கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்/குறிஞ்சி மலர்


2. குறிஞ்சி மலர்
—நா. பார்த்தசாரதி—

தத்துவங்களிலே வாழும் பிறவி அரவிந்தன்; அச்சுக்கூடப் பொறுப்பாளன்; பதிப்பக அலுவலாளன்; ஆலவாய்த் திருநகரிலே, தமிழ்ப் பேராசிரியர் திருச்சிற்றம்பலத்தின் மகள் பூரணியின் கனவுக்குக் கருவாகிறான் அவன்.

ஒரு நாள் வெயிலின் வெம்மையிலே மயங்கி பசியின் வேகத்திலே துவண்டு மதுரை முச்சந்தியிலே விழுந்தாள் பூரணி! பிறந்தது கவிதை அரவிந்தனின் நெஞ்சினிலே. அந்தக் கவிதைகள் நிரம்பிய குறிப்பேடு ஒன்று அரவிந்தனுக்கு உயிர் தருகிறது. ஒட்டும் இரண்டுள்ளத்தின் மற்றோர் உயிரோ! தந்தையின் மறைவும் வறுமையின் பிடியும் புடம்போட வேலை தேடி அலைகிறாள் பூரணி. மாதர் சங்கத்து வேலை கிடைக்கிறது. மங்களத்தம்மாள் என்ற பணக்காரியின் உதவியிலே தந்தை தமிழ்ப் பேராசிரியரின் நூலை வெளியிடப் பதிப்பகம் காணும் முயற்சியிலே வலிய வருகிறான் அரவிந்தன். 

பிணக்கு ஏற்படுகிறது. நூல் வெளியிடும் உரிமை தரத் தயங்குகிறாள் பூரணி. கோபம் வருகிறது அரவிந்தனுக்கு. ‘நீங்கள் வெயிலின் வெம்மையால் கீழே விழுந்தால் அதற்காக ஊரெல்லாம் பிணை என்று எண்ணிச் சீற வேண்டியதில்லே’ என்று கூறிப் புறப்பட்டு விடுகிறான். அவன் போய்விட்ட இடத்தில், அரவிந்தன் மறந்து விட்டுச்சென்ற அவனுடைய குறிப்பேடு கிடக்கிறது. அக் குறிப்பேடு அவளைப் போலவே மற்றொருவன் இவ்வுலகில் இருக்கிறான் என்பதைக் காட்டிவிட்டது. இரு மனங்களும் ஒரு மனம் ஆவதற்கு இயற்கை பின்னணி ஒவியம் தீட்டுகிறது.

நாடும் ஏடும் போற்றும் பேச்சாளராகி விடுகிறாள் பூரணி. இலங்கை முதலான வெளிநாடுகளுக்கும் அழைப்பு வருகிறது பூரணிக்கு. அரவிந்தன் செயலில் ஈடுபடுகிறான்; சமூகச் சீர்திருத்தங்கள் செய்கிறான்.

“பூரணி! நீ மலைமேலே ஏறிக்கொண்டே போகிறாய்; நான் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறேன். ஆனாலும் உன்னை எட்டிப் பிடிக்காமல் பின்தங்கியே நிற்கிறேன்!” என்று சொல்லித் தன் குறைவு மனப்பான்மையைக் காட்டிக்கொள்ளுகிற அளவுக்கு இருக்கிறான் அரவிந்தன்.

திருமணம் உறுதிப்படுத்துகிறார்கள் - பூரணிக்கும் அரவிந்தனுக்கும். வெட்கத்தோடு உடன்படுகிறாள் பூரணி ஆனால், பாவம், அரவிந்தன் தன் கொள்கைகளையும் தத்துவங்களையும் எண்ணித் தன்னை மென்மையாக்கிக் கொண்டு “திருமணத்துக்கு இப்போதென்ன அவசரம்?” என்கிறான். எல்லோரும் போய் விடுகிறார்கள்.

சாதனைகளில் இறங்குகிறான் அரவிந்தன். சூழ்நிலை. ஒப்பவில்லை. ஆயினும் தொடர்ந்து சேரித் தொண்டு, சீர்திருத்தம் என்று ஓயாது அலைந்துகொண்டிருக்கிறான்.

கடும் காய்ச்சல்;சாவின் வாசலிலே நிற்கிறான் அரவிந்தன். சொற்பொழிவிற்குச் சென்றிருந்த பூரணியோ மற்றவரோ அறிய முடியாத திருப்பத்தில் - சாவின் திருப்பத்தில் நுழையப் பார்க்கிறான்; நுழைந்துவிடுகிறான்.

பூரணி, திலகவதி...!


மூன்று பொருள்கள்

இலட்சியங்கள், இலட்சியங்கள் என்று வாய்ப்புக்கிட்டும் பொழுதெல்லாம் நாம் மறக்காமல்-மறைக்காமல் முழங்கி வருகிறோம் அல்லவா?-அந்த இலட்சியங்கள் என்றால் என்ன அர்த்தம்...? அவை எங்கிருந்தாவது இறக்குமதியான அயல்நாட்டுச் சரக்கா? ஞானத்தை எல்லைக்கோடாகக் கொண்டவர்களும் சரி, ஞானத்தின் எல்லையினை அடைந்தவர்களும் சரி, இவர்கள் அனைவரையும் புள்ளி போட்டுப் பார்த்தால், மனிதப்பிறவி கொண்டவர்கள் எல்லோருமே இலட்சியமுழக்கம் செய்கிறார்களே?-அப்படியென்றால், இப்படிப்பட்ட லட்சிய பஜனை செய்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா?-இல்லை, மனிதர்களுள் மனிதர்களா?

ஒர் உண்மையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இவ் வுலகின் கண் யாருடைய கண்ணேறுக்கும் கண் சாயாமல், மிகவும் எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருள்களிலே தலையிடம் பெறுபவை மூன்று: ஒன்று: கேள்வி; இரண்டு: குறை சொல்லல்; மூன்று: உபதேசம்.

கேள்வி என்றால், அதன் குறிக்கோள், விடையை எதிர்பார்க்கும். ஆனால் நம் அருந்தமிழ் நாட்டிலே கேள்வி என்றால், விடை என்ற ஒன்று இருப்பதாகவோ, அல்லது இருக்கவேண்டுமென்று கருதவோ, அல்லது கருதத் துணிவுகொள்ளவோ மறுக்கிறார்கள்; அன்றி, மறந்துவிடுகிறார்கள். இந்த மகானுபாவர்கள், தாம் வாணவெளிப் பயணம் அனுப்பிய கேள்விக் கணைகளின் விண் எட்டும் பெருமையில் மட்டுமே நின்று நிலவிப் புகழ் பூத்து, புன்னகை பூத்துத் திரிய விழைகிறார்கள். இவர்களுடைய இலட்சியம், தாம் அனுப்பும் வினாக்களுக்குத் தம்மிடமிருந்து விடையை எதிர்பார்ப்பதோ, விரும்புவதோ, விரும்பத்தக்கதல்ல என்பதாகும். இந்த அப்பாவி மனிதர்களின் மனப் பலவீனங்களின் குறை என்ன தெரியுமா?-இவர்கள் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு, தங்களைப் ‘பெரிய மனிதர்’களாக ‘வேஷம்’ போட்டுக் காண்பிக்கும் இலட்சியமற்ற, இலட்சியப் பிண்டங்கள்! இவர்கள் கோலம் இட்டுக்காட்டும் கேள்விகளின் சுற்றுவடிவத்தில் ஐயம் எங்கேனும்-எப்படியேனும் பிசிறுதட்டிக் காணப்பட்டால், விளைந்தது வினை!-பயப்பட்டு விடாதீர்கள்; காலவினை ஏதும் கிடையாது!-இந்த இலட்சிய தாசர்கள் தம்வசம் சுருட்டி வைத்திருக்கின்ற ‘குற்றம் சொல்லல்’ பட்டியலைக்கொண்டு வெறும் தத்துவங்களைச் சரமாரியாக ஒப்பிக்க-ஒப்புவிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இந்த புண்ணியாத்மாக்கள்தாம் சகலகலா வல்லவர்களாம்!

