உலை வைப்பார்! 110

விழியிலார் விழிமருத் துவம்பார்ப் பதுபோல்
மொழியறி யாதார் மொழித்துறைத் தலைவராய்
இற்றை அமர்ந்தனர்; இழிவடா இழிவு!
அற்றை நாளினும் தமிழ்மொழி இக்கால்
பல்லாற் றானும் பரவிய தென்று 115
புல்லிய வாயால் புகல்கின் றானே!
ஐயகோ தமிழே! நினக்கிவ் விழிவோ!
உய்யுமோ தமிழும்? தமிழனும் உய்வனோ?
சிரைத்திடு வானிடம் தமிழைத் தந்தால்
நரைத்தது தமிழெனத் தமிழினைச் சிரைப்பான் 120

ஆளத் தெரியா அமைச்சர்; அவரடி
மீளத் தெரியா மேலதி காரி!
அரைப்புதுக் காசும் அவர்தரும் பணத்தில்
குறைந்திட விரும்பாக் கல்வித் தலைமையர்! 124

சொல்விற் றுண்ணும் சோம்பலா சிரியர்! 125
அவர்வயின் கற்கும் அரைகுறைப் படிப்பும்!
உவர்நிலத் தூற்றாய் என்றும் உவர்ப்பதே!
இத்தகைப் படிப்பிற் கிடிபிடி என்னும்
குத்தகை மாணவக் கொள்கையில் கூட்டமே
பல்கலைக் கழகத்துப் பார்க்கும் ஓவியம் 130
தமிழனை வடவன் தாழ்த்தினான் அல்லன்!
தமிழனைத் தாழ்த்துவோன் தமிழனே!
இமையும் மூடாது எழுக இளைஞரே!

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/029-089&oldid=1514516" இலிருந்து மீள்விக்கப்பட்டது