கலித்தொகை/1.பாலைக்கலி/02-10

முதலாவது : பாலைக்கலி தொகு

ஆசிரியர்: பெருங்கடுங்கோன் தொகு

பாடல்:02 (தொடங்கற்கண்) தொகு

தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின் // 05 //
சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை -
மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐய! // 10 //
தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ -
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை;
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக் // 15 //
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ -
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை;
இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக்
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ -// 20//
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை;
என இவள்,
புன்கண் கொண்டு இனையவும், பொருள் வயின் அகறல்
அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்றுக் //25 //
காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின்
தொல்கவின் தொலைதல் அஞ்சி, என்
சொல்வரைத் தங்கினர், காதலோரே.

கூற்று விளக்கம்

இல்வாழ்க்கையை நெறி முறைப்படி நடத்துதற்கு வேண்டிய பொருளை ஈட்டுவதற்குத் தலைவன் பிரியக்கருதிப் பொருள்வயிற் பிரிவேன் என்றான்; தோழி, தலைவியது இயல்புகளை எடுத்துரைத்து ‘இப்பெற்றியாளைப் பிரியாமையே பொருள்’ என்று எடுத்துச் சொல்லி, பொருள் வயிற்பிரியா வண்ணம் அவனைத் தடுத்தனள்; இதனைத் தலைமகட்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

விளக்கம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகை, இல்வாழ்க்கையின் அடிப்படை இரந்தோர்க்குக் கொடுத்தல், கொடாதிருத்தல் இழிவு என்னும் உயரிய கோட்பாட்டினை இப்பாடல் உணர்த்துகின்றது. மலைகடந்து, காடு கடந்து சென்று ஈட்டும் பொருளினும் மனைவியைப் பிரியாது இருத்தலே சிறந்த பொருள் என்பதை வலியுறுத்துகின்றது. தோட்டிக்கு அடங்காத யானை, யாழ் இசை கேட்டு அடங்கியது, தலைவன் தோழியின் சொற்கேட்டு செலவு நீங்கித் தங்கியதற்கு உவமையாகக் காட்டப் பெற்றுள்ளது.

பாடல்: 03 (அறனின்றி) தொகு

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் -
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்கப்,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள் இனி; // 05 //

Purul

'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல
இடை கொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய், ஆயினை;
கடைஇய ஆற்று இடை, நீர் நீத்த வறும் சுனை,
அடையொடு வாடிய அணி மலர் - தகைப்பன.
'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என, // 10 //
ஒல்லாங்கு யாம் இரப்பவும், உணர்ந்து ஈயாய் ஆயினை;
செல்லு நீள் ஆற்று இடைச், சேர்ந்து எழுந்த மரம் வாடப்,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங் கொடி - தகைப்பன.
'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப்
பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய் ஆயினை; // 15 //
துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை, அம்மரத்து
அணி செல, வாடிய அம் தளிர் - தகைப்பன.
என ஆங்கு,
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை;
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி, // 20 //
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம் - தகைப்ப செலவு.

பாடல்: 04 (வலிமுன்பின்) தொகு

வலி முன்பின், வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் -
சுற்றுஅமை வில்லர், சுரி வளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர் ஆயினும், வம்பலர்,
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின்,
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,
உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி;
'காழ் விரி கவை ஆரம் மீவரும் இளமுலை
போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என்
தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர்
சூழ்வதை எவன் கொல்? அறியேன்!' என்னும்;
'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ் செயும் என உரைத்தும் அமையார், என்
ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர்
உள்ளுவது எவன் கொல்? அறியேன்!' என்னும்;
'நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார், என்
ஒண் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர்
எண்ணுவது எவன் கொல்? அறியேன்!' என்னும்;
என ஆங்கு,
'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து!' என, என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒருநாள், நீர்,
பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?
ஒழிக இனிப் பெரும! நின் பொருள் பிணிச் செலவே.

பாடல்: 05 (பாஅலம்செவி) தொகு

பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம்,
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்,// 05 //
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்,
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்?
நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே;
கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், // 10
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ?
ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு, அமைவாளோ?
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? // 15 //
என ஆங்கு,
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,
எந்நாளோ, நெடுந்தகாய்! நீ செல்வது,
அந்நாள் கொண்டு இறக்கும், இவள் அரும்பெறல் உயிரே.

பாடல்: 06 (மரையாமரல்) தொகு

மரையா மரல் கவர, மாரி வறப்ப -
வரை ஓங்கு அரும் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத் -
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அரும் துயரம் // 05 //
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்,
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும்,
அன்பு அறச் சூழாதே, ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின், அது அல்லது // 10 //
இன்பமும் உண்டோ, எமக்கு?

பாடல்: 07 (வேனில்உழந்த) தொகு

வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று
உசாவுகோ - ஐய! சிறிது;
நீயே, செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து, யாழ நின் // 05 //
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே;
இவட்கே, செய்வுறு மண்டிலம் மையாப்பது போல்,
மை இல் வாள் முகம் பசப்பு ஊருமே;
நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டிப்
புனை மாண் மரீஇய அம்பு தெரிதீயே; // 10 //
இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,
இனை நோக்கு உண் கண் நீர் நில்லாவே;
நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின் செலீஇய
வலம் படு திகிரி வாய் நீவுதியே;
இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் // 15 //
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே;
என நின்,
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,
தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ - // 20 //
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

பாடல்: 08 (நடுவிகந்து) தொகு

நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக்,
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினம் தெறுதலின்,
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய, எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்ற, நிலம் சேர, // 05 //
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்,
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு, ஒரு பொருள்
சொல்லுவது உடையேன், கேள்மின், மற்று ஐஇய!
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்
ஏழும், தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் // 10 //
யாழினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது,
பிரியும்கால் பிறர் எள்ளப், பீடு இன்றி புறம் மாறும்
திருவினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை // 15 //
வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும்
அரைசினும், நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
என ஆங்கு,
நச்சல் கூடாது பெரும இச்செலவு
ஒழிதல் வேண்டுவல், சூழின் பழி இன்று; // 20 //
மன்னவன் புறந்தர, வரு விருந்து ஓம்பித்,
தன் நகர் விழையக் கூடின்,
இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே.

பாடல்: 09 (எறித்தருகதிர்) தொகு

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக், கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரை காணிரோ?- பெரும!
காணேம் அல்லேம், கண்டனம், கடத்து இடை;
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழும்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
என ஆங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

பாடல்: 10 (வறியவன்) தொகு

வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்ச்,
சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி,
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,
வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின்
அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெ·கிக், // 05 //
கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல்
உலகு போல், உலறிய உயர் மர வெஞ்சுரம் -
இடை கொண்டு பொருள் வயின் இறத்தி நீ எனக் கேட்பின்,
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள் மன்னோ!
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ // 10 //
புடை பெயர்வாய் ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்?
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின்,
பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள் மன்னோ!
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆகத்
துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்? // 15 //
பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின்,
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள் மன்னோ!
இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்?
என ஆங்கு, // 20 //
'வினை வெ·கி நீ செலின், விடும் இவள் உயிர்' எனப்
புனை இழாய்! நின் நிலை யான் கூறப், பையென,
நிலவு வேல் நெடுந்தகை, நீள் இடைச்
செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே!
கலித்தொகை
[[]] :[[]] :[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=கலித்தொகை/1.பாலைக்கலி/02-10&oldid=1466192" இலிருந்து மீள்விக்கப்பட்டது