கலைக்களஞ்சியம்/இந்திய வரலாற்றுக் காங்கிரசு

இந்திய வரலாற்றுக் காங்கிரசு தற்கால இந்திய வரலாற்றை ஆராய்வதற்காக 1938-ல் நிறுவப்பெற்றது. தொடக்கக் காலமுதல் இக் காலம் வரையுள்ள இந்திய வரலாற்றை ஆராய்வதென்று பின்னர் முடிவு செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை எந்தப் பல்கலைக் கழகம் அழைக்கின்றதோ அங்குக் கூடும். அப்போது வரலாற்றுப் புலவர்கள் இந்திய வரலாற்றுப் பகுதிகளைப் பற்றிய பிரச்சினைகளை விவாதிப்பர். கூட்டத்தின் நடவடிக்கைகள் அச்சிட்டு வெளியிடப்படும். இந்திய வரலாற்றை விரிவாக எழுதி 13 தொகுதிகளாக வெளியீடும் பணியைச் செய்து வருகிறது. இக்காங்கிரசின் தலைமை அலுவலகம் ஆண்டுதோறும் மாறும். ஆண்டுச் சந்தா பத்து ரூபாய் தருவோர் உறுப்பினராகலாம். இந்திய வரலாற்று அறிஞர்களுள் பெரும்பாலோர் உறுப்பினராயுள்ளனர்.