இவர்கள் கையினால்தான் இலக்கியம் பால்-பவுடர் பால் உண்ணுகிறதாம்!

இவர்கள் அன்றிருந்து சொல்லிக்கொண்டிருக்க வில்லையா?

நாமும் இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்க வில்லையா ?

சிந்தனைச் சீர்திருத்தக்காரர் இந்த கோல்ரிட்ஜ், அவர் சொன்ன ‘வெள்ளை மொழி’ ஒன்று என் பேனாவின் வழியை மறிக்கிறது.

“பொதுவாக, விமரிசகர்கள் என்பவர்கள் அனைவருமே தம்மால் முடிந்திருந்தால், கவிஞர்களாகவோ, சரித்திர ஆசிரியர்களாகவோ ஆகியிருக்கக்கூடியவர்கள் தாம். அவர்கள் தங்கள் திறமைகளைப் பல்வேறு துறைகளிலும் சோதனை செய்து பார்த்துத் தோல்வி கண்டுவிட்டார்கள். எனவேதான், அவர்கள் விமரிசகர்கள் ஆகிவிடுகிருர்கள்.


‘வாலிபனும், வாலிபியும்’

க. நா. ச. அவர்களைப்பற்றி உங்கள் அனைவருக்கும் துல்லியமாகத் தெரியும் ‘குறிஞ்சிமலர்’ பற்றி அவர் ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார். அதன் தொடக்கம் இவ்வாறு அமைகிறது:

“டைரி எழுதுகிற லட்சிய வாலிபனும், தெருவில் கார் மோதி மயங்கி விழுகிற லட்சிய ‘வாலிபி’யும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்குமோ, அதுதான் நடக்கிறது ‘குறிஞ்சி மலரி’ல், காதல் பிறக்கிறது; ஆனால் இருவரும் லட்சிய ஜன்மங்கள் ஆயிற்றே! காதல் பூர்த்தியாகலாமா?”

“பூரணியையும் அரவிந்தனையும் வைத்து ‘மணி வண்ணன்’ (அல்லது நா. பார்த்தசாரதி) 560 பக்கங்கள் எழுதியிருக்கிறார், வளவளவென்று அடிக்கொருதரம் ஆச்சரியக் குறியிட்டு, பக்கத்துக்கு நாலுதரம் வாசகர்களைக் கிள்ளி அழவிட்டுக்கொண்டு, தானும் அழுது கண்ணிர் வரவழைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார். ஐம்பது பக்கத்தில் முடித்திருந்தால், முதல்தரமான கதையாக இல்லாவிட்டாலும், சுமாரான கதையாக இருந்திருக்கும். ஐநூறு பக்கத்தில் தமிழ் நாட்டின் சாதாரணத் தொடர்கதையாக, வாசகர்களுக்கு மிகவும் விருப்பமான தொடர்கதையாக உருவாகியிருக்கிறது.”

மதிப்புக்குகந்த க. நா. சு. நான் சொன்ன அந்த மூன்று குணநலன்களைக் கோட்டைவிட்டு விடுவாரா? மாட்டார், மாட்டவே மாட்டார்!...


பிறப்பு என்பது பொய்

பிறப்பு என்பது பொய்; இறப்பு என்பது மெய்.

இந்தப் பொய்யும் இந்த மெய்யும் பொய்ம்மையின் விளையாட்டாகவும், மெய்ம்மையின் விளையாட்டாகவும் ஆகி நிற்பதுதான் வாழ்வு. இவ்விதமான வாழ்வின் முதல் ஆட்டத்திற்குக் கதாநாயகனாக அப்பாவி மனிதனும், இறுதிக் கூத்திற்குக் கதைத் தலைவனாக அலகிலா விளையாட்டுடையானும் வேடம் புனைந்துகொண்டு நாடகம் ஆடுகின்ற காலவரையறையின் இடைப்பகுதியில் பற்பல சோதனைகளும் விளையாடத் தொடங்குகின்றன. இச்சோதனைகளைச் சாதனைகளாக்க மனிதன் கனவு காண்கிறான். இந்தக் கனவுக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான், இலட்சியம். மற்ற மக்களின் கண்ணோட்டத்தில் தன்னை ‘சாதாரண மனிதன்’ என்ற கட்டத்தினின்றும் உயர்த்த வேண்டுமென்று கொள்கிறான் மனிதன். கொள்கை வெறியாகிறது; வெறி அவனுள் இலட்சியக் கோட்டையையே உருவாக்கி விடுகின்றது. ஆனால், இந்தக் கோட்டை, கொள்கை ததும்பும் அம்மனிதனைக் கட்டிக் காக்கிறதா? அதுதான் இல்லை!...

இந்த ‘இல்லை’ என்னும் விடையில்தான் வாழ்க்கையின் ‘ஆமாம்’ என்கிற முத்தாய்ப்பு இருக்கிறதோ?


இந்த இலட்சியங்கள்

ஒன்றைச் சொல்ல வேண்டும்.

வாழ்வு ஓர் இலட்சியம்; அதுவேதான் தத்துவமும் கூட. இவ்வகைப் பண்பு கொண்ட இலட்சியத் தத்துவத்தின் குறிக்கோள்கள், வளமார்ந்த இந்தத் தெய்வத் தமிழ்த் திருநாட்டிலே ‘விதை நெல்’ மணிகளாகப் போற்றப்பெற வேண்டுமென்றே அன்றைய பெரியார்கள் கனவு கண்டார்கள். அந்தக் கனவுகள் லட்சியசித்தி பெற்றனவா? ‘ஒரு சிலரை’ப்போல, நானும்தான் கேள்வி தொடுக்கிறேனே என்று முகத்தைச் சுளித்துக்கொள்கின்றீர்களா? என் கேள்விக்கு விடை சொல்ல எனக்குப் பயிற்சியுண்டு; பக்குவமும் உண்டு. -

வெறும் கண்ணாடி பீரோக்களிலே வைத்துச் சோடித்து, அழகு பார்த்து அனுபவிக்கப் பயன்படும் வார்த்தை ஜாலங்கள்தாம் இந்த இலட்சியங்கள்!...


மதுரையில் பூரணி

‘குறிஞ்சிமலர்’க்கதை சாதாரணமானது. ஏனென்றால், அது சாதாரணமான மக்களைச் சுற்றியே செல்கிறது; சொல்கிறது! அது மட்டுமா?

சாதாரண மனிதர்களென்றால், அதற்காக, அவர்களிடம் காணப்பெறும் மனங்களும் ஆசைகளும் அபிலாஷைகளும் சாதாரணமாகவேதான் இருக்க வேண்டுமென்று நியதி ஏதும் பாடம் கற்பித்துக்கொடுக்க வில்லையே?

பூரணி என்று அவளுக்குப் பெயர். அவள் மானுடப் பிறவி, மனிதப் பிறப்பெனில், சாதாரணமாகத்தான் இருந்தாக வேண்டும். ஆயினும், அவள் அசாதாரணமானவள். ஆமாம், அப்படித்தான்!

‘பூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப்போல் அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள், உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு. 

பிறந்த மண்: மதுரை.

