பாடல்:06 (அண்டம்ஈன்று) தொகு

பிரிவு அருமை கூறி வரைவு கடாதல் தொகு

அண்டம்ஈன்று அளித்த கன்னி முனிவாக
திருநுதல் முளைத்த கனல்தெறு நோக்கினில்
ஆயிர மணிக்கரத்து அமைத்தவான் படையுடன்
சயம்பெறு வீரனைத் தந்துஅவன் தன்னால்
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த (5)
இருள்மனத் தக்கன் பெருமகம் உண்ணப்
புக்க தேவர்கள் பொருகடற் படையினை
ஆரிய ஊமன் கனவென ஆக்கிய
கூடல் பெருமான் பொதியப் பொருப்பகத்து
அருவிஅம் சாரல் இருவிஅம் புனத்தினும் (10)
மயிலும் கிளியும் குருவியும் நன்றி
செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வுஇல என்னும்
குன்றா வாய்மை நின்றுநிலை காட்டித்
தங்குவன கண்டும் வலிமனம் கூடி
ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு (15)
சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்இன்று
ஊற்றெழும் இருகவுள் பெருமதத் கொலைமலைக்
கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட
பிறைமதி அன்ன கொடுமரம் வாங்கி,
தோகையர் கண்எனச் சுடுசரம் துரக்கும் (20)
எம்முடைக் குன்றவர் தம்மனம் புகுதஇப்
புனக்குடிக் கணியர்தம் மலர்க்கை ஏடவிழ்த்து
வரிப்புற அணில்வால் கருந்தினை வளைகுரல்
கொய்யும் காலமும் நாள்பெறக் குறித்து
நிழலும் கொடுத்து அவர்ஈன்ற
மழலை மகார்க்கும் பொன்அணிந் தனரே. (26)

பாடல்:07 (இரண்டுடல்) தொகு

இளமை கூறி மறுத்தல் தொகு

இரண்டுடல் ஒன்றாய்க் கரைந்து கண்படாமல்
அளவியல் மணநிலை பரப்பும் காலம்
தளைகரை கடந்த காமக் கடலுள்
புல்நுனிப் பனியென மன்னுதல் இன்றி
பீரம் மலர்ந்த வயாவுநோய் நிலையாது (5)
வளைகாய் விட்ட புளிஅருந் தாது
செவ்வாய் திரிந்து வெள்வாய் பயவாது
மனைபுகை யுண்ட கருமண் இடந்து
பவள வாயில் சுவைகா ணாது
பொற்குட முகட்டுக் கருமணி அமைத்தெனக் (10)
குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது
மலர அவிழ்ந்த தாமரைக் கயல்என
வரிகொடு மதர்த்த கண்குழி யாது
குறிபடு திங்கள் ஒருபதும் புகாது
பொன்பெயர் உடையோன் தன்பெயர் கெடுப்ப (15)
தூணம் பயந்த மாண்அமர் குழவிக்கு
அரக்கர் கூட்டத்து அமர்விளை யாட
நெருப்புமிழ் ஆழி ஈந்தருள் நிமலன்
கூடல் மாநகர் ஆட எடுத்த
விரித்த தாமரை குவித்த தாளோன் (20)
பேரருள் விளையாச் சீரிலர் போல
துலங்கிய அமுதம் கலங்கிய தென்ன
இதழ்குவித்துப் பணித்த குதலை தெரியாது
முருந்து நிரைத்த திருந்துபல் தோன்றாது
தெய்வம் கொள்ளார் திணிமனம் என்ன, (25)
விரிதரு கூழையும் திருமுடி கூடாது
துணைமீன் காட்சியின் விளைகரு என்ன
பார்வையின் தொழில்கள் கூர்வழி கொள்ளாது
மறுபுலத்து இடுபகை வேந்துஅடக் கியதென
வடுத்தெழு கொலைமுலை பொடித்தில் அன்றே (30)
செம்மகள் மாலை இம்முறை என்றால்
வழுத்தலும் வருதலும் தவிர்தி
மொழிக்குறி கூடாச் செவ்வே லோயே! (33)

