கலைக்களஞ்சியம்/அலகாபாத் பல்கலைக் கழகம்

அலகாபாத் பல்கலைக் கழகம் 1884-ல் நிறுவப் பெற்றது. 1914 வரை சட்டங் கற்பிக்க மட்டும் ஆசிரியர்கள் இருந்தனர். ஏனைய பாடங்களில் தேர்வு மட்டுமே நடத்தினர். 1914-ல் ஆராய்ச்சி ஆசிரியர்கள் நியமிக்கப் பெற்றனர். 1922 முதல் கல்வி கற்பிக்கும் பல்கலைக் கழகமாக ஆக்கப்பெற்றுளது. ஆசிரியர்களும் மாணவர்களும் பல்கலைக் கழகக் கட்டடங்களிலேயே வசிக்கின்றனர். இங்குப் பெண்கள் படிக்கவும் வசதியுண்டு. பல்கலைக் கழகக் கல்லூரிகளைத் தவிரப் பத்து மைல் சுற்றுக்குள் உள்ள மூன்று துணைக் கல்லூரிகள் 1927 வரையில் பல்கலைக் கழக மேற்பார்வையில் நடந்து வந்தன. 1927-ல் ஆக்ரா பல்கலைக் கழகம் நிறுவப்பெற்றபோது அந்தக் கல்லூரிகள் அதன் பார்வைக்குட்பட்டன.