திருவிளையாடற் புராணத்தில் மதுரைத் திருககரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு பேசப்படுகிறது:

மங்கலத்தை இடையறாது பூண்ட பாண்டிய நாடாகிய பெண்ணுக்குப் புறத்திலிருக்கும் நகரங்களெல்லாம் வளையல்கள் அசைகின்ற கைகள், தோளிணைகள், பெரிய தனங்கள் முதலாகிய உறுப்புக்களாம்.பெண்ணின் அத்தன்மையுள்ள பெருமை பொருந்திய முகமாகிய நகரம் திருவாலவாய், இது இரத்தினங்களின் நடுவிலிருக்கும் பதக்கத்தின் பெரிதாகிய நாயக ரத்தினத்தை ஒப்பதாம். இந் நான்மாடக் கூடல் திருமகளுக்கு ஒரு செந்தாமரைக் கோயிலாகவும், திருமால் மருமகளான சரஸ்வதிக்கு வெண்டாமரை ஆலயமாகவும், ஞானந் தரும் சிவசக்திக்கு ஒப்பற்ற யோகபீடமாகவும், பெருமை பொருந்திய பூமி தேவிக்கு நெற்றித் திலகமாகவும் விளங்குகின்றதாம்!

இத்துணை பீடுபெற்ற மதுரையம்பதியில் தான் தமிழ் வாழ்ந்தது. வாழ்ந்த தமிழுக்கு வாழ்த்துத் தரும் வகையில் அழகிய சிற்றம்பலம், அழகிய சிற்றம்பலம் என்ற நா மணக்கும் நாமம் பூண்ட பேராசிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய அன்புத் திருமகள்தான் பூரணி, காலமெனும் மணல் வெளியில் தாம் பதித்துப் பிரிந்த அடிச்சுவடிகளைச் சேமநிதியாக்கிய பெருமையுடன் அழகிய சிற்றம்பலம் புகழுடம்பெய்திவிட்டார். அவர் விடுத்துச் சென்ற பாததூளிகளிலே தமிழ் மணந்தது. அதுமட்டுமன்று தமிழ் பேசியது. அத்தகைய ‘தமிழ்’ வளர்த்த செல்வப் புதல்வி பூரணி. அவள் அறிவின் திருவுருவம். அறிவு மட்டும் இருந்தால், இந்த விண்வெளிக் கப்பல் விளயாட்டு யுகத்தில் பெண் முழுமை எய்திவிட முடியுமா, என்ன?-அழகி அவள். அவளுடைய எழில் நலம்பற்றிக் கொஞ்சம் கேட்கிறீர்களா?

‘மஞ்சள் கொன்றைப் பூவைப்போன்ற அவளுடைய அழகுக்கே வாய்த்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன் தன் இளமைப் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம். நீண்டு குறு குறுத்து மலர்ந்து அகன்று முகத்துக்கு முழுமை தரும் கண்கள்; எங்நேரமும் எங்கோ, எதையோ எட்டாது உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக்கொண்டிருப்பது போல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புக்களை மனத்துக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு பொறுப்பின் சாயல். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி. பூரணியைப்போல் பூரணியால் தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள்!...’

ஒரு நாள்:

சித்தம் ஏந்திய ஆயிரம் சிந்தனைகளுடன், சிந்தனைகள் ஏந்திய ஆயிரமாயிரம் கவலைகளுடன் பூரணி கடந்து கொண்டிருந்தாள். அது ஒரு நாற்சந்தி, ஏமாற்றம், பசி, கடமை, துயர் ஆகிய உணர்வுகளுக்கு அவள் மனமே ஒரு நாற்சந்தி. இப்படிப்பட்ட வேளை கெட்ட வேளையில்தான் அந்த முல்லைக்கொடி அறுந்து விழுந்தது. 

பெண் ஒருத்திக்குத் துன்பம் வந்தால், கவிகளுக்குப் பொறுக்காதாம்! பூரணி விபத்துக்குள்ளானதைப் படம் பிடிக்க ஒரு புகைப்பட நிபுணன் வரவேண்டாம், கடைசிப் பட்சமாக, கவிஞன் யாராவது வரக்கூடாதா?

நம்பிக்கைகள் எப்போதும் வீண் போவதில்லை.

வாழ்க்கையையே விபத்தாகக் கருதிவிடும் அளவிற்குத் துணிவு பெற்றவள் பூரணி. அவள் மயங்கி விழுந்த நேரத்தில், அவளுடைய அரவிந்த முகம் கண்டு பாட்டுப் புனய அங்கே கவி ஒருவனும் இருந்தான். அரவிந்தன் என்பார்கள். அவனும் பூரணிக்கு இணையான ஓர் இலட்சியப் பித்தன். பாட்டு மட்டுந்தான் பாடத் தெரியுமென்தில்லை; அவன் ‘மீனாட்சி அச்சகத்தின்’ உயிர்நாடி மட்டு மல்லன்; சிந்திக்கப் பழகிய புள்ளி. உயர்ந்த கோபுரங்களைக் காணும்போதெல்லாம் அவனுக்குத் தாழ்ந்த உள்ளங்களும் நினைவில் முனை காட்டும். அவனுக்குத் தன்னைப் பற்றி அக்கறை கொள்ளத் தெரியாது. ஆனால், தான் ‘அவதரித்த’ தாய்த் திருநாட்டைப்பற்றி இருபத்து நான்கு மணி நேரமும் கவலைப்படத் தெரிந்து வைத்திருந்தான். தொட்டதற்கெல்லாம் பொன்மொழிகளாகக் கொட்டித் தள்ளுவான்; தொடாதவற்றிற்கு இருக்கவே இருக்கின்றன, நாட்குறிப்புத் தாள்கள். ஆக, அவன் ஒரு தனிப்பிறவி. கபிலர் அறிவுரை அனுப்பியதற்கேற்ப ‘இளமையை மூப்பென்று’ உணரத் தலைப்பட்டானோ, என்னவோ? ஆனால் அவனைப்பற்றி ஒன்றை உறுதி செய்ய முடிகிறது. இவன் நொடிக்கு நூறு கேள்வி கேட்கிறான்; வாய்ப்பு முகமன் கூறுமிடத்தே, சமுதாயத்தின் மீது குற்றப்பத்திரிகை படிக்கிறான்; எஞ்சிய நேரத்தில், தத்துவ போதனைகளை அர்ப்பணிக்கிறான்! எமர்ஸன் வருணிக்கும் ‘காலமே செயல்; செயலே காலம்’ என்ற அடிப்படைக் கொள்கைக்கு அவன் மட்டும் உடன்படாமல் இருக்க முடியுமா? எது எப்படியிருந்தாலும், விரிந்த வானை முட்டுகிற அளவுக்கு, விரிந்த கனாக்களை விரிய விட்டான் அவன். ‘இளமைப் போதில் நாம் எவற்றை விரும்புகிறோமோ, அவை நம் முதுமைப் பிராயத்தில் நம்மை அணையும்’ என்கிறான் மேதை கோத்தே (Goethe). இவ்வுண்மை நிலை அரவிந்தனையும் சாலப் பொருத்தும், ஆனால்...பாவம், அவன்!...சரி, கதையைக் கவனிப்போம்!

பிறிதொரு நிகழ்ச்சி:

பூரணிக்கும் அப்போது ஒரே கசப்பான மனநிலை. ‘உலகத்தில் அத்தனை பேரும் ஏமாற்றுபவர்கள்; அத்தனை பேரும் பிறருக்கு உதவாதவர்கள்’ என்கிற மாதிரி விரக்தியும் வெறுப்பும் கொதித்துக் கொண்டிருந்த சமயம். புது மண்டபத்துப் புத்தக வெளியீட்டாளரின் மேலிருந்த கோபம் அவளிடமிருந்து விடைபெறாத சமயத்தில், அங்கே வந்து சேர்ந்தான் அரவிந்தன். தமிழ்ப் பேராசிரியரின் புத்தகங்களை வெளியிட வேண்டுமென்ற ஆர்வத் துடிப்புடன் வந்த அவனுக்கு பூரணி உரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை. கசப்பைக் கக்கவும் தவறவில்லை அவள். கன்னி மனத்தைக் கண்டறிந்த நிலையில் அவன், “இன்னொரு சமயம் வருகிறேன். நீங்கள் தெருவில் மயங்கி விழுந்து விட்டால், அதற்கு உலகமெல்லாம் புணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை,” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டான். அவன் அங்கிருந்து புறப்பட்டானேயொழிய, அவனுடைய நோட்டுப் புத்தகம் அவனுடன் வழி நடக்கவில்லை. அதை மட்டும் அவள் படித்திருக்காமற் போயிருந்தால், அவள் அவனைப் படித்திருக்க வாய்த் திருக்குமா? 

