பாடல்:36

வேழம் வினாதல் தொகு

தன்னுடல் அன்றிப் பிறிதுண் கனையிருள்
பகல்வலிக்கு ஒதுங்கிய தோற்றம் போல
பெருநிலவு கான்ற நீறுகெழு பரப்பில்
அண்ட நாடவர்க்கு ஆருயிர் கொடுத்த
கண்டக் கறையோன் கண்தரு நுதலோன் (5)
முன்னொரு நாளில் நால்படை உடன்று
செழியன் அடைத்த சென்னி பாட
எள்ளருங் கருணையின் நள்ளிருள் நடுநாள்
அவனெனத் தோன்றி அருஞ்சிறை விடுத்த
முன்னவன் கூடல் மூதூர் அன்ன (10)
வெண்ணகைச் செவ்வாய்க் கருங்குழல் மகளிர்
செம்மணி கிடந்தநும் பசும்புனத்து உழையால்
வாய்சொரி மழைமதத் தழைசெவிப் புழைக்கைக்
குழிகண் பரூஉத்தாள் கூர்ங்கோட்டு ஒருத்தல்
சினைதழை விளைத்த பழுமரம் என்ன (15)
அறுகால் கணமும் பறவையும் கணையும்
மேகமும் பிடியும் தொடர
ஏகியது உண்டேல் கூறுவிர் புரிந்தே. (18)
பாடல்:37

நலம் புனைந்துரைத்தல் தொகு

அருள் தரும் கேள்வி அமையத் தேக்க
பற்பல ஆசான் பாங்குசெல் பவர்போல்
மூன்றுவகை அடுத்த தேன்தரு கொழுமலர்
கொழுதிப் பாடும் குணச்சுரும் பினங்காள்
உளத்து வேறடக்கி முகமன் கூறாது (5)
வேட்கையின் நீயிர் வீழ்நாள் பூவினத்துள்
காருடல் பிறைஎயிற்று அரக்கனைக் கொன்று
வரச்சித்தடக்'கை' வரைப்பகை சுமந்த
பழவுடல் காட்டும் தீராப் பெரும்பழி
பனிமலை பயந்த மாதுடன் தீர்த்தருள் (10)
பெம்மான் வாழும் பெருநகர்க் கூடல்
ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்
கொலையினர் உள்ளமும் குறைகொள இருண்டு
நானம் நீவி நாள்மலர் மிலைந்து
கூடி உண்ணும் குணத்தினர் கிளைபோல் (15)
நீடிச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த
கருங்குழற் பெருமணம் போல
ஒருங்கும் உண்டோ? பேசுவிர் எமக்கே! (18)
பாடல்:38

உலகின்மேல் வைத்து உரைத்தல் தொகு

இருளொடு தாரகை இரண்டினை மயக்கி
குழலென மலரென மயல்வரச் சுமந்து
வில்லினைக் குனித்து கணையினை வாங்கி
புருவம் கண்ணென உயிர்விடப் பயிற்றி
மலையினைத் தாங்கி அமுதினைக் கடைந்து (5)
முலையென சொல்லென அவாவர வைத்து
மெய்யினைப் பரப்பி பொய்யினைக் காட்டி
அல்குல் இடையென நெஞ்சுழலக் கொடுத்து
முண்டகம் மலர்த்தி மாந்தளிர் மூடி
அடியென உடலென அலமரல் உறீஇ (10)
மூரி வீழ்ந்த நெறிச்சடை முனிவர்
சருக்கம் காட்டும் அருமறை சொல்லி
உள்ளம் கறுத்து கண்சிவந்து இட்ட
மந்திரத்து அழல்குழி தொடுவயிறு வருந்தி
முன்பின் ஈன்ற பேழ்வாய்ப் புலியினை (15)
கைதைமுள் செறிந்த கூர்எயிற்று அரவினை
காருடல் பெற்ற தீவிழிக் குறளினை
உரிசெய்து உடுத்து செங்கரம் தரித்து
செம்மலர் பழித்த தாட்கீழ்க் கிடத்தி
திருநடம் புரிந்த தெய்வ நாயகன் (20)
ஒருநாள் மூன்று புரம்தீக் கொளுவ
பொன்மலை பிடுங்கி கார்முகம் என்ன
வளைத்த ஞான்று நெடுவிண் தடையக்
கால் கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து
நெருக்குபொழில் கூடல் அன்னசெம் மகளிர் (25)
கண்ணெனும் தெய்வக் காட்சியுள் பட்டோர்
வெண்பொடி எருக்கம் என்புபனை கிழியினை
பூசி அணிந்து பூண்டு பரிகடவி
கரத்தது ஆக்கி அந்நோ
அருத்தி மீட்பர் நிலைவல் லோரே. (30)
பாடல்:39

நாண் இழந்து வருந்தல் தொகு

மைகுழைத் தன்ன தொள்ளிஅம் செறுவில்
கூர்வாய்ப் பறைதபு பெருங்கிழ நாரை
வஞ்சனை தூங்கி ஆரல் உண்ணும்
நீங்காப் பழனப் பெருநகர்க் கூடல்
கரம்மான் தரித்த பெருமான் இறைவன் (5)
பொன்பழித் தெடுத்த இன்புறு திருவடி
உளம்விழுங் காத களவினர் போலஎன்
உயிரொடும் வளர்ந்த பெருநாண் தறியினை
வெற்பன் காதற் கால்உலை வேலையின்
வலியுடைக் கற்பின் நெடுவெளி சுழற்றிக் (10)
கட்புலன் காணாது காட்டைகெட உந்தலின்
என்போல் இந்நிலை ஆறுவரப் படைக்கும்
பேறாங்கு ஒழிக பெருநாண் கற்பினர்
என் பேறு உடையர் ஆயின்
கற்பில் தோன்றாக் கடனா குகவே. (15)
பாடல்:40

தோழி இயற்பழித்து உரைத்தல் தொகு

வடமீன் கற்பின்எம் பீடுகெழு மடந்தை
பெருங்கடல் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்திரிந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போல
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள (5)
உயர்மரம் முளைத்த ஊரி போல
ஓருடல் செய்து மறுமனம் காட்டும்
மாணிழை மகளிர் வயின்வை குதலால்
கருமுகிற் கனிநிறத் தழற்கண் பிறைஎயிற்று
அரிதரு குட்டி ஆயபன் னிரண்டினை (10)
செங்கோல் முளையிட்டு அருள்நீர் தேக்கி
கொலைகளவு என்னும் படர்களை கட்டு
தீப்படர் ஆணை வேலி கோலி
தருமப் பெரும்பயிர் உலகுபெற விளைக்கும்
நால்படை வன்னியர் ஆக்கிய பெருமான் (15)
முள் உடைப் பேழ்வாய்ச் செங்கண் வராலினம்
வளைவாய்த் தூண்டிற் கருங்கயிறு பரிந்து
குவளைப் பாசடை முண்டகம் உழக்கி
நெடுங்கால் பாய்ந்து படுத்த ஒண்தொழில்
சுருங்கை வழிஅடைக்கும் பெருங்கழிப் பழனக் (20)
கூடற்கு இறைவன் இருதாள் விடுத்த
பொய்யினர் செய்யும் புல்லம் போல
பேரா வாய்மை ஊரன்
தாரொடு மயங்கி பெருமையும் இலனே. (24)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/36-40&oldid=486166" இலிருந்து மீள்விக்கப்பட்டது