கலைக்களஞ்சியம்/அறுகம்புல்

அறுகம்புல் (அறுகு) விளைநிலங்களிலும் வெற்று நிலங்களிலும் பூமிக்கு மேலும் பூமியினுள்ளும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் தன்மையுடையது. இது இந்திய நாட்டுப் புல்வகைகளுள் மிக நல்ல ஓரினம் ; புல்தரை அமைக்கச் சிறந்தது; தரையை நீர் அரித்துச் செல்லாமல் மண்ணை நிலையாக நிறுத்துவதற்கு மிகவும் ஏற்றது. இது நிரம்பக் கிளைத்து அடர்த்தியாக நெருங்கி வளரும். மாடும் குதிரையும் இந்தப் புல்லை விரும்பித் தின்னும். பயிர் செய்யும் இடங்களில் மட்டும் இது களையாக மிகவும் இடர் செய்யும். இதை விளைநிலத்திலிருந்து அகற்றப் பெருமுயற்சி வேண்டும். குடும்பம் : கிராமினீ (Gramineaé); இனம்: சைனொடான் டாக்ட்டிலான் (Cynodon dactylon).