வாழ்க்கை என்பது உயிரும் உடலும் கொண்ட மனித பிண்டம், பார்க்கும் அல்லது காட்டும் முகக் கண்ணாடி மட்டுமன்று. உள்ளத்தின் உணர்வுகள் தலைமைப் பாத்திரங்கள் ஏற்று நிகழ்த்தும் ஒரு கூத்து. அந்தக் கூத்திற்கு இங்நிலையொத்த வாய்ப்புக்கள்தாம் சூத்திரக் கயிறுகளாக முறுக்கேறி, வாழ்க்கை எனும் ஜீவ தத்துவத்திற்கு ஊட்டமும் ஓட்டமும் அளிக்கின்றன. விட்ட குறை-தொட்ட குறையின் விளை பலன்களோ அல்லது, இவ் விளைபலன்களின் சாகசப் போக்குகளோ, அன்றி, இவற்றின் சார்புச் சூழலின் சாயல்களோதாம் வாழ்வாகவும், வாழ்வின் விதியாகவும் பரிமளிக்கின்றன.

இப்படிப்பட்ட நியதி பூரணியையும், அரவிந்தனையும் மாத்திரம் கட்டுப்படுத்தாமல் இருக்க முடியுமா? இருக்கக் கூடுமா? .

‘காரணமோ, தொடர்போ புரியாமல், அதை யடுத்தாற்போல மாலையில் தேடிவந்தானே, அந்த இளைஞனின் முகம் அவள் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப்போல ‘அரவிந்தன்’ என்று மெல்லச் சொல்லிப் பார்த்துக்கொண்டாள் அவள். அப்படிச் சொல்லிப் பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது; சொல்லித் தெரியாத, அல்லது சொல்லுள் அடங்காத சுகம் இருக்தது!’

இந்த மகிழ்ச்சி, களிப்பு, சுகம் ஆகிய இனிய உணர்வுகள் தாம் ‘குறிஞ்சி மலரின்’ வாழ்வியல் கதைக்கே மூச்சிழைகள்!

இன்பத்தின் முடிவுக்குத்தான் இன்பம் தொடங்குகிறது போலும்! 

தியாகத்தின் இட்சணமும் இலட்சியமுமே 'சுகம்' என்ற பண்பட்ட பண்பாட்டுணர்ச்சியின் பால் அமைந்த அமைக்கப்பட்ட செயலே அல்லவா? -

இல்லையென்றால், இறுதிக் கட்டத்திலே, அவள் முகத்தில்-அமரன் அரவிந்தனுக்கே உடைமையாகிவிட்ட அந்தத் தமிழ்ப் பெண் பூரணியின் வதனத்தில்-உலகமெல்லாம் தேடினும் கிடைக்காத ‘சாந்தி’ நிலவ முடியாதே!...


திருமணமாகாத விதவை

பூரணி ஆரம்பித்துவைக்கின்ற ‘குறிஞ்சி மல’ரை அரவிந்தன் முடித்துவைக்கின்றான்.

இந்தப் புதினத்தில் ஒன்றை மட்டும் தெளிய முடிகிறது. இதன் கதை சிறிது; பக்கங்கள் அதிகம்.

நாயகன்: அரவிந்தன்.

நாயகி: பூரணி.

கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் வாயைத் திறக்கமட்டும் மறந்துவிடலாகாது!

இவ்வளவு பக்கங்களைச் சாப்பிட்ட இக்கதையின் கதை என்ன? அது இதுதான்: 1. சந்திப்பு. 2. மனப் பிணைப்பு: 8. பிரிவு. 4. மீண்டும் மனவாழ்வு. 5. சுபம்.

பூரணி யார்?

அவள் திருமணமாகாத விதவை (The un-married widow)

அரவிந்தன் யார்? 

அவன் ஓர் இளைஞன். இளமையில் முதுமைபெற்ற மனத்தைக் கொண்டவன். இலட்சிய மணம் நுகர்ந்து லட்சிய மணத்தைப் பரப்பக் கனவு கண்டவன். மணவாழ்வு மேடை அமைக்கக் காத்திருந்தும், இணங்க மறுத்தவன். தன்னக் கீழே தள்ளிவிட்டுத் தொடரமுடியாத உயரத்துக்குப் பூரணி போய்விட்டதாகக் கற்பனை செய்து, அந்த ஒரு முடிவிலையே தன் முடிவையும் எழுதி வைத்துக் கொண்டவன் போன்று வாழ்ந்த அற்ப ஆயுள்காரன் அவன். மனித மனங்கள் உருவாக்கிக் காட்டிய பலஹீனங்களின் கூட்டுச் சுமையினை தான் ஒருவனே தாங்க வேண்டுமென்று கருதியவனுக்கு நேராக நடந்தவன்; நடக்கக் கனவு கண்டவன். கடைசியில் அவனே கனவாகிப் போய்விட்டான்!

அரவிந்தன் ஓர் இலட்சியப் பிண்டம்!

திர்ப்புக் கட்டம்:

அரவிந்தனையும் பூரணியையும் எடை போட்டுப் பார்க்கின்றேன். பூரணியின் முழு வாழ்வை நிறுவை செய்து பார்க்கும் எனக்கு அரவிந்தனை ஏறெடுத்துப் பார்க்கப் பயமாக இருக்கிறது. ஏன் தெரியுமா? அரை குறையாக நின்றுவிட்ட வளர்கதையாகிப் போன அரவிந்தனின் உயிர்க் கூட்டைத்தான் என்னால் தரிசிக்க முடிகிறது. அவனது ‘உயிர்ப் பறவை’ அவ்வளவு சடுதியில் ஏன் பறந்தது?

“அரவிந்தன் சாகவில்லை!” என்று நா.பா. அவர்கள் பரிந்து பேசுகின்றார்,

‘ஆமாம், உண்மையிலேயே அரவிந்தன் சாகடிக்கப் படாமலிருந்திருந்தால்...?’ 

‘அரவிந்தன்’ எனும் திண்மை மிக்க-குறிக்கோள் கொண்ட-கற்றுத் தேர்ந்த இந்தப் பாத்திரம்,என் முன்னே உருவாகிக் காட்டவல்ல தொரு முடிவினையும் நான் ஆராய்ந்து சிந்திக்கின்றேன். இமை வரம்புகளில் சுடுநீர் வரம்புகாட்டுகிறது. உண்மை சுடாமலிருக்காதாம்!

1925–1961

க. நா. சு. அவர்கன் இதோ, மீண்டும் திருவாய் மலர்ந்தருளத் தொடங்கிவிட்டார்:

“...1925 வாக்கிலே எழுதப்பட்டிருந்தால், தமிழிலே இதையும் ஒரு நல்ல நாவலாகச் சொல்லியிருக்கலாம். 1961ல் வெளிவருகிறதே?-என்ன செய்வது?...”

