கலைக்களஞ்சியம்/ஆதாம் வாராவதி

ஆதாம் வாராவதி இராமேசுவரம்முதல் மன்னார் தீவு வரை 30 மைல் தூரம் நீண்டு கிடக்கும் பாறையும் மணலும் சேர்ந்த திட்டாகும். இதுவே வானரர்கள் கட்டிய சேது என்பர். கடல் பெருகும் வேளைகளில் சில இடங்களில் மூன்று நான்கு அடி நீர் நிற்கும். ஆதியில் பூசந்தியாக இருந்ததாகப் புவியியலார் கூறுவர். உடைப்பு உண்டானது 1480-ல் என்று கோவில் சாசனங்களிலிருந்து தெரிகிறது. இவ் வாராவதியின் பண்டைய பெயர் 'ஆதி சேது' என்பதாம்.