கலைக்களஞ்சியம்/இந்திய முதிர்ந்தோர் கல்விச் சங்கம்

இந்திய முதிர்ந்தோர் கல்விச் சங்கம் (Indian Adult Education Association) 1937-ல் இந்திய முதிர்ந்தோர் கல்விச் சபை என்ற பெயருடன் டெல்லியில் நிறுவப்பெற்று, 1939-ல் இப்போதுள்ள பெயருடன் பதிவு செய்யப்பட்டது. இதன் நோக்கங்கள் எல்லாவிதமான அறிவையும் எளிதில் விளங்கும் முறையில் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்வது, இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை மாநாடு கூட்டுவது போன்றவையாம். அகில இந்திய ரேடியோ நிலையத்துடனும், இந்துஸ்தானி தாலீமி சங்கத்துடனும், யூனெஸ்கோவுடனும் தொடர்புடையது. அரசாங்கத்தின் ஆதரவு பெற்றுள்ளது. எல்லா இராச்சியங்களிலுமுள்ள முதிர்ந்தோர் கல்வி ஊழியர்க்குப் பயிற்சி முகாம்கள் நடத்துகின்றது. 'இந்திய முதிர்ந்தோர் கல்வி இதழ்' என்பதைக் காலாண்டு இதழாக நடத்தி வருகிறது. இது திங்கள்தோறும் வெளியிடும் 'முதிர்ந்தோர் கல்விச் செய்தித்தாள்' பல இடங்களிலும் நடைபெறும் முதிர்ந்தோர் கல்வி நிகழ்ச்சிகளைப்பற்றிய அறிவைப் பரப்புகிறது. சென்ற 15 ஆண்டுகளில் எட்டு மாநாடுகள் நடத்தியிருக்கிறது. 1950லும் 1951லும் சர்ச்சைச் சபைகள் நடத்திற்று. இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியிலுள்ளது.