கால வித்தியாசம்

ன்பர் க.நா.சு. அவர்கள் ‘காலவித்தியாசம்’ காரணமாகத்தான், காலத்தைப்பற்றிக் கணிப்பதில் அடிக்கடி ஈடுபாடு காட்டி வருகிறார் காலம் என்பது பொற்கனவு. இன்றைய நிலையில் நின்று, நேற்றைய தினத்தைப்பற்றி நினைப்பவனின் நோக்கிற்கும் நோக்கத்திற்கும் காலம் ஒர் எழிற்கனவுதான்; அதே அளவில், இன்றைய நிலையில் லயித்திருந்து நாளையப் பொழுதைப்பற்றிச் சிந்திப்பவன், எதிர்காலத்தை கற்கனவாகச் சித்திரித்துக் கனவு காண்கிறான். கனவு காண்பது அவரவர்களின் மனத்தைப் பொறுத்தது. அதற்காக,—அதாவது அவரவர்கள் கனவுகள் அல்லது குறிக்கோள்கள், அல்லது மனக் குறிப்புக்கள் திட்டம் வகுத்துத் தாண்டும் அமைப்புக்குத் தக்கவாறு, காலம் மாறுவதற்கோ அல்லது காலத்தை மாற்றுவதற்கோ, இயற்கையின் நியதி, இவர்களின் தாலாட்டுப் பொம்மையல்ல. இதே கணிப்புக் கண்ணோட்டத்தில் இலக்கியம் ஒயிலோடு நிழலாடுகையில், ஒன்றை நாம் முடிவுகட்டத் தவறலாகாது. காலத்தைக் கடந்து நிற்கும் வல்லமைபெற்ற இலக்கியச் சிருஷ்டிகளைப் படைத்தவர்கள்-படைப்பவர்கள் அனைவருக்கும் எப்போதுமே ஓர் ‘இலக்கிய அந்தஸ்து’வாய்க்கும். இந்த மதிப்பை க. நா. சு. போன்றவர்களின் திருக்கரங்களாலோ, அல்லது, திருவாய்மூலமாகவோதான் கொடுக்கவேண்டுமென்று யாரும் ‘விதி’ அமைத்துக் கொடுக்கவில்லை. நமக்கும் அப்படிப்பட்ட ‘தலைவிதி’ ஏதும் கிடையாது.

“1925 வாக்கிலே எழுதப்பட்டிருந்தால், தமிழிலே இதையும் நல்ல நாவலாகச் சொல்லியிருக்கலாம். 1961-ல் வெளி வருகிறதே-என்ன செய்வது?” என்று நகைச் சுவைக் கூத்தோடு இலக்கியத்தின் சார்பில் ‘வக்காலத்து’ வாங்கிக்கொண்டு அங்கலாய்க்கிறார் க. நா. சு. இவரது ‘மதிப்பிற்குரிய’ கருத்துப்பிரகாரம் பார்த்தால்கூட, 1925-ல் நல்ல காவலாகச் சொல்லப்படும் ஒரு நவீனம் 1961-ல் வெளிவருவதால் ‘சோடை’ போய்விடுமா? இல்லை, போய் விடலாமா? போய்விடமுடியுமா? 1925-க்கும் 1961-க்கும் இடைப்படுகின்ற இந்தக் கால நடுவெளியில் இவர் ‘சூட்சுமம்’ வைத்துப் பேசும் அளவுக்கு ‘இலக்கிய வியவகாரம்’ தமிழ் மண்ணில் அப்படி என்ன. அவசரரீதியில் நடந்து தொலைத்திருக்கிறது? தமிழ் இலக்கிய ரசிகப்பெருமக்களிடையே ஒரு நாவல். நன்மதிப்புப் பெறுமென்றால், அது 1925-ஆம் ஆண்டானல் என்ன? 1961 ஆனால் என்ன? 

நம் க.நா.சு. இருக்கிறாரல்லவா, அவருக்கு இந்த வருஷ எண்களிலே எப்போதுமே ஒரு ‘கிறக்கம்’ உண்டு. 1945, 35 அப்படி, இப்படி என்று வருஷத்தை வரம்பறுத்து, கனகச்சிதமான எடை காட்டுமென்று விளம்பரப் படுத்திவரும் தம்முடைய இலக்கியத் தராசில் தமிழகத்தின் இலக்கியப் பிரம்மாக்களைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி இடைகட்டி, எடைபோட்டு, பிறகு சாங்கோ பாங்கமாகத் தம் ‘அருமை பெருமை’ மிகுந்த கருத்துரைகளை விளாசித்தள்ளுவார். இத்தகைய போக்கில்தான், முன்பொருமுறை ‘நாவல் தேக்க’த்தின் பிரதம எஞ்சினீயராகவும் இடைக்காலப் பதவியை ஏற்றார்.

இவருக்கென ஒரு ‘கூட்டம்’ (Gang) உண்டு; புகழுவார்; இவர்களை மட்டுமே, தாம் தயாரிக்கும் பட்டியில்—பட்டியலில் சேர்ப்பார். இவரது அபிமானத்தைப் பெறத் தவறினால், முடிந்தது ‘கதை’!...

தற்போதைய அமெரிக்க இலக்கியப் போக்கைப்பற்றி இ. பி. விப்பில் (E. P. Whipple) நிர்ணயம் செய்யும் பொழுது, “The science of criticism is thus in danger of becoming a kind of intellectual anatomy,” என்று தாய்ப்பிடுகிறார்.

அன்பர் க.நா.சு. வுக்கு இவ்வரிகள் ஏகப்பொருத்தம். அல்லவா?


பாவம், அரவிந்தன்!

திரு நா. பார்த்தசாரதி அவர்கள் தம்முடைய ‘குறிஞ்சிமலரி’ன் முன்னுரையில் இவ்வாறு எழுத முனைகிறார், “சைவசமயகுரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதி - கலிப்பகையார், அவர்களின் நிறைவடையாத உறவு - இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக்கொண்டு இந்த நாவலைப் படித்தால், இதன் இலக்கிய நயம் விளங்கமுடியும். இந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை-ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும்படி அமைத்திருக்கின்றேன். அரவிந்தனைப்போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப்போல குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்றவேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு.”

ஆம்; இது மணிவண்ணனின் கனவு!

நான் அடிக்கடி குறிப்பதுண்டு: ‘இலக்கியப்படைப் பாளன், தான் கொண்ட குறிக்கோள், ஆசாபாசங்களைக் கடந்ததாக இயங்கும் வண்ணம் தன்னையும் தன் இலட்சியத்தையும் பாதுகாத்துக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்!’

இந்த வரம்பில் நின்று பார்க்கும்பொழுது, நா.பா. எந்த அளவுக்குத் தம் இலக்கியப்பணி நிரக்கும் வகையில் ‘குறிஞ்சிமலரை’ப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்?

கனவுகள் எப்போதும் வாழ்வதில்லை என்பார்கள். அதனால்தானோ, என்னவோ, நா.பா. கண்ட கனவின் உட்பிரிவுச் சக்திகளான பூரணியும் அரவிந்தனும் வாழவில்லை!

உருவாக்கியவரே, உருவாக்கிய உயிர்ப்பிண்டங்களை வாழ விடவில்லை!

திலகவதி-கலிப்பகையார் வாழ்வு இவரது சித்தத்தைக் கவர்ந்திருக்கலாம். நியாயம். 

ஆனால், இவர்களது முடிவு இவருடைய சிந்தனையை ஏன் கவர்ந்தது?

திலகவதியின் கலிப்பகையாருக்கு உண்டான முடிவு தான், பூரணியின் அரவிந்தனுக்கும் முடிவாக (Finishing) வேண்டுமா? .

யார் சொன்னர்கள்?

ஒன்றைமட்டும் சொல்லுவேன்: அரவிந்தன் இவ்வளவு இளம் பிராயத்தில்-லட்சிய சித்தியின் அரைவேக்காடான பக்குவ நிலையுடன் சாகடிக்கப்படாமலிருந்தால், ‘குறிஞ்சி மல’ரின் இலக்கியத் தரம் இன்னும் உயர்ந்திருக்க முடியும்!


