கனியமுது/பேரறிஞர் அண்ணா
ஊருக்கு வந்தபோது, நான் வழக்கம்போல் காணச் சென்றிருந்தேன். உடனே என்னிடம் அந்தத் தாள்களைத்தந்து, என்னைத் தம் அருகே அமரச்செய்து அந்தக்கதை முழுவதையும் சொல்லி, “இதை வைத்துக் கொண்டு, நீ உன்னுடைய செய்யுள் நடையில் எழுதிக் கொண்டுவா. ‘காஞ்சி’ மலரில் வெளியிடலாம்” என்றார்கள். அவ்வாறே நான் எழுதிக் ‘காஞ்சி’ மலரில் வெளிவந்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஓவியத்தையும், அதை வைத்து நான் எழுதியவற்றையும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளேன்; ஒப்பிட்டு நோக்கிட அல்ல ! நம்மையெல்லாம் கண்ணீர்க்கடலில் தள்ளிவிட்டுத் தாம் மட்டும் கரையில் அமர்ந்து கொண்ட அண்ணனை நினைவு கூர !