கலைக்களஞ்சியம்/அப்போஸ்தலர் நடபடிகள்

அப்போஸ்தலர் நடபடிகள் கிறிஸ்தவ வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள ஐந்தாவது நூல்; இருபத்தெட்டு அதிகாரங்கள் கொண்டது. இயேசுவின் வாழ்க்கை வரலாறுகளாகிய சுவிசேஷங்களில் ஒன்றை இயற்றிய லூக்கா என்பவரே இதையும் எழுதினவர் என்று கருதுகிறார்கள். கிறிஸ்தவ சமயம் அதன் தொடக்கக் காலத்திலே, இயேசுவிற்குப்பின் எவ்வாறு வளர்ந்தது என்னும் வரலாற்றைச் சொல்லுகிறது. இதன் முற்பகுதியில் எருசலேமிலும், யூதேயாவிலும் திருச்சபை வளர்ந்ததையும் பேதுரு அப்போஸ்தலரையும் பற்றித் தெரிவிக்கிறது. பிற்பகுதி பவுல் அப்போஸ்தலரையும் அவர் ஆசியாமைனர், கிரீசு, ரோம் முதலிய இடங்களில் இந்தச் சமயத்தைப் பரப்பிய வரலாற்றையும் சொல்லுகிறது.