வெறும் கனவுகள்

தமிழ் மாநில அரசாட்சியின் புள்ளிக் கணக்குப்படி பார்த்தால், சென்னைக்கு அடுத்தபடியாகப் பெருமை பெறும் நகரம் மதுரை என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட மதுரை நகரத்தின் நாற்சந்தி ஒன்றில் பெண். ஒருத்தி-அதிலும் கன்னிப் பெண் ஒருத்தி-அதுவும் பசித்த வயிறும் கொதித்த மனமுமாக மயங்கி விழுந்தாள்.என்றால், அதைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியுமா? ‘பலே செய்தி’ப் பகுதியில் செய்தி நிருபர்கள் பரணியை அடைத்துப் போட்டார்களோ என்னவோ? அரவிந்தன் என்ற ஓர் இளைஞன் தன் இதயத்தாளில் மேற்படி நிகழ்ச்சியைக் கவிதையாக வடித்து வைத்தான். இத்தகைய துணிகரமான செயலுக்குக் காரணம், அவன் கவியாக இருந்தான் என்று சொல்வதைக் காட்டிலும், அவன் இதயம் பெற்றவனாகவும் இளைஞனாகவும் இருந்தான் என்பதே சாலப் பொருந்தும். இயற்கையை ரசிக்கிறான் எழுத்துக் கலைஞன். அப்படி யென்றால், இயற்கையின் அனுதாபத்திற்கு அவன் இலக்காகவும் ஆகின்ற ஒரு சூழலில்தான் மனிதாபிமானம் பேசத் தலைப்படுகிறது; கவிஞனுக்குத் தலைநிமிர்ந்து நின்று நடக்கவல்ல ஒரு வாய்ப்புக் கிட்டுகிறது. ஆக, அரவிந்தனுடைய இளம் கவி மனத்தில் பூரணி சம்பந்தப்பட்ட அந்நிகழ்ச்சி ‘காவிய மகிமை’ கொண்டுவிடுகிறது.

அரவிந்தன் இளைஞன். ஆயினும், சராசரி வரிசையின் வழி நிற்கும் சாமானியப்பட்ட இளைஞனா என்ன? ஊஹூம், இல்லவே இல்லை! அவன் ஓர் இலட்சியவாதி. தனக்காகக் கவலைப்படப் பழகாத ஒரு ‘புதுமைப் பிர கிருதி,’ புதிய புதிய குறிக்கோள்களை இதயத்தில் வாஙகிக்கொண்டு, அதன் சாட்டைச் சொடுக்கினால் பக்குவம் பெற்றுத் திகழத் துடித்த இளைஞன். காதலும் கனவு மாக, ‘தான் தோன்றித்தனம்’ மாறாமல் திரியும் எண்ணிறந்த இளையர் திருக்கூட்டங்களினின்றும் விலகியும் விலக்கியும் சென்று பழகிய - பழகுவதற்கு இயன்ற அரவிந்தன் ஓர் இளைஞன்!-அதிலும், தான் ஒர் இளமைக் கவி என்பதை நிரூபிப்பதற்கு அவன் பாடிய இந்தப் பாடல் ஓர் அடையாளக் குறியாக உதவாமல் தப்ப இயலாது.

“தரளம் மிடைந்து-ஒளி
தவழக் குடைந்து-இரு
பவழம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச்-சிறு
நெளிவைக் கடைந்து-இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து-சுவை



அளவிற் கலந்து-மதன்
நுகரப் படைத்த எழில்...”

இவ்வாறு ஆற்றொருழுக்காக ஓடும் கவிதைச் சக்தியில் ஓர் அழகி உருவெடுத்து, அந்த அழகி ஓர் ஆதரிச வடிவமாகவும் அமைந்து விடுவதாக ‘இனம்’ காணவும் வாய்ப்புகள் அரவிந்தனுக்குக் கைகொடுக்கின்றன. மனத்தவத்தின் மாண்புமிக்க நோன்பின் வல்லமைதான் மனித மனத்திற்குக் காதலெனும் தெய்விக சக்தியைப் பக்குவப்படுத்திக் கொடுக்கவல்லது. இவ்வுரிமைக்குரிய சொந்தமும் பந்தமும் அரவிந்தனுக்குக் கிடைக்கத்தான் வேண்டும். அதனால்தான் அழகிய பூரணியின் உருவம் அவனுடைய தூய உள்ளத்தில் நிற்கும் அளவுக்குப் பதிந்துவிடுகிறது. அழகைப் பகுதி பகுதியாகப் பார்த்தும் படித்தும் உணர்ந்து அறிந்த அரவிந்தனுக்கு காலத்தின் போக்கில், அவளது ஆதரிச வடிவத்திற்கு இலக்கணம் வகுக்கக்கூட முடிகிறது. கருத்திற்குக் கனவுப் பூச்சாகப் பொலிவுதரும் நிகழ்ச்சிகள் எத்தனையோ நடக்கின்றன; அவை அவன் மனத்தில் நற்சாட்சிப் பத்திரம் வழங்கி, அவனைப் பத்திரப்படுத்தவும் துணிவு கொள்கின்றன. பூரணிக்குக் கிடைத்துவந்த புகழ்மாலைகளின் நெடியை அனுபவித்துச் சமாளித்து மகிழுகிறான். ‘உழைப்பிலும் தன்னம்பிக்கையினாலும் வளர்ந்தவன் அரவிந்தன்.’ இவனுக்கு, பூரணி என்னும் பெண் எழுத்தில் மட்டுமே இடம் பெறத்தக்க இலட்சிய பிம்பமாக மட்டுமே தோன்றுகிறாள். இல்லையென்றால், கோடைக்கானலில், அரவிந்தனிடம் அவனுக்கும் பூரணிக்கும் நடக்க வேண்டிய மணவினைப் பேச்சைப்பற்றி மங்களேசுவரி அம்மாள் பேச்செடுத்தபோது, அவன் தட்டிக் கழித்திருப்பானா? 

இயற்கையின் திருவிளையாடல்களுக்குத் தலைவணங்கிப் பழக்கப்பட்ட ‘சராசரி மனித’னினின்றும் விலகி நிற்குமாறு அரவிந்தன் நாவலாசிரியரால் பணிக்கப்படுகிறான்.

அதனால்தான் பூரணியின் வானொலிப்பேச்சில் ஒலித்த வாசகங்கள் பல அவனது அடிநெஞ்சில் 'அடி' கொடுக்கவும் செய்வதாக ஒரு சப்பைக்கட்டுக் கட்டப்பட்டிருக்கிறது. "இறையுணர்வு பெருகப் பெருக உடம்பால் வாழும் வாழ்க்கை அலுத்துப்போகிறது-இந்த ஒரு தத்துவத்தைக் கொண்டே அரவிந்தனின் கனவு வாழ்க்கையைப் பறித்துத் தூர வீசி எறியவும் ஆசிரியர் தயங்கவில்லை.

உள்ளத்தால் வாழும் வாழ்க்கை ஓர் உன்னதம்தான். அதுவும் எப்படி?-வெறும் எழுத்தளவில்தான், ஏட்டளவில்தான்! இந்த ஒரு முடிவில்தான் பூரணி-அரவிந்தன் வாழ்க்கைக் குறிக்கோள்கள் ‘வெறும் கனவுகள்’ ஆகி விணாகியிருக்கின்றன.


குத்திக்காட்டுகிறாளா?

ஒரு கட்டம்:
இடம்: கோடைக்கானல்,
நேரம்: தனிமையின் இனிமைப் பொழுது.
பாத்திரங்கள்: பூரணி-அரவிந்தன்.
எதையோ நினைத்துச் சிரிக்கின்றான் அவன்.
அவள் அவனுடைய சிரிப்புக்குக் காரணம் கேட்கிறாள்.

அவன் சொல்கிறான் “உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒரு நாள் களைப்படைந்து கீழேயே நின்றுவிடும்படி நேரிடலாம். அப்படி நேரிட்டால் அதற்காக நீ வருத்தப்படக் கூடாது!”