பாடல்:08 (நிணமுயிர்) தொகு

சுவடு கண்டு இரங்கல் தொகு

நிணமுயிர் உண்ட புலவு பொறாது
தலையுடல் அசைத்து சாணைவாய் துடைத்து
நெய்குளித்து அகற்றும் நெடுவேல் விடலை
அந்தணர் உகும்நீர்க்கு அருட்கரு இருந்து
கோடா மறைமொழி நீடுறக் காணும் (5)
கதிருடல் வழிபோய்க் கல்லுழை நின்றோர்
நெருப்பு உருத்தன்ன செருத்திறல் வரைந்த
வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே;
துணைவிளக்கு எரியும் நிலைவிழிப் பேழ்வாய்த்
தோகை மண்புடைக்கும் காய்புலி மாய்க்க (10)
வாய்செறித் திட்ட மாக்கடிப்பு இதுவே
செடித்தலைக் காருடல் இடிக்குரல் கிராதர்
மறைந்துண்டு அக்கொலை மகிழ்வுழி இந்நிலை
தவநதி போகும் அருமறைத் தாபதர்
நன்னர்கொள் ஆசி நாட்டியது இவ்வுழை (15)
கறையணல் புயங்கன் எரிதழல் விடத்தை
மலைமறை அதகம் மாற்றிய அதுபோல்
கொடுமரக் கொலைஞர் ஆற்றிடைக் கவர,
எண்ணாது கிடைத்த புண்எழு செருநிலைக்
கைவளர் கொழுந்து மெய்பொடி யாகென (20)
சிற்றிடைப் பெருமுலைப் பொற்றொடி மடந்தைதன்
கவைஇய கற்பினைக் காட்டுழி இதுவே
குரவம் சுமந்த குழல்விரித்து இருந்து
பாடலம் புனைந்தகற் பதுக்கை இவ்இடனே
ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டாக்கோட்டு (25)
உதிர்பறை எருவை உணவுஊன் தட்டி
வளைவாய்க் கரும்பருந்து இடைபறிக் துண்ணக்
கண்டுநின்று உவந்த காட்சியும் இதுவே
செம்மணிச் சிலம்பும் மரகதப் பொருப்பும்
குடுமிஅம் தழலும் அவண்இருட் குவையும் (30)
முளைவரும் பகனும் அதனிடை மேகமும்
சேயிதழ் முளரியும் கார்இதழ்க் குவளையும்
ஓர்உழைக் கண்ட உவகையது என்ன
எவ்வுயிர் நிறைந்த செவ்விகொள் மேனியின்
அண்டப் பெருந்திரன் அடைவுஈன்று அளித்த (35)
கன்னி கொண்டிருந்த மன்னருட் கடவுள்
மலைஉருக் கொண்ட உடல்வாள் அரக்கர்
வெள்ளமும் சூரும் புள்ளியல் பொருப்பும்
நெடுங்கடற் கிடங்கும் ஒருங்குயிர் பருகிய
மணிவேற் குமரன் முதல்நிலை வாழும் (40)
குன்றுடுத்து ஓங்கிய கூடலம் பதியோன்
தாள்தலை தரித்த கோளினர் போல
நெடுஞ்சுரம் நீங்கத் தம்கால்
அடும்தழல் மாற்றிய கால்குறி இவணே. (44)
= பாடல்:09 (பொடித்தரும்) =