இந்த உரையாடலுக்குப் பின்னர்தான் அவன் பூரணியின் வானொலிச் சொற்பெருக்கையும் எடைபோட முனைகிறான் : ‘...அன்றொரு நாள் கோடைக்கானலில் பூரணியை மணந்துகொள்ளுமாறு மங்களேசுவரி அம்மாள் என்னிடம் கூறியபோது, நான் எந்தக் கருத்துக்களைச் சொல்லி மறுத்தேனோ, அதையே பூரணியும் பேசுகிறாள். ஆனால் ‘ஊன்பழித்து, உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்’ என்று அவள் திருவாசகத்தைக் கூறும்போது, என்னுடைய மெல்லிய உணர்வுகளையும் இந்தச் சொற்களிலே புகழ்கிறாளா? அல்லது, குத்திக் காட்டுகிறாளா? ...’

பூரணி எனும் பெண்மையின் சக்தி அரவிந்தனின் உள்ளத்தின் உள்ளே சலனத்தை உண்டாக்காமல் இருந்திருக்கவே முடியாது. அந்த உணர்வுகளின் மன ஓட்டத்திற்குக்கூட ‘கட்டுப்பாடு’ விதித்து, அவனை வெறும் லட்சியப் பிண்டமாக ஆட்டிப் படைக்கத் துணிவு ஏற்ற ஆசிரியர், பூரணியின் சொற்களைப்பற்றி அரவிந்தன் ஆராயும் நிலையில் ‘குத்திக் காட்டுகிறாளா..?’ என்ற ஒரு கேள்வியை ஏன் போட்டுக் காட்டவேண்டும்?

நா.பா. அவர்களுக்கு உரித்தான ‘இலக்கிய மனச் சான்றின்’ குறிக்கோள் கற்பித்த பக்குவ நிலையையும் மீறி அரவிந்தன் கட்டறுத்துத் தளையுடைத்துச் சிந்திக்க முற்பட்டிருக்கிறான்-இந்தக் கட்டத்தில்.

உடம்பைப் புண் என்று கருதுகிறான் அரவிந்தன். ஆச்சரியம் மேலிட அவனை வாழ்த்துவோம். ஆனால், அவன் பூரணியை-ஆசாபாசங்களின் உள்ளடக்கமான பூரணியின் மனத்தைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு அவள் பொருட்டு ஆற்றிய கடமைகள் யாவை?

அவன் அவள் நெஞ்சில் எவ்வகையான இடத்தைப் பெற்றிருந்தான்?

அவள் மனத்தில் அவன் என்னென்ன ‘அவதாரம்’ கொண்டிருந்தான்?

கடைசியில் முடிவு என்ன?

‘கைகளில் தீபத்தை ஏந்திக்கொண்டு இருளடைந்த மனிதக் கூட்டத்தின் நடுவில் ஒளி சிதறி நடந்து செல்லுவதாக அவள் அடிக்கடி கண்ட கனவை இப்போது நனவாக்கிக் கொண்டிருந்தார்கள்’ என்று முத்தாய்ப்பிடும் இம்முடிவு ‘இயற்கைத் தன்மையுடன்’ கூடிய முடிவுதானா?

அரவிந்தனும் பூரணியும் ‘இலட்சியக் காதலர்கள்’ அல்லது ‘சமுதாயப் பணியாளர்கள்’ என்ற பருவம் கடந்து, கணவன்-மனைவியாக ஆகிவிட்டிருந்தால், ‘குறிஞ்சி மல’ரின் ‘முடிவு’ இயற்கைப் பண்புடன் ஒட்டியதாக ஒட்டி நின்று உறவாடியிருக்க முடியாதா?

புதினத்தைப் படைத்தவர் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை.

என் கேள்விகளுக்கு உரிய விடைகளைப்பற்றி இனிமேல் விளக்க வேண்டும்.


முடிவின் விதி

புது மண்டபத்துப் புத்தக வெளியீட்டாளரின்பால் கனன்றிருந்த ஏமாற்றத்தீ கொடிவிட்டு எரிந்து கொண்டிருந்த மனநிலைப்பில் பூரணியின் கண்களுக்கு உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் ஏமாற்றுபவர்களாகவும், அத்தனை மனிதர்களும் மற்றவர்களுக்கு உதவாதவர்களாகவுமே பட்டது. இச்சமயத்தில், அப்பாவி அரவிந்தன் வந்து சேர்ந்தான். சூடான காப்பிக்கு வழியில்லை; சூடான மொழிகளை வாங்கிக்கொண்டு புறப்பட வேண்டியவன் ஆனான். புறப்படும்போது, “நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால், அதற்கு உலகமெல்லாம் புணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை,” என்று பக்குவமாக எடுத்துக்காட்டத் தயங்கவில்லை.

பூரணியின் நல்லுணர்வு மனம் விழித்தது.

பூரணியின் பெண்மை எழில்நலப்பண்பும் விழிப்புப் பெற்றது. ‘அரவிந்தன்’ என்று மெல்லச் சொல்லிப் பார்த்துக் கொள்வதிலே ஒரு திருட்டு மகிழ்ச்சி கிடைத்தது. தன்னைப்பற்றி அரவிந்தன் பாடிய வரிகளைப் படித்து மகிழ்வதில் வெளிப்படையான அக நிறைவு பெற்றாள் அவள். போதும் போதாதற்கு, அவன் தமிழ் நாட்டின் வயிற்றுப்பசியைக் குறித்து ஒரு பாட்டும் அழுது ஒப்பாரி வைத்திருப்பதைப் பார்த்ததும், இந்நாட்டு மக்களின் வாழ்க்கைச் சிக்கலை எண்ணித்துடிக்க ஓர் ஆண் உள்ளமும் எங்கித் தவிக்கிறதெனும் நடப்பும் பிடிபடுகிறது. அவளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே அவனுடைய கையெழுத்தை அவள் கண்களில் ஒற்றிக் கொள்கிறாள். இப்படிப்பட்ட பக்தையின் தலையெழுத்தை எப்படித்தான் மாற்ற மனம் துணிந்தாரோ மணிவண்ணன்?

அரவிந்தனிடம், தான் முகங்கடுத்துச் சுடுமொழி உதிர்த்த தவற்றுக்கு முகம் கொடுத்து மன்னிப்பு வேண்டி யது தொட்டு, அவனது உள்ளந்தொட்டு, பிறகு உடல் தொட்டு - வெறும் உடல்தொட்டு உறவாடி மகிழ்ந்த நிகழ்ச்சிகளெல்லாம் கதை நிகழ்ச்சிகள்; அதாவது, பெருங்கதையை ஒட்ட உதவிய சிறு நிகழ்ச்சிகள். அவளுக்காக அவன் அடி உதைபட்டது, அவனுக்காக அவள் கண்ணீர் கொட்டியது, பிறகு தேர்தல் போட்டா போட்டியின் போது நடைபெற்ற தலைவலிச் சம்பவங்கள் எல்லாம் சர்வசாதாரணமானவையே.

ற்றொரு கட்டம்; திட்டம்.

பூரணியைத் தேர்தலில் நிற்கும்படி செய்வதற்கான ஓர் ஆலோசனைக்கு இடையே பூரணியின் சார்பில் வாதம் புரிகிறான் அரவிந்தன். அதாவது, அவளை அவ்வாறு உடந்தையாக்கலாகாது என்பதே வாதத்தின் வெளிப் பொருள். அப்போது அவனுக்காகப் பரிந்து பேச முற்படுகிறார் நம் நா.பா. “அவன் அவள் உள்ளத்தோடு இரண்டறக் கலந்தவன். வேறெவருக்கும் இனி என்றும் கிடைக்கமுடியாத இனிய உறவு அது. அந்த உறவை வெளிக்காட்டி விளம்பரப்படுத்திக் கொள்ள அவன் எப்போதுமே விரும்பியதில்லை!”