நற்றாய் வருந்தல் தொகு

பொடித்தரும் பாதசின் முலைக்கொடி மடந்தையள்
மணிமிளிர் பெருங்கட்கு இமைகாப்பு என்ன
விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும்
தன்னைநின்று அளித்த என்னையும் ஒருவுக
பல்மணிக் கலன்கள் உடற்குஅழகு அளித்தென (5)
சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக
பிணிமுக மஞ்ஞை செருமுகத்து ஏந்திய
மூவிரு திருமுகத்து ஒருவேல் அவற்கு
வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின்
மனவுஅணி மடந்தை வெறியாட் டாளன் (10)
வேல்மகன் குறத்தி மாமதி முதியோள்
தொண்டகம் துவைப்ப முருகியம் கறங்க
ஒருங்குவந்து இமையா அருங்கடன் முற்றிய
பின்னர்நின்று எற்றகைத் தாயையும் பிழைக்குக
கருந்தலைச் சாரிகை செவ்வாய்ப் பசுங்கிளி (15)
தூவிஅம் தோகை வெள்ஓதிமம் தொடர்உழை
இவையுடன் இன்பமும் ஒருவழி இழக்குக
சேயிதழ் இலவத்து உடைகாய்ப் பஞ்சி
புகைமுரிந்து எழுந்தென விண்ணத்து அலமர
குழைபொடி கூவையின் சிறைசிறை தீந்த (20)
பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ
உடைகவட்டு ஓமை உலர்சினை இருக்கும்
வளைகட் கூகையும் மயங்கி வாய்குழற
ஆசையின் தணியா அழல்பசி தணிக்கக்
காளிமுன் காவல் காட்டிவைத்து ஏகும் (25)
குழிகட் கரும்பேய் மகவுகண் முகிழ்ப்ப
வேம்உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப
நெடுந்தாட் குற்றிலை வாகைநெற்று ஒலிப்ப
திசைநின்று எழாது தழல்முகல் தெறிப்ப
சுடலையில் சூறை இடைஇடை அடிக்கும் (30)
பேர்அழற் கானினும் நாடும்என் உளத்தினும்
ஒருபால் பசுங்கொடி நிறைபாட்டு அயர
பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான்
வையகத்து உருவினர் மலரா அறிவினைப்
புலன்நிரை மறைத்த புணர்ப்பு அதுபோல (35)
குளிர்கொண்டு உறையும் தெளிநீர் வாவியை
வள்ளை செங்கமலம் கள்ளவிழ் ஆம்பல்
பாசடை மறைக்கும் கூடல் பெருமான்
செந்தாள் விடுத்துறை அந்தர்கள் தம்மினும்
மூவாத் தனிநிலைக்கு இருவரும் ஓருயிர் (40)
இரண்டெனக் கவைத்தநல் லரண்தரு தோழியை
செருவிழம் இச்சையர் தமதுடல் பெற்ற
இன்புகள் நோக்கா இயல்பது போல
மருங்குபின் நோக்காது ஒருங்குவிட்டு அகல
பொருந்தியது எப்படி உள்ளம்
அருந்தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே? (46)

பாடல்:10 (உயிர்புகும்) தொகு

செலவு நினைந்துரைத்தல் தொகு

உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர்புயல் குளிறும் எழுமலை புக்க
கட்டுடைச் சூர்உடல் காமம் கொண்டு
பற்றி உட்புகுந்து பசுங்கடல் கண்டு (5)
மாவொடும் கொன்ற மணிநெடுந் திருவேல்
சேவலம் கொடியோன் காவல்கொண் டிருந்த
குன்றம் உடுத்த கூடல்அம் பதிஇறை
தொடர்ந்து உயிர்வவ்விய விடம்கெழு மிடற்றோன்
புண்ணியம் தழைத்த முன்ஓர் நாளில் (10)
இருவிரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்தி
குழைவுடல் தலைவிரி கைத்திரி கறங்க
ஒரு விரல் தெறித்தும் ஐவிரல் குவித்தும்
பெருவாய் ஒருமுகப் படகம் பெருக்க
தடாவுடல் உம்பர்த் தலைபெறும் முழவம் (15)
நான்முகம் தட்டி நடுமுகம் உரப்ப
ஒருவாய் திறந்து உள்கடிப்பு உடல்விசித்த
சல்லரி அங்கைத் தலைவிரல் தாக்க
கயந்தலை அடிஎன கயிறமை கைத்திரி
இருவிரல் உயர்த்திச் செருநிலை இரட்ட (20)
இருதலை குவிந்த நெட்டுடல் தண்ணுமை
ஒருமுகம் தாழ்த்தி இருகடிப்பு ஒலிப்ப
திருமலர் எழுதிய வரைஇருபத் தைந்து
அங்குலி இரண்டிரண்டு அணைத்துவிளர் நிறீஇ
மும்முகக் கயலுடன் மயிர்க்கயிறு விசித்த (25)
கல்ல வடத்திரள் விரல்தலை கறங்க
மரக்கால் அன்ன ஒருவாய்க் கோதை
முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க
நாடிரு முனிவர்க்கு ஆடிய பெருமான்
திருவடி வினவாக் கருவுறை மாக்கள் (30)
நெஞ்சினம் கிடந்து நீண்டவல் இரவில்
செல்லவும் உரியம் தோழி நில்லாது
எம்எதிர்வு இன்றி இருந்து எதிர்ப்பட்டு
மறைவழி ஒழுகா மன்னவன் வாழும்
பழிநாட்டு ஆர்ந்த பாவம் போலச் (35)
சேர மறைந்த கூர்இருள் நடுநாள்
அரிதின் போந்தனிர் என்றோர்
பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே! (38)
"https://ta.wikisource.org/w/index.php?title=கல்லாடம்/6-10&oldid=486171" இலிருந்து மீள்விக்கப்பட்டது