ஆண்-பெண் என்கிற இரு பெரும் சக்திப் பிண்டங்களினின்றும் தழுவி நழுவுகின்ற ஒரே இணக்கம் கொண்ட உணர்வுகள் உறவுகொள்வதென்பது விட்ட குறை-தொட்ட குறையின் விதி எனும் மாயத்தினால் விளைகின்ற ஒரு பயன். உள்ளத்தின் உள்ளே எண்ணி மகிழ்ந்து பரவசப்பட வேண்டியதொரு விசித்திரமான அனுபவம் இது. இதற்கு அவன் விளம்பரம் தேட வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை! அரவிந்தனின் குணச்சித்திரத்திற்கு விழுந்திருக்கிற கீறல் இது.

மீளவும், கோடைக்கானல். கடல் கடந்து ஆற்ற வேண்டிய சொற்பொழிவுகளை ஏற்பதா, வேண்டாமா என்னும் சிக்கலில் அகப்பட்டுத் தவிக்கிறாள் பூரணி. அது தருணம், அவள் இவ்விதமாக நினைக்கிறாள்: “அரவிந்தன்! எனக்காக நான் எதைச் சிந்தித்தாலும், அந்தச் சிந்தனையின் நடுவில் என் உடம்பிலும் நெஞ்சிலும் சரி பாதி பங்குகொண்டவர் போல இவர் ஏன் நினைவுக்கு வருகிறார்? அரவிந்தன், என்னுடைய ஊனிலும் உயிரிலும் அதனுள் நின்ற உணர்விலும் எல்லாவற்றிலும் நீங்கள் எப்போது கலந்து உறைந்தீர்கள்? எப்படிக் கலந்து உறைந்தீர்கள்?”

அரவிந்தனுக்கு வாய்த்துவிட்ட ‘முடிவின் விதி’யை எண்ணுகிறேன்; சுடு நீர் சரம் தொடுக்கிறது. முடிவுக்கு உண்டான தொடக்கத்தைப் பற்றிச் சொல்லிக்காட்ட வேண்டுமல்லவா?


நடமாடும் கவிதை

பூரணி ஒரு நடமாடும் கவிதை.’

ஆண்-பெண்களின் இருண்ட கூட்டத்துக்கு நடுவே கையில் தீபம் ஏந்திச்சென்று, உலகத்தில் நிலவுகின்ற பசியையும் நோயையும் அழிக்க வேண்டுமென்பது அவள் கனவு. இப்படிப்பட்ட சேவை மனப்பான்மையின் பேருணர்வே அவளுள் கனிந்து கனன்ற ‘தன்விழிப்பும்’ ஆகும். இவ்வகையில் தோன்றிய பூரணிக்கும், பொன் காட்டும் நிறமும் பூக்காட்டும் விழிகளுமாக அவனைக் கவிபாடத் தூண்டிய பூரணிக்கும் ஊடாகத் தவித்த அரவிந்தனைச் சோதனை ஒன்று நெருங்குகிறது. சோதனை மக்களேசுவரி அம்மாள் வாய்வழியே புறப்படுகிறது. அரவிந்தன்-பூரணி திருமணங் குறித்துப் பேச்சுத் தொடுக்கிறாள். “அவருக்கு விருப்பமானால், எனக்கும் விருப்பம்” என்ற பூரணியின் ஒரு வழிப்பட்ட இணக்க மொழியைக் கொண்டு அந்த ‘அவரி’டம்-அதாவது, அரவிந்தனிடம் கேட்கும்போது, அரவிந்தன் ‘வசனம்’ ஒப்புவிக்கின்றான். அந்தப் பேச்சைக் கேட்டபோது, எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோடைக்கானலில் குறிஞ்சிப் பூக்களுக்கு மத்தியில் அவனும் அவளும் நெருங்கிப் பழகிய பந்தத்தை நான் அறியேனோ? அபலைப்பெண் பூரணியின் ஆசை மனத்தின் இனிய எழிற் கனவைப் பலிதமடையச் செய்திருக்கவாவது, அரவிந்தனிய வாழ வைத்திருக்க வேண்டாமா நா.பா...?

“நாங்கள் இரண்டு பேருமே உயரத்தில் ஏறிச் செல்கிறோம். அதற்கு இந்த வாழ்க்கைப் பிணைப்பு மட்டுமே போதும்; என்னை வற்புறுத்தாதீர்கள்!” என்றான் அரவிந்தன்.

இவ்வகையில் அமைந்துவிட்டிருக்கின்ற சொல்லாடல் நிகழ்ச்சிகள் அரவிந்தன் எனும் குணச்சித்திரத்திற்கு எவ்வகையான சாரமும் தரமுடியாது. கொள்கைகளுக்காக மனிதன் வாழலாம்; ஆனால் கொள்கைக்காக அவன் வாழ்வை இழக்கக்கூடாது. கொள்கைகள் வாழவேண்டுமெனில், ‘கொள்கையின் மனிதன்’ வாழவேண்டும். அது மாதிரி, இங்கே அரவிந்தனும் வாழ்ந்திருக்க வேண்டும். பூரணியும் ‘வாழ்ந்திருக்க’வேண்டும். இருவர்தம் வாழ்வு நிலைகளும் வெற்றி பெற்றிருந்தால்-அவர்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திருக்கும்பட்சத்தில், அவர்களது அடிப்படை இலட்சியங்களும் மேளதாளத்தோடு வெற்றி பெற்றிருக்கக் கூடும். இதன் பயனாக, இலட்சிய இளைஞன் அரவிந்தன் முழுமை பெறுவதுடன், பூரணிக்கும் பூரணத்வம் கிட்ட நல்வாய்ப்புக் கிட்டியிருக்கும்.

அரவிந்தன் சாகவில்லையா?

பாவம்...!


திலகவதி-பூரணி!

செல்லரித்த பழமையெல்லாம் சீர்திருத்த முன்வந்த இலட்சியச் சித்தன்’ அரவிந்தன் தெய்வமாயிருந்தான்.

‘நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்’ திலகம் இழந்தது.

திலகவதியின் கதை முடிந்தது; மீண்டும் நடந்து முடிந்தது!

திருமண ஊர்வலங்களுக்குப் பயன்தரும் வெண் புரவிச் சாரட்டு, கடைசியில் ‘அரவிந்தன் என்னும் பேரெழில் வாழ்க்கையை’ மண்ணிற் கலக்கச் செய்யப் பயன்தந்த அந்த ஒரு திருப்பத்தில், தமிழாசிரியர் நா.பா. வைவிட நாவலாசிரியர் மணிவண்ணன் கம்பீரமான பெருமையுடன் வாழ்வார்; அட்டியில்லை.

திரு க.நா. சுப்பிரமணியம் சொல்கிறார், “மனத்தில் நிற்கும்படியாக ஒரு வார்த்தை-ஒரு வாக்கியச் சேர்க்கை இந்த ஐந்நூறு பக்கங்களில் உண்டா? அதுவும் கிடையாது. அதற்கு நேர்மாறாக, நடையே தள்ளாடுகிறது!” என்று. 

“ஓரளவுக்குப் பார்த்தால், வை.மு. கோதைநாயகி அம்மாள் கையாண்ட நாவல் உத்தி முறைப்படி வந்த நாவல் இது என்று சுருக்கமாகச் சொல்லலாம்!”-இதுவும் ‘மேற்படியாரின்’ தீர்ப்பேயாகும்!

இறைவா! மதிமாறிப்பேசும் பேச்சு இது என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல இருக்கிறது? வேண்டா வெறுப்பில் க.நா.சு. உளறுவதெல்லாம் விமரிசனம் ஆகிவிடுமா? வேறெப்படிச் சொல்ல இருக